பார்த்தேன்..ரசித்தேன்

Jacquis Perrinன் நெறியாள்கையிலும் Bruno Coulaisன் இசையிலும் வெளிவந்துள்ள ஒரு நேபாள(most likely திபெத்திய) மொழிப்படம் 'ஹிமாலயா'. மனதை வருடும் மெல்லிய இசையும், அழகான காட்சியமைப்பும் கொண்ட இந்தப் படம் டின்லே தாத்தா தானியக் கதிர்களுக்கூடாக நடந்து வருவதுடன் ஆரம்பிக்கிறது. உப்பு வாங்கி வந்து அதை வேறோரிடத்திற்கு கொண்டு சென்று விற்று தானியம் வாங்கும் வாழ்க்கை. உப்பு பெற்று வரும் வழியில் டின்லேயின் மகன் இறந்து விடுகிறான். அவனது தோழனான 'கர்மா'வின் மேல் டின்லே சந்தேகப்படுகிறான். குரோதம் மனதில் கொழுந்து விட்டெரிகிறது. பரம்பரையாக அக்குடியினரின் தலைவர் பதவி டின்லேயின் குடும்பச் சொத்தாகவே இருந்து வருகிறது. டின்லேயின் பேரனோ பாலகன். தலைமைப் பதவிக்காகவே கர்மா தன் மகனை கொன்றான் என் நம்பும் டின்லே இந்த முறை caravanகளுக்கு நானே தலைமேயேற்கிறேன் என்று சொல்லி ஆயத்தப்படுத்துகிறான். சோதிடம் பார்த்து, நல்ல நாளில் புறப்படும் இவர்களது வழக்கத்தையும் மீறி கர்மா தனது இளவட்டத் தோழர்களுடன் முதலே புறப்படுகிறான். டின்லே, பிக்குவாக இருக்கும் தனது 2ம் மகனிடம் சென்று தன்னுடன் வருமாறு உதவி கோருகிறான். மகன் தயங்கவே அவனுக்கு ஏசிவிட்டு ஊருக்கு வந்து ஆயத்தங்களைச் செய்கிறான். மகன் 2 நாட்களில் வந்து சேர்கிறான். சோதிடர்கள் குறித்த நன்னாளில் டின்லேயினதும் அவனது சம வயதான 'கிழ' வட்டங்களினதும் பயணம் தொடங்குகிறது.

கர்மாவின் கூட்டத்தினரை எட்டிப் பிடித்தனரா, அவனுடன் சமாதானம் ஏற்பட்டதா என்பதும், வழியில் அவர்கள் கற்றுக் கொள்ளும் பாடங்களும், டின்லே, பிக்குவான இளைய மகன் , கர்மா, டின்லேயின் மருமகள் பேமா, பேரன் பசாங், . இவர்களது தனிப்பட்ட பயணங்களுமே கதை. சின்னச் சின்ன மனதைத் தொடும் காட்சிகள். மரம் என்றால் என்ன எனக் கேட்கும் பசாங், கர்மாவின் வில்வித்தை மீது அபார பிரமிப்புக் கொண்டவனாக இருக்கிறான். கர்மாவின் சிறுவயது தோழியாக டின்லேயின் மருமகள் பேமா. தான் குற்றமற்றவன் என்பதை டின்லேக்கு எடுத்து சொல்ல முயலுகின்ற,இளமைத் துடுக்கு நிறைந்த வீரனாக கர்மா....

நடித்தவர்கள் பாத்திரமாகவே ஒன்றிப் போயிருக்கிறார்கள். நீண்ட நாட்களின் பின் நிச்சயமாக கண்ணுக்கும் காதுக்கும் மனத்திற்கும் ஒரு விருந்து. கிடைத்தால் எடுத்துப் பாருங்கள்.

பி.கு: படத்தில் பணியாற்றியவர்கள் பற்றி இங்கே...

