இருப்பதும் இல்லாமலிருப்பதும்


அது, இருப்பது, இருக்கிறது;
அது, இல்லாமலிருப்பது, இல்லாமலிருக்கிறது;

ஆனால், அது, இல்லாமலிருப்பது, இருக்கிறது என்பதல்ல;
அதைப்போலவே, அது, இருப்பது, இல்லாமலிருக்கிறதுமல்ல.

அம்மா வைத்திருந்த verse புத்தகம் போலே நானும் பள்ளிக்கூடக் காலங்களில் வைத்திருந்தேன். பகிடியான (autographல் எழுதக்கூடிய மாதிரி) சின்னச் சின்ன ஆங்கிலக் குறும்பாக்களையும் பிடித்த கவிதைகளும் தன்னில் கொண்டது. வாசித்தது பிடித்தால், உடனே அந்தக் கொப்பியில் எழுதிவிடுவேன். ஆனால் என்னுடையதிற்போல, உள்ள கஞ்சல் குப்பைகள் அவவின் புத்தகத்தில் காணக் கிடையாது. கிறிஸ்தவப்பள்ளிக்கூடத்தில் படித்ததன் பாதிப்புகள் ஆங்காங்கே தெரியும். பூக்களைப்பற்றியும், வாழ்க்கையைப்பற்றியும், அவ வாசித்துப் பிடித்த கவிதைகளென்று அந்தக்காலத்து தடிப்பமான அட்டை கொண்ட கொப்பி.

நண்பர்கள்/வேண்டியவர்களின் பிறந்த நாட்கள் கடைசித் தாளில் சீராக எழுதப்பட்டிருக்கும். என் கொப்பிகளின் கடைசித் தாட்கள் போல் முகம் தெரியாத கிறுக்கல்கள் அம்மாவின் கொப்பியினை ஆக்கிரமித்தில்லை. அசிங்கமாக்கவில்லை. கிட்டத்தட்ட எட்டாம் வகுப்பு வரை மூலைகள் மடியாமல் பள்ளிப்புத்தகங்களோ குறிப்பேடுகளோ இருந்ததில்லை. ஒவ்வொரு ஆண்டும் சபதமெடுத்துக் கொள்வேன்.. மூலை மடியாமல் பாவிப்பது என்று. ஒரு மாதம் போதும் எனக்கு, தோல்வியைக் காட்ட. மடிந்த மூலைகளை நிமிர்த்தும் போது என்னவோ செய்யும். புத்தகம் அழுகிறாற் போல ஒரு பிரமை. அதற்காகவே என்ன செய்தேன், ஒவ்வொரு புத்தகத்தின் முன்னட்டையிலும் "மூலை மடியாமல் கவனமாகத் திருப்பவும்" என்கிற பொருள் வர எழுதி ஒட்டினேன். பழக்கம் குறைந்து இல்லாமலே போனது. அம்மாவின் கொப்பியைப் பற்றி ஆரம்பித்து சுயபுராணம் பாடுறேன்.. :O)

எத்தனையாம் வகுப்பிலிருந்து வைத்திருந்தாவோ தெரியாது, ஆனால் சிறு வயதிலேயே ஆரம்பித்திருக்க வே
ண்டும். சிறு வயதிலிருந்து படிப்படியாக அவவுடன் கூடவே அவவின் எழுத்தும் வளர்ந்து மாறி வருவதை அழகாக அவதானிக்கலாம். வளர்ந்த பின்னால் எங்களுக்குக் காணக் கிடைக்கும் தோற்றத்தை/வாழ்வை விடவும் முந்தியதொன்று அவர்களுக்கு இருந்திருக்கிறது என்பது தெளிவாயத் தெரிந்த ஒன்றானாலும் அதை நேரே பார்த்து உணருமாற் போல இருக்கும், பக்கங்களைப் புரட்டப் புரட்ட. கடைசிக் கவிதைகள் எழுதப்பட்டிருக்கும் எழுத்தும் அவவின் இப்போதைய எழுத்தும், ஒரு பருவத்தில் சேர்ந்திருந்து சில காலப்பிரிவின் பின் கண்டாலும் அடையாளம் காணக்கூடியதாயிருக்கிற தோழியின் முகச்சாயல் போல நிறையவே ஒத்திருக்கிறது. மாறாத எழுத்துக்களால் பக்கங்களை நிரப்பும் எவரைக் காண்பினும் எனக்கு அதிசயமே. ஒரு வரி எழுதும் போது இருக்கும் எழுத்து அடுத்த வரி எழுதும் போது மாறிவிடும். 10 வரியில் குறைந்தது ஏழு விதமான எழுத்துக்கள் இடம்பிடிக்கும். இந்தப்பழக்கம் காரணமாயோ என்னவோ , ஒருவருடன் பேசும் போது அவரைப்போன்றே பேச முற்படும் தன்மை போல, ஒருவரது எழுத்தையும் எழுதிப் பார்த்து ஓரளவுக்கு செய்யக்கூடியதாயும் இருந்தது.(கையொப்பங்களைப் "பிரதி" செய்து பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டதுதான்..நம்புங்கள்!!)

