Showing posts with label குழையல் சோறு. Show all posts
Showing posts with label குழையல் சோறு. Show all posts

உலாத்தப் போக..

இந்தப் பதிவு நான் மறக்காமலிருப்பதற்காக.

பயணங்கள் சுகம் தருபவை. போய்ச் சேருமிடம் குறித்த பார்வையோடே பலர் பயணங்களை அணுகுகிறோம். அப்படியில்லாமல் பயணத்தையே இரசித்து முடிவுடம் போய்ச் சேருவோர் நம்மில் எத்தனை பேர்? பயணம் போகலாம் என்று நினைத்தவுடன் மனதில் தோன்றும் அந்த விவரிக்கவியலாப் பரபரப்பும், பயணத்திற்குத் தேவையான ஆராய்ச்சிகளில் இறங்கி முடிவெடுக்கும் போதும் ஏற்படும் கிளர்ச்சி என்பன இனிமையானவை. முடிவிடமடைந்ததும் வேறு விதமான உணர்ச்சிகளாக உருவெடுத்துக் கொள்பவை. பயணத்தை ஒழுங்கு படுத்தும் போதோ, அல்லது பயணித்துக் கொண்டிருக்க்ம் போது இருக்கும் எதிர்பார்ப்பு அங்கு போய்ச் சேர்ந்ததும், 'அடடா..வந்து விட்டோமே' என்றிருக்கும் எனக்கு. (நிறைய நாள் எதிர்பார்த்து திட்டமிட்டுப் போன ஐரோப்பியப் பயணம் அப்படித்தான் இருந்தது பாரிஸ் போயிறங்கின கொஞ்ச நேரத்துக்கு)

விமானப் பயணமே எனக்குப் பிடித்தமானது. சிலருக்குப் பயம், சிலருக்கு ஒன்றும் பண்ணாமல் உட்கார்ந்திருக்க வேண்டுமே என்ற சலிப்பு - எனக்கு இதெல்லாமில்லை. படத்தையோ அல்லது யன்னலுக்கூடாக முகிலோ நிலமோ வானமோ பார்த்து ரசித்து, பக்கத்தில் இருப்பவருடன் பேசி, பணியாளருக்கு மணிக்கொரு தரம் வெந்நீருக்காகத் தொல்லை கொடுத்து, தூங்கியெழுந்து நிறைக்கும் பயணம். இதில் பிடிக்காமலிருக்க, பயப்பட என்ன இருக்கிறது?

போக/பார்க்க நினைத்திருக்கிற இடங்கள்/நாடுகளைப் பட்டியலிட்டு வைக்க நினைத்தது தான் இப்பதிவின் ஆரம்பம். பட்டியல் ஒரு வித ஒழுங்கிலுமில்லை:

  • அவுஸ்திரேலியா
  • மொரோக்கோ
  • இலங்கை
  • நியுஸிலாந்து
  • இந்தியா
  • அந்தமான்-நிகோபார்
  • காஷ்மீர்
  • கம்போடியா
  • நேபாளம்
  • கிரேக்கம்
  • அயர்லாந்து
  • ஸ்கொட்லாந்து
  • வேல்ஸ்
  • வடதுருவம்
  • பிரான்ஸ்
  • சுவிட்சர்லாந்து
  • நோர்வே
  • டென்மார்க்
  • சுவீடன்
  • தாய்லாந்து
  • மாலைதீவு
  • கனடா
  • ஐஸ்லாந்து
  • கிரிபற்றி
  • எத்தியோப்பியா
  • தென்னாபிரிக்கா
  • எகிப்து
  • மடகாஸ்கர்
  • இந்தோனேசியா(பாலித் தீவு)
  • ஈரான்
  • துருக்கி
  • ஆப்கானிஸ்தான்
இன்னும் காணக் காண, படிக்கப்படிக்க என் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவரைப்போல வரையறுத்த திட்டம் இல்லாவிட்டாலும் எனக்கென்று மேலே சொன்ன இடங்களைப் பார்ப்பதற்கான திட்டமல்லாத பெருந்திட்டமிருக்கிறது. அதில் முக்கியமான பங்கு எங்கு என்ன எப்போது என்றெல்லாம் வகுத்துக் கொள்ளாமல் பயணிப்பது.

திடீரென்று முடிவெடுத்து வெளிக்கிடும் spontaneous பயணங்கள் இல்லவே இல்லாதளவுக்காய் வெகுவாய்க் குறைந்து விட்டன. வாழ்க்கைச் சுழலில் அப்பயணங்களால் வரும் வசதிக்குறைவுகள் கருத்தில் கொள்ளப்பட்டு பல நல்ல அனுபவங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறேன். ஹென்ரிக்கோவுக்கும் பேர்ணடெட்டுக்கும் மீண்டும் வாழ்த்துக்கள். அவர்கள் முடிவு சரியானது. (அவர்களைப் பற்றி இன்னொரு நாளைக்குக் கட்டாயம் பேச வேண்டும்)

--O-0-O--

பயணமென்று சொன்னதும் அண்ணாவுடன் போனவையே ஞாபகத்தில் மின்னுகின்றன. முக்கியமாக ஒரு பயணம். 1999ம் ஆண்டு - நான்கோ ஐந்து நாட்களுக்கு பன்னிரண்டு பேர் செல்லும் வாகனத்தில் பதினெட்டுப் பேர் போனோம். எங்கெங்கெல்லாமோ சுற்றினோம்..சுற்றிய இடமெல்லாம் வரலாற்றுச் சின்னங்கள் மிகுந்திருந்தன. மிகிந்தலை, பொலன்னறுவை, அனுராதபுரம், கதிர்காமம், சிகிரியா, பெயர் மறந்த இன்னும் வேறு இடங்கள். குளம்/ஆறு கண்டால் நிறுத்திக் குளித்துக் கும்மாளமிட்டு பக்கத்திலேயே எங்காவது ஒரு ஆச்சி வைத்திருந்த கடையில் கிடைக்கிற சோறு-கறியோ அல்லது பாண்-சம்பல்-வாழைப்பழம்-தேநீரோ அல்லது பழங்களோ உண்டோம். ஒரு நாள் அரைநிலவொளியில் vanக்குள் சிலர் தூங்க, மீதி துணி விரித்து குளத்தங்கரையில். இன்னொருநாள் அனுராதபுரத்துப் புத்தர்களையும் தாண்டி நிறையத்தூரம் போய் - எங்கள் குழுவிலிருந்த ஒருவரது அக்கா கற்பித்துக் கொண்டிருந்த பள்ளிக்கூடத்தில் இராத் தங்கினோம். தோட்டத்து மரவள்ளி கிண்டியெடுத்து அவித்து சம்பலுடன் உண்டோம். என் கிராமத்திலிருந்து வெளியேறிய சிங்களவர் சிலரும் எங்கள் குழுவிலிருந்தனர். என் கையெழுத்துப் புத்தகத்தில் அவர்களில் ஒருவர் தமிழில் எழுதித் தந்த 'இனன்களுக்கிடையிலான ஒற்றுமை ஓங்குக!' இன்னும் என்னிடமிருக்கிறது. அதைப் பார்த்துத் திருத்தி '
இனங்களுக்கிடையிலான ஒற்றுமை ஓங்குக!' என்று இன்னொரு தாளில் அவரிடமெழுதிக் கொடுத்த என் அபத்தமும் ஞாபகமிருக்கிறது.

தயிரும் கித்துள்பாணியும் நிறைந்த அந்த நாட்களில் எங்களுக்குள் தமிழ்-சிங்களப் பேதம் இருக்கவில்லை. சண்டை எங்கோ வேறொரு கிரகத்தில் நடந்து கொண்டிருந்தது. அதற்கும் எங்களுக்குமான தூரம் ஒன்றினாலும் எட்டிப்பிடிக்க முடியாதபடி நீண்டு போயிருந்தது.

என் கிராமத்தின் அழகுக்கு அடுத்தபடியாக, அங்கிருந்து புறப்பட்டதன் பிறகு,
நான் அழகான மனிதர்களையும் இடங்களையும் அப்பயணத்தின் போது கண்டுகொண்டேன். கல்முனை என்றால் என்ன, கம்பகா என்றால் என்ன..அன்பு மிக்க மனிதர்கள் எங்கேயும் அழகுதான்.

சந்திரா என்றொரு அழகி

என்னதான் படித்தாலும், நல்லோர் சகவாசம் இருந்தாலும் எவ்வளவு விதிக்கப்பட்டதோ அவ்வளவுதான் மதி என்று நிறுவிக் காட்டவும் சிலர். இவர்களை நினைத்தாலே கோபமும், அனுதாபமும், சிரிப்பும் ஒருங்கே வருகிறது. (தயவு செய்து யார், ஏன், என்ன என்றெல்லாம் கேட்காதீர்கள்.)

---- சரி, தொலையட்டும் அந்தக் கதை. சந்திராவைப் பற்றிப் பேசலாம்.

எடுத்துப் பேசும் போதெல்லாம் "எப்படியிருக்கிறாய்" என்ற கேள்வியுடன் ஆரம்பித்து அதற்குப் பதில் நான் சொன்னதுடன் நடந்தவைகளில் சிரிப்பானவற்றையோ அல்லது "அம்மா xx மணிக்குப் போனவ, இன்னும் வரேல்ல" என்றோ ""அம்மா சரியான குழப்படி, சொல்லுக் கேட்கிறேல்ல" என்றோ முறைப்பாடு சொல்லும் பெண் இன்றில்லை. உயிர் போய் 36 நாளாகிறது. மனிதர்களைக் கூர்ந்து கவனிக்க, உள்ளே தேடிப்பார்க்க என்று கடுமையாக ஞாபகமூட்டிக் கொண்டும் அட! இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாமே, அவருடன் அதிகநேரம் கழித்திருக்கலாமே என்று காலங் கடந்த ஞானோதயம் தரும் குற்றவுணர்ச்சிகளுடனும் கடந்து போயிருக்கிற ஒரு மரணம்.