அழகிய தீயே

மேற்கூறிய படம் பார்த்தேன். கடைசியில் கதாநாயகிக்கு வந்த மிகவும் சினிமாத்தனமான "பூம்" தவிர படம் நல்லாத்தான் இருந்தது. எல்லாரையும் விட "டைசன்" தான் (கதாநாயகி வேற ஊர் போகிறா என்கிற போது) மிகவும் இயல்பாக முகபாவனை(!?) காட்டியிருந்தது!!. நவ்யா நாயரைப் பார்த்தால் கொஞ்சம் சுஹாசினி, கொஞ்சம் மீனா, மீதி தீபா வெங்கட்(தீபா வெங்கட் பகுதி ஒரு வேளை அவங்க பின்னணிக் குரல் கொடுத்ததால் ஏற்பட்ட மாயையாக கூட இருக்கலாம்!!) போல ( எனக்கு) இருந்தது. (யாரப் பார்த்தாலும் "முதல் எங்கியோ கண்ட மாதிரி இருக்கே" என்கிற என் வியாதி பற்றி இன்னொரு நாளைக்கு விரிவா சொல்றேன்! ;o) )

படத்தில் எனக்குப் பிடித்த காட்சி: நுளம்பு மருந்தின் புகை மூட்டத்திற்கூடாக வெள்ளைத் தேவதையாக நவ்யா நடந்து வருவது. வாய்விட்டு சிரித்தேன். நினைக்க நினைக்க சிரிப்பு வருது!

பி.கு 1: அழகான நெருப்பு என்று ஏன் பெயர் வைத்தார்கள்?
பி.கு 2: கதாநாயகி, அப்பா வீட்டில் வளர்த்த சீச்சுக்கு என்ன ஆச்சு?
பி.கு 3: "பாலா" கதாபாத்திரத்தை பார்த்தவுடன் ஏன் இவர் ஞாபகம் வந்தது???


ஒலிம்பிக் தேசம் 4 ஒ.தே 3

பாரசீக போர் :
பரந்து கொண்டிருந்த பாரசீக பேரரசின் அரசனாக முதலாம் டரியுஸ் கிமு 519ல் முடி சூடினான். பாரசீக மன்னன் சைரசினால் வெற்றி கொள்ளப்பட்டு பாரசீக ஆட்சியின் கீழிருந்த அயொனியர்கள் அதிருப்தியடைந்திருந்தனர். கிமு 419ல் மிலெட்டூசைச் சேர்ந்த அரிஸ்டகோரஸ் என்பவன் கரையோரக் குறுநிலங்களை இணைத்து ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தினான். 5 வருடத்தில் டரியுஸ் இதனை அடக்கி விட்டாலும், இந்தப் பிரதேசத்திற்குள் இல்லாதிருந்தும் கொந்தளிப்பிற்கு உதவிய அதென்ஸ் மீது சீற்றம் கொண்டான். "என்னையா சீண்டுகிறாய்..உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று வில்லன் வசனம் பேசி பழிக்குப் பழி வாங்க நினைத்த டரியுஸ் ஸ்பார்ட்டாவிடம் உதவி கோரினான். கிரேக்கத்தையே வெற்றி கொள்ளும் மாஸ்டர் ப்ளான் அவனிடம் இருந்ததை ஸ்பார்ட்டா புரிந்து கொண்டு உதவ மறுத்ததால் டரியுஸ் தன் முயற்சியை கிடப்பில் போட வேண்டியதாயிற்று. ஆனாலும் முற்று முழுதாக தன் திட்டத்தை கை விடவில்லை; கிமு 490ல் பாரசீக இராணுவம் மரதன் என்னும் இடத்தில் வந்து குவிந்தது. 10,000 பேரை மட்டுமே கொண்டிருந்தாலும் கிரேக்கர்கள் பாரசீகத்தை தோற்கடித்தனர். "எங்களூரில் இந்திரவிழா நடக்கிறது" என்று ஸ்பார்ட்டா இந்தப் போரில் பங்கேற்கவில்லை.