ஏனோ காலையில், அம்மாவின் புத்தகத்தில் வாசித்தது ஞாபகம் வந்தது. வாசித்த முதற் சில தடவைகள் விளங்காமல் குழம்பினதும், மண்டையில் ஏறினதும் ஏற்பட்ட சந்தோசமும் ஞாபமிருக்கின்றன. கொஞ்ச நாள் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருந்தேன். அதைத்தான் என்னாலான மொழி பெயர்ப்பில், மேலே.

ஆங்கில மூலம்:

That, that is, is;
That, that is not, is not;
But that, that is not, is not that that is;
Nor is that, that is, that that is not.

பெண்பால் என்ன??

காரிலே ஏறி, வானொலிக் குமிழைத் திருகினால், எங்கேயோ எப்பவோ கேட்ட ஒரு ஹிந்திப் பாடல் ஒலித்தது .. மே ஷாயர் தோ நஹி.(நான் கவிஞன்/புலவன் இல்லை) மகர் ஏசி ஹசி....என்று ஆரம்பித்து ஷாயரீ ஆகயீ (கவிஞை/கவிதாயினி வந்துவிட்டார்) என்று முடியும். ஒரு தடவை டிவிடியில் பார்த்தபோது அர்த்தம் போட்டதில் தெரிந்து கொண்டேன்.

நேற்று முழுக்க யோசித்தும் பிடிபடவில்லை. நீங்களாவது சொல்லுங்க.. ஆசிரியன், ஆசிரியை, ஆசிரியர் / தோழன், தோழி, தோழர் ..இப்படி, கவிஞனுக்கும் பெண்பால் & பொதுப்பால் தெரியும். ஆனால் புலவனுக்கு??

புலவர் என்பது பொதுப்பால். பெண்பால் என்ன?

என்னத்தைச் சொல்ல!


நான் சொல்லவில்லை.. பத்திரிக்கையொன்றில் வந்திருந்ததாய் நண்பரொருவர் அனுப்பியிருந்தார். குஞ்சு, குட்டி பற்றிக் கூடவா படத்துக்கு "விளக்கம்" எழுதியவருக்குத் தெரியாமல் போய்விட்டது? :O(

01 - வரம்

முக்கியமான ஒராள் சொன்னதின் படி கீழுள்ள disclaimer போட்டு ஆரம்பிக்கிறேன்.

------------------------------------------------------------------------------------------------------------------------
Disclaimer:- பின்வருவது, கதை சொல்வதில் எழுதுவதில் செய்து முடித்த முதல் முயற்சி.
------------------------------------------------------------------------------------------------------------------------

காலம்: ஏதோ ஒர் காலம்..
இடம்: கிளிமஞ்சாரோ மலை உச்சி.

எல்லாக் கடவுளரின் வீடும் அங்கேதான். இதுவரைக்கும் மக்காவும், ஜெருசலேமும் கைலாயமும்தான் புத்தகயாவும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். ஒரே களேபரமாயிருக்கிறது. சிவனையும் விஷ்ணுவையும் காணோம். எங்கேயென்று தெரியாமல் பத்தினிப் பெண்களின் இலக்கணப்படி பிலாக்கணம் பாடி மூக்கைச் சிந்துகிறார்கள் பார்வதியும் இலக்குமியும். அவர்களுக்கு மரியாளும் சரஸ்வதியும் ஆறுதல் சொல்ல, அல்லாவும் தாடியைத் தடவினபடி யேசுவும் மற்றையவர்களோடு ஆலோசிக்கிறார்கள். சித்தார்த்தன் முருகனிடம் மயில் மணிக்கு என்ன வேகத்தில் போகும் என்று சன்னக்குரலில் விசாரிக்கிறான்.


