உலாத்தப் போக..

இந்தப் பதிவு நான் மறக்காமலிருப்பதற்காக.

பயணங்கள் சுகம் தருபவை. போய்ச் சேருமிடம் குறித்த பார்வையோடே பலர் பயணங்களை அணுகுகிறோம். அப்படியில்லாமல் பயணத்தையே இரசித்து முடிவுடம் போய்ச் சேருவோர் நம்மில் எத்தனை பேர்? பயணம் போகலாம் என்று நினைத்தவுடன் மனதில் தோன்றும் அந்த விவரிக்கவியலாப் பரபரப்பும், பயணத்திற்குத் தேவையான ஆராய்ச்சிகளில் இறங்கி முடிவெடுக்கும் போதும் ஏற்படும் கிளர்ச்சி என்பன இனிமையானவை. முடிவிடமடைந்ததும் வேறு விதமான உணர்ச்சிகளாக உருவெடுத்துக் கொள்பவை. பயணத்தை ஒழுங்கு படுத்தும் போதோ, அல்லது பயணித்துக் கொண்டிருக்க்ம் போது இருக்கும் எதிர்பார்ப்பு அங்கு போய்ச் சேர்ந்ததும், 'அடடா..வந்து விட்டோமே' என்றிருக்கும் எனக்கு. (நிறைய நாள் எதிர்பார்த்து திட்டமிட்டுப் போன ஐரோப்பியப் பயணம் அப்படித்தான் இருந்தது பாரிஸ் போயிறங்கின கொஞ்ச நேரத்துக்கு)

விமானப் பயணமே எனக்குப் பிடித்தமானது. சிலருக்குப் பயம், சிலருக்கு ஒன்றும் பண்ணாமல் உட்கார்ந்திருக்க வேண்டுமே என்ற சலிப்பு - எனக்கு இதெல்லாமில்லை. படத்தையோ அல்லது யன்னலுக்கூடாக முகிலோ நிலமோ வானமோ பார்த்து ரசித்து, பக்கத்தில் இருப்பவருடன் பேசி, பணியாளருக்கு மணிக்கொரு தரம் வெந்நீருக்காகத் தொல்லை கொடுத்து, தூங்கியெழுந்து நிறைக்கும் பயணம். இதில் பிடிக்காமலிருக்க, பயப்பட என்ன இருக்கிறது?

போக/பார்க்க நினைத்திருக்கிற இடங்கள்/நாடுகளைப் பட்டியலிட்டு வைக்க நினைத்தது தான் இப்பதிவின் ஆரம்பம். பட்டியல் ஒரு வித ஒழுங்கிலுமில்லை:

  • அவுஸ்திரேலியா
  • மொரோக்கோ
  • இலங்கை
  • நியுஸிலாந்து
  • இந்தியா
  • அந்தமான்-நிகோபார்
  • காஷ்மீர்
  • கம்போடியா
  • நேபாளம்
  • கிரேக்கம்
  • அயர்லாந்து
  • ஸ்கொட்லாந்து
  • வேல்ஸ்
  • வடதுருவம்
  • பிரான்ஸ்
  • சுவிட்சர்லாந்து
  • நோர்வே
  • டென்மார்க்
  • சுவீடன்
  • தாய்லாந்து
  • மாலைதீவு
  • கனடா
  • ஐஸ்லாந்து
  • கிரிபற்றி
  • எத்தியோப்பியா
  • தென்னாபிரிக்கா
  • எகிப்து
  • மடகாஸ்கர்
  • இந்தோனேசியா(பாலித் தீவு)
  • ஈரான்
  • துருக்கி
  • ஆப்கானிஸ்தான்
இன்னும் காணக் காண, படிக்கப்படிக்க என் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவரைப்போல வரையறுத்த திட்டம் இல்லாவிட்டாலும் எனக்கென்று மேலே சொன்ன இடங்களைப் பார்ப்பதற்கான திட்டமல்லாத பெருந்திட்டமிருக்கிறது. அதில் முக்கியமான பங்கு எங்கு என்ன எப்போது என்றெல்லாம் வகுத்துக் கொள்ளாமல் பயணிப்பது.