இன்னொரு போர் தொடுக்க திட்டம் தீட்டிய டரியுஸ் அது நிறைவேறும் முன்னமே மண்டையைப் போட; தந்தையின் கனவை நனவாக்கும் பொறுப்பு ஸெர்க்ஸீசின் தலையில் சுமத்தப் பட்டது. பரந்து விரிந்த தனது சாம்ராஜ்யத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் போர்வீரர்களை (மொழிபெயர்ப்பாளர்களுக்கு நல்ல மவுசாக இருந்திருக்குமோ...) அழைத்துக் கொண்ட ஸெர்க்ஸீஸ் தரை + கடல் வழிப் போருக்கு ஆயத்தம் செய்தான். பாரசீகர்கள் (தற்போதைய) இயரிசோசிற்கு அருகில், தங்கள் கடற்படை பயணிக்கத் தக்கதாக ஒரு கால்வாயைத் தோண்டினார்கள். இதன் மூலம் அதொஸ் மலையடிவாரத்தில் ஆர்ப்பரிக்கின்ற கொந்தளிப்பான கடலில் பிரயாணம் செய்வதை அவர்களால் தவிர்க்க முடிந்தது. கிரேக்கத்தின் மத்திய மற்றும் தென் குறுநிலங்கள் கொரிந்தில் சந்தித்துக் கொண்டன. பாரசீகர்களை தோற்கடிக்கும் வழிமுறை பற்றிய மந்திராலோசனை நடந்தது. ஸ்பார்ட்டாவின் தலைமையின் கீழ் தரைப்படை+கடற்படையும், இப்படைகளுக்கான தந்திரோபாயங்கள் மற்றும் வியூகங்கள் அமைக்கும் பணிக்கு அதென்ஸின் தலைவனான தெமிஸ்டோக்கிள்சும் என தீர்மானிக்கப்பட்டது. ஸ்பார்ட்டா அரசன் லியோனிடஸ், தெர்மோபைலி எனும் இடத்திலுள்ள கணவாயை காக்கும் பொருட்டு தன் படையினரை அங்கு இட்டுச் சென்றான். குறுகலான இக்கணவாயே கிரேக்கத்தின் வடக்கிலிருந்து மத்திய பிரதேசத்திற்குச் செல்வதற்கான பிரதான வழி. எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் கணவாயைத் தக்க வைத்துக் கொண்டிருந்தனர். எட்டப்பர்களும் காக்கைவன்னியர்களும் அங்கேயும் இருந்தார்கள். எந்தப் பாதையால் மலையைக் கடந்து போவது என்பதை எதிரிக்கு கிரேக்க எட்டப்பன் சொல்லிவிட்டான். கிரேக்க வீரர்கள் பின்வாங்க நேரிட்டது. லியொனிடஸ் தீரத்துடன் சாகும் வரை போராடினான்.

ஸ்பார்ட்டாவும் அதன் ஆதரவாளர்களும் தமது 2ம் நிலை பாதுகாப்புக்குரிய செயற்பாடுகளை முன்னெடுத்த அதே நேரம் பாரசீகர்கள் அதென்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். நகரை விட்டு வெளியேறி தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு தன் குடிகளுக்கு தெமிஸ்டோக்கிள்ஸ் கட்டளையிட்டான். பாரசீக இராணுவம் அற்றிகாவை தரைமட்டமாக்கி அதென்ஸிற்கு தீ மூட்டி எரித்தழித்தது. ஆனாலும், கிரேக்க கடற்படை திறமையான வியூக அமைப்பினால், ஒடுங்கலான சலாமிஸ் கடலில் பாரிய பாரசீக போர்க்கப்பல்களை பொறி வைத்து அழித்தது. கரையிலிருந்து தன் படையினரின் தோல்வியைக் கண்ணுற்ற ஸெர்க்ஸீஸ் இராணுவப் பொறுப்புகளை தனது தளபதி மாடோனியசிடம் கையளித்து விட்டு வெறுப்புடன் தாயகம் திரும்பினான்.