அதே சமயத்தில், இன்னுமோரிடத்தில்...

சிவன் இப்போ கைதி. ஒருத்தர் பிடித்துக் கொண்டு போய்ப் பொதுச் சிறையில் அடைத்துவிட்டார். தொடர்ந்த காவல். ஒன்றையும் இந்த மனிதர்களுக்கு முன்னால் நின்று நினைத்துக் கொள்ள முடியவில்லை. எதிரிலிருப்பவன் மனதில் என்ன ஓடுகிறது என்று தெரிந்து கொண்டு விடுகிறார்கள். அதைச் செய்யலாமென்று கண்டுபிடிக்குமளவு திறனுடையவர்களாக மனிதர்களைப் படைத்ததை எண்ணி பிரம்மனின் மேல் அடக்கமுடியாத கோபம் வந்தது சிவனுக்கு. அவருக்கான காவலாளி அதை அறிந்து சிரித்துக் கொண்டான். சிவன், ஆசுவாசப் படுத்திக் கொள்ள வற்றிக் கொண்டு போகிற தண்ணீர் கொஞ்சம் தலையிலிருந்து குடித்துக் கொண்டார்.

தண்ணீர் குடிக்கையில்தான் அவருக்குக் கூடவே கைதான விஷ்ணுவின் ஞாபகம் வந்தது. "என்ன செய்கிறானோ" என்று நினைத்துக் கொண்டதுக்கு, காவலாளி, "விஷ்ணுவா, அவன் செத்துப் போய்விட்டான்! காலையில் விசாரணைக்குக் கூட்டிக் கொண்டு போக ஆள் வந்து பார்க்கையில்தான் நாங்களே தெரிந்து கொண்டோம்" என்றான். "அடப்பாவமே..இந்த மனிதர்கள் பிடித்த நாளிலிருந்து தண்ணீரோ உணவோ தரவில்லையே.. கைவரிசை காட்டிச் சாப்பாடு வரவழைத்தாலும் அதையும் பிடுங்கி விடுகிறார்கள். நானாவது தலையிலிருந்து வருவதைக் குடித்துக் கொண்டிருக்கிறேன்.. அவனென்ன செய்வான் பாவம்!" என்று பரிதாபப்பட்டுக்கொண்டார். என்னதான் இருந்தாலும் மச்சான். அதுக்கும் மேலாக கடவுள் வியாபாரத்தில் ஒரு முக்கிய பங்காளி. அப்படிப்பட்ட விஷ்ணு செத்துப் போனானே என்று சிவனுக்குக் கண்ணீர் வந்தது.

ஏன் இதை நடக்க அனுமதித்தாய், ஏன் அதைப் படைத்தாய் என்று சரமாரியாகக் குறுக்கு விசாரணை. இருக்கிற சடைமுடியெல்லாம் பிய்த்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. ஒன்றுமே பேசவில்லை. ஒன்றுமே நினைத்துக் கொள்ளாமலிருக்கவும் பெரும் பிரயத்தனப்பட வேண்டி இருந்தது. இரவாகிற்று. மனிதர்கள் அடித்த அடிகளில் சிலது பட்டு பாம்புகளெல்லாம் உஸ்புஸ்சென்று சீற ஆரம்பித்திருந்தன. காவலாளி உறங்கி விட்டான் என்று உறுதி செய்துகொண்டு தப்பிக்கும் வழி பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தார் சிவன். எதுவும் சரி வராது என்று தெரிந்தது. நினைத்துக் கொண்டதைச் செயற்படுத்த முடியாது. மனதிலிருப்பதெல்லாம் தெரிந்து விடுகிறது.