செத்தவீட்டில் போன்று இதுதான் நடந்தது என்றெல்லாம் சொல்லப் போவதில்லை. முடிந்து போனபின் எங்கள் ஆறுதலுக்குத்தானே இந்த அக்குவேறு ஆணி வேறாகச் சாக முந்தி நடந்ததும், அவர் சொன்ன வார்த்தைகளுக்கு பொருளும் உள்ளர்த்தம் கண்டு பிடிப்பதும் கற்பிப்பதும். உசாராக சந்தோசமாக அன்பாக வாழ்க்கையை வாழத் தெரிந்த ஒருவர் இப்போது இல்லையே என்ற துக்கம்தான் அவரை அறிந்த சந்தோசத்துடனும் அவர் பற்றின ஞாபகங்களுடனும் சேர்ந்து மனதில் பூத்திருக்கிறது.

இறக்கப் போகிறார் என்று தெரிந்ததும் அதற்காகக் காத்துக் கொண்டிருப்பது பெருங் கொடுமை. அது போன்ற கொடுமைகள் எண்ணிக்கையில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடியனவாய்த்தான் இருக்கும். அதைவிட வெறுங் காலுடன் கொளுத்தும் வெயிலில் வறண்டு போனதொரு ஆற்றின் கரையில் அல்லது பாறையில் அசையாமல் நெடுநாட்களுக்கு நின்று கொண்டேயிருக்கலாம். மற்றவர் இருக்கட்டும்.. அவரது உடல் ஒத்துழைக்க மறுப்பதை உணர்ந்து கொண்டாலும் கருப்பையில் உருவாகின கணத்திலிருந்து கூடவே இருந்து கடந்த சில வருடங்களாக தோழிகள் போல ஒன்றாக வாழ்ந்திருந்தவள் இறக்கபோகிறாள் என்று அறிந்தும் எந்த நிமிடம் வரை என்று அறியாதிருப்பது போல வதை வேறொன்றும் வேண்டாம் என்று தோன்றுகிறது.

அந்த நாளையும் மழையைப் பூசிக் கொண்ட தொடர்ந்து வந்த நாட்களையும் கடந்து வந்த ஒரு பிற்பகலில் சந்திராவின் உடைமைகளினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த போதுதான் அந்த குறிப்பேட்டைக் கண்டேன். எண்ணற்ற குடும்பங்களுக்கே உரித்தான பரகசியமான இரகசியக் கதைகள். அதிலொன்றுதான் - அடுத்த தலைமுறைக்கு அரசல் புரசலாகத் தெரிந்த கதை..சந்திராவின் கோணத்திலிருந்து.

சிறுவயது வாழ்க்கையும், பட்டப்படிப்புக்கு புனே மற்றும் கல்கத்தா சென்றதும், சிங்களவரைக் காதலித்து மணந்த குற்றத்திற்காய் மூத்த தமக்கையின் குடும்பம் விலக்கினதும், எத்தியோப்பியாவுக்கு கற்பிக்கப் போனதும், அங்கு வேறொருத்திக்குக் கணவரால் பிறந்த பிள்ளைகளையும் அவற்றின் தாயையும் தனதாய் வரித்துக் கொண்டதும், அதையொட்டிய தனது உணர்ச்சிகளையும், பின்னர் தொழில் நிமித்தம் கிரிபத்தி போனதும், கணவர் இறந்த பின் தனியொருவராய் உழைத்து பிள்ளைகளைப் பார்த்ததும், அவர்களுக்கென்று வாழ்க்கை அமைய உதவினதும், தன் மாணவர்கள் பற்றியும், பிறகு நாடு திரும்பி மூத்த தமக்கையின் கணவர் இறந்து போயிருக்க அங்கு சென்று 34-35 வருடங்களின் பின் சகோதரிகளின் சந்திப்பும், அங்கு கூடவே அக்கா இறக்கும் வரையிருந்ததும், அதற்குப் பின் இரட்டைச் சகோதரியுடனிருந்த அன்றாட வாழ்க்கையும் விரிவான எழுத்தில் குறிப்பேட்டின் தாள்களில் நிரம்பியிருந்தது. ஆங்காங்கே அதற்குள் பழைய கடிதங்கள்(1965-69, 1977இல் எழுதியவை), இந்தியாவுக்குப் போக வீட்டிலிருந்து கொழும்பு சென்ற தொடர்வண்டிப் பயணச் சீட்டு(1950களின் ஆரம்பம்), பட்டம் கிடைத்ததென்று அறிவித்த தந்தி, பிள்ளைகளின் ஓவியங்கள், கவிதைகள் என்பனவும் ஒரு வாழ்க்கையின் மௌனச் சாட்சியங்களாய் அந்தக் குறிப்பேட்டில் கொட்டிக் கிடக்கக் கண்டோம். முன்முடிவுகளோ பின்முடிவுகளோ இல்லாமல் பார்க்கிறேன்; அவரெடுத்த முடிவுகளின்படி அதுதான் சந்திரா என்கிற மனுஷியின் வாழ்க்கை.

வாழ்க்கைச் சரிதையை எழுதி வைக்க வேண்டும் என்று சொல்லுகிற கிறிஸ்தவ சமயப் பிரிவொன்றில் சந்திரா சேர்ந்து கொண்டதில் எங்களுக்கும் ஒரு வாழ்க்கையை, வாழ்ந்தவரின் கண்ணுடாகப் பார்க்கக் கிடைத்தது. வாழ்ந்த வரைக்கும் அவர் சம்பாதித்துக் கொண்ட அன்பும் மனிதர்களுமே அதற்குச் சாட்சியம். நிறையப் பேரை இப்படியாக அவர்களின் பார்வையில் தெரியாமல் போய் விடுகிறது. பிறர் கொடுக்கிற நிறக் கண்ணாடிகளுக்கூடாகவே அவர்களின் வாழ்க்கையைப் பார்க்கிறோம்.

வாழ்க்கைக்குத் தேவையானது என்ன என்பதை - முழுமையாக ஒரு எதிர்பார்ப்புமில்லாமல் அன்பு செலுத்தி, எவரென்றாலும் உள்ளன்போடு பழகி, எல்லாருக்கும் நல்லதே நினைத்து நன்மையே செய்த/செய்கிற - சந்திரா மற்றும் அவரது இரட்டைச் சகோதரி போன்ற அழகிகளிடமே கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது.

[சந்திராவின் இரணைக்கும், சந்திராவை அறிந்தவர்கள் எல்லாருக்கும், சந்திரா இருக்கும் போதிருந்தே இருக்கும் நடைமுறை பின்பற்றி முன்வீட்டுப் பிள்ளைகள் தொடர்ந்தும் நீர் வார்த்துக் கொண்டிருக்கிற சந்திராவின் பூஞ்செடிகளுக்கும்.]

உலகமும் உரையாடல்களும்

ஒரு கேள்வி கேட்கிறேன்.. ஒருவர் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றைச் சாதித்திருக்கிறார் என்று சொன்னால் அதை ஏன் materialistic ஆக உள்வாங்கிக் கொள்கிறோம்? ஏன் 'சாதித்தல்/அடைதல்" என்பது பணத்தினதோ, புத்திசாலித்தனத்தினதோ, சமூகத்தில் அவரது இடத்தையோ அளவீடாக கொள்ளப் படுது? (மருத்துவப்படிப்புக்குக் தேர்ந்தானாம், அவளிட கடை நல்ல பெரிசு அல்லது அவர் கோயில் president) இதுகள் தானா சாதனைகள்? (தனக்கு விரும்பின/திறமையுள்ள துறையில படிச்சுத் தேருறதையோ அல்லது தொழில் செய்து முன்னேறுறதையோ குறையாச் சொல்லவில்லை. அதற்குத் தேவைப்படுற கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் I appreciate it)

பொருளைக் கொண்டு மனுசரை அளவிடுற இந்த உலகத்தில, நேர்மை, தீங்கு செய்யாமை போல நல்ல குணங்கள் இருக்கிறதோ, அதுகளை நெறியாக் கொண்டு வாழ்றதோ ஏன் மேற்சொன்னதுகள் போல ஒரு achievement ஆக கருதப்படுறல்ல? பார்க்கப் போனா உங்களாலயும் என்னாலயும் ஆன சமூகம் இப்படிப் பட்ட குணங்களோட வாழுற ஆட்களை மதிக்கிறல்ல. முகத்துக்கு முன்னால சிரிச்சிட்டு பின்னால் போய் பிழைக்கத் தெரியாத ஆள் என்டு ஏன் சொல்லுது?

என்ன திடீரெண்டு இப்பிடி சொல்லுறனென்டு பார்க்கிறீங்களா..

இருபதுகளின் நடுப்பாகத்தை எட்டிப்பார்க்கப் போகிற வயதில் ஒரு சக மனுஷி. அலைவரிசைகளும் இயல்புகளும் ஒத்துப்போறதாலேயோ என்னவோ இந்தப் பெண்ணோட பல விதயமும் பேச முடியுது. அது பிடிச்சுமிருக்கு.

இன்றைக்கு வழமையான நல விசாரிப்புகளுக்குப் பிறகு "it doesn't feel like I've achieved anything in life" என்றா. முதலாம் பந்தில சொன்னமாதிரியான அளவீடாக் கொள்ளப்படுற சாதிப்புகளை தான் இன்னும் செய்யல்ல என்டுறதுதான் - அதுகளை நினைச்சு ஒரு தாழ்வு மனப்பான்மையோட யோசிக்கத் தேவையில்ல என்டு தெரிஞ்ச - இவவுக்கு வந்த யோசனை. இவவோட நடக்கிற உரையாடல்கள் அனேகமாகக் கதைச்சு முடிஞ்ச பிறகும் சிந்திக்க வைக்கும். வழமையாகக் கதைக்கிற ஒரு தலைப்பாக வாழ்க்கை/வாழ்தல் இருந்தாலும் தன்ட வயசு ஆட்கள விடவும் மனமுதிர்ச்சி கொண்ட, தான் தேர்ந்த களத்தில் masters(முதுகலை?) படிக்கிற அவட கூற்று கொஞ்சம் யோசிக்க வைச்சது.