திடீரென்று முடிவெடுத்து வெளிக்கிடும் spontaneous பயணங்கள் இல்லவே இல்லாதளவுக்காய் வெகுவாய்க் குறைந்து விட்டன. வாழ்க்கைச் சுழலில் அப்பயணங்களால் வரும் வசதிக்குறைவுகள் கருத்தில் கொள்ளப்பட்டு பல நல்ல அனுபவங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறேன். ஹென்ரிக்கோவுக்கும் பேர்ணடெட்டுக்கும் மீண்டும் வாழ்த்துக்கள். அவர்கள் முடிவு சரியானது. (அவர்களைப் பற்றி இன்னொரு நாளைக்குக் கட்டாயம் பேச வேண்டும்)

--O-0-O--

பயணமென்று சொன்னதும் அண்ணாவுடன் போனவையே ஞாபகத்தில் மின்னுகின்றன. முக்கியமாக ஒரு பயணம். 1999ம் ஆண்டு - நான்கோ ஐந்து நாட்களுக்கு பன்னிரண்டு பேர் செல்லும் வாகனத்தில் பதினெட்டுப் பேர் போனோம். எங்கெங்கெல்லாமோ சுற்றினோம்..சுற்றிய இடமெல்லாம் வரலாற்றுச் சின்னங்கள் மிகுந்திருந்தன. மிகிந்தலை, பொலன்னறுவை, அனுராதபுரம், கதிர்காமம், சிகிரியா, பெயர் மறந்த இன்னும் வேறு இடங்கள். குளம்/ஆறு கண்டால் நிறுத்திக் குளித்துக் கும்மாளமிட்டு பக்கத்திலேயே எங்காவது ஒரு ஆச்சி வைத்திருந்த கடையில் கிடைக்கிற சோறு-கறியோ அல்லது பாண்-சம்பல்-வாழைப்பழம்-தேநீரோ அல்லது பழங்களோ உண்டோம். ஒரு நாள் அரைநிலவொளியில் vanக்குள் சிலர் தூங்க, மீதி துணி விரித்து குளத்தங்கரையில். இன்னொருநாள் அனுராதபுரத்துப் புத்தர்களையும் தாண்டி நிறையத்தூரம் போய் - எங்கள் குழுவிலிருந்த ஒருவரது அக்கா கற்பித்துக் கொண்டிருந்த பள்ளிக்கூடத்தில் இராத் தங்கினோம். தோட்டத்து மரவள்ளி கிண்டியெடுத்து அவித்து சம்பலுடன் உண்டோம். என் கிராமத்திலிருந்து வெளியேறிய சிங்களவர் சிலரும் எங்கள் குழுவிலிருந்தனர். என் கையெழுத்துப் புத்தகத்தில் அவர்களில் ஒருவர் தமிழில் எழுதித் தந்த 'இனன்களுக்கிடையிலான ஒற்றுமை ஓங்குக!' இன்னும் என்னிடமிருக்கிறது. அதைப் பார்த்துத் திருத்தி '
இனங்களுக்கிடையிலான ஒற்றுமை ஓங்குக!' என்று இன்னொரு தாளில் அவரிடமெழுதிக் கொடுத்த என் அபத்தமும் ஞாபகமிருக்கிறது.

தயிரும் கித்துள்பாணியும் நிறைந்த அந்த நாட்களில் எங்களுக்குள் தமிழ்-சிங்களப் பேதம் இருக்கவில்லை. சண்டை எங்கோ வேறொரு கிரகத்தில் நடந்து கொண்டிருந்தது. அதற்கும் எங்களுக்குமான தூரம் ஒன்றினாலும் எட்டிப்பிடிக்க முடியாதபடி நீண்டு போயிருந்தது.

