நேர மாற்றம்

மு.கு: தொலைக்காட்சிச் செய்தி பார்த்தலும் இணையத்திலேயும் அசல் வடிவிலேயும் பத்திரிகை வாசிப்பதும் என் தினப்படி நடவடிக்கைகள்.

--------------------------

சனிக்கிழமை பின்னேரம்:
"சாந்திக்கா.. நாளைக்காலையிலே எனக்கு ஏழு மணிக்கு வேக்கப் கோல் .. மறந்திராதிங்க"
"இல்லமா..மறக்காம கட்டாயம் தரேன். இல்லன்னா பலகாரம் செய்ய வீட்டுக்குத்தான் வரணும்"
"ஒகே..நாளைக்காலையிலெ பேசலாம்..போய்ட்டு வர்றோம்"

ஞாயிறு காலை, 07:15 மணி
முழிப்பு வந்திட்டுது. என்னடா இந்த சாந்திக்கா இன்னும் போன் பண்ணல்லயே...என்று யோசித்துக்கொண்டே எழும்புகிறேன். நாட்காட்டியைப் பார்த்தால், 26 மார்ச். ம்ம்..இன்றைக்கு ஏதோ நடக்கோணுமே என்பது தெரிகிறதே ஒழிய என்னவென்று ஞாபகம் வர்ற மாதிரிக் காணோம்.சரி, வரக்குள்ள வரட்டும் என்று விட்டாச்சு.

8 மணி.. சாந்திக்காவின் வேக்கப் கோல். அவவின் "குட் மானிங்..எழுந்துக்கலயா இன்னும்?"க்குப் பதில் சொல்லி தொலைபேசியை வைத்துவிட்டு, தன்னிச்சையாக தொ.காவைப் போட்டால் பொறி தட்டியது இன்றைக்கு நேரம் மாத்துற நாள் என்று. "ஒரு மணித்தியாலம் அதிகமாக இருக்கே.. அநியாயமா வெள்ளனவே எழும்பிட்டனே" என்று நொந்து கொண்டேன்.
என்றாலும் சந்தேகம்.. தொ.காவில் நேற்றுப் பார்த்த போதெல்லாம் நேர மாற்றத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே? ம்ம்ம்... சரி எதுக்கும் டிவில பாப்பம்.. சனல்10 மாத்தியிருக்கு. சனல்7 ஏன் பழைய நேரத்தையே போட்டுக்கொண்டிருக்கிறாங்கள்? போடு டெக்ஸ்ற்ற..அதில மாத்திருக்கிறான். சாந்திக்காவும் அதுதான் 8 மணிக்கு எழுப்பியிருக்கிறா..நேரம் மாறினா 8மணி 7 மணியாயிரும்.. சரிதானே!!
என்டாலும் ஒரு சந்தேகம், கணினியைப் போட்டேன்..அதிலயும் நேரம் மாறிட்டுது. அப்ப சரிதான். அடட.. இன்டைக்கு நல்லா நேரமிருக்கு. ஆறுதலாப் போகலாம் பலகாரம் சுட. இவன் சனல்7காரனுக்கு லூஸ். நேரம் மாத்தாம சனத்தைக் குழப்புறான்.

எடு வீட்டிலில இருக்கிற மணிக்கூடெல்லாம். அலாரம் மட்டுமே 4. (இதிலே முக்கியமாச் சொல்லோணும்: அலாரமும் மின்சூளும் (டோர்ச் லைட்) கொஞ்சம் வித்தியாசமான உருவங்கள் நிறங்களில கண்டா, எங்கட வீட்டில குடியேறிடும். தலையாட்டிக்கொண்டிருக்கிற அலாரம் தொடங்கி, வட்ட/சதுர/திருகிற/பொத்தான் அமத்திற மின்சூள் வரைக்கும் இருக்கு. ஒரு மியூசியமே இதுகளுக்காண்டித் தொடங்கலாம். தூக்கி எறிவமெண்டா அதுக்கு தடையுத்தரவு. அதிலயும் ஒரு அலாரம் இருக்கு. சரிய சனிக்கிழமையிலே காலமை 11 மணிக்கு அடிக்கும். எங்கெருந்து சத்தம் வருதென்டு இன்னும் கண்டுபிடிச்சுக் கொண்டிருக்கிறம்)

சரி, இனி அறைக்குள்ளே இருக்கிறதும், வரவேற்பறையிலிருக்கிறதும் குசினியில இருக்கிரதும் என்டு இன்னும் மூண்டு. மொபைல்லயும் மாத்தோணும்.. எடு அதுகளையும். இருந்து எல்லாத்திலயும் மாத்தியாச்சு.

குளிச்சு வெளிக்கிட்டு, (அப்பவும் சனல்7 நேரம் மாத்தல்ல, அசல் விசரங்கள்) காலமைச் சாப்பாடு சாப்பிடுறன்.. தொ.பே.அழைப்பு வருது.

