சிவப்பல்லாத செம்பருத்தி

வீட்டில் வளர்க்கவென்று ஆசையாக எத்தனையோ பூமரங்கள். எல்லாத்தையும் கொண்டு வந்து வைக்க முடிகிறதா என்ன? அதாலேயே 2-3 மரங்கள்/செடிகளைத் தீர்மானித்திருந்தோம்.

எங்கேயும் ட்ரைவ் போனால் வந்தால் "அங்க பார்.. அந்த பூ வடிவாயிருக்கு".. "நிறம் நல்லாருக்கு".. "செழிச்சு வளருது" இத்தியாதிதான் கார் முழுக்க ஒவ்வொரு நிறத்திலும் அழகிலும் அளவிலும் உதிர்ந்துபோய்க் கிடக்கும். அடிக்கடி போய் வருகிற வழியென்றால் எந்த வீட்டிற்கு முன்னால்(தெருவருகே.. வீட்டு மதிலுக்கு உள்ளே அல்ல) என்ன மரம், அதில் பூ என்ன நிறம் என்றெல்லாம் மனப்பாடம்.

ஒரு சுபயோக சுபகமுகூர்த்தத்தில் ஹாட்வெயார் கடையில் போய் தாவரம் வெட்டும் கத்திரி ஒரு அரையடி நீளத்திலும், வேர் வர ஊக்குவிக்கும் ஒருவிதத் தூளும் வாங்கி வைத்தாயிற்று. மாலை மயங்கக் கிளம்பினால் இருட்டின பிறகு வண்டியை நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்துப் பதுங்கிப் போய் வெட்டிக் கொண்டு வந்து வண்டிக்குள் ஏறிக் கிளம்ப வேண்டியது. (களவெடுத்து வைச்சாத்தானாம் மரம் செடியெல்லாம் நல்ல்ல்ல்லா செழிச்சு வருமாம். நல்லாத்தான் சொல்லி வைச்சிருக்கிறாங்க!! ஹிஹி)


[கொண்டு வந்து வீட்டிலே ஒரு பூந்தொட்டிக்குள் மண் நிரப்பி வெட்டி வந்ததின் அடியை நீரில் நனைத்து வாங்கின தூளில் தொட்டு மண்ணுக்குள் ஊன்றி விட்டு கண்ணும் கருத்துமா.. நீங்க ஒவ்வொருநாளும் தண்ணி (மற்றதில்லப்பா!!) குடிக்கிறீங்களோ இல்லையோ கடமையா நட்டதுக்குத் தண்ணி குடுத்து வந்தாஆஆஆஆ.... ஒரு 5-7 கிழமைக்குப் பிறகு கொஞ்சம் புது உயிர் காட்டும். இலை வரும். (வரணும்.. வர வைப்பமுல்ல!!!).


வேர் பிடிச்சிட்டுதெண்டா 10-12 கிழமைக்குப் பிறகு குட்ட்ட்டியா ஒரு மொட்டு வரும். அதக் கண்ட நாள் முதல் எப்ப பெரிசாகிப் பூக்கும் என்டு பார்க்க வேண்டியது. எங்கட அவதி அதுக்கெங்க விளங்க!! ஆஆஆறுதலா ஒரு 2.5 - 3 கிழமையா மொட்டாயிருந்து கடைசியா ஒரு நாள் பூ விரிஞ்சு சிரிக்கும்.
பத்துத் தரம் போய்ப் பார்க்கச் சொல்லும். உலக மகா சோகம், கிட்டத்தட்ட 18-20 நாள் ஆயத்தப்பட்டுப் பூக்கிற பூ ஒரே நாளில வாடிடுறது தான். என்ன செய்ய.. அடுத்த மொட்டு.. காத்திருப்பு. ]

இப்பிடி "சேகரிச்ச" / "கடன் வாங்கின" / "சுற்றுச் சூழலை மேம்படுத்த நாங்க செய்கிற செயல்" களால சேர்த்தது செவ்வரத்தை/செம்பருத்தியை மட்டும். நாலைந்து நிறங்களில் இரண்டு வகைகளில் (அடுக்கு, தனியிதழ்) கிட்டத்தட்ட 10-15 கந்துகள். இப்ப 2 பிரச்சனை. முதலாவது, எந்தக் கந்து என்ன நிறம் என்டுறதுதான். அதாவது பரவாயில்ல .. பூப்பூத்ததும் தீர்ந்துவிடும். இரண்டாம் பிரச்சனை தான் மண்டைக் குடைச்சல்:

சிவப்பா இருந்தாத்தானே "செம்பருத்தி/ செவ்வரத்தை" .. நாங்க இளஞ்சிவப்பு, மஞ்சள், செம்மஞ்சள், ஊதா நிறங்களில வைச்சிருக்கிறமே.. அதை எப்பிடிச் சொல்லுறது?

பெட்டகம்