அழுவதா சிரிப்பதா ?

வார இறுதியில் நண்பரொருவரது வீட்டிற்குச் சென்றிருந்த போது, ஒளிப்பதிவு செய்யப்பட்ட (கனடாவில் நடந்த) நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கக் கிடைத்தது. இலங்கையரின் நிகழ்ச்சி தான்..யாழ் அன்பர்கள்தாம். நிகழ்ச்சி என்று ஒன்று நடந்தால், அது யாரால் நடாத்தப்படுகிறது/ஒழுங்கு செய்யப்பட்டது என்று மேடையில் ஒரு 'Banner' இருப்பது வழமை தானே..இங்கு இவர்களும் விதிவிலக்கல்ல. Banner பெரிய விஷயமல்ல..அதில் இருந்ததைப் பார்த்து எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. Banner இப்படிச் சொன்னது:

வட்டுக்கோட்டை
மூளாய் வீதி ஒன்றியம்


வட்டுக்கோட்டை ஒன்றியம் என்று பெயர் இருந்திருந்தால் அது அவ்வூரைச் சேர்ந்தவர்களுக்குரிய ஒன்றியமாக காணப்பட்டிருக்கும். இங்கு இவர்களோ, வட்டுக்கோட்டை என்கிற ஊர் அடையாளத்தையும் தாண்டி தாங்கள் வசித்த வீதியின் பெயராலே ஒன்றியமொன்றை அமைத்திருக்கிறார்கள். நல்ல காலம், வட்டுக்கோட்டை, மூளாய் வீதி, இல:46 ஒன்றியம் என்று ஒரு சங்கம் அமைக்காமல் விட்டுவிட்டார்கள்.அந்த மட்டில் தப்பினோம். (அப்படி இதுவரை நடக்காமல் காப்பாற்றிய பிள்ளையார் இந்த வீதியில் கோயில் கொண்டிருக்கிறாராம்.அதற்கு நிதி சேர்க்கத்தான் இந்நிகழ்ச்சி நடத்தப் பட்டுள்ளது.)

பி.கு 1: வட்டுக்கோட்டை, மூளாய் வீதி, இல:46 என்பது ஒரு எழுமாற்றான முகவரி. இங்கே வசித்த/வசிக்கிற யாரையும் எனக்குத் தெரியாது.

பி.கு 2: இது யாரையும் (குறிப்பாக - வட்டுக்கோட்டை- மூளாய் வீதி ஒன்றியத்தினரை) புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல.

பெட்டகம்