தேர்ந்தெடுத்த துறையில தன்னை இன்னும் மேம்படுத்திக் கொள்ளப் படிக்கிறா. முடிஞ்சளவு உதவிகள் செய்கிறா, ஒழுங்கான வழியில வாழுறா.. ஆனாலும், இப்படி யோசிக்கத் தேவையில்லை என்று தெரிந்து கொண்டும், இப்படி தான் ஒன்றும் சாதிக்கவில்லையே என்று ஒரு கொஞ்ச நேரத்துக்குத்தான் என்றாலும் நினைக்கிற மனநிலை எதனால வருது? கொஞ்ச நேரம் கதைச்சவுடன எழும்பின கேள்விதான், நல்ல முறையில் வாழ்க்கையைக் கொண்டு செலுத்திறது ஏன் சாதனையா கருதப் படுறல்ல என்டுறது.

இப்பிடியே அவவோட கதைச்சது வழமையா நடக்கிறது போல வளர்ந்து வளர்ந்து எங்கெயெங்கையோ போயிற்று. இப்படிப்பட்ட உரையாடல்களில எப்பவும் எனக்குச் சந்தோசம். தயக்கமில்லாம தங்கட மனசை வெளிப்படுத்தி, தங்களையும் உலகத்தையும் அவங்களுக்கே உரித்தான முறையில அலசி ஆராய்றதும் எடுக்கிற சரியான முடிவுகளும் நம்பிக்கை தருது.

கேள்விகள் கொண்ட, அதை அடக்கிவிடாமல் கேட்கிற இந்தத் தங்கைகள் அழகானவர்களாயிருக்கிறார்கள்.

வெயில்

வெயில் பற்றின முதல் நினைவு எதுவாக இருக்கும்? கூரைக்குள்ளால் ஒளிந்து வந்து தரையில் வட்டம் போடுவதும் இலைகளுக்கூடாய் வந்து விழுந்து தன் 8 நிமிஷப் பயணக் களைப்புப் போக தரையில் கிடப்பதுமே என் ஞாபகமாய் மேலெழும்புகிறது. குளிர்காலத்தில் ஹைட் பார்க்கில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு குளிருக்கு இதமான மெல்லிய சூட்டை அனுபவித்தால் தெரியும்.. வெயிலின் அருமை. அயனவலயப் பிறவி என்ற பெயர் சரியாய்த்தான் இருக்கிறது. வெயில் இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை.. வெயில் தாகம் எடுத்து அலைகிறேனோ என்றதொரு சந்தேகம் முளைத்திருக்கிறது. எப்போதும் சூரிய ஒளி் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கவும் சாயுங் காலத்தில் சூரியன் சாயாமலிருக்கவும் கூடுமானால் என்று கனவு காணத் தோன்றுகிறது. எல்லாம் குளிர் செய்யும் வேலை.. கோடை வந்த பிறகு என்னிடம் கேட்டுப் பாருங்கள்.. மழைதான் வேண்டுமென்று 'முழக்கி'ச் சொல்லுவேனாயிருக்கலாம். :O)

சுட்டெரித்த (போதும் அதைக் கண்டு கொள்ளாமலிருந்த) ஊர் வெயிலுக்கும், முகத்திலறைகிற அனல் காற்றுடன் நடமிடுகிற இங்கத்தேய வெயிலுக்கும் எவ்வளவு வித்தியாசம். அவ்வளவு ஏன் 2-3 மணிக்கெல்லாம் தலை கொதிக்க கவசம் ஏதுமின்றி நடந்து சென்ற கொழும்பு வெயிலும், செழித்த மரங்களுக்கிடையே ஒளித்துப் பிடித்து விளையாடும் கம்பகா வெயிலும், தெருவுக்குப் போட்டிரு
க்கும் தாரினை உருக்கி உரு மாற்றும் மட்டக்களப்பு வெயிலும், திருக்கோணமலை, யாழ்ப்பாணம், பொலநறுவை, நீர்கொழும்பு, காலி, கதிர்காமம், பிபிலை என்று நான் போயிருக்கிற அத்தனை இடங்களிலும் நான் கண்ட வெயில்களும் வித்தியாசமானவைதாம். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு குணம் அதற்கு. காளிக்குக் கோபம் வருமாம். அவவுக்குக் கோபம் வருகிறதோ இல்லையோ, தன் கோபத்தையெல்லாம் காளி கோயில் மணலில் வெயில் இறைத்து வைத்திருக்கும். தடை போட்டு மரங்களும் கூரைகளும் குடை பிடித்தாலும் எப்படியோ உள்நுழைந்து தரையில் பொட்டு வைத்து / கோலம் போட்டு அழகுபார்க்கும். தாவரங்கள் வாழ உயிர் கொடுக்கும். சில இடங்களில் வெயிலுக்கு ஒரு குளிர்ச்சி கூட வந்துவிடும். மனிதர்களைப் போல வெயிலுக்கும் கோபம், அமைதி, அழகு, கருணை என்று எத்தனையோ முகங்கள், குணங்கள்.

(முதற் தடவை நோர்வே போயிருந்த மூன்று மாதங்கள் அங்கு இலையுதிர் மற்றும் பனிக்காலம். அந்த ஆண்டு பனிக்காலம் பிந்தினதாம்..ஆனாலும் வெயில் இல்லாமல் போகாமலில்லை. என் உற்சாக மட்டமும் அந்நேரத்து வெயிலைப் போலவே குறைந்து போனது. இங்கு வந்த பிறகுதான் வின்டர் ப்ளூஸ் என்பது பற்றிக் கேள்விப்பட்டேன். குளிர்காலமென்றாலும் நல்ல சூரிய வெளிச்சமுள்ள இடத்துக்கு வந்து சேர்ந்தது நல்ல காலம் .)

குளிர்நாடுகளிலே பிறந்தவர்கள் பலர் பாவ
ம்; வெயிலைத் தாங்கார்களாம். ஆனால் எனக்கோ இன்னுமின்னும் வேண்டும் போல இருக்கிறது. வசந்த காலத்து இலைகளையும் பூக்களையும் (விட்டுப் போக மனமில்லாமல் தொங்கும் குளிரையும்) தடவி் காற்றை நிறைக்கும் அந்த மஞ்சள் வெயிலுக்காகவும், ந்த அழகிய மஞ்சள் வெளிறி நிறமற்றுப் போய் ஈரமில்லாமல் சண்டித்தனம் காட்டுகிற காற்றோடு சேர்ந்து எறிக்கிற கோடை வெயிலுக்காகவும் நான் காத்திருக்கிறேன். என்னதான் மழையினை நேசித்தாலும் எப்போ வருமென்று பார்த்திருந்தாலும் முத்துக்களும் வெள்ளிச் சரங்களும் காட்டும் நாட்டியத்துக்காய்க் காத்திருந்தாலும், வெயிலைக் காணாத மாத்திரத்தில் என் மனமும் அலைய ஆரம்பித்து விடுகிறது - வீடு திரும்பப் பிந்துபவரைப் பற்றி எண்ணுகிற ஈழத்துக் குடும்பத்தினதைப் போல .

பாட்டொன்று கேட்டேன்..

பிரபாவிடம் அல்ல.(கேட்க வேண்டிய ஒரு பாடல் இருக்கிறதுதான்..) :O)

நான் சொல்ல வந்தது யூரோவிஷன் பாட்டுப்போட்டி. மே 12ம் திகதி போட்டியில் சேர்பியா வென்றுமாயிற்று. எங்களூரில் நேற்றைக்கும் இன்றைக்குமாகத்தான் SBS ஒளிபரப்புகிறது. எனக்குப் பிடித்திருந்த பாடல் 6ம் இடம் கிடைத்த பல்கேரியாவினுடையது. டம் டம்மென்று நல்ல அடி.. நீங்களும் பாருங்களேன்:


(மு.பி.கு: பயணக்கதையை அடுத்த பாகத்தோடு முடிக்கிற எண்ணம், சினேகிதி வேறே ஏன் இன்னும் விசரியாவே இருக்கிறீங்க என்றும் கேட்டுவிட்டா.. கெதியில பதிவுகளோட வாறேன். )

விசரியென்கிற நான்...

விளையாடக் கூப்பிட்ட ராதா ஸ்றீராம், பிரபா, மலைநாடருக்கு நன்றி.. விசர்க்குணங்கள் இருக்குது என்டு தெரிஞ்சுதான் கூப்பிட்டிருக்கிறீங்க போல!! :O))

முதல்ல விளையாட்டுக்கு ஆள் சேர்த்திட்டு வாறன்..

யோகன் (பாரிஸ்)
சினேகிதி
மதி
கலை
அஞ்சலி

தங்களது சித்திர விசித்திர குணாம்சங்களைச் சொல்லுமாறு மேற்கூறியவர்களை இத்தால் அழைக்கிறேன்.


எனக்கு இருக்கிற சில விசித்திர குணம் (என்டு எனக்குப் படுபவை)

5. எதாவதொன்றில் ஆர்வம் வந்தால் அதுவே கதி. எப்படியும் 5- 6 வாரமெடுக்கும் அந்த அலை ஓய! பிறகு இன்னொருமுறை அதிலே ஆர்வம் வரும் வரை திரும்பிப் பார்ப்பதேயில்லை. மாறாத ஆர்வம் சிலவற்றில் இருக்கிறது. உதாரணத்துக்கு:

* ஆவணப்படங்கள் கண்டால் பார்க்கவே வேண்டும். வேற ஒன்றும் அந்த நேரத்தில் ஓடாது. பார்க்க முடியாவிட்டால் பதிவு செய்து பிறகு பார்ப்பேன். தொ.காவில சில நிகழ்ச்சிகளை அவற்றின் தலைப்பு/முடிவு இசைக்காகவே பார்க்க ஆரம்பித்ததும் உண்டு. (Sitting Ducks சலனக் கேலிச்சித்திரம், House தொடர்.. இன்னும் சில நிகழ்ச்சிகள்). தொ.கா. நிகழ்ச்சிகள் சிலவற்றுக்கு அடிமையாகவே கிடப்பதும் ஒரேயடியாய் அவற்றைப் பார்ப்பதை நிறுத்துவதும் உண்டு.

