அலையே..நீ அலையாதிருக்கக் கடவது!


ஏற்கனவே அலை பாய்ந்த நிலையில் இருக்கின்ற எம்மேல் ஏன் இந்த அலை பாய்ந்தது?

இயலுமான உதவியை இங்கிருந்தே செய்து விட்டு, அது போய் சேரவும், இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்கும், ஏனையோருக்கு இழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்திக்குமாக என்று வேண்டுதல்கள் நிறைந்த கனத்த மனதுடன் வலம் வருகிறோம்.

இலங்கை-இந்தியாவுக்குச் சென்று மீட்பு / நிவாரண பணிகளில் ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? மருத்துவச் சேவை போன்று அத்தியாவசிய துறைகளில் பயிற்சியுள்ளவர்கள் மட்டுமா இங்கிருந்து செல்லலாம்? தயவு செய்து அறியத் தரவும்.

அதிகாலை என்ன வேளை?

தமிழ் மருத்துவ நிதியத்தினர் நடாத்திய முத்தமிழ் மாலை 04 இல் இடம்பெற்ற நாடகத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. "ஆரொடு நோகேன்" என்ற பெயரில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைக்களுக்கு யாரை நோவது என்பதே கருப்பொருள். நகைச்சுவையாக நல்லாக இருந்தது. அதிலே கூடவே நடித்த ஒருவரின் கடி சொல்லி மாளாது. நடிக நடிகையர்(சரி சரி...நீங்க "நினைப்புத்தான்" என்று சொல்வது கேட்கிறது!!) நிகழ்ச்சிக்குப் அடுத்த கிழமை உணவகமொன்றில் ஒன்று கூடினோம். அங்கே வைத்து ஒருவர் கடித்த கடி இருக்கிறதே...

ஒருவர்: அண்ணா, ரிமோட் கொண்டுவந்தனிங்களா?கடியர்: அவவை வீட்ட விட்டிட்டு வந்திட்டனே!!

நாடகத்தின் ஒளிப்பிரதியைப் பார்க்கையில், அதிலே நாடக இயக்குனர் சொன்னார் "இந்த நாடகத்தை உங்கள் முன் அரங்கேற்றுவது என் பாக்கியம்"அதற்கு 'கடி'யர் "அது யாரது பாக்கியம்?".."எங்களுக்குத் தெரியாம எப்பிடி நாடகத்தை மேடையேத்தினவ?"

பாட்டுக் கச்சேரி வைத்தோம்...கடி மன்னன் பாடுகிறார்..."றாவும் கள்ளும் கைகளில் ஏந்தி..."(பாலும் பழமும் கைகளில் ஏந்தி..)"உளுந்து வடையை சட்னியில் தொட்டு சாப்பிட்டு பாரு ஊ .., என் பேரு வடையப்பா,சூடான வடையப்பா...சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாய்ப் போயிற்று.

கடைசியாய் பாடினார் இன்னுமொரு மாற்றிய பாட்டு... இதற்கு சிரிப்பு வரவில்லை..எல்லார் முகத்திலும் அப்பட்டமாய் தெரிந்தது வலி.

'80களில் வந்த பாடலாம்.."அதிகாலை..சுப வேளை..உன் ஓலை வந்தது..."
மாற்றிய பிறகு: "அதிகாலை..கெட்ட வேளை..பொம்பர்(bomber) வந்தது.."

கதவுகளை பூட்டுங்கள்


நீண்ட நாட்களுக்கும் மகவுப்பிரச்சனைகளுக்கும் பிறகு பிறந்த அரிய மகளாய், செல்லத் தங்கையாய் வளைய வந்த 6 1/2 வயது அழகான குட்டிப் பெண் இன்று இல்லை. தன் தகப்பன் மறைவையொட்டி தாயார் மகனுடன் இலங்கை சென்றிருந்த வேளையில் செல்லப்பெண் சிறகடித்துப் பறந்துவிட்டாள். அப்பாவும் மகளுமாய் நண்பர் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். நண்பர் வீட்டில் நீச்சல்குளத்திற்கு போடப்பட்டிருக்கும் பாதுகாப்பு வேலியின் காந்தப்பூட்டு சரியாக அடித்துச் சாத்தாததால் திறந்தேயிருந்திருக்கிறது. பிள்ளையை காணவில்லையெனத் தேடும் போது நீச்சல் குளத்தில் உயிரற்றவளாகத் தான் கண்டிருக்கிறார்கள். cleft pallete குறைபாடு இருந்ததால் நீச்சல் கடினம்.

நேற்று viewing. தாய் விறைத்துப் போய் உட்கார்ந்திருக்க, தந்தையோ தூங்கும் மகளின் கன்னந் தடவி தலை வருடுகிறார். மனம் தாங்கவில்லை. என்னையறியாமலே கன்னத்தில் நீர்க்கோடுகள்.

தயவு செய்து உங்கள் கதவுகளையும் பூட்டுகளையும் சரியாகப் பூட்டுங்கள்.

பெட்டகம்