என் கிராமத்தின் அழகுக்கு அடுத்தபடியாக, அங்கிருந்து புறப்பட்டதன் பிறகு,
நான் அழகான மனிதர்களையும் இடங்களையும் அப்பயணத்தின் போது கண்டுகொண்டேன். கல்முனை என்றால் என்ன, கம்பகா என்றால் என்ன..அன்பு மிக்க மனிதர்கள் எங்கேயும் அழகுதான்.

கருத்துச் சொல்லுங்க

PITக்குப் படமெடுத்தேன்.. எதை அனுப்ப என்று தெரியவில்லை.உதவுங்களேன்..

படங்கள்: இங்கே அல்லது அங்கே

நன்றி

பின்நவீனத்துவம்

வலையில் நிறையப்பேர் பின்நவீனத்துவம் என்டு நிறைய எழுதிறாங்க. அந்தளவுக்கு எனக்குத் தெரியாது. ஆனாலும் "கண்ட" அளவில பின்நவினத்துவம் எண்டா இதுதான். :O))


New South Wales Art Gallery
கண்டது.

இரவுகள்

பொதுவிலே இரவுகள் அழகானவை. அதிலும் மழையைப் போர்த்திக் கொண்ட இரவுகள் எப்பவும் எனக்கு மிகவும் பிடித்தமானவையாக இருந்திருக்கின்றன. அவற்றுடன் கூடவே நித்திரை கொள்ளப் போக வேண்டுமென்று தோன்றவே மாட்டாமல் விழித்திருந்து பாடல் கேட்கிற இரவுகளும். பாசாங்குகள் ஏதுமற்று எங்களைப் பகிர்ந்து கொள்வதால் இந்த இரவுகளுடன் மிகவும் இயல்பான நெருக்கம் உருவாகிறது- உற்ற நட்பொன்றினைப் போல. இன்றைக்கும் உட்கார்ந்திருந்தேன்(இருக்கிறேன்). மனதை சங்கடப்படுத்தும்/நடப்புச் சூழலிலிருந்து வெளியே ஒரு கனவுலகுக்குக் கொண்டு போகவோ அல்லது ஞாபகங்களைக் கிளறவோ வைக்கிற இசை மட்டுமே துணை வருகிறது.

இரவுப் பொழுதுகளில்தான் நிறையத் தோன்றுகிறது. இதையிதை இப்படியிப்படி எழுதலாம், இப்படி ஒளிப்படம் எடுக்கலாம், வாழ்த்து மடல்களின் வடிவமைப்பு, தொடர்பற்றுப் போய்க் கொண்டிருக்கும் ஆட்கள் என்றெல்லாம் ஒரு நீரூற்றுப் போல யோசனைகள் பிரசவிக்கின்றன. ஞாபகமிருக்கும் என்று குறிப்பெடுக்காமல் தூங்கிப் போவதே வழக்கமாகிப் போயிருக்கிறது எனக்கு. இன்றைக்கும்போய் படுகையில் சரிந்தால் எப்போதும் நடப்பது போலவே எங்கெங்கெல்லாமோ சுற்றி தொடங்கின எண்ணத்துக்குச் சற்றும் சம்பந்தமில்லாத இன்னுமொரு எண்ணம் ஓடிக்கொண்டிருக்கையில் தூங்கிப் போகப் போகிறேன். அதற்கென்ன அவசரம்.. இன்னும் கொஞ்சம் உட்கார்ந்திருக்கலாம் - வந்திருக்கும் மழையுடன் பேசிக் கொண்டு. மழை போல மனதைக் கழுவுகிற/நிறைவைத் தருகிற விதயங்கள் மிகக்குறைவு. சிரபுஞ்சி போகவேண்டும்..ஓரிரவுக்காவது.