* அனுப்பும் வாழ்த்து மடல் அனேகமாக நானே செய்ததாய் இருக்கும். இதற்காகவே, காண்கிற பூக்கள், வித்தியாசமான அமைப்புடைய இலைகள் சேகரிப்பேன். பேரங்காடிக்குப் போய் என்னைத் தவற விட்டால் வந்த வழியில் எங்காவது புத்தக/கைவினைப் பொருள் கடை இருக்கிறதா என்று பார்த்து அதற்குள் நுழைந்தால் என்னைக் கண்டு பிடிக்கலாம். அந்தளவு புத்தக/கைவினை வெறி.


4. கோவம் வரும். ஏன் எதுக்கெண்டெல்லாம் இல்லை. சுள்ளென்று எரிந்து விழுவேன். ஆனால் மற்ற நேரங்களில், அமைதியின் உருவமாய் இருப்பவர்களுக்கே கோவம் வரும் சந்தர்ப்பத்தில், எனக்கே ஆச்சரியம் வரும் வகையில் அமைதியாய் பொறுமையாய் பொறுமையின் சிகரம் ஒரு எருமையாய் இருப்பேன். ஆக, கோவம் வரும். ஆனா எப்ப என்டு தெரியாது.

குறிப்பாக எரிச்சல் வருவது மேற்கத்தேய 'பெண்' வரையறையை தங்களுக்குக் கற்பித்துக் கொண்ட பல்கலைக் கழகம்/வேலை செல்லும் இங்கிருக்கும் பெண்களிடம்(அறிவு சார்பாய் இல்லாமல் தோற்றத்தில் அதிக ஈடுபாடு கொள்வது அதைக் கொண்டே மற்றவர்கள் மதிப்பிடுவது என்பதைச் சொல்கிறேன்.). உடைகளுக்கான கடைகளை விட புத்தகக் கடை பிடிக்கும் என்றும் பேருந்தில் நான் சுவர்ப்பூச்சு கொள்கலன்கள், உலக்கை மற்றும் தகரம் கொண்டு போனதையும் சொல்லி (முழுக்க முழுக்க "நான் எனது தேவைக்காக செய்திருக்கிறேன் பார், ஒரு வெட்கமும் இல்லை" என்று காட்ட என்று சொல்லிக் கொண்டாலும், அப்படிப்பட்ட தேவைகள் இங்கு 99% பேருக்கு வராது என்பதும் நினைவுக்கு வரும்) அவர்கள் முகம் ஆச்சரியத்தில் விரிவதைப் பார்க்க & அவர்களுடன் தர்க்கித்து கற்பிதங்களை உடைக்கப் பிடிக்கும்.


3. சில இடங்களுக்கு முதல் முறையாகப் போனாலும் அவ்விடத்திற்கு முதலும் வந்திருந்த மாதிரித் தோன்றும். நண்பர்களிடம் சொன்னால் போன பிறப்பில் வந்திருப்பாய் என்று கேலி பண்ணுவார்கள். ஏனோ தெரியவில்லை பழைய காலத்து வீடுகள் கட்டிடங்கள் என்பவற்றிற்குப் போனால் அதிகமாகத் தோன்றும். வந்த மாதிரி இருக்கிறது தானே என்று அவ்விடத்தின் உள்ளமைப்புப் பற்றிக் கேட்டால் அம்போ! ஆக வெளியில மட்டும் பார்த்துப் போயிருக்கிறன் போல போன பிறப்பில!!! :O\


2. முந்தினதின் நீட்சியாக யாரைப் பார்த்தாலும் முதல்லே எங்கேயோ கண்ட மாதிரி இருக்கே என்று யோசிப்பது. எப்படியும் இதுவரை வாழ்நாளில் சந்தித்த/பார்த்திருந்த ஒருவருடன் புது முகத்தை ஒப்பிட்டுக் கொள்வது. அப்படி யாரையும் ஒத்திராத முகமா? கண்ணையோ மூக்கையோ காதையோ நெற்றியையோ ஒப்பிடத் தொடங்குவேன்!! புத்தம் புதிதாயே முகம் இருந்தால் மனதில் தேக்கிக் கொள்வேன்.. இன்னொரு ஆளைச் சந்தித்தால்/பார்த்தால் ஒப்பிடுவதற்கு!! :O))

இந்த வியாதி வர வர முற்றுகிறது என்று நினைக்கிறேன்.. வார இறுதியில் சந்தித்த ஒரு வயதுக் குட்டிப் பெண்ணைப் பார்த்து இவளை மாதிரியே யாரைத் தெரியும் என்று யோசித்து, கடைசியில் கண்டு பிடித்தேன்!!!


1. யாரோட கதைச்சாலும் அவங்கட வட்டார வழக்கில/ வேற்று நாடாயிருந்தா அந்த அக்சன்ற்றுடைய ஆங்கிலம் கதைப்பது. மாற்ற வேண்டும் என்டு முயற்சித்திருக்கிறேன். ஆனாலும் கவனிக்காம விட்ட பொழுதொன்றில மூளையும் குரல்வளையும் சதி பண்ணி விடும். சீனாக்காரனிட்டக் கதைச்சா அவன் சொல்லுற மாதிரியே "த்ரீ"க்குப் பதிலா "ட்ரீ/ட்லீ"யும், "ப்ரைட் ரைசு"க்குப் பதிலா "ப்லை லை" யும் தான் என்ட வாயில இருந்து வரும். இதே இத்தாலியனோட என்டா "இட்" "இத்" ஆகிறதும் நடக்கும். வேலையிடத்திலே பல நாடுகளைச் சேர்ந்த ஆட்கள் இருப்பதால் எனக்கும் வசதியாய் அமைந்து விடுகிறது!!(என்ன இதுவரை இந்த ஐரிஷ்/ஸ்கொட்டிஷ்/வெல்ஷ் அக்க்சன்ற்றுகள்தான் வராதாம்.) புதுசு புதுசாய் அக்சன்ற் கற்றுக்கொண்டு வீட்டே போய்/குட்டித்தோழர்களிடம் பேசிக்காட்டுவது பொழுது போக்கு. என் வீட்டு இல்லத்தரசன் யாரோடு பேசினாலும் தனது அக்சன்ற் / 95% இலங்கைத் தமிழிலேயே கதைப்பார். நான் அப்படியில்லைத்தானே.. ஒரு நாள் தமிழக நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அங்கிருந்த ஒரு (தமிழக)முதியவவுடன் பேசினேன். "உன்னோட வீட்டுக்காரர் பேசறது புரியலே, ஆனா நீ சரியா பேசறே" என்றாரே!!

இப்போதைக்கு இவ்வளவுதான் ஞாபகம் வந்தது. இந்த விசர் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? :O))

இருப்பதும் இல்லாமலிருப்பதும்


அது, இருப்பது, இருக்கிறது;
அது, இல்லாமலிருப்பது, இல்லாமலிருக்கிறது;

ஆனால், அது, இல்லாமலிருப்பது, இருக்கிறது என்பதல்ல;
அதைப்போலவே, அது, இருப்பது, இல்லாமலிருக்கிறதுமல்ல.

அம்மா வைத்திருந்த verse புத்தகம் போலே நானும் பள்ளிக்கூடக் காலங்களில் வைத்திருந்தேன். பகிடியான (autographல் எழுதக்கூடிய மாதிரி) சின்னச் சின்ன ஆங்கிலக் குறும்பாக்களையும் பிடித்த கவிதைகளும் தன்னில் கொண்டது. வாசித்தது பிடித்தால், உடனே அந்தக் கொப்பியில் எழுதிவிடுவேன். ஆனால் என்னுடையதிற்போல, உள்ள கஞ்சல் குப்பைகள் அவவின் புத்தகத்தில் காணக் கிடையாது. கிறிஸ்தவப்பள்ளிக்கூடத்தில் படித்ததன் பாதிப்புகள் ஆங்காங்கே தெரியும். பூக்களைப்பற்றியும், வாழ்க்கையைப்பற்றியும், அவ வாசித்துப் பிடித்த கவிதைகளென்று அந்தக்காலத்து தடிப்பமான அட்டை கொண்ட கொப்பி.

நண்பர்கள்/வேண்டியவர்களின் பிறந்த நாட்கள் கடைசித் தாளில் சீராக எழுதப்பட்டிருக்கும். என் கொப்பிகளின் கடைசித் தாட்கள் போல் முகம் தெரியாத கிறுக்கல்கள் அம்மாவின் கொப்பியினை ஆக்கிரமித்தில்லை. அசிங்கமாக்கவில்லை. கிட்டத்தட்ட எட்டாம் வகுப்பு வரை மூலைகள் மடியாமல் பள்ளிப்புத்தகங்களோ குறிப்பேடுகளோ இருந்ததில்லை. ஒவ்வொரு ஆண்டும் சபதமெடுத்துக் கொள்வேன்.. மூலை மடியாமல் பாவிப்பது என்று. ஒரு மாதம் போதும் எனக்கு, தோல்வியைக் காட்ட. மடிந்த மூலைகளை நிமிர்த்தும் போது என்னவோ செய்யும். புத்தகம் அழுகிறாற் போல ஒரு பிரமை. அதற்காகவே என்ன செய்தேன், ஒவ்வொரு புத்தகத்தின் முன்னட்டையிலும் "மூலை மடியாமல் கவனமாகத் திருப்பவும்" என்கிற பொருள் வர எழுதி ஒட்டினேன். பழக்கம் குறைந்து இல்லாமலே போனது. அம்மாவின் கொப்பியைப் பற்றி ஆரம்பித்து சுயபுராணம் பாடுறேன்.. :O)

