மடல்

அன்புள்ள நண்பனுக்கு

நலம். நலமறிய ஆவல் என்றெல்லாம் வழமையான கடிதங்கள் போலே இது இல்லை. வெறுமனே நலவிசாரிப்பாக இருந்துவிட்டுப் போவதானால் எழுத வேண்டாமே.. தொலைபேசி இருக்கிறதே. குழப்புகிறேனா? கேட்பாய் என்கிற நம்பிக்கையில், கொஞ்சம் உரிமையாய் ஒரு விசயம் சொல்ல நினைத்திருக்கிறேன்.

நான் சொல்லப்போவதைச் சொல்ல எனக்கென்ன தகுதியிருக்கிறதென நீ யோசிப்பாய். தேவையான ஒன்றை எடுத்துச் சொ
ல்வதற்கு, அதைப் பின்பற்றிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. சரியானது எது என்று உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்வதற்கு முதற்படி முயற்சி எடுப்பவரும் எடுத்துச் சொல்லலாம். அதை நானே செய்யும் வரை உனக்கு எழுத விரும்பவில்லை.

ஞாபகமிருக்கிறதா.. நாங்கள் வகுப்புகளுக்குப் போன அழகு? 8 மணி வகுப்புக்கு நான் உன் வீட்டுக்கு 7.45 இற்கு வந்து உன்னை எழுப்பி, நீ வெளிக்கிட்டு வந்து நாங்கள் வகுப்புக்கு நடந்து போய்ச் சேர 8.30 ஆகும். மிஸ்சும் "உங்களுக்கு ஓட்டோ அனுப்பிறதா" என்று கேட்டு எத்தனை முறை அறிவுரை சொல்லியிருப்பா? அப்போதெல்லாம் சிரிப்போமே.

அந்த நேரந்தவறும் பழக்கம் இன்னும் இருக்கிறது. என்னிடம், உன்னிடம். இப்போதைய ஒருநாள் காலையை யோசித்துப் பார். ஒரு 10 நிமிட நித்திரையை விட முடியாமல், அடிக்கும் அலாரத்தின் தலையில் ஓங்கி ஒரு குட்டுப் போட்டு நிறுத்தி, ஐந்து நிமிடம், இன்னும் ஐந்து நிமிடமென்று எழுந்திருப்பதைத் தள்ளிப் போடுவோம். அந்த ஐந்துநிமிடங்களினது அருமை இன்னும் கொஞ்ச நேரத்தில் உணரப்படும். உனக்கே தெரியும். ஐந்து நிமிடமென்பது பத்தாகி, தற்செயலாய்க் கடிகாரம் பார்க்கையிலே புறப்பட நேரமாகிறதென்பது மூளையில் பதியும்.

அடித்துப் பிடித்து எழுந்து, காலைக்கடன் முடித்துப் புறப்படுகையிலேயே ஐந்து - பத்து நிமிடத் தாமதம் தலை காட்டியிருக்கும். ஓட்டமும் நடையுமாய் இளைக்க இளைக்க தொடர்வண்டி நிலையம் போய் மூடிக் கொண்டிருக்கும் வண்டியின் கதவு வழியே புகுந்து இருக்கையில் உட்கார்ந்தால் 40 நிமிட இளைப்பாறல். இல்லை, காரில் போகிறாயா வேலைக்கு? பிந்தி விட்ட அவசரம் காரை ஓட்டுவதில் தெரியும். எவ்வளவு பாதுகாப்பானது இந்த வண்டியோட்டல்? கவனக்குறைவுகளும், சிறுசிறு தாமதங்களும் ஏற்படுத்தும் எரிச்சலும் ஒரு அழகான காலையைக் குழப்பியிருக்கும். அலுவலகத்தை அடையும் போது இருக்கும் மனநிலையை நினைத்துப் பார்.

