சிக்குபுக்கு ரயில்

நகருக்குள்ளே எத்தனை விதமான இடங்கள்..அத்தனையும் நடந்தே பார்த்து விடும் தூரம் தான் ...என்றாலும் சிட்னி சிற்றிக்குள்ளேயே 8 - 10 நிமிட நடை தூரத்தில் ரயில் நிலையங்கள். நான் இன்னும் போய் பார்க்காத லண்டனின் நிலக்கீழ் இரயில் போல் இங்கு நகருக்குள்ளே மட்டுந்தான். புறநகர் பகுதிகளில் ஊரிலிருப்பது போல் நிலத்தின்மேல். மேலும் கீழுமாக இரண்டு "மாடிகள்" கொண்ட பெட்டிகள்.

சிற்றிரெயில் என அழைக்கப்படும் ரயில் வலைப்பின்னல். ஒருநாளும் நேரத்திற்கு வருவதில்லை. திடீரென்று சில சேவைகள் இரத்துச் செய்யப்பட்டு "இதனால் ஏற்படும் சங்கடங்களுக்கு சிற்றிரெயில் மனம் வருந்துகிறது" என்று சொல்வார்கள். பிந்தி வருவதால் எற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக குறிப்பிட்ட நிலையத்தில் ரயில் நிற்காமலும் போவதுண்டாம். இவற்றையடுத்து பயணிகளிடம் எழுந்த அதிருப்தி சொல்லில் அடங்காது. தொலைக் காட்சியில் ஒரு பயணி current affairs நிகழ்ச்சியில் சொன்னார் இந்த ரயில் சேவைக்கு பணங் கொடுத்து கடவுச்சீட்டு வாங்கி பயணிப்பது அபத்தமான செயல் என்று. நியு சௌத் வேல்ஸின் முதல்வர் கடந்த திங்கட் கிழமையை இலவச பயண நாளாக அறிவித்தார். இது பயணிகளை அமைதிப்படுத்தும் என நினைத்தாரோ என்னவோ..அவர் நினைப்பில் மண். (இதைப் போலவே முன்னரும் சில ^இதே முதல்வரின் கீழ்^ இலவச பயண நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன). இதற்குப் பிறகாவது ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா பார்க்கலாம்!

சிற்றிரெயிலுக்கு செல்லப்பெயர்கள்: சிற்றிஃபெயில், சிலிரெயில்

மருத்துவமனைகளின் நிலை இன்னும் மோசமானது. அவசர சிகிச்சைப் பிரிவில் கிட்டத்தட்ட 6 மணித்தியாலத்திற்கும் மேலான காத்திருப்பு, இடமின்மையால் நோயாளிகள் திருப்பி அனுப்பப்படும் நிலை என்று பல பிரச்சனைகள். அது பற்றி இன்னொருநாள்.

கண்ணோடு கண்

ஒருவருடன் கதைக்கும் போது அவரது கண்களைப் பார்த்து கதைப்பது எவ்வளவு நேரத்திற்கு சாத்தியம்? அவரிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை/ நீங்கள் பிழை செய்யவில்லை என்றாலும் சில வினாடிகளுக்கு மேல் கண்ணைப் பார்த்துக் கதைக்க முடிவதில்லையே..ஏன்?முகத்தைப் பார்த்து உரையாடுகிறோமே தவிர கண்ணைப் பார்த்து அல்ல. எங்களுடைய விஞ்ஞான ஆசிரியை நேரே கண் பார்த்துத் தான் கதைப்பா. நல்ல அழகான கறுப்புவண்டு போல கண்கள்...மிஞ்சிப் போனால் அவரின் கண்ணை 10 செக்கனுக்கு மிஞ்சி நேரே பார்க்க முடியாது. அவ்வளவு தீவிரம். ஏதோ உள்ளுக்குள் உள்ளதெல்லாம் அவருக்குத் தெரிந்து விடுமோ என்று தோன்றும். x-ray என்று அழைப்போம்.

சரி மீண்டும் கேட்கிறேன்...தொடர்ந்து ஒருவரது கண் பார்த்துக் கொண்டு அவருடன் உரையாடுவது என்பது வலுக்கட்டாயமான தொடர் பயிற்சியின் மூலம் செய்யக் கூடியதாகுமா? விஞ்ஞான ஆசிரியை போன்ற ஒரு சிலர் தவிர ஏனையோர், உரையாடலின் போது மற்றவர் கண்ணைப் பார்த்து கதைப்பதை ஏன் தவிர்க்கிறோம்?? நேர்கொண்ட பார்வையுடன் கூடிய உரையாடல் ஏன் சிறுவயதிலிருந்தே பழக்கத்தில் இல்லை? சிறுவர்களுக்கு அறிவுறுத்தி, பழக்கத்தில் இயல்பான ஒன்றாய் கொண்டுவர முடியாதா?

எட்டிப் பார்த்தேன்

காணாமல் போனவர்கள் என்று ஒரு பட்டியலில் என் பெயரையும் சேர்த்து விட்டுடாதீங்க. ஏதோ கிடைக்கிற சொற்ப நேரத்தில் வலை மேய்கிறேன்..பின்னூட்டம் அளிக்க முயல்கிறேன்..பல வேளைகளில் மின்னஞ்சல் பார்க்க மட்டுமே நேரம் வாய்க்கிறது. விருந்தோம்பல்+அதற்கான நேரம் பற்றி இப்போது தான் முழுமையாக உணர்கிறேன். எப்படியும் இன்னும் 2/3/4 கிழமைகளில் வழமைக்குத் திரும்பிவிடக்கூடும். அது வரை சில தளங்கள் உங்களுக்காக:

  • அலுவலகத்தில் பொழுது போகவில்லையா(!?) இங்கே போங்க.
  • மூளைக்கு வேலை வேண்டுமா..அதற்கு ஓரிடம்.
  • போதைக்கு அடிமையாவதைப் போல கல்லூரியில் கிட்டத்தட்ட ஒன்றிரண்டு மாதங்களுக்கு என்னை தன் அடிமையாக்கியது இது (இப்பிடி நிறைய இங்கே)
  • இணையத்தின் தொல்லை தாங்கவில்லை..ஒருவழி பண்ணனும் என்று நினைத்தால்..வழி இதோ!

பெட்டகம்