எத்தனையாம் வகுப்பிலிருந்து வைத்திருந்தாவோ தெரியாது, ஆனால் சிறு வயதிலேயே ஆரம்பித்திருக்க வே
ண்டும். சிறு வயதிலிருந்து படிப்படியாக அவவுடன் கூடவே அவவின் எழுத்தும் வளர்ந்து மாறி வருவதை அழகாக அவதானிக்கலாம். வளர்ந்த பின்னால் எங்களுக்குக் காணக் கிடைக்கும் தோற்றத்தை/வாழ்வை விடவும் முந்தியதொன்று அவர்களுக்கு இருந்திருக்கிறது என்பது தெளிவாயத் தெரிந்த ஒன்றானாலும் அதை நேரே பார்த்து உணருமாற் போல இருக்கும், பக்கங்களைப் புரட்டப் புரட்ட. கடைசிக் கவிதைகள் எழுதப்பட்டிருக்கும் எழுத்தும் அவவின் இப்போதைய எழுத்தும், ஒரு பருவத்தில் சேர்ந்திருந்து சில காலப்பிரிவின் பின் கண்டாலும் அடையாளம் காணக்கூடியதாயிருக்கிற தோழியின் முகச்சாயல் போல நிறையவே ஒத்திருக்கிறது. மாறாத எழுத்துக்களால் பக்கங்களை நிரப்பும் எவரைக் காண்பினும் எனக்கு அதிசயமே. ஒரு வரி எழுதும் போது இருக்கும் எழுத்து அடுத்த வரி எழுதும் போது மாறிவிடும். 10 வரியில் குறைந்தது ஏழு விதமான எழுத்துக்கள் இடம்பிடிக்கும். இந்தப்பழக்கம் காரணமாயோ என்னவோ , ஒருவருடன் பேசும் போது அவரைப்போன்றே பேச முற்படும் தன்மை போல, ஒருவரது எழுத்தையும் எழுதிப் பார்த்து ஓரளவுக்கு செய்யக்கூடியதாயும் இருந்தது.(கையொப்பங்களைப் "பிரதி" செய்து பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டதுதான்..நம்புங்கள்!!)

ஏனோ காலையில், அம்மாவின் புத்தகத்தில் வாசித்தது ஞாபகம் வந்தது. வாசித்த முதற் சில தடவைகள் விளங்காமல் குழம்பினதும், மண்டையில் ஏறினதும் ஏற்பட்ட சந்தோசமும் ஞாபமிருக்கின்றன. கொஞ்ச நாள் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருந்தேன். அதைத்தான் என்னாலான மொழி பெயர்ப்பில், மேலே.

ஆங்கில மூலம்:

That, that is, is;
That, that is not, is not;
But that, that is not, is not that that is;
Nor is that, that is, that that is not.

பெண்பால் என்ன??

காரிலே ஏறி, வானொலிக் குமிழைத் திருகினால், எங்கேயோ எப்பவோ கேட்ட ஒரு ஹிந்திப் பாடல் ஒலித்தது .. மே ஷாயர் தோ நஹி.(நான் கவிஞன்/புலவன் இல்லை) மகர் ஏசி ஹசி....என்று ஆரம்பித்து ஷாயரீ ஆகயீ (கவிஞை/கவிதாயினி வந்துவிட்டார்) என்று முடியும். ஒரு தடவை டிவிடியில் பார்த்தபோது அர்த்தம் போட்டதில் தெரிந்து கொண்டேன்.

நேற்று முழுக்க யோசித்தும் பிடிபடவில்லை. நீங்களாவது சொல்லுங்க.. ஆசிரியன், ஆசிரியை, ஆசிரியர் / தோழன், தோழி, தோழர் ..இப்படி, கவிஞனுக்கும் பெண்பால் & பொதுப்பால் தெரியும். ஆனால் புலவனுக்கு??

புலவர் என்பது பொதுப்பால். பெண்பால் என்ன?

ஏன்?எப்படி?உங்களுக்குமுண்டா?