அலுவலகத்தில் வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறோமா? இல்லையே. காலை வந்தவுடன் செய்தி வாசிப்பு. ஒருதரம் வாசித்தவுடன் விடுகிறோமா என்ன! திரும்பத் திரும்ப பிபிசியும் சிட்னி மோர்னிங் ஹெரல்டும் பார்ப்பது அடிக்கடி பணியைக் குழப்பும். கிரிக்கெட் போட்டி நடந்தால் அதன் ஸ்கோர் பார்க்க, தனிப்பட்ட மின்னஞ்சல் அனுப்ப, வலைப்பதிவு பார்க்க, மின்/தொ.பே/வாயு இணைப்புகளுக்கும் இன்ன பிறவுக்குமான கட்டணங்கள் செலுத்த, வங்கித் தொடர்பாடல் என்று தனிப்பட்ட செயல்களுக்கு, அலுவலகப் பணி செய்ய வேண்டிய நேரத்தில் எடுத்துச் செலவழிக்கிறோம். இதுவும் ஒரு வகைக் களவுதான். களவென்பது கிடக்க, இது என்ன செய்யும் தெரியுமா? செய்து முடிக்க வேண்டிய பணி தலைக்கு மேல் குவியும். சொந்த வேலை செய்ததில் அலுவலக நேரம் ஓடியே போய்விட்டிருக்கும். ஐந்து மணிக்கும் பிறகும் உட்கார்ந்து வேலையைச் செய்வோம். பலர் இந்த விதயத்தில் பரவாயில்லை. ஒரு ஏழு மணிக்காவது வீடு போய்விடுகிறார்கள். நீ முடித்து விட்டுத்தான் வீடு திரும்புகின்றாய். எத்தனை மணியானாலும். வேலை முடித்து
விட்டே போகிறாய். இங்கே என்ன நடக்கிறது? தனிப்பட்ட வாழ்க்கைக்கான நேரத்தை எடுத்து வேலைக்கெனச் செல்வழிக்கிறாய். ஒருவிதத்தில் இது குற்றவுணர்ச்சியால் வரும் ஈடுகட்டலே.

வீட்டை அடைவதும், இரவுணவும், இளைப்பாறலும், நித்திரைக்குப் போவதும் தட்டிவிட்ட டொமினோக் கட்டைகள் போல ஒன்றன் பின் ஒன்றாய் பிந்திப் பிந்தி நடைபெறும்.நேரஞ் சென்று படுத்தால் அடுத்த நாள் காலை நேரத்துக்கு எழும்ப மனம் வராது. மீண்டும் மேலே சொன்னது அடுத்த நாளும் தொடரும். இது உடலுக்கோ மனதுக்கோ நல்லதல்ல. கடின வழியில் நான் உணர்ந்த பாடம் அது. உன் அருகாமை கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றத்துடன் உன் களைப்பு வீட்டாரால் புரிந்து கொள்ளப்படும்.

காலையில் நேரத்துக்கு எழும்புவதிலிருந்து பணியக வேலை முடித்த பிறகுதான் சொந்தவேலை (அல்லது உணவு இடைவேளையின் போது) என்று உறுதி கொண்டாயானால் ஐந்து மணிக்குப் பிறகு எவ்வளவோ நேரம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வாய். வேலை அதிகமான நாட்களில் இரவிரவாய் பணியகத்தி
லேயே கிடக்காமல் "எவ்வளவு வேலையென்றாலும் இத்தனை மணிக்கு வீட்டுக்குப் போய் விடுவேன்" என்று உறுதி எடுத்துக் கொள். இரவிரவாய்க் கண்முழித்து வேலை செய்த களை முழுதும் நீங்காமல் அடுத்த நாளும் வேலைக்கு வருவாயானால் அதிலே ஒரு பிரயோசனமும் இல்லை.

கேட்டால் சொல்வதென்ன? எல்லாம் குடும்பத்துக்குத் தான் மாடாய்/நாயாய் உழைக்கிறேன். நீ மிருகம் போலே உழைக்க வேண்டியதில்லை. மனிதனாய், குடும்பத்தை மனதிற் கொண்டவனாய் வாழ்ந்து கொள். போதும். யாருக்காக உழைக்கிறாயோ அவர்களே முக்கியமானவர்கள். உன் சம்பளம் மட்டுமே அங்கே எதிர்பார்க்கப்படுகிறதென்று நினைக்கிறாயா? உன்னைத் தவிர மற்றதெல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான். பணம் மட்டுமே தேவைகளை நிறைவேற்றிவிடுவதில்லை. உன் பணம் கொடுக்காத மனநிறைவை உன் அருகாமையோ அல்லது உன் கனிவான ஒரு வார்த்தையோ பெற்றுத்தந்துவிடும். கவனித்துப்பார்..உனக்கே தெரியவரும்.

இந்தக் கடிதம் பார்த்து "லெக்ச
டிக்கிறேன்" என்று நீ சொல்லக்கூடும். நான் உணர்ந்ததை, உரிமையுடன் சொல்லியிருக்கிறேன். கொஞ்சம் யோசித்துப் பார்ப்பாய் என்று நம்புகிறேன். நலமறிய ஆவல்.

இப்படிக்கு, மாறா அன்புடன்
தோ
ழி.

பெட்டகம்