சந்திரா என்றொரு அழகி

என்னதான் படித்தாலும், நல்லோர் சகவாசம் இருந்தாலும் எவ்வளவு விதிக்கப்பட்டதோ அவ்வளவுதான் மதி என்று நிறுவிக் காட்டவும் சிலர். இவர்களை நினைத்தாலே கோபமும், அனுதாபமும், சிரிப்பும் ஒருங்கே வருகிறது. (தயவு செய்து யார், ஏன், என்ன என்றெல்லாம் கேட்காதீர்கள்.)

---- சரி, தொலையட்டும் அந்தக் கதை. சந்திராவைப் பற்றிப் பேசலாம்.

எடுத்துப் பேசும் போதெல்லாம் "எப்படியிருக்கிறாய்" என்ற கேள்வியுடன் ஆரம்பித்து அதற்குப் பதில் நான் சொன்னதுடன் நடந்தவைகளில் சிரிப்பானவற்றையோ அல்லது "அம்மா xx மணிக்குப் போனவ, இன்னும் வரேல்ல" என்றோ ""அம்மா சரியான குழப்படி, சொல்லுக் கேட்கிறேல்ல" என்றோ முறைப்பாடு சொல்லும் பெண் இன்றில்லை. உயிர் போய் 36 நாளாகிறது. மனிதர்களைக் கூர்ந்து கவனிக்க, உள்ளே தேடிப்பார்க்க என்று கடுமையாக ஞாபகமூட்டிக் கொண்டும் அட! இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாமே, அவருடன் அதிகநேரம் கழித்திருக்கலாமே என்று காலங் கடந்த ஞானோதயம் தரும் குற்றவுணர்ச்சிகளுடனும் கடந்து போயிருக்கிற ஒரு மரணம்.

செத்தவீட்டில் போன்று இதுதான் நடந்தது என்றெல்லாம் சொல்லப் போவதில்லை. முடிந்து போனபின் எங்கள் ஆறுதலுக்குத்தானே இந்த அக்குவேறு ஆணி வேறாகச் சாக முந்தி நடந்ததும், அவர் சொன்ன வார்த்தைகளுக்கு பொருளும் உள்ளர்த்தம் கண்டு பிடிப்பதும் கற்பிப்பதும். உசாராக சந்தோசமாக அன்பாக வாழ்க்கையை வாழத் தெரிந்த ஒருவர் இப்போது இல்லையே என்ற துக்கம்தான் அவரை அறிந்த சந்தோசத்துடனும் அவர் பற்றின ஞாபகங்களுடனும் சேர்ந்து மனதில் பூத்திருக்கிறது.

இறக்கப் போகிறார் என்று தெரிந்ததும் அதற்காகக் காத்துக் கொண்டிருப்பது பெருங் கொடுமை. அது போன்ற கொடுமைகள் எண்ணிக்கையில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடியனவாய்த்தான் இருக்கும். அதைவிட வெறுங் காலுடன் கொளுத்தும் வெயிலில் வறண்டு போனதொரு ஆற்றின் கரையில் அல்லது பாறையில் அசையாமல் நெடுநாட்களுக்கு நின்று கொண்டேயிருக்கலாம். மற்றவர் இருக்கட்டும்.. அவரது உடல் ஒத்துழைக்க மறுப்பதை உணர்ந்து கொண்டாலும் கருப்பையில் உருவாகின கணத்திலிருந்து கூடவே இருந்து கடந்த சில வருடங்களாக தோழிகள் போல ஒன்றாக வாழ்ந்திருந்தவள் இறக்கபோகிறாள் என்று அறிந்தும் எந்த நிமிடம் வரை என்று அறியாதிருப்பது போல வதை வேறொன்றும் வேண்டாம் என்று தோன்றுகிறது.