ஒருவருடம் கழித்து ஸ்பார்ட்ட தளபதி போசோனியஸின் (ஒரு வேளை "Pause button" ஐ கண்டு பிடித்தவரோ...) தலைமையில் கிரேக்கம் வெற்றிவாகை சூடியது, அதெனிய கடற்படை மைக்கெலி என்னும் இடத்திற்குச் சென்று அங்கு மீதமிருந்த பாரசீகக் கடற்படையை துவம்சம் செய்ததுடன், பாரசீக ஆட்சியின் கீழிருந்த அயொனிய குறுநிலங்களையும் விடுதலை செய்தது.

தொடரும்

ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா?

கடந்த ஞாயிறன்று(தந்தையர் தினம்) சிட்னி தந்தையருக்கு வானத்திலிருந்து கிடைத்த பரிசு புகைப்படங்களாக. ..(படங்கள் தரவிறக்கப் பட அதிக நேரம் எடுக்கிறது. இன்னொரு வலைமேயும் சாளரத்தைத் திறந்து, வேறு பக்கத்திற்கு ஒரு விசிட்டடித்து வரவும், தரவிறக்கவும் முடியவும் சரியாக இருக்கும். அசௌகரியத்திற்கு மன்னிக்க!)

தடதடவென வந்து விழுந்த சிறு பனிக்கட்டிகள், வெப்பநிலை திடீரென்று தாழ்ந்தமையால் மறுநாள் காலை வரை நிலத்தோடு ரகசியம் பேசின.
கனேடிய, ஐரோப்பிய நகரங்களில் காணக்கிடைக்காததா என்று நீங்கள் நினைக்கக் கூடும். சிட்னிக்கு இது ஒரு "freak storm". இப்படியான நிகழ்வு மிக அபூர்வம். :o)

கேள்விகளுக்குரிய பதில்கள்

சில நாட்களாய் சில கேள்விகள் குடைகின்றன. (ஜே.கே.கிருஷ்ணமூர்த்தியை வாசித்ததன் விளைவு!!) தன்னை அறிதல் என்கிற வகைக்குள் அடங்கும் என்றே நினைக்கிறேன். மிகப் பழைய கேள்விகள் தான்...என்றாலும் புதிதாய் ஒவ்வொருவருக்குள்ளும்.....

1. நீங்கள் யார்?
இந்த உடலா?இத்தனை கேள்விகள் கேட்கும் மனமா?அதற்கும் மீறிய ஒன்றா?

2. நீங்கள், நீங்களே தான் என்பதை எப்படி அறிகிறீர்கள்? (How do you know "you are you'?)
இரவு படுக்கப் போகிறீர்கள். காலையில் எழுந்ததும், "இரவு படுக்கைக்குப் போன அதே ஆள்தான் நான்" என்பதை எப்படி, எதன் மூலம் உணர்கிறீர்கள்?ஞாபகங்கள் மூலமா?இரவு நித்திரையிலே மறதி வந்து விட்டதென்று வையுங்கள்..அப்போது உங்கள் நிலை என்ன? மறதி வந்தவர் தன்னை எப்படி உணர்கிறார்?

3.மகிழ்ச்சி என்பது எந்த நிலையில் ஏற்படும் உணர்வு?போதும் என்கிற மனப்பான்மையில் எழுவதா?பரீட்சையில் சித்தியெய்திய திளைப்பா? சலனமற்ற ஒரு பொழுதில் உணரப்படுவதா? திருப்தி, elation,அமைதி என வெவ்வேறு வார்த்தைகளால் குறிப்பிடப்படும் ஒன்றுதானா மகிழ்ச்சி என்பது? சரி - அப்படியே வைத்துக் கொள்வோம்; இத்தனை வார்த்தகளிருக்க மேலும் ஒரு சொல் ஏன், அதே நிலையை குறிக்க? திருப்தி, திளைப்பு, அமைதி என்பன வெவ்வேறான நிலைகள்/ உணர்ச்சிகள். அவை எப்படி மகிழ்ச்சியாக முடியும்? மேலும் மகிழ்ச்சி என்பது புறக்காரணிகளில் தங்கியிருக்கும் ஒன்றாக(எனக்குத்) தெரியவில்லை. அனேகமான பொழுதுகளில் "சந்தோசமாயிருக்கிறாயா ஷ்ரேயா" என்று என்னையே நான் வினவிக் கொள்ளும் போது, எனக்குள்ளிருந்து ஆமென்ற பதிலே வருகிறது. அந்தக் கணத்தில் நான் எப்படி உணர்கிறேன்?ஆமென்ற பதில் என் மனநிலையை சார்ந்து வருகிறதா அல்லது மகிழ்ச்சியே என் இயல்பு நிலையா?

