சமையல்.. சிறு குரைப்பு!

நீண்ட நாளைக்குப் பிறகு ஒரு உறவினரோடு கதைத்தோம்.(தொலைபேசி இணைப்பை மீட்டுக்கொண்டுள்ளோம்!) பேச்சு வாக்கில் நான் மீண்டும் வேலைக்குப் போவது பற்றியும் அதனால் நாளாந்த வாழ்க்கையில் ஏற்படும் மற்றங்கள் பற்றியும் கதைத்துக் கொண்டிருந்த போது என் கணவர் அவவிடம் சொன்னார் :”இவ சும்மாவே சமைக்கப் பஞ்சி, இப்ப வேலைக்கும் போய் வருவதில் சமையல் எல்லாம் அவசரச் சமையலாகவே இருக்குது” என்று. ஒலிபெருக்கியுள்ள தொலை பேசியாதலின் ஒரெ நேரத்தில் கதைக்க முடியும். ஓருவர் பேசி முடித்து நம்மிடம் தரும் வரை காத்திருக்கத் தேவயில்லை. கணவர் சொன்னதற்கு பதிலாக “சும்மாவே சமையல் என்றால் எட்டி நிற்கிற ஆள் நான், மற்றது வேலையால வந்தவுடனே சமைக்கவும் ஏலாதுதானே, களைப்பா இருக்கும். இவரைக் கேட்டா சிலநேரம் செய்து தருவார்” என்று நான் சொன்னேன். அதற்கு அந்த பெரியம்மா என்ன சொன்னா தெரியுமா..”பொம்பிளப் பிள்ளைகள் சமையல் விருப்பமில்லை, ஏலாது என்றெல்லாம் சொல்லப்படாது! ஆம்பிளப்பிள்ளையை, அதுவும் புருசனிட்ட சமைக்கச் சொல்லுறதா..என்ன பழக்கம்! விட்டா வீட்டையும் ஒழுங்குபடுத்தச் சொல்லி கேப்பீர் போல கிடக்கு” What the!!

ஏன் பெண்களுக்கு பிடிக்காததை மறுக்கும் அல்லது செய்யாமல் விடும் உரிமை இல்லையா? ஆண் சமைப்பதில், வீட்டு வேலைகளில் பங்கேற்பதை இன்னும் தரக்குறைவான செயலாகத்தானா கருதுகிறோம்?இந்த பெரியம்மா இப்படிப்பட்ட கருத்தை கொண்டிருக்க என்ன காரணம் இருக்கக் கூடும்? ஒரு வேளை பெரியப்பா, தான் எப்போதாவது சமைக்க வேண்டி வந்து விடும் என்று நினைத்து இப்படி சொல்லிக் கொடுத்தாரா– கல்யாணமான் புதிதில்? :o)

அல்லது சிறு வயதிலிருந்தே பழக்கப்பட்ட, மனதில் ஊறவைக்கப்பட்ட ஒரு விடயமா?இந்த மனநிலை முதன் முதலில் யாரால் புகுத்தப்பட்டிருக்கும் என்று யோசிக்கிறேன். காலக்கிரமத்தில் வாழ்வில் ஒரு அங்கமாக ஆண் வெளி வேலைக்கும் பெண் வீட்டு வேலைகள் & குடும்பதிற்கும் என்று மனதில் ஊறி விட்டது. இந்தக் கட்டை உடைத்து வெளிவர முயற்சிக்கிற வேளையில், அதற்கு தடைக்கல்லாக நாமே இருக்கிறோம். தலைமுறை தலைமுறையாக இருந்து வரும் சில பழக்கங்கள், நடைமுறைகள் மாற்றப்பட வேண்டியவை தான் என உணரப்பட்டாலும் பெரும்பான்மையினர் அம்மாற்றத்தைக் கொண்டுவரும் முயற்சியில் ஈட்டுபாடு காட்டுவதும் இல்லை, காட்டுவோரை முன்னெடுத்துச் செல்ல விடுவதுமில்லை. சமையல், வீட்டுவேலை, குழந்தை வளர்ப்பு என்பவற்றில் குறிப்பிடத்தக்களவு ஆணின் பங்களிப்பு தற்போது காணப்படுகிறது. ஆனாலும் இந்த பகிர்வு மனப்பான்மை புலம் பெயர்ந்தவர்களிடமோ அல்லது நகர் வாழ் இளைஞர்களிடமோ தான் அதிகளவில் காணப்படுகிறது என்றே நினைக்கிறேன். சாதாரண மத்தியதரக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, மணந்துள்ள ஒரு சராசரி ஆணின் குடும்ப வாழ்வில் அவனுடைய பங்களிப்பானது வருமானம் சார்ந்ததாக மதிக்கப்படுகிற சூழ்நிலையில் அவனுக்கு வீட்டு வேலைகள், குழந்தை பராமரிப்பு/ வளர்ப்பு என்பனவற்றை மனைவியுடன் பகிர்ந்து செய்யலாமே என்கிற மனப்பாங்கு வருமா?

இப்படி ஆண், பெண் இருவரும் பால் சார்ந்த தங்கள் கடமைகளுக்கு அப்பால், ஒரு குடும்பமாக ஒன்றிணைத்து பார்க்கப்படுவது எப்போது? அவர்களது பால் சார்ந்த கடமைகளை அவர்கள் நிறைவேற்றும் அல்லது நிறைவேற்றாத முறைகளாலன்றி, அவர்களை அவர்களாகவே - சக மனிதர்களாக – பார்ப்பது எப்போ?

என்னதான் சொன்னாலும் “எப்பிடி செய்யிறதென்று மறந்து போச்சு” என்று சொல்லிக் கொண்டே கணவர்கள் தயாரிக்கும் உணவின் சுவையே தனி என்பது பாவம்! பெரியம்மா அறியாத ஒன்றாகவே இருக்கப் போகிறது!! ;o)

பெட்டகம்