அந்த நாளையும் மழையைப் பூசிக் கொண்ட தொடர்ந்து வந்த நாட்களையும் கடந்து வந்த ஒரு பிற்பகலில் சந்திராவின் உடைமைகளினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த போதுதான் அந்த குறிப்பேட்டைக் கண்டேன். எண்ணற்ற குடும்பங்களுக்கே உரித்தான பரகசியமான இரகசியக் கதைகள். அதிலொன்றுதான் - அடுத்த தலைமுறைக்கு அரசல் புரசலாகத் தெரிந்த கதை..சந்திராவின் கோணத்திலிருந்து.

சிறுவயது வாழ்க்கையும், பட்டப்படிப்புக்கு புனே மற்றும் கல்கத்தா சென்றதும், சிங்களவரைக் காதலித்து மணந்த குற்றத்திற்காய் மூத்த தமக்கையின் குடும்பம் விலக்கினதும், எத்தியோப்பியாவுக்கு கற்பிக்கப் போனதும், அங்கு வேறொருத்திக்குக் கணவரால் பிறந்த பிள்ளைகளையும் அவற்றின் தாயையும் தனதாய் வரித்துக் கொண்டதும், அதையொட்டிய தனது உணர்ச்சிகளையும், பின்னர் தொழில் நிமித்தம் கிரிபத்தி போனதும், கணவர் இறந்த பின் தனியொருவராய் உழைத்து பிள்ளைகளைப் பார்த்ததும், அவர்களுக்கென்று வாழ்க்கை அமைய உதவினதும், தன் மாணவர்கள் பற்றியும், பிறகு நாடு திரும்பி மூத்த தமக்கையின் கணவர் இறந்து போயிருக்க அங்கு சென்று 34-35 வருடங்களின் பின் சகோதரிகளின் சந்திப்பும், அங்கு கூடவே அக்கா இறக்கும் வரையிருந்ததும், அதற்குப் பின் இரட்டைச் சகோதரியுடனிருந்த அன்றாட வாழ்க்கையும் விரிவான எழுத்தில் குறிப்பேட்டின் தாள்களில் நிரம்பியிருந்தது. ஆங்காங்கே அதற்குள் பழைய கடிதங்கள்(1965-69, 1977இல் எழுதியவை), இந்தியாவுக்குப் போக வீட்டிலிருந்து கொழும்பு சென்ற தொடர்வண்டிப் பயணச் சீட்டு(1950களின் ஆரம்பம்), பட்டம் கிடைத்ததென்று அறிவித்த தந்தி, பிள்ளைகளின் ஓவியங்கள், கவிதைகள் என்பனவும் ஒரு வாழ்க்கையின் மௌனச் சாட்சியங்களாய் அந்தக் குறிப்பேட்டில் கொட்டிக் கிடக்கக் கண்டோம். முன்முடிவுகளோ பின்முடிவுகளோ இல்லாமல் பார்க்கிறேன்; அவரெடுத்த முடிவுகளின்படி அதுதான் சந்திரா என்கிற மனுஷியின் வாழ்க்கை.

வாழ்க்கைச் சரிதையை எழுதி வைக்க வேண்டும் என்று சொல்லுகிற கிறிஸ்தவ சமயப் பிரிவொன்றில் சந்திரா சேர்ந்து கொண்டதில் எங்களுக்கும் ஒரு வாழ்க்கையை, வாழ்ந்தவரின் கண்ணுடாகப் பார்க்கக் கிடைத்தது. வாழ்ந்த வரைக்கும் அவர் சம்பாதித்துக் கொண்ட அன்பும் மனிதர்களுமே அதற்குச் சாட்சியம். நிறையப் பேரை இப்படியாக அவர்களின் பார்வையில் தெரியாமல் போய் விடுகிறது. பிறர் கொடுக்கிற நிறக் கண்ணாடிகளுக்கூடாகவே அவர்களின் வாழ்க்கையைப் பார்க்கிறோம்.

