பேரைச் சொல்லடா!


"ஹாய்"
குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தால், எங்கேயோ பார்த்த முகமமொன்று மெலிதாய் புன்னகை ஒன்றைச் சுமந்து கொண்டு. ("ம்ம்..யாரிது??) "ஹாய்"

"எப்பிடி இருக்கிறீங்க"
(அட..தமிழ்..) "நல்லா இருக்கிறன். நீங்க?"
"ஓக்கே."

வழமையான வேலைக்குப் போறீங்களா, எங்கே இருக்கிறீங்க என்கிற பரஸ்பர(இதற்குத் தமிழ் என்ன?) விசாரணைகள். (டேய்.. நீ என்னோட படிச்சனி என்டு தெரியுது.. பேரைச் சொல்லன்டா!!)

"உங்கட ஃபிரெண்ட்..ம்ம்..மாலினி எப்பிடி இருக்கிறா? இப்ப எங்க ஆள்?"
"அவ இப்ப ரஷ்யாவில படிக்கிறா."
"மலேசியாவிலதானே முதல் படிச்சவ"
"ஓம்.அது முடிச்சு இப்ப ரஷ்யாவில."
"அடுத்த தரம் கதைக்கேக்குள்ள/மெயில் போடேக்குள்ள நான் கேட்ட என்டு சொல்லுங்கோ."
(ஆரோட கதைச்சுக் கொண்டிருக்கிறனென்டு தெரியாம நான் முழிக்கிறன்..அவக்கு என்னண்டு விளங்கப்படுத்திறது!!) "ஓ! கட்டாயம்". (ட்ரெயினால இறங்க முன்னம் பேர் சொல்லுவாய் தானே?)

இது நடந்தது சில மாதங்களிருக்கும். அவனைத் தொடர்ந்து காண்பதுவும், இருவருக்கும் பொதுவான/தெரிந்த நட்புகளைப் பற்றிய செய்திப் பரிமாற்றமுமாயும் தொடரும் உரையாடல்கள். (அடேய்..பேரைச் சொல்லித் துலையனடா..). கதைத்ததிலிருந்து ஊகித்ததில் அவன் படித்த பள்ளிக்கூடத்தின் இணையத்தளம் போய் உயர்தரப் பரீட்சை எடுத்த வருடத்தின் படி தேடி, நிழற்படங்களைக் கூர்ந்து பார்த்தும் எந்தப் பயனுமில்லை.

திரும்பவும் ஹாய்கள் & நட்பு வட்டங்கள் பற்றிய பேச்சு. நானும் ஏதோ நினைப்பில் இரண்டு குமார்களையும் (குமர்கள் அல்ல!) இன்னுமொருத்தனையும் ஞாபகப்படுத்திக் கொண்டு, அந்த மூவரில் ஒருவன்தான் இவன் என்று தீர்மானித்தேன். திருவிழா நேரத்தில் ஏதோ ஒரு குமார் என்னோட வந்து கதைத்தானே.. முகம் மறந்து போச்சே!! சரி, இனிமேல் process of elimination தான்!

குமார்1 என்று எடுத்துக்கொண்டேன் அடுத்த முறை காணும் போது. பேசுகையில் சொன்னான் குமார்1 வருகிற மாசி மாதம் திருமண்ம் செய்து கொள்ளப்போகிறான் என்று. (அடப்பாவி, அது நீயில்லையா!)

பிறகு கதைத்த சில சந்தர்ப்பங்களில் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. (சந்தித்த அன்று முழுக்க.. " பேரைச் சொல்லி அறிமுகம் செய்கிற பழக்கமில்லையா உனக்கு" என்று திட்டித் தீர்ப்பதுதான்!! முகம் மட்டும், "என்னைப் பார்த்திருக்கிறாய்.. எங்கெயென்று சொல்லு" என்று வேதாளமாய் கேள்வி கேட்கும்.)

நேற்றும் அதே "ஹாய்". சரி இன்டைக்கு உன் பெயர் அறியாமல் விடுவதில்லை. கொஞ்ச நேரம் பேசிய பின், மாலினியின் மின்னஞ்சல் முகவரி கேட்டதற்கு, "உம்மட ஃபோன் நம்பரைப் போட்டுத்தாரும். அனுப்பிறன் என்று செல்லிடப்பேசியைக் கொடுதுவிட்டு பெயர் தெரிந்துவிடும் என சந்தோசத்தில் மிதந்தால், "இந்தாங்கோ" என்று நீட்டியதில் இருந்தது அவனது இலக்கம் மட்டுமே!!! (ஐயோ!!!)

மாலினியிடம் பேசுகையில் "பெயர் தெரியாமல் பேசும்" கதை சொன்னால், ஜோக் ஒஃப் த இயர் என்று சிரிக்கிறாள். பிறகு அவளுடன் சேர்ந்து யோசித்தும் பிடிபடவில்லை. காலையிலே நடந்து போகும் போது மின்னலாய் பொறிதட்டியது. வீதியிலே துள்ளாத குறை. கடந்து போன எவரும் முகத்தில் என் சிரிப்பைக் கண்டு ஒரு மாதிரித்தான் பார்த்துப் போயிருப்பர். பெயர் தெரியாமத்தான் கதைச்சனான் இவ்வளவு நாளும் என்டு அவனுக்குத் தெரிஞ்சிருக்குமோ என்றொரு யோசனை வேறு வந்து தொலைத்தது.

இன்றைக்கும் கண்டேன். ஆனாலும் பெயர் சொல்லி அவனை விளிக்கவில்லை. எதற்கும் இருக்கட்டுமேயென அவன் மின்னஞ்சலைக் கேட்டேன்.

"என்ட பெயர் தெரியுந்தானே?" (அப்ப நான் பெயர் தெரியாமத்தான் கதைச்சனான் என்டது உனக்குத் தெரிஞ்சிருக்குமோ என்டு யோசிச்சது சரிதானா!! தெரியாம முழிக்கிறனென்டு கண்டா பேரைச் சொல்றதுதானே!!)
வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு "ஓமெண்டுதான் நினைக்கிறன்" "என்ன ஸ்பெலிங் பாவிக்கிறனீங்க? Gயா Kயா..."

வண்டி தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது!


பி.கு: கணவரும் தோழியும் சொன்னமாதிரி "பெயர் தெரியாமல்தான் இதுவரைக்கும் உன்னுடன் கதைத்தேன்" என்று ஒத்துக்கொண்டு அவனிடமே பெயரைக் கேட்காமலிருந்தது நல்லதென்றே தோன்றுகிறது. எல்லாம் நன்மைக்கே!?

பெட்டகம்