இவற்றுக்கு பதில் கிடைக்க உள்நோக்கிய பயணம் ஒன்றே வழி என்பது தெரிகின்றது. ஆனாலும் பதில்கள் எனக்குள்ளேயிருக்குமா அல்லது பிரபஞ்சத்தின் ஒரு தகவல்தளத்திலா??

பயணங்கள் முடிவதில்லை

எழுதுற பைத்தியம் விட்டுவிட்டது நாம் தப்பினோம் என்று நினைத்தவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். கொஞ்சம் இடைவெளி விட்டா இப்பிடியெல்லாம் மனக்கோட்டை கட்டக் கூடாதுங்கோ! ;o)

ஜூலையில் போகவிருந்து (Country linkக்கு $240 தானமளித்து)தடைப்பட்ட மெல்பேர்ண் பயணம், சாமத்தியப்பட்ட மருமகளின் புண்ணியத்தில் நிறைவேறிற்று. கணவருக்கு வெள்ளி இரவு விரிவுரைஇருந்தபடியால் விழா நடக்கும் நாளன்றே(சனிக்கிழமை) காலைபுறப்பட்டு அன்றிரவே திரும்புவதாக திட்டமிட்டு விமான பயணஒழுங்கெல்லாம் செய்தோம். காலை 11 இலிருந்து மதியம் 2 வரை விழா. விமானம் புறப்படும் நேரம் காலை 6 மணி. போய்ச்சேர 1 1/2மணித்தியாலம் எடுக்கும். வீட்டிலிருந்து 40 நிமிட ட்ரைவ்+புறப்பட 45 நிமிடத்திற்கு முன்னர் வி. நிலையத்தில் நிற்க வேண்டியது என எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு காலை 3 மணிக்கு அடியேன் எழுந்திருக்கவேண்டி ஏற்பட்டது. முதல் நாளே கொண்டு போக வேண்டிய பொருட்களை எடுத்து வைத்து விட்டதால் பிரச்சனை இருக்கவில்லை. குளித்துவெளிக்கிட்டு கணவரை எழுப்பி வெளிக்கிட வைத்து வழமையான் தேநீர் ஊற்றுதல்+சாமான் எல்லாம் வைத்தாயிற்றா என்ற சரி பார்த்தல்களுடன் நேரம் கழிந்தது.

வீட்டிலிருந்து புறப்பட்டு விமான நிலைய நீண்ட கால தரிப்பிடத்தில் கார் நிறுத்தி 15 நிமிடத்திற்கொரு முறை வரும் Shuttle பேருந்துக்குக் காத்து நின்றோம். ஒரு குடும்பம் வந்தது. 3பையன்களும் அம்மா அப்பாவும். "Come here darling" - சின்னவனைத் (2 - 3வயது)தூக்கி மடியில் இருத்திக் கொண்டா அம்மா. அவன் நழுவி விடுபட்டுஅப்பாவிடம் ஓடிச் சென்றான். அம்மாவுக்கு யாரையாவது தூக்கிவைத்திருக்க வேண்டும் போல..2ம் மகனைக் கூப்பிட்டு "You can't be warm in that" என்று சரியாக இருந்த ஜக்கெற்றைச் சரி செய்து மடியில்இருத்தி கொண்டா. சற்றே வெட்கத்தில் நெளிந்தாலும் தாயின்மடியிலேயே இருந்து கொண்டான். பேருந்து வந்தது. விமான நிலையத்தில் வழமையான பாதுகாப்பு பரிசோதனை. ஒரு மெட்டல் டிடெக்டருக்கூடாக போகவேண்டுமல்லவா..நானும் போனேன்....யப்பா..கீக் கீக் என்று ஒருஅலறல்.பாதுகாப்பு அதிகாரி பயந்து போனார். ஏதாவது உலோகசாமான் அணிந்திருக்கிறாயா என்று கேட்டார்..தாலிக்கொடியையும் தாலிகோர்த்திருந்த சங்கிலியையும் கழற்றி அவர் கையில் கொடுத்து விட்டுமறுபக்கம் வந்து வாங்கிக்கொண்டேன். "நீர் தாலி கோர்த்திருந்த சங்கிலியை கழற்றியிருக்கத் தேவையில்லை. எங்கட கல்ச்சர் படி நான் கழற்றக்கூடாது என்று சொன்னால் அவை உம்மள force பண்ண ஏலாது" என்றுஎன் பாதி மொழிந்தார். (எனக்கு இதிலெல்லாம் பெரிய "இப்பிடித்தான்செய்ய வேணும், இது செய்யக் கூடாது" கள் இல்லை) பாதுகாப்பு அதிகாரிதனது கடமையை செய்ய நான் ஒத்துழைத்தேன்..அவ்வளவுதான்.(உங்கள் கருத்து என்ன?கழற்றலாமா..கூடாதா??)