குறிப்பட்டதொரு பதிவைத் தேடுகையில் இது கண்ணில் பட்டது. சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதம் எழுதி draft ஆகவே இருந்தது. இன்றைக்குப் பதிகிறேன்.

````````````````````````````````````

உங்களுக்கும் இப்பிடித் தோன்றியிருக்கக் கூடும்; அநேகமாக எதையாவது பார்த்தால் ஒரு சொற்றொடரோ அல்லது ஒரு சொல்தானும் மனதில் சட்டெனப் படும். புல்லைப்பார்த்தால் "அட! புல்லு" என்பதையோ, கடலைப் பார்த்து எவ்வளவு பெரிதாயிருக்கிறது என்று நினைத்துக்கொள்வதையோ இங்கு சொல்லவில்லை.

போன கிழமை படிக்கட்டில் கால் வைத்த போது ஏனோ "உதறி விரித்தது போல"
என்று தோன்றிற்று. எப்பவாவது வாசித்த ஒரு கவிதையிலிருந்தோ கட்டுரை/கதையிலிருந்தோ வந்திருக்க வேண்டும். குட்டையான கட்டிடங்களுக்கு மத்தியில் உயரமானதைக் கண்டால், ஒரு bookmark போல என்று நினைத்துக் கொள்வேன். என் நண்பிக்கு எல்லாக்கட்டிடங்களும் (குறிப்பாக கபில (brown) நிறப் பூச்சுள்ளவை) கேக் துண்டுகள் மாதிரித்தான் தெரிகின்றன. :O) கிளைபரப்பி அடர்ந்து நிற்கும் மரத்தைக் கண்டால் "காற்றுக்கு விசிறி விடுகிறது" என்றும், இலைகள் சலசலக்க கிளைகள் ஆடுகையில் "அலையடிக்கிறது" என்றும் தோன்றும். இப்படி நிறைய.

இதெல்லாம் தன்னிச்சையாகத் வந்து விழுகின்றனவா அல்லது நாங்கள் முதலில் வாசித்த/பார்த்த ஏதாவது மனதில் தங்கி, ஒரு சிறு தூண்டல் கிடைத்ததுமே வெளி வருகிறதா? உதாரணமாக, இலையுடன் கிளை அசைகையில் அலையடிப்பது என்று எனக்குத் தோன்றுவது நேற்று நீருக்கடியிலுள்ள பவழ(ள?)ப்பாறைகள் பற்றிய விவரணப்படத்தில் பார்த்த கடற்தாவரத்தின் இலை அசைவு மனதில் தங்கியதினாலாயிருக்கலாம். காரணமிருந்தேயாக வேண்டிய கட்டாயமில்லை.

இதைப்போலவே மாறாய், ஒரு சொல்லை/ வசனத்தைச் சொன்னதும் சில உருவங்கள்/வடிவங்கள்/பிம்பங்கள் மனதில் தோன்றும். இப்படி, மனம் எதனால் இப்படிச் செயற்பட்டு புரிந்து கொள்ள முடியாத இணைப்புகளை உருவாக்குகிறது? இந்த இணைப்புகளின்/உருவ(க)ப்படுத்தல்களின் பயன் என்ன?

ஹீரோயினி!

ஒரு ஊரிலே... இல்லை, பல ஊர்களைக் கொண்டதொரு பெரிய ஊரிலே ஒரு ராணி இருந்தாவாம். இருந்தாவாம் என்ன.. இருக்கிறாவாம். அவ கனவு காணுறதிலதான் ராணியாம். என்னது? இந்தக்கதை வேண்டாமா? பிறகு வேற கதை சொல்லிறன். இன்டைக்கு இந்தக் கதைதான்.

என்னுடன் கூடப்படித்த தோழிக்கு 21ம் பிறந்தநாளாம். கொண்டாடுறாவெண்டு போறன். அங்கே போனால் பள்ளியில் ஒரே வகுப்பை என்னோட பகிர்ந்து கொண்ட நண்பிகள். (ஒரு நண்பனையும் காணேல!!) எங்கள விட ஒரு வகுப்புக் கூடின ஆட்களில 4 பேர். அதில ஒராளுக்கு என்னைத் தெரியும். நானும் அவவும் ஆளையாள் கண்டதும், தன்னுடன் இருந்த ஆட்களுக்கு என்னை அறிமுகப்படுத்துறா. ஆனா வேறென்னவோ பெயர் சொல்லி. என்னடா இது என்று யோசிக்கிறேன். எனக்குப் பெயர் மாற்றினது எனக்கே தெரியவில்லையோ??

சரி, பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வோம் என்று போகிறேன். கையிலே அன்பளிப்புகளொன்றும் இருக்கவில்லை. (நான் போறதே பெருசு. இதுக்குள்ள அன்பளிப்புத் தேவையில்லைத்தானே!!). ஒரு காவிப்பூச்சுள்ள கட்டடம். (கட்டின இடமெண்டா கட்டிடம் தானே..ஏன் கட்டடம் என்று எழுதுறோம்?? ஒருவேளை நான் மட்டுந்தானோ தாடி போர்வைக்கு வெளிலையா உள்ளுக்கா என்ட கதை மாதிரிக் குழம்பிட்டன்??)

கட்டிடமெண்டதும் பெரிசா இஞ்ச பிள்ளையிட முதலாம் பிறந்த நாளுக்கு வாடகைக்குப் பிடிக்கிற ஹோல் மாதிரியென்று யோசிக்காதீங்க... அந்தக்காலத்து இலங்கை பஸ் ஸ்டாண்ட் சீமெந்தால கட்டியிருப்பாங்களே..அதுமாதிரி ஒரு சின்ன இடம். அங்கே மற்றத்தோழிகள் சுற்றிவர இருக்க இவ சிதிலமான கொங்கிறீற்/சீமெந்துத் தரையில இருக்கிறா. ஓட்டுக் கூரை. அங்கே போனாலும் ("லும்" என்டுறது ஏனெண்டு கொஞ்சத்தில சொல்றன்) என்னைக் கண்டு கொள்வார் இல்லை. பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதிருந்த அதே “குழுவில சேராததால்” வாற (நானேன் சேராம இருக்கப் போறன், “சேர்க்கப்படாததால் வாற” என்டு வாசிக்கவும்) ஒரு பாதுகாப்பின்மை (என்ன பணியாரப் பாதுகாப்பு? ஆசிரியையிட்ட தனியப் பேச்சு வாங்கத் தேவையில்லை! அவ்வளவுதான்!!) அல்லது ஒரு தனிமையா/தாழ்வா உணர்ந்த மாதிரி (கனவுக்குத் திரும்புறன். நீங்களும் வாங்க) உணர்ந்தன். சரி, இவர்கள் கதைக்கப் போறதில்லை என்டபடியால இறங்கி அந்தக்கட்டிடத்தைச் சுற்றினன். இவங்க இருந்த இடத்துக்கு இடப்பகுதியில ஒரு கதவு. சரி, கொஞ்ச நேரம் இந்த அறைய ஆராய்வம் என்டு போனா அது ஒரு கழிப்பறையாம். அதுவும் பழைய தரைச் சாயலில்! வாளியொண்டு ஒரு மூலையில் கவிழ்த்து வைக்கப் பட்டிருக்கு. அதுக்குள்ள நிக்கத் தேவையில்லையென்று வெளியில வாறன்.

இப்ப, என்னைக் கண்டிட்டு, நண்பிகள் கூட்டம் கூப்பிடுது. (கழிப்பறைக்குள்ள போய் வாறதுதான் தகுதியா அல்லது முன்னம் கண்ணுக்குத் தெரியாம இருந்து அதுக்குள்ள போயிட்டு வந்த பிறகு தெரியிறனா என்டு எனக்கு விளங்கல்ல). வாழ்த்துறன் என்ட தோழியை. அப்பத்தான் (கனவிலையே) யோசிக்கிறன், என்னண்டு இவக்கு 21 வயசா இருக்கும்? இந்த வருசம் n வயசாயெல்லா இருந்திருக்கோணும் என்டு.

அப்பிடி என்ட மூளை கொஞ்சம் வேலை செய்ய எத்தனிக்கையில, கீயா மாயாவெண்டு ஒரே சத்தம். என்னெண்டு பாத்தா காலிமுகத் திடல்ல மாதிரி படிக்கட்டோட உரசி கடலலையடிக்குது. விளிம்புக்குப் போய் நின்டு பாக்கிறன். பெரியதொரு அலையெழும்பி (கடற்கோள்?) வருது. ஆனா இன்னும் கரைக்கு வரயில்ல. அலை எழும்பின படி நிக்க, அதுக்குப் பின்னாலும் முன்னாலும் என்டு மாறி மாறி (தொ.கா.வில, படம்பிடிச்ச எதையாவது, இன்னொண்டோட ஒப்பிட க்ராபிக்ஸ் பயன்படுத்திற மாதிரி) ஒவ்வொரு நகரங்கள் தோன்றுது. என்னெண்டா, அலையிட உயரத்தோட அந்த நகரங்களில இருக்கிற கட்டிடங்களின்ட உயரத்தை ஒப்பிட்டு, எது உயரமா இருக்கோ, அதுக்கேத்த மாதிரி உயரமானதைப் பின்னுக்கும், கட்டையானதை முன்னுக்கும் படபடவெண்டு மாறி மாறிக் காட்டுப் படுது. (ஆர் காட்டினதெண்டு எனக்குத் தெரியாது!!). பாத்தால் அலை கரைக்கு வருது (பின்ன, எவ்வளவு நேரந்தான் அசையாம க்ரபிக்சுக்கெண்டு நிற்கிறது).

இப்பிடி அலை வந்தா தடுக்கவெண்டு(!!) ஒரு திரை மாதிரி ஒன்று வைச்சிருக்கிறாங்க. கடல்ரோந்துப் படையினரும் அவங்கட விசைப்படகில வந்து ஸ்டைலா ஒரு வளைவடிச்சு நிண்டாங்க. திரைய இறக்கோணும். ஒராள் முயற்சிக்கிறார். அது ஒரு கம்பில சுத்தியிருக்கு. அடிக்கிற காத்தில அவரால திரைய விரிக்க முடியுதில்ல. அந்தக் கம்பிட ஒரு முனை வந்து நாங்க நிண்டு புதினம் பாக்கிற தரைக்கு வந்து "டணங்" கெண்டு விழுகுது. அப்ப ஒராள் வந்து, அந்த "டணங்"கி விழுந்ததைப் பிடிச்சு இழுக்க, திரை விரியுது. எல்லாரும் வந்து நிண்டு பாராட்டுறாங்க. ஆரையா? என்னைத்தான். ஏனா? கடல் ரோந்து வீரரே செய்யக்கஷ்டப்பட்டதை நாந்தான் செய்து திரைய விடுவிச்சது.

குறிப்பல்லாத குறிப்பு:: பாராட்டு விழாவோ ஏதோவெண்டு கனவு தொடரத் தொடங்க, விடிகாலைக் கனவு பலிக்குமெண்டு தெரிஞ்சோ அல்லது தெரியாமலோ, நான் கனவிலையாவது ஒரு VIP ஆகிறது பிடிக்காமலோ மிச்சக்கனவைக் கலைத்த தொலைபேசி அழைப்பை .........!!!

தேங்கிய சில - 3


தெருவில் அலைந்தவர்களும், பாலியல் தொழிலாளியாயிருந்தவரும், வெளிநாடு போகவென்று வந்து முகவரால் ஏமாற்றப்பட்டு நிர்க்கதியாய் நின்றவரும், பெண்போராளியென்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவரும், இன்னுமின்னும் எத்தனையோ சூழ்நிலைகளால் தன்னிடம் தள்ளப்பட்டவர்களைக் கொண்ட அதே "பெண்களுக்கான தடுப்பு நிலையம்".

தையல், கூடை பின்னல் போன்ற "பெண்களுக்குரிய" கைத்தொழில்கள் கற்றுத் தருகிறார்கள். அழகழாக பொம்மைகளும், ஆடைகளும் கைவினைப்பொருட்களும் நிறைந்து கிடக்கின்றன. அதனை விற்பார்களாம்.(விற்று வரும் காசு யாருக்குப் போகும்? தயாரித்தவர்களுக்கு உரிமையானது அவர்களிடமே போய்ச் சேருமா அல்லது சுரண்டலா என்று இன்றைக்குத்தான் கேள்விகள் எழுகின்றன.)