வாழ்க்கைக்குத் தேவையானது என்ன என்பதை - முழுமையாக ஒரு எதிர்பார்ப்புமில்லாமல் அன்பு செலுத்தி, எவரென்றாலும் உள்ளன்போடு பழகி, எல்லாருக்கும் நல்லதே நினைத்து நன்மையே செய்த/செய்கிற - சந்திரா மற்றும் அவரது இரட்டைச் சகோதரி போன்ற அழகிகளிடமே கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது.

[சந்திராவின் இரணைக்கும், சந்திராவை அறிந்தவர்கள் எல்லாருக்கும், சந்திரா இருக்கும் போதிருந்தே இருக்கும் நடைமுறை பின்பற்றி முன்வீட்டுப் பிள்ளைகள் தொடர்ந்தும் நீர் வார்த்துக் கொண்டிருக்கிற சந்திராவின் பூஞ்செடிகளுக்கும்.]

உலகமும் உரையாடல்களும்

ஒரு கேள்வி கேட்கிறேன்.. ஒருவர் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றைச் சாதித்திருக்கிறார் என்று சொன்னால் அதை ஏன் materialistic ஆக உள்வாங்கிக் கொள்கிறோம்? ஏன் 'சாதித்தல்/அடைதல்" என்பது பணத்தினதோ, புத்திசாலித்தனத்தினதோ, சமூகத்தில் அவரது இடத்தையோ அளவீடாக கொள்ளப் படுது? (மருத்துவப்படிப்புக்குக் தேர்ந்தானாம், அவளிட கடை நல்ல பெரிசு அல்லது அவர் கோயில் president) இதுகள் தானா சாதனைகள்? (தனக்கு விரும்பின/திறமையுள்ள துறையில படிச்சுத் தேருறதையோ அல்லது தொழில் செய்து முன்னேறுறதையோ குறையாச் சொல்லவில்லை. அதற்குத் தேவைப்படுற கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் I appreciate it)

பொருளைக் கொண்டு மனுசரை அளவிடுற இந்த உலகத்தில, நேர்மை, தீங்கு செய்யாமை போல நல்ல குணங்கள் இருக்கிறதோ, அதுகளை நெறியாக் கொண்டு வாழ்றதோ ஏன் மேற்சொன்னதுகள் போல ஒரு achievement ஆக கருதப்படுறல்ல? பார்க்கப் போனா உங்களாலயும் என்னாலயும் ஆன சமூகம் இப்படிப் பட்ட குணங்களோட வாழுற ஆட்களை மதிக்கிறல்ல. முகத்துக்கு முன்னால சிரிச்சிட்டு பின்னால் போய் பிழைக்கத் தெரியாத ஆள் என்டு ஏன் சொல்லுது?

என்ன திடீரெண்டு இப்பிடி சொல்லுறனென்டு பார்க்கிறீங்களா..

இருபதுகளின் நடுப்பாகத்தை எட்டிப்பார்க்கப் போகிற வயதில் ஒரு சக மனுஷி. அலைவரிசைகளும் இயல்புகளும் ஒத்துப்போறதாலேயோ என்னவோ இந்தப் பெண்ணோட பல விதயமும் பேச முடியுது. அது பிடிச்சுமிருக்கு.

இன்றைக்கு வழமையான நல விசாரிப்புகளுக்குப் பிறகு "it doesn't feel like I've achieved anything in life" என்றா. முதலாம் பந்தில சொன்னமாதிரியான அளவீடாக் கொள்ளப்படுற சாதிப்புகளை தான் இன்னும் செய்யல்ல என்டுறதுதான் - அதுகளை நினைச்சு ஒரு தாழ்வு மனப்பான்மையோட யோசிக்கத் தேவையில்ல என்டு தெரிஞ்ச - இவவுக்கு வந்த யோசனை. இவவோட நடக்கிற உரையாடல்கள் அனேகமாகக் கதைச்சு முடிஞ்ச பிறகும் சிந்திக்க வைக்கும். வழமையாகக் கதைக்கிற ஒரு தலைப்பாக வாழ்க்கை/வாழ்தல் இருந்தாலும் தன்ட வயசு ஆட்கள விடவும் மனமுதிர்ச்சி கொண்ட, தான் தேர்ந்த களத்தில் masters(முதுகலை?) படிக்கிற அவட கூற்று கொஞ்சம் யோசிக்க வைச்சது.