"ஓய்! எங்கெ இருக்கே? புறப்பட்டுட்டியா இல்ல இன்னு வீட்லேயேதானா? பத்தேகால் மணி இப்போ! ..பலகாரம் 10மணிக்கு ஆரம்பிக்க என்று இருந்தோமே..என்ன ISSAT (Indian Srilankan Standarad Arrival Time) ஆ?"
"ஹையோ! ISSATலாம் இல்ல. இன்னைக்கு டேலைட் சேவிங்க்ஸ்க்கு நேரம் மாத்தினாங்களே.. தெரியாதா? நான் லேட் இல்ல. இப்பத்தான் ஒம்பதேகால்"

"அம்மா..தாயே.. இ-மெயில்,பேப்பர் வாசிக்கிறப்ப, டீவி பாக்கறப்ப கொஞ்சூண்டு கான்சன்ட்ரேட் பண்ணனும்மா..டைம் இந்த வாரம் மாத்தலே"
"...(என்ன உளர்றா)..."
"அதான் மெல்பேண்லே கொமன்வெல்த் கேம்ஸ் நடக்குதில்ல..அதனாலே அடுத்த வாரம்தான் டைம் மாத்துறாங்க. ராசாத்தி, உங்க நேரத்தை மாத்திட்டு தயவு செஞ்சு உடனடியா புறப்படுறீங்களா?!"
"போச்சுடா!!அப்ப நான் இன்டைக்கும் லேட்டா?" :O(

பிடிக்கவில்லை

எனக்கு மனிதர்களைப் பிடிக்கும். பிடிக்காத ஆட்களென்று பார்த்தால் (அதற்காக தீராத பிறவிப்பகை என்றெல்லாமில்லை) ஒருகை விரல் கொண்டு எண்ணிவிடக்கூடியளவு பேர்தான் தேறுவார்கள். நம் எல்லோருக்குமே வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பத்திலாவது ஒரு சக மனிதப்பிறவியின் மீது வெறுப்பு வந்திருக்கும். எனக்கு, அப்படியே வெறுப்பு வந்தாலும் அம்மனிதர்களுடனான அடுத்தடுத்த சந்திப்புகளில் நிகழ்பவைகளால் அநேகமான வேளைகளில் அந்த வெறுப்பின் தாக்கம் குறைந்துவிடும். புதிதாய்ப் பதிவு செய்கையில் பழையனவற்றைத் தூக்கிப்போடுவது மனித இயல்பா?

பிடிக்காமற் போவதற்கான எனது வகைப்படுத்தல்:

  • சிலரைப் பார்த்த(தா)லே பிடிக்கது.
  • சிலருடன் பேசியபின் பிடிக்காது. (கண்ணைப்பார்த்து/முகத்தைப்பார்த்துப் பேசாமை)
  • சிலருடன் ஆரம்பமே சரியாயிராது.
  • சிலரது பழக்கவழக்கங்கள்/குணங்கள் பிடிக்காது (ஆளைப் பிடிக்காமற் போவதற்கும் பழக்கவழக்கம்/குணங்களைப் பிடிக்காமற் போவதற்கும் வேறுபாடு உண்டெனத் தெரிந்தாலும் அதைச் செய்வதற்கு அறிவைச் சரியாய்ப் பிரயோகிப்பதில்லை!)

கொஞ்ச நாளாய்க் கவனிக்கிறேன், மிகவிரைவிலேயே (இவ்வளவு நாளும் இருந்ததை விடச் சற்று அதிகமாக)ஆட்களைப்பற்றிய அபிப்பிராயம் உருவாகி, என்னையறியாமலேயே வகைப்படுத்தல் ஆரம்பித்துவிடுகிறது. பார்த்த விதம் சரியில்லை, ஏன் இப்படிச் சத்தம்போடுகிறான்/ள், உதவவில்லை, கதைப்பது அறிவற்றதனமாய் உள்ளது - இப்படி (அநேகமாக) மிகச் சாதாரணமாய் கணக்கிலெடுக்கத் தேவையே இல்லாத விதயங்களெல்லாம் காரணிகளாய் அமைகின்றன. சிலவேளைகளில் மேற்கூறியவை எழுப்புவது எரிச்சலுணர்வாயிருப்பினும் அதையும் வெறுப்பெனக் கொள்கிறேன் போலவும் தோன்றுகிறது. என் சகிப்புத்தன்மை/பொறுமை இவையெல்லாம் தேய்கின்றனவோ? அறளை பெயருதோ??? :O(

எழுத ஆரம்பித்த நேரத்திலிருந்து இடையிடையே வேறு வேலைகளும் செய்ததால், பதிவு செய்ய நினைத்ததில் அரைவாசியே மேலே எழுதப்பட்டிருக்கிறது. மீதி மறந்து போய்விட்டது. இந்த வார இறுதியில் ஞாபகம் வந்தால் முழுமையாய் எழுதி மீள்பதிவு செய்வேன். இல்லாட்டி, இப்படியே.. அரைகுறையாய்!(இதுவும் பிடிக்கவில்லை)

பி.கு: இதை வகைப்படுத்துபவர் "அனுபவம்" என்று வகைப்படுத்தவும் , நன்றி.

பெட்டகம்