மனதிலே திடீரென ஒரு எண்ணம். இத்தனை நாட்களிலும் இல்லாமற் போன வரங்களால் படாரெனச் சரிந்திருக்கக் கூடிய கடவுள் நிறுவனப் பங்கின் விலை நிலவரம் வயிற்றில் புளியைக் கரைத்தது. அல்லா யேசு பிரம்மன் மூவரும் நிலையை எப்படிக் கையாளுவார்களோ என்று கவலை வந்து உட்கார்ந்து கொண்டது. சித்தார்த்தன் சிறுபிள்ளை, கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கிறது. வாகனம் கூட இல்லை அவனுக்கு. கடவுள் நிறுவனம் வர்த்தகக் காப்புக்காய் எடுத்த முடிவு இப்
டியொரு இக்கட்டில் உதவக்கூடுமென்று அவர் யோசித்திருக்கவில்லை. தனக்கு முன்னாலிருந்த அல்லாவிடமிருந்து தான் பொறுப்பேற்றுக் கொண்டது போல அடுத்ததாய் இயேசு பதவிக்கு வருவார் என்பதும் இவ்வளவுநாள் கட்டிக்காத்த நிறுவனம் அழியாதென்பதும் கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. "பிரம்மன் குட்டையை குழப்பினால்?" என்கிற சந்தேகம் எட்டிப்பார்த்து புளிக்கரைசலாய் வயிற்றை மொத்தமாய் நிரப்பிற்று. அதைப் போக்க, எப்படிக் கைதானோம் என்று நினைத்துப் பார்த்தார் சிவன். எல்லாம் இந்த தவமிருப்பதைக் கண்டதும் வரும் புல்லரிப்புத்தான் காரணம். பூரித்துப் போய் வரம் கொடுப்பதை இனி நிறுத்தவேண்டும். விளம்பரம் போனாலும் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டார். உடனேயே சிரிப்பும் வந்தது. இந்தச் சிறைக்குள்ளிருந்து எப்படி வெளியில் போவது, எப்படி வரம் கொடுப்பது!! பிடித்துக் கொண்டு வந்தவனுக்கு என்ன வரம் கொடுத்தோம்..யோசிக்கலானார். ஆ! ஞாபகம் வந்து விட்டது.. சும்மா வரமா கேட்டான்.. "எப்போது நான் அழைத்தாலும், நான் திருப்பி அனுப்பும் வரை என்கூடவே வரவேண்டும். அப்படி நீர் என்னுடன் இருக்கும் போது, நாம் எங்கிருக்கிறோம் என்பது வேறு யாருக்குமே தெரியக் கூடாது" என்றெல்லவா வரம் வாங்கினான். அவன் கெட்டித்தனத்தை மெச்சிக் கொண்டார் சிவன்.

வரம் கொடுத்து மாட்டுப்படுவது இருவருக்குமே வழமைதானென்றாலும், அவருக்குப் புரியவில்லை எப்படித் தான் விழுந்த அதே வலையில், அதே நேரத்திலேயே விஷ்ணுவும் மாட்டினானென்று. உரத்து யோசித்தார். சீறியபடியே பாம்பு, "மடச்சிவனே, மனிதன் முன்னமொருமுறை சும்மா பாட நீரும் எங்கோ கற்பனையிலிருந்த படி ஆகட்டும் என்று சொன்னதை மறந்தீரோ" என்றது. சிவனுக்கு அப்பவும் புரியவில்லை. தண்ணீர் வறண்டுபோன தலையைத் தடவிய படியே யோசிக்கிறார். பாம்பே பாடிக்காட்டிற்று: "இரண்டு மனம் வேண்டும்.. இறைவனிடம் கேட்டேன்". அப்படி வரம் கொடுத்ததையும், சிறைப்பிடித்தவனுக்கு கொடுத்த வரத்தில் தான் தப்பிக்க ஓட்டை வைக்காமல் போகவும் வைத்த தன் மறதியை (அல்லது, பெயர்ந்து போன அறளையை) நொந்துகொண்டார். multi tasking & mutliple desktop விளையாட்டைத் தம்மிடமே காட்டிய மனிதனை நினைத்து சிவனுக்கு நெஞ்சை அடைத்தது. ஏற்கெனவே அரக்கர்களுடன் போரிட்டுத் தளர்ந்திருந்த உடல். தண்ணீர் தண்ணீ ரென்று அலறினார். யாருக்கும் கேட்கவில்லை. சிவனும் செத்துப்போனார்.

பெட்டகம்