மழையாமே...அதென்னது?

மழை - வரைவிலக்கணம்: வளி மண்டலத்தில் ஆவி வடிவில் காணப்படும் நீரானது ஒடுங்கி, வானிலிருந்து பூமிக்கு துளித்துளியாய் விழும்போது மழை எனப்படும்.

முன்னொரு காலத்தில் காணப்பட்டதும் இனிமேல் இருப்பதற்கான சாத்தியமும் இல்லையென நம்பப்பட்டதுமான "மழை" எனப்படும் ஒரு வானிலை, நாளை சிட்னிக்கு எதிர்வுகூறப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட இவ்வறிக்கையானது இவ்வானிலையை எதிபர்க்காத, இதற்கு ஆயத்தமற்ற குடிமக்களைத் தயார்ப்படுத்தும் பணியில் வரலாற்றாசிரியர்களைத் தீவிரமாக ஈடுபடுத்தியுள்ளது. இந்த மழையானது இதைப் போலவே பரிச்சயமற்ற "மேகங்கள்" எனப்படுவனவற்றின் தோற்றத்தின் பின் ஏற்படுமென வளிமண்டலவியற் திணைக்களத்தின் வானிலையாளர் சத்யா கிஷோர் தெரிவித்தார். திரு. சத்யா தெரிவித்ததற்கிணங்க, கரையோரப் பகுதிகளில் மழையை வினியோகிப்பற்கு முன்பதாக மேகங்கள் நாளை விடியலில் சிட்னியின் மேல் கூடுமென அறியப்படுகிறது. இம்மேகங்கள் கலைந்த பின்னர் மீண்டும் காணக் கிடைக்கும் என்பதால் பாதிக்கப்பட்ட இடங்களில் வதிவோர் 'காணாமற் போன நிழல்கள்' தொடர்பாக காவற்துறையினரை அணுக வேண்டாமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதே போன்றே வீட்டுரிமையாளர்களும் தாம் வளர்க்கும் தாவரங்கள் இம் மழை காரணமாக பச்சை போன்றதொரு நிறத்தில் காணப்பட்டால் அவற்றிற்கு நோயேற்பட்டுள்ளதோவென அஞ்ச வேண்டாமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மழை நேரடியாகப் படும் போது ஆட்களோ, கட்டடங்களோ ஈரமாகலாம். வாகன ஓட்டுநர்கள் தம் வாகனத்தில் காணப்படும் மழைத்தடுப்புச் செயலியை பரிச்சயப் படுத்திக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். ஒருவித பயனுமின்றி அமைந்திருப்பதால் வாகனத்தின் குடல்வால் எனச் செல்லமாக அழைக்கப்படும் கண்ணாடித்துடைப்பான் அனேகமான ஊர்திகளில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கருவி கண்ணாடியிற் படிகின்ற மழைத் துளிகளை அதனின்று நீக்குவதன் மூலம் சாரதிக்கு பாதையை தெளிவாகப் பார்க்க வழி செய்கிறது.

*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*


மழை என்று பெயர் வைத்து விட்டு, பதிவில் மழை பற்றி எழுதாமல் இருப்பது சரியாகப் படவில்லை. அதுதான், நேற்றைய The Daily Telegraph இல் ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையை என்னாலான வரைக்கும் மொழி பெயர்க்க முயற்சித்திருக்கிறேன். இதன் ஆங்கில (அசல்) வடிவம் இங்கே.

பெட்டகம்