நன்னடத்தை(!?)யுடையவராய், நம்பிக்கையுடையவராய் (தொடர்ந்து) காணப்படின், அலுவலகங்கள், அங்காடிகள், என்பவற்றைச் சுத்தம் செய்வதைக் குத்தகைக்கு எடுத்
துக் கொண்ட நிறுவனத்தின் மூலம் வேலைக்கனுப்பப்படுவர். அப்படி வெளியே போனவர்களில் சிலர் வேலைக்குப் போய்த் திரும்பாமல் தப்பின சம்பவங்களுமுண்டு. அப்படி நடந்தால் அவவுடன் கூடப் போனவர் பாடு அன்றைக்கு அவ்வளவுதான். அடியும் வசவுகளும் வாங்கி, வேலைக்குப் போவதிலிருந்தும் நிறுத்தப்படுவார்.

இத்தடுப்பு நிலையத்திற்கு ஒரு பக்கத்தில் தொழிற்சாலையொன்றுண்டு. அங்கே வேலைக்கு வருபவர்களுடன், மேலாளருக்குத் தெரியாமல் மதிலால் எட்டிப் பேசிச் செய்திகள் அறிவதில் ஆரம்பித்து, காதல் வயப்பட்டு தப்பியோடுவதும், காதல் முறிவடைந்தால் ப்ளேடால் கைகளைக் கிழித்துக் கொண்டு குருதி இவர்களுக்கிருக்கும் ஆசையை, தான் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுவதும் நடக்கும். இருக்கிற ஒரு தொலைக்காட்சியில் ஒன்பது மணி வரை நிகழ்ச்சிகள் பார்ப்பதும், ஆங்காங்கே உட்கார்ந்து கதை பேசுவதும் மட்டுமே இவர்களுக்கு பொழுதுபோக்காக இருக்கிறது.

வசிக்கும் சூழலில் காவலாளி தவிர ஆண்வாடையே இல்லை. என்னதான் அடைத்துக் கிடந்தாலும், மனதுக்குக் கடிவாளம் போட்டாலும், அவற்றையும் மீறி உடலின் தேவைகள் தலைகாட்டுவதில் தன்னினச் சேர்க்கையாளராகின சில பெண்களுடனும் பேசக் கிடைத்தது. மற்றப் பெண்களால் இவர்கள் ஒதுக்கப்படவில்லை. இப்பெண்களின் முதுகுக்குப் பின்னால் இவர்களைப் பற்றிக் கதைக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதில் எனக்கு ஐயமில்லை. போன பதிவில் சொல்லியிருந்த பெண்ணிடம் பேசுகையில் தன்னினச் சேர்க்கையாளரான இப்பெண்கள் குறித்து அவவின் கருத்துக்க் கேட்டதற்கு அவ "அது அவர்கள் சொந்த விசயம். எனக்கு வெறுத்தது அவர்களுக்கும் வெறுக்க வேண்டும் என்றில்லையே. உடல் தேவையை நிறைவேற்ற ஒரு வழி. அவ்வளவுதான்" என்று சொன்னதில் இருந்த முதிர்ச்சியை வழமையாக் குறுகிய கண்ணோட்டத்துடனே பாலுறவைப் பார்க்கும் எம் சமூகத்திலிருந்து வந்த ஒருவருடையது என்று நான் உணரக் கொஞ்சக் காலம் சென்றது.

மறந்து போயிருந்த இந்தத் தடுப்பு நிலையத்தில் இருக்கிறவர்களைப் பற்றின நினைவு இதை எழுதத் தொடங்கியதும் ஞாபகங்களை அசைபோட்டுப் பல கேள்விகளை எழுப்புகிறது. என் நினைவுத் திறனும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

நிலையத்தினதும் பெண்களினதும் சுகாதார நிலை என்ன? அவற்றைக் கவனிப்பது யார்?
வேலைக்கனுப்பப்படும் பெண்களினது சம்பளம் அவர்களிடம் சேர்கிறதா?
கைவினைப்பொருட்கள் விற்ற பணத்திற்கு என்ன நடக்கிறது?
வெளிவாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தப்படுகிறார்களா?
வெளியில் வந்தால் இவர்கள் என்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது?

விடை தெரியாத கேள்விகள் இன்னும் இன்னும் எழுகின்றன.

குறிப்பு: இன்னும் விரிவாக எழுதலாமே என்று ஒருவர் கேட்டிருந்தார். இன்னுமின்னும் இந்த அனுபவங்களைப் பற்றி தோண்டித்தோண்டி யோசிக்கையில் வருகிறதெல்லாம் மனவருத்தத்தையும் எழுப்பி, என்னைப்பற்றி நிறையக் கேள்விகளையும் முன்வைக்கிறது. அவை காரணமாகச் சுருக்கிச் சொல்லியிருக்கிறேன்.

தூது

கீழ இருக்கிறது போலத்தான் எண்ணமோடினது, சில சமீபத்திய புகைப்படங்களைப் பாக்கக் கிடைச்சதில. வழமையா எழுதுற மாதிரி எழுத வரேல்ல. அப்பிடி இருந்திருந்தா எவ்வளவோ நல்லாருந்திருக்கும் என்டு எனக்கே தெரியுது.

(disclaimer: பின்குறிப்பை வாசிச்சுட்டு மேற்கொண்டு வாசிக்கிறதா என்ட முடிவுக்கு வரவும். )

-------------------

எனக்குள் நிறைவது தான்
அவர்களுக்குள்ளும்

எவர் கடந்து போகையிலும்
ஏற்படும் அந்தச் சிறு வெளியை
தடவிச் சென்று நிரப்பும் நாசியின் நட்பு.

இன்று என்னுட் புகுந்து வெளிவருங் காற்றே,
நாளையோ மறுநாளோ
எப்போதேனும் அவர் நாசி சேர்ந்தால்
நீ என்னுள்ளிருக்கையில்
அவர்களை நினைத்துக் கொள்வதைச் சொல்.

இத்தனை நாட்களிலும் - நான்
அவர்களைக் காணாத போதுகளிலும்
அவர்கள் என்னை எண்ணாத போதுகளிலும்
எமக்குள் நிறைந்திருந்தாய் - காற்றே
போய்ச் சொல்,
நினைவுகள் சுருங்கிய போதிலும்
நேசிப்பு சுருங்குவதில்லையென்று.

என் கண்களுக்குத் தெரியும்,
நான் பார்த்தவை - இன்று
இக்கரையில் நானும்
அக்கரைக்கு அப்பாலுமாய் அவர்களும் நிற்கையில்
தூரங் கடந்த சகபயணி
காட்டிப்போன காட்சிகளில்
முன்னை நாட்களில் - பிரிவென்பதைச்
சந்திக்காதவரை நான் கண்டவை
இன்றைய பொழுதில் வேற்றுருவாய்

அப்படியேதானிருப்பர் என்றவென் எண்ணம்
பொடியாகி உன்னில் கலக்கக் கண்டாய்
ஆண்டுகளின் பசித்தீவிரத்தில்
உண்ணப்பட்டுப் போயிருக்கின்ற
உறவுகளிடம் - காற்றே
போய்ச்சொல்
உடல்கள் சுருங்கினாலும்
நேசிப்பு சுருங்குவதில்லையென்று

உன்னைக் கிழித்தபடி பறந்த - அந்த
உந்துருளிச் சவாரிகளின் சாரதியை
பயணி மீண்டும் காணும் வரை
சாரதிக்குப் பயணியை ஞாபகமில்லாப்
பொழுதொன்றில் அவருக்கும்,
உன்னூடாகக் கைகள் வீசிக் - கிளையிருந்து
குதித்து,
கைகளும் வால்களும் ஆட - கால்களுதறி
ஆளையாள் கண்டுகொள்ளும் வஞ்சமில்லா
வாஞ்சை மட்டும் நிரம்பியதாய்
ஓடிக் களைத்த போதுகளில்,
அவதி அவதியாய்ப் பேரளவுகளில்
உன்னை விழுங்கிய - என்
சிறுபருவத்து மாந்தரும் விலங்குகளும்,
அடிவாங்கிக் கற்ற பின்னும்
புகலிடந் தருமந்தத் தாவரங்களும்
எங்கெங்கிருப்பினும் - காற்றே
போய்ச்சொல்
தோல் சுருங்கினாலும்
நேசிப்பு சுருங்குவதில்லையென்று

அவர்களைத் தொட்டு - என்னிடம்
மீள்வாயெனின், எனக்கும் வந்து
சத்தமாய்ச் சொல்லிப் போ காற்றே
காலம் போல நேசிப்பும்
ஒருபோதும் சுருங்காதென்று.

-------------------

குறிப்பு: அறுவையாயிருக்கு(ம்! கட்டாயமா) . பாவம் நீங்க.

தேங்கிய சில - 2

அந்தத் தடுப்பு நிலையத்திற்குப் போவதற்கு கொஞ்சம் ஆயத்தப்படுத்த வேண்டியிருந்தது. துணிமணிகளும், முக்கியமான பொருட்களாக சவர்க்காரக்கட்டிகளும், சானிற்றரி நப்கின் முதலியனவும் வாங்கியும், சேகரித்தும் கொண்டு போனோம். அங்கே போகிற ஒவ்வொரு தடவையும்.

கொண்டு போனவற்றை மேலாளரிடம் கொடுத்துவிடுவோம். அவவிடந்தான் கொடுக்கவும் வேண்டும். அவர்களுக்குப் போய்ச் சேர்ந்ததா என்று மட்டுமே அறிந்து கொள்ளமுடியும். சரியான முறையில் பங்கிடப்பட்டதா என்றறிய இயலாது. மாதத்துக்கு ஒரு சவர்க்காரம். அதுவே உடலுக்கும் துணி துவைக்கவும். எங்கள் போன்று நிறுவனத்தினர் யாரேனும் போனால் மட்டுமே உடலுக்கும் துணி துவைக்கவும் என்று தனித்தனியான ச. கட்டிகள் கிடைக்கும். சமயத்தில் உடுப்பைக் கழுவித் தம்மைக் கழுவாமலும், மாறியும் நடப்பது வழமையென நேர்முகங் கண்ட பெண் சொன்னா. அவ சொல்கையில், குளியலறையில் கரைத்துக் கரைத்து நுரையூதுவது ஞாபகம் வந்தது இப்பவும் ஞாபகமிருக்கிறது. மாதா மாதம் வரும் உபாதைக்குத் துணி பாவிப்பார்களாம். அதைக் கழுவத்தான் சவர்க்காரச் சேமிப்பு மும்முரமாக நடப்பதாம். எப்ப போனாலும், இவர்கள் கேட்பது சவர்க்காரம்! இப்படிப்பட்ட சூழலில் தோல் நோய்கள் பரவலாயிருப்பது ஆச்சரியமில்லை.

[19..20 வயதென்றாலும், அப்போதெல்லாம் சிந்திப்பதில்லை. இங்கிருக்கும் பெண்களின் சுகாதாரம் பற்றிய கேள்விகளோ, அடிப்படைத் தேவைகளினைப்பற்றியோ, அவற்றின் நிலையைப் பார்க்கையில்/அறிகையில் ஏற்படும் அதிர்ச்சி தவிர, என்னிடம் கேள்விகளோ, அவற்றுக்கான பதிலோ, அல்லது அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதகு என்னாலான முயற்சிகளைச் செய்யும் தொடர்ந்த ஆர்வமோ இருக்கவில்லை. இப்போது நினைத்துப் பார்க்க, என்ன மாதிரி ஒரு கிணற்றுத் தவளையாய் இருந்திருக்கிறேன்.. சூழலை/சமூகத்தைப் பற்றிய உணர்வின்றி இருந்திருக்கிறேன் என்பதை நினைக்க வெட்கமாயிருக்கிறது. ஏன் அப்படி இருந்தேன்? இப்பவும் சில வேளைகளில் யோசிப்பது, ஒருவேளை நான் கொஞ்சம் slowவோ என்று. அதாவது 5 வயசில் யோசிக்கிறதை 7இல யோசிப்பது, 15 இல விளங்கியிருக்க வேண்டியது 18இல மண்டையில் உறைப்பது..இப்படிப் பல. அதன் தாக்கமோ? இது என்னைப் பற்றின ஆய்வாகப் போக முதல் நிறுத்துறன்.]