பயணம் இனிதாக இருந்தது.கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்குப் பின்னான விமானப் பயணம். வி.பயணம் ஒரு தனி சுகம்தான்.. இல்லையா??

விமானம் தரையிறங்கி நாங்கள் வெளியில் கால் பதித்தோம் ஒரு மணம் மூக்கைத் தாக்கியது. என்னடா மணக்குது என்றால்..பச்சைப் புல்!! மெல்பேர்ணின் பிரதான வி.நிலையமன்றி இது இன்னுமொரு சிறிய வி.நிலையம். கட்டடத்துக்குள்ளே வந்து முன்பதிவு செய்த வாகனத்தின் சாவியை பெற்றுக்கொண்டோம். (இணையம் எவ்வளவு வசதிகளை அளிக்கிறது!!). வாகனம் தேடி கதவு திறந்து சில்ல்ல்லென்ற காலைக்குளிருக்கு இதமாய் சூடு பரவ பயணமானோம். டன்டினொங் வந்ததும் அவளுக்கு என்ன கொடுப்பது என்ற பிரச்சனை மீண்டும் தலை தூக்கிற்று. காசு குடுப்பம், விருப்பமானது அவள் வாங்கட்டும், சின்னப்பிள்ளை தானே- இது நான். கணவரோ " நீங்க அத்தை. நகை கொடுக்கிறது தான்பெட்டர்..மற்றது நகையெண்டா வச்சும் பாவிக்கலாம் தானே". இங்கே ஒன்று சொல்ல வேண்டும்..எனக்கும் தங்க நகைக்கும் எட்டாத தொலைவு. ஏனோ வெள்ளி, தகர(இமிட்டேஷனை அம்மா அப்படித்தான் சொல்வா) நகைகளிலிருக்கும் ஆர்வத்தில் துளிதானும் தங்கத்தில் இல்லை. சரி..ஒருமாதிரியாக காசே கொடுப்பதென்று தீர்மானித்து அண்ணா வீடு நோக்கிச் சென்றோம். அழகாய் கோலம் அணிந்து வாசல் வரவேற்றது. அன்பளிப்பைக் கொடுத்து கொஞ்சி விட்டு வெளிக்கிடப் போனேன். ஏற்கெனவே பிளீற்றுகள் எடுத்து மடித்ததால் ..யுரேக்கா!! பிளீற் பிரச்சனை -இல்லவே இல்லை. புறப்பட்டோம் மண்டபத்துக்கு. விழா பற்றி அண்ணா சொன்னதிலிருந்து 2 ஆச்சரியங்கள் எனக்கு.
(1) நிவேக்குட்டி(இந்தமருமகள்)இந்த வெளிக்கிடுதல்கள், மண்டபத்தில்விழாவைத்தல்களுக்கு விரும்பி ஒத்துக் கொண்டது (2) சாமத்தியச் சடங்கு மண்டபம் எடுத்து கொண்டாடும் அளவில்இருப்பது. (ஏன் பழங்காலத்தில் பெரிதாய் விழாவெடுத்துக்கொண்டாடினார்கள்..அந்தக் காலத்தில் அதற்கான தேவை என்பவற்றையெல்லாம் எம்மக்கள் வசதியாக மறந்து விட்டார்கள் போல)
சரி.. விழாவில் அத்தையையும் பெரிய மனுஷியாக மதித்து ஆராத்தி எடுக்கச் சொன்னார்கள். அத்தைக்கும் சந்தோசம்..வடிவாய் எடுத்தா. நன்றாக நடந்தது விழா. என் கணவரும் அண்ணாவும் ஏதோ தேவைக்காக வெளியில் சென்றிருந்தார்கள். தூரத்து உறவினரான ஒரு அண்ணாவிடம் கதைத்துக் கொண்டிருந்தேன். அவரது தங்கைகளும் நானும் நல்ல தோழிகள்.இவரும் நல்ல முஸ்பாத்தியாக கதைப்பார். திருமணம் நிச்சயமாகினது பற்றி, கிட்டடியில் ஊர் போய் வந்தது பற்றி மற்றும்பல விஷயங்களும் சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தோம். ஆனாலும் இருவரும் மறந்து விட்டோம் தமிழனுக்கு குறுக்குப் புத்தியுண்டு என்று!விழா முடிந்து எல்லாம் ஒதுக்கி வைத்து ஆறி அமர்கையில்அதிலிருந்த மாமிகள் இன்னொருவரது சேலையைப்பற்றியும் தத்தமதைப்பற்றியும் மும்முரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.பக்கத்திலிருந்த அக்கா/மாமிஅந்த அண்ணாவைக் காட்டிக் கேட்டா "அவர் உங்களுக்குஎன்னமுறை?அண்ணையோ?". சிரிப்பு வந்தது. இல்லை..தெரிந்தவர் என்றுசொல்லி இன்னும் குழப்பிவிட குறுக்குப்புத்தி யோசித்தது. வாய் "ம்ம்..அண்ணாமுறைதான்" என்றது. மாமி சொன்னா "அப்ப சரி".

