முதல் தரிப்பு -II


அடுத்ததாய்ப் பார்க்கப்போன இடம் - வர்சாய் அரண்மனை. சொல்லத்தெரியாமல் வர்சாய்ல்ஸ் என்று வாசித்துக் கொண்டு திரிந்தேன். வரைந்து நிறந் தீட்டின மாதிரிப் புற்தரை. இதைப் பராமரிக்க எவ்வளவு மினக்கட வேணும்! மூன்று பக்கங்களிலும் அரண்மனைத் தோட்டங்கள்.


பரிசிலிருந்து, தனது அரசியல் குழப்பங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டிருக்கவென்று வந்து தங்கியிருந்தானாம் 14ம் லூயி மன்னன். அப்படியே படிப்படியாகக் கட்டிக் கட்டி 2600+ அறைகளும் பென்னாம் பெரிய தோட்டங்களுமுள்ளதாக இந்த அரண்மனை உருவெடுத்திருக்கிறது.


நாங்கள் போன நாளன்று அரசியரின் அறைகளிலொரு பகுதி திறந்திருந்தது. அதன் முகப்பில் தங்க முலாம் பூசிய கடிகாரம். விட்டால் எல்லவற்றுக்குமே தங்க முலாம் பூசியிருப்பார்கள் போல! காட்சிக்கு விக்ரொறீ, அடிலேய்ட் என்ற இருவர் பாவித்த பொருட்கள் சில இருந்தன. அவர்களின் பாவனையிலிருந்த பெரிய ஓவியங்கள், கட்டில், பியானோ, புத்தக அலுமாரி, கண்ணாடி என்று பலவித பொருட்கள் காட்சிக்கு வைத்திருந்திருந்தார்கள்.









குளிர் காலமென்றாலும் கூட்டம். கோடைக்கு நினைத்தும் பார்க்கேலாது என்று எண்ணுகிறேன்.


தோட்டங்களில் வேலை நடந்து கொண்டிருந்தது. சிலைகளை மூடியிருந்தார்கள். பூச்சாடிகள் இரண்டு ஆளுயரமாய் . அவற்றையும் மூடியிருந்தார்கள். குளிர்காலத்தில் பனி படிந்து/தங்கி விடக்கூடும் என்பதால்.

பெரிய பெரிய நிலைகளும் அவற்றைச் சுற்றிச் சிலைகளும் என்று பார்க்கப் பார்க்க ஆசையாக இருந்தது.

குட்டிக் குளங்களுக்கு நடுவே சிலைகள். கால் நோகும் வரை தோட்டத்தில் உலாவினதில், மரத்தாசை பிடித்த எனக்கு நிறையப் படங்கள் எடுக்கவும் வாய்ப்புக் கிடைத்தது.





இலையுதிர் காலம்/குளிர்காலம் என்றதால் சில மரங்கள் மொட்டையாயும், சில நிறம் நிறமாய் இலைகள் கொண்டும்.. படமெடுத்துத் தீரவில்லை!

போன இரண்டாம் நாடு பற்றி அடுத்த பதிவாய்ப் போடுகிறேன்.

பெட்டகம்