நேர்முகங் கண்டவர்களில் ஒரு பெண், திருகோணமலைப் பகுதியிலிருந்து வந்தவர். இரண்டோ மூன்றோ வயதான குழந்தைக்குத் தாயாம். அது நான் இவரிடம் பேச இரண்டு வருடங்களுக்கு முன். வெளிநாடு செல்வதற்காக முகவரான ஒரு தெரிந்த பையனை நம்பி வந்தவர். முகவர் ஒரு விடுதியில் அறையெடுத்து இவரைத் தங்க வைத்து உணவு உடையெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஓரிரவு, பணத்தைத்தா நாளையன்றைக்கு நீ விமானமேறுவாய் என்று சொல்லிப் பணமெடுத்துப் போனது போனதுதான். அதற்குப் பிறகு காணவேயில்லை. பார்த்துப் பார்த்து இருந்திருக்கிறா..இரண்டு நாளாயிற்று. அன்றிரவு பாலியல்தொழிலாலியென்று தவறாக அடையாளங் காணப்பட்டு காவல் நிலையத்தில் ஒரு வாரமிருந்தவர், வெளியில் வந்ததும் விடுதிக்குப் போகப் பிடிக்காமல் ஊருக்குப் போகத் தெரியாமல் தெருவில் அலைந்ததில் உண்மையாகவே பாலியல் தொழிலாளியாக்கப்பட்டார். இடையிடையே இத்தொழிலுக்கேயுரிய காவற்துறைக் கெடுபிடிகளில் காவல்நிலையம் சென்று வந்திருக்கிறார். கடைசி முறை பிடிபட்ட போது அங்கிருந்த அதிகாரியிடம் தன்னைத் திருப்பியனுப்ப வேண்டாமென்று கெஞ்சி, ஊருக்குப் போக உதவுமாறு கேட்டதற்கு அவ்வதிகாரி இங்கு கொணர்ந்து விட்டிருக்கிறார்.

என்னிடம் தனது தொழிலைப் பற்றிப் பேச நிறையக் கஷ்டப்பட்டார். இடையிடையே "சின்னப்பிள்ளைகளுக்கு/திருமணமாகாதவர்களுக்குச் சொல்லும் விசயமில்ல" என்று தணிக்கையும் செய்வா. ஒரு ஆறுதல், இவவின் பா. தொழில் முதலாளி எயிட்ஸ் பற்றி அறிவுறுத்தியிருந்தது. தான் பாவித்த காப்பு முறைகள் பற்றிச் சொன்னா. சில நேரங்களில் பார்வைகள் வெறிக்கும்.

உழைக்கிற பணத்தில் குழந்தைக்குப் பொருட்கள் வாங்கி அனுப்புவதாம். குழந்தை பற்றிப் பேசயில் கண் கலங்கும். வீட்டுக்குப் போகக்கிடைத்தால் போக விரும்பினாலும், எப்படித் தன்னால் கணவனை/குழந்தையை/பெற்றாரை எதிர்கொள்ள முடியும் என்கிற கேள்வி இருக்கிறது. அவ்வளவு கறை படிந்தவராக உணர்கிறார். எவ்வளவு தேய்த்தாலும் படிந்த கறை போகுமா எனக் கேட்பார். சொல்வதற்குப் பதில் தெரிந்ததில்லை. வெளிநாடு போகவென்று முகவரை நம்பி வந்த
இவவினுடையதைப் போன்ற கதையுடன் இன்னுஞ் சிலர் அங்கு இருக்கிறார்கள்.

தேங்கிய சில - I

பெண்களுக்கான அரச சார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். அங்கே வரும் பெண்ணொருவர் என்னைக் கூப்பிட்டு, இன்னொரு நிறுவனத்தின் சார்பில் சில பெண்களை நேர்முகங் காணவேண்டியிருக்கிறது. முடியுமா எனக் கேட்டா. சரியென்று ஒத்துக் கொண்டேன். நேர்முகத்திற்குரிய கேள்விகளடங்கிய தாளில் என்னவெல்லாம் இருந்ததென்று ஞாபகமில்லை. ஆனாலும் காணவிருந்த பெண்களிடம், அவர்களைப் பேசவிட்டு, அந்தப் பேச்சோட்டத்தின் இயல்பு மாறாமல் கேள்விகளுக்கு விடைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு பணித்திருந்தார்கள்.

பெண்களுக்கான தடுப்பு நிலையம். என்னையும், அழைத்த பெண்ணையும் சேர்த்து மூவர் மட்டுமே. பழைய அரச மருத்துவமனைகள் பார்த்திருக்கிறீர்களா? காவி நிறமடித்து, சீமெந்துத் தரைக்குச் சிவப்படித்து, இருக்கையென்ற பெயரிலே இற்றுப் போன வாங்குமாக... அப்படித்தான் இருந்தது நாங்கள் போன இடம். நாலைந்து கதிரைகளும் போடப்பட்டிருந்தன. அவை அந்தச் சூழலுக்குப்
பொருத்தமில்லாமல் திணிக்கப்பட்டவைகளாய்த் தெரிந்தன.

முன்னமே இவர்கள் அனுமதி பெற்றிருந்தார்கள். அதனால், பணிப்பாளரைப் பார்த்ததும் ஒரூ குறிப்பேட்டில் எங்கள் பெயர், அடையாள அட்டை இலக்கம் என்பவற்றைக் குறித்துக் கொண்டு உள்ளே போக அனுமதித்தார்கள். உள்ளிருந்து வெளியே வரவோ, வெளியிலிருந்து உள்ளே போகவோ (எப்படிப் பார்த்தாலும்) ஒரே ஒரு கதவுதான். அந்த மரக் கதவுக்கும் ஒரு கதவு. பூச்சுக்கும் மேலாய் ஆங்காங்கே துரு தலைகாட்டும் இரும்புக் கிராதி போட்டது. மரக்கதவு திறந்திருக்கிறது, இரும்புக் கதவுக்கு ஆமைப் பூட்டு. கதவைத் திறக்கப் போன காவலாளியுடன் கூடவே போகையில், அந்தக் கதவுக்குப் பின்னால் எத்தனை வகை உணர்ச்சிகளைத் தேக்கிக் கொண்ட முகங்கள். புன்னகைக்கும் அங்கே பஞ்சமிருக்கவில்லை. கதவு திறக்கிறது. ஓடி வந்து சூழ்ந்து கொள்கிறார்கள். எங்கேயிருந்து வருகிறோம், எதற்கு, என்ன கொண்டு வந்திருக்கிறோம்... கேள்வி மேல் கேள்வி. பணிப்பாளர் இந்தக் கூச்சலைக் கேட்டு, வந்து போட்ட அதட்டலில் கலைந்து போனார்கள். ஆனாலும் தூண்களுக்குப் பின்னால் நின்று பார்த்தபடி.

ஒரு பெண் எங்களைக் கவனிக்கவேயில்லை. கையில் குழந்தையை வைத்துத் தாலாட்டுவது போன்று பாவனை செய்து கொண்டிருந்தார். திடீரென கைகளை ஆட்டிப் பெருங்குரலெடுத்து "ஐயோ! என் பிள்ளை" என்று கத்தினா. அந்தக் கத்தல் அதிர்வைக் கொடுத்தது எனக்கு மட்டும்தான். மற்றவர்களெல்லாரும் ஒன்றும் நடவாதது போல் தத்தம் வேலை. என்னுடன் வந்தவர்களும் கூட. என்னுடன் வந்த பெண்ணொருவ நாம் அன்றைக்கு வெளியில் வந்ததும் அந்தக் கத்தலிலும் சூழலிலும் என் முகம் வெளிறிப் போனதாகச் சொல்லப் போவது எனக்கு அப்போது தெரியவில்லை.

என்ன ஆயிற்று என்று கேட்டேன். பிறந்து சில நாட்களேயான குழந்தையுடன் தெருவில் அலைந்திருக்கிறா. பிடித்துக் கொண்டு வந்து உடல் நலமின்றி இருந்த குழந்தையை அவரிடமிருந்து பிரித்துத் தனியே வைத்திருந்திருக்கிறார்கள்.

[அவவைப்பார்த்ததும் ஆறாம் வகுப்புப் படிக்கையிலே மட்டக்களப்புப் பேருந்து நிலையத்தில் பைத்தியக்காரி என்று எல்லாராலும் ஏளனஞ் செய்யப்பட்ட பெண்தான் ஞாபகத்திற்கு வந்தார். எப்படியென்று இப்போது ஊகிக்கக்கூடிய நிலையிலே அவர் கருத்தாங்கிக் குழந்தை பெற்றெடுத்து, பிறகு இரண்டு மூன்று மாதங்களுக்குக் காணாமல் போய் மீண்டும் ஒரு சுட்டெரிக்கிற இரண்டு மணி வெயிலில் தேநீர்க் கடையில் வாங்கின கொதிக்கும் தேநீரை அந்தக் குழந்தைக்குப் புகட்ட முயற்சித்து அது வீலென்று அலறியதில் அடி கொடுக்கும் பெண்ணாய் மீண்டும் அதே பேருந்துத் தரிப்பிடத்திற்கே குடிவந்தா. பிற்பாடு என்ன ஆயிற்றென்று தெரியவில்லை.]

தடுப்பு நிலையப் பெண், குழந்தை இறந்ததைச் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாதளவிற்கு மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறா. காண்பவர்களிடம் போய் "என் குழந்தையைக் கண்டாயா" என்பதும், பதில் சொல்லாவிடில் அவர்களைத் திட்டுவதுமாக இருந்தவவின் அறிமுகத்துடன் அந்த தடுப்பு நிலையத்தின் கதவு அன்றைக்குத் திறந்து கொண்டது.

புதுசு


யாகூ மின்னஞ்சல் புது வடிவமா புதுசா வடிவா வந்திருக்கு என்று போன வாரம் கிட்டத்தட்ட 2 மாசத்துக்குப் பிறகு யாகூவை எட்டிப்பார்த்த போது கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன். நேற்றுப் பார்த்தா "சுடு அஞ்சல்" அந்த ஐடியாவத் தானும் சுட்டு புதுப் பிறவி எடுத்திருக்கு! எல்லாரும் கூகிளின் "சுயமாகப் புதுப்பிக்கிற" விளையாட்டுத்தான்.

ஹொட்மெயிலில், அவுட்லுக்கில் செய்வது போல வலதுசொடுக்கில் செய்கைகளுக்கான தெரிவும், சொடுக்கி, ஒன்றிலிருந்து இன்னொரு ஃபோல்டருக்கு (இதுக்குத் தமிழ் என்ன? "கோப்புப் பை"யா?) இழுத்துப் போடவும், அஞ்சலின் உள்ளடக்கத்தைப் பார்க்க ஒரு பகுதியுமென்று நல்லாத்தானிருக்கிறது.


யாகூ தனது இணையத்தளத்தையும் புது வடிவமாக்கியுள்ளது. அஞ்சல் கணக்கில் நுழைந்தால் கிறுக்குவதற்கு கிறுக்கற்புத்தகமும் தருகிறார்கள்.

ஆறுதலாய் ஆராய்ந்து பார்த்து ஒரு ஒப்பீடு எழுதணும்.

தெரிந்தால் சொல்லுங்க

ஆடிக்கொண்டார்.. அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ..
ஆர நவமணி மாலைகள் ஆட, ஆடும் அரவம் படம் பிடித்தாட...

மீதிப்பாட்டு என