சொல்ல விரும்புவது

என் அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய வலைப்பதிவாளர்களே, வணக்கம்.

இன்றைக்கு நான் சொல்லப்போவது உங்களுக்கு முக்கியத்துவமில்லாத செய்தி.. ஆனாலும் நீங்கள் "சொல்லவில்லையே நீ" என்று சொல்லிவிடாமல் இருப்பதற்காக நான் சொல்வது என்னவென்றால்: ஏற்கெனவே திட்டமிட்டு இருந்தபடி சரியாக அவுஸ்திரேலிய நேரம் 12 ஒக்டோபர் 2005, 02:00 முதல் நடைமுறைப்படுத்தப்படும் சில செயற்பாடுகள்/நடைமுறைகள் காரணமாக கிட்டத்தட்ட 2 - 3 கிழமைக்கு இந்தப்பக்கம் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உங்களுக்கு (நிகழ சந்தர்ப்பமே இல்லாத) மனவருத்தங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.(அடடே.. யாராவது வந்து corporate report எழுத கூட்டிட்டுப் போங்களேன்!! ;O)

புதிய செயற்பாடுகளை சரிவர மண்டைக்குள்ளே செலுத்தி (வசந்தன் - அந்த குளுக்கோசும் வீவாவும் இப்போ பயன்படும்! அன்பளிப்பு தாராளமாக ஏற்றுக்கொள்ளப்படும்!!) என்னென்ன செய்ய வேண்டும், எவ்வெப்போது செய்ய வேண்டும் என்பதையும் பழகியெடுத்து, சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக் கொஞ்சம் காலம் தேவைப்படுகிறது. அதனால்... "இரண்டு கிழமையாவது நிம்மதி" என்று சந்தோசப் படுகிறவர்களும் "ரொம்ப முக்கியம் இது" என்று அங்கலாய்ப்பவர்களும் "அடடா!!" என்று கவலைப்படுபவர்களும் (இது ஒரே ஒருவர் தான் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!! ;O) ) ஒரு சில கோப்பை ரசங்களை (ரசம் - அவரவர் விருப்பத்தைப் பொறுத்து சுவை/நிறம்/மணம்/குணம் வேறுபடலாம்) அருந்தி மனதை ஆற்றிக்கொள்ளுங்கள்!

மீண்டும் கொஞ்ச நாளையால் சந்திக்கலாம்.

சம்பந்தமில்லாத பின்குறிப்பு: 125ம் பதிவு இந்த அறிவித்தலா!?! :O(

காணவில்லை!


தேடிச் chocolate நிதந் தின்று,
மழலைக் கதை பல பேசி,
களிப்புடனே புரண்டெழுந்து, குழப்படி மிக;
பிறர் மகிழக் குறும்புச் செயல்
புரியு மிந்தக் குட்டி வம்பனை...

பல நாளாய்க் காணோ மடா!!!

குண்டுவெடிப்பும் எரிச்சலும்

பாலியில்(Bali) குண்டு வெடித்தாலும் வெடித்தது ஊடகங்கள் தங்கள் பணியைச் செவ்வனே செய்யத்தொடங்கி விட்டன. 2002ல் வெடித்த குண்டின் இலக்குப் போலவே இந்த முறையுமா எனத்தெரியவில்லை. ஜமா இஸ்லமியாக் குழுவினர் தான் அக்குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

நான் சொல்ல வருவது அதைப் பற்றியன்று. குண்டு வெடித்ததாகச் செய்தி வந்தது வெள்ளியிரவு. சனி காலையில் செய்தியில் சொல்கிறார்கள் அவுஸ்திரேலிய/நியுசவுத் வேலஸ்(எதென்று சரிவர ஞாபகமில்லை) இஸ்லாமிய அமைப்பு இக்குண்டு வெடிப்புக் குறித்து தனது கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறதென்று. சகலவிதமான அமைப்புகளும் இந்தக்குண்டு வெடிப்புத் தொடர்பாக தமது விசனத்தையும் கண்டனத்தையும் தெரிவித்திருந்த வேளை, ஊடகங்கள் இஸ்லாமிய அமைப்பினரின் கண்டனச்செய்தியை மட்டும் தூக்கிப் பிடித்தமை ஊடகங்களின் பாரபட்சமான பார்வையையும், வேண்டாத, விஷ(ம)மான எண்ணங்களை மக்கள் மனதில் ஊன்ற வைக்கும் முயற்சியையுமே காட்டுகிறது. ஏற்கெனவே இஸ்லாமியர் = தீவிரவாதிகள் என்கிற எண்ணம் மக்களிடையே விதைக்கப்படுகிறது. கத்தோலிக்க, அங்லிக்கன், பௌத்த, இன்னும் எத்தனை மத அமைப்புகள் கண்டனச் செய்தியை வெளியிட்டிருக்கும்? ஏன் அவற்றைக் குறிப்பிடவில்லை? இஸ்லாம் மதத்தினர்தான் கண்டிக்கிறார்கள்; அவர்களைச் சார்ந்தவர்தான் செய்ததென அவர்களுக்கே சந்தேகம் வந்ததில்தான்/ தெரிந்ததில்தான் இவ்வாறு கண்டன அறிக்கையை வெளியிடுகிறார்கள் என்கிற நினைப்புகளுக்கு இடம் தரும்வகையில் தான் செய்தி சொன்ன விதம் அமைந்திருந்தது. குண்டு வெடிப்புக்குச் சூத்திரதாரிகள் பற்றிய ஊகங்கள் நிலவினாலும், இன்னும் சரியாக நிறுவப்படாத நிலையில் ஊடகங்கள் பொறுப்பற்றதனமாக, குறிப்பிட்ட சமூகத்தினரின் மீது காழ்ப்புணர்ச்சி வரும்வகையில் இவ்வாறு செய்தி வெளியிடுவது கண்டிக்கத்தக்கது.

பிரித்தானியரின் வழி வந்தவர்களென்று உறுதிப்படுத்திக்கொள்ள "Divide & Rule" உத்தியை ஊடகங்களின் மூலம் செயல்/வெளிப்படுத்துகிறார்களோ?

பெட்டகம்