தேர்ந்தெடுத்த துறையில தன்னை இன்னும் மேம்படுத்திக் கொள்ளப் படிக்கிறா. முடிஞ்சளவு உதவிகள் செய்கிறா, ஒழுங்கான வழியில வாழுறா.. ஆனாலும், இப்படி யோசிக்கத் தேவையில்லை என்று தெரிந்து கொண்டும், இப்படி தான் ஒன்றும் சாதிக்கவில்லையே என்று ஒரு கொஞ்ச நேரத்துக்குத்தான் என்றாலும் நினைக்கிற மனநிலை எதனால வருது? கொஞ்ச நேரம் கதைச்சவுடன எழும்பின கேள்விதான், நல்ல முறையில் வாழ்க்கையைக் கொண்டு செலுத்திறது ஏன் சாதனையா கருதப் படுறல்ல என்டுறது.

இப்பிடியே அவவோட கதைச்சது வழமையா நடக்கிறது போல வளர்ந்து வளர்ந்து எங்கெயெங்கையோ போயிற்று. இப்படிப்பட்ட உரையாடல்களில எப்பவும் எனக்குச் சந்தோசம். தயக்கமில்லாம தங்கட மனசை வெளிப்படுத்தி, தங்களையும் உலகத்தையும் அவங்களுக்கே உரித்தான முறையில அலசி ஆராய்றதும் எடுக்கிற சரியான முடிவுகளும் நம்பிக்கை தருது.

கேள்விகள் கொண்ட, அதை அடக்கிவிடாமல் கேட்கிற இந்தத் தங்கைகள் அழகானவர்களாயிருக்கிறார்கள்.

கணிதம்

கணிதத்தின் மேல் எப்பவும் ஒரு விருப்பம் இருந்ததுண்டு. இன்னும் இருக்கிறது. சதுரக் கோடு போட்ட கொப்பிகளும், பாடமாக்கியே தீர வேண்டியிருந்த வாய்ப்பாடுகளும், மடக்கைப் புத்தகமும், இன்னும் வேணும் என்று கணக்குகள் கேட்க வைத்த திருமதி ஜோணும் என்று கணிதம் பற்றிப் பல ஞாபகங்கள்.

அநேகமானோருக்கு இனி இல்லை என்டளவு வறண்டதாய் அலுப்படிக்கக் கூடியதென்று தோன்றும் புத்தகங்கள் அதிசயமாய் எனக்குப் பிடித்து போகின்றன. அப்படி வாசித்தவைகளில் இரண்டு The Seven Daughters of Eve மற்றும் In The Footsteps of Eve. இன்னொன்று ஆப்பிரிக்காவிலும் ஈராக்-ஈரானை அண்டிய பகுதிகளிலும் மேற்கொண்ட தொல்பொருளாய்வு பற்றியது. அதன் பெயர் எப்பவாவது ஒருநாள் திரும்பக்கூடும்.
:O) அப்படியான ஒரு வரிசையில் கண்ணில் பட்டு நான் வாசிக்க ஆரம்பித்திருக்கிற "The crest of the peacock: Non-European roots of mathematics " எனும் புத்தகம் ஐரோப்பா தவிர்ந்த ஏனைய இடங்களில் கணிதம் பற்றிப் பேசுகிறது. இதனை வாசிக்கும் வரையில் எப்படி உலக நாகரிகங்களில் கணிதம் இருந்திருக்கக்கூடும் என்ற எண்ணம் எனக்கு எழுந்தது மிகமிகக் குறைவு. வந்திருந்தாலும், அது எகிப்தை மையமாக வைத்தே இருந்து, பார்க்கிற எகிப்து பற்றிய ஆவணப்படங்களினூடாக விடையளிக்கப்பட்டிருக்கிறது.