அட இதை மறந்து விட்டேனே..மத்தியான சாப்பாட்டு நேரத்தில் கணவருடன் மேல் குறிப்பிட்ட அண்ணா, சந்திரன் அண்ணா,அவரது துணைவி & இன்னும் 3 -4 பேருடன் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் அண்ணாவையும் கணவன் - மனைவி என தவறாகப் புரிந்துகொண்டாவாம் என்று ஒரு மாமி சொல்ல அவவின் தோழி என் கணவரைப் பார்த்து"அப்ப உங்களுக்கு நல்லம் என்ன..வேற பெட்டைகளைப் பார்க்கலாம்" என்றா.என்னவருக்கு "ஏறி" விட்டது. ஆனாலும் அடக்கிக் கொண்டு சீ..எனக்கு என்ரமனிசி போதும்" என்றார்.

விழா முடிந்து வீட்டுக்கு வந்ததும் நான் தூ.உ.அண்ணாவிடம் அந்த மாமி, இவர் என்ன முறை எனக் கேட்டதைச் சொன்னேன். சிரிசிரியென்றுசிரித்தார். பிறகு அவ ஏன் அப்படிக் கேட்டா என்பதன் காரணத்தைச் சொன்னார். அவ அந்த அண்ணாவுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் பெண்ணின் உறவினராம். "தன் உறவினப் பெண்ணைக் கட்டப் போகிறவன் என்ன இன்னோருத்தியோடு சிரித்துக் கதைக்கிறானே" என்ற அக்கறையாம்!! இப்பிடியான கூத்துகளுடன் நன்றாகக் கழிந்தது நாள். கணவரது நண்பர் கனடாவிலிருந்து குடி பெயர்ந்துள்ளார். அவரையும் எங்களின்மெல்பேர்ண் விசிற்றில் அடக்கத் திட்டமிட்டு அங்கே சென்றோம். இரவுச்சாப்பாட்டிற்கு நிற்கவில்லை, அவர்களுடன் செலவழித்த நேரம் காணாது என்று ஒரே முறைப்பாடு. அங்கிருந்து விமான நிலையத்திற்குச் சென்றால் செக்-இன் முடிந்து 12 நிமிடங்கள் ஆகி விட்டது. பயணச்சீட்டில்குறிப்பிட்டிருந்தார்கள் 30 நிமி.க்கு முன்னமே வந்துவிடும்படி. அதையார் பார்த்தது! கணவரோ காரை ஒப்படைக்க பக்கத்துக் கட்டடத்துக்குப் போய் விட்டார். எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் பணிப்பெண் மசியவில்லை. அவளது நிலையும் எனக்கு விளங்கியதால் சரியென்று விட்டுவிட்டு அருகிலிருந்த கதிரையில் அமர, கணவரும் வந்து என்னிடம்விஷயமறியவும் சரியாக இருந்தது. அவளிடம் ஏற்கெனவே நான் முன்னெச்சரிக்கையாக சொல்லி வைத்ததால் என்னவரின் சாம பேத தண்ட உபாயங்களையெல்லாம் இயல்பாகக் கையாண்டாள் அப்பெண். பிறகென்ன..