மாமியும் மருமகளும்

வந்தியத் தேவன் 55 சொற்களில் எழுதியதை வாசித்த போது மாமி அம்மாவுக்குச் சொன்னது ஞாபகம் வந்தது.மாமி கனடாவால் 8/10 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருந்த சமயம் அது. கனடா வர்ணனை முடிந்து என் மச்சா(ள்+ன்), கனடாவிலே இருக்கும் மாமியின் சகோதரியின் பிள்ளைகளைப் பற்றிக் கதை வந்தது. மச்சானின் திருமணம் நடந்து ஒரு வருடமும், மச்சானுடைய சித்தி மகளுக்கு திருமணம் முடிந்து 8 - 9 மாதங்களும் ஆகியிருந்தது. மருமக்களை பற்றிக் கேட்டதற்கு மாமி சொன்னா:

"என்னத்த சொல்றது?தங்கச்சிட மருமகன் தங்கமான பெடியன். சுதாவை ஒரு வேலையும் தனியா செய்ய விடுறதில்லை.எல்லா வேலைக்கும் உதவி செய்வார். காலையில தேத்தண்ணி போட்டு குடுக்கிறதும் அவர்தான். அதுக்கு இருக்குது எனக்கு வந்த மருமகள்...ஒரு வேலையும் செய்யாது. அவவுக்கு காலை coffee பிரசாத் போட்டு குடுத்து எழுப்புவான். சமையலும் அரைவாசி அவன் தான்."

சுதாவுக்கு கணவர் செய்வதை சிலாகிக்கும் மாமியால், அதையே தான், தன் மகன் மருமகளுக்குச் செய்கிறான் என்று உணர முடியவில்லை. பாசம் கண்ணை மறைப்பது என்பது இதுதானா?

(இத்தனைக்கும் மாமி ஒரு ஆசிரியை!)

பெட்டகம்