புத்தக ஆசிரியர் பரவலாகக் காணப்படுகிற "கிரேக்கக் கல்வி --(இருண்ட காலம்)--> கிரேக்க அறிவு பற்றிய கண்டுபிடிப்பு --(ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலம்)--> ஐரோப்பிய/அதன் குடியேற்ற நாடுகளின் அறிவு/வளர்ச்சி" என்கிற ஒருதலைப்பட்சமான கற்பித்தலைப் பற்றிப் பேசுகிறார்.

கிரேக்க வழி வந்து மேம்படுத்தப்பட்ட கணித அறிவு தவிர, ஏலவே இருந்திருக்கிற நாகரிகங்களில் கணிதம் பற்றி உலகம் பேசுவதில்லையென்றும் அவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதென்றும் இப்புத்தகத்தில் சொல்லப்படுகிறது.

இதுவரை வாசித்ததிலிருந்து இரு பந்திகள்:

1. The neglect of the Arab contribution to the development of European intellectual life in general and mathematics in particular is another serious drawback of the 'classical' view. the course of European cultural history and the history of European thought are inseparably tied up with the activities of Arab scholars during the Middle Ages and their seminal contribution to mathematics, the natural sciences, medicine and philosophy. In particular, we owe to the Arabs in the field of mathematics the bringing together of the technique of measurement, evolved from its Egyptian roots to its final form in the hands of Alexandrians, and the remarkable instrument of computation (our number system) which originated in India; and the supplementing of these strands with a systematic and consistent language of calculation which came to be known by its Arabic name, algebra. An acknowledgement of this debt in more recent books contrasts sharply with a failure to recognize other Arab contributions to science.*

*[They include:

(a) An early description of pulmonary circulation of the blood, by Ibn al-Nafis, usually attributed to Harvey, though there are records of an earlier explanation in China;

(b)The first known statement about the refraction of light, by Ibn al-Hayatham, usually attributed to Newton;

(c)The first known scientific discussion of gravity, by al-Khazin, again attributed to Newton;

(d)The first clear statement of the idea of evolution, by Ibn Miskawayh, usually attributed to Darwin;

(e)The first exposition of the rationale underlying the 'scientific method', found in the works of Ibn Sina, Ibn al-hayatham and al-Biruni, but usually credited to Francis Bacon.

A general discussion of the western debt to the Middle East is given by Savory(1976), while detailed references to the specif contributions of Arab science are given by Gillespie(1969-) ]


2. AL-Kwarizmi wrote a [second] book, of which only a Latin translation is extant: Algorithmi de nomero indorum, which explained the Indian number system. While al-Khwarizmi was at pains to point out the Indian origin of this number system, subsequent translations of the book attributed not only the book but the numerals to the author. Hence, in Europe any scheme using these numerals came to be known as an 'algorism' or later, 'algorithm' (a corruption of the name al-Khwarizmi) and the numerals themselves as Arabic numerals.


வாசிக்க வாசிக்க, எப்படி நாம் பைதகரசையும், ஆர்க்கிமிடிசையும் தவிர வேறிடங்களில் கணிதம்/அறிவியல் போன்றவற்றினைப் பற்றிச் சிந்திக்காமல் போனோம் -கேள்விகள் இல்லாதிருந்தோமென்று ஆச்சரியமாயிருக்கிறது. படிப்பு என்பது புத்தகத்திலிருப்பதைச் சப்பியோ கரைத்துக் குடித்தோ பரீட்சையில் சத்தியெடுப்பது என்றளவில் இருக்கிறவரைக்கும் கேள்விகள் மாணவர்களால் எழுப்பப்படாது போல..

(தொடர்ந்தும் இப்புத்தகம் பற்றிப் பதியப்படக்கூடும்.)

பெட்டகம்