உபரியாக $164 கட்டி மறுநாட் காலை பயணத்திற்குப் பதிவு செய்து, மீண்டும் கார் எடுத்து நண்பர் வீடு நோக்கிப் பயணித்தோம். காலையில் தவறவிட்ட ஓர் விளம்பரம் கண்ணில் பட்டது.(அதை சொல்ல முதல் 3 விஷயம். நாங்கள் போன வி.நிலையத்தின் பெயர் Avalon. நகரிலிருந்து 30 நிமிடம் தள்ளி உள்ளது.இங்கே அவுஸ்திரேலியாவில் Have *** (அட.. wild card!) என்பதை ஸ்லாங் ஆக "avva*** என்பார்கள். உதாரணத்துக்கு: have a good day என்பது 'avva good day" ஆக மாறும்.)

இதுதான் விளம்பரம்: "Avalong flight ahead?next time fly Virgin Blue"

தலைக்கு மேலே ரொம்ப ப்ரைட்டாக பல்ப் ஒளிர்ந்திருக்கு!!

நண்பர் வீடு வந்து, பலகதை பேசி இரவல் இரவாடையில் படுக்கப் போகையில் 12 மணி. 5 மணிக்கு (ஞாயிற்றுக்கிழமையிலும் சாமம் வழியே எழும்ப வேண்டி இருக்கு!!) எழும்பி குளித்து வெளிக்கிட்டு, சரியான நேரத்துக்கு வி.நிலையம் வந்து, உலோகப் பறவையில் ஏறி, சிட்னியில் தரையிறங்கினோம். சிட்னி விமான நிலையத்திலேயே காலையுணவை முடித்துக் கொண்டு ஷட்டில் பஸ் எடுத்து நீ.கா.த.இலிருந்து காரெடுத்து அவனுக்கு $30 அழுது, வீடு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் அத்தானோ கல்லுப்போல உறுதியாய் இருக்க மெல்லியலாள் (என்ன சிரிப்பு?ம்ம்??) நான் பாழும் Flu க்கு விருந்தோம்பினேன். நேற்றுத்தான் கொஞ்சமாய் மீண்டு வந்து வேலைக்குத் திரும்பியுள்ளேன்.

பி.கு: பவித்ரா போல எனக்கும் தொடர் எழுத (90% மொழிபெயர்ப்புத்தான் என்றாலும்) வார்த்தை முட்டுது. நேரமும் வார்த்தையோடு சேர்ந்து கொண்டு இரட்டை முட்டு!! என்றாலும்..ஒலிம்பிக் தேசம் வரும்....வரும்..வரும்..வரும்..வரும்.வரும் வரும் வரும்வரும்வரும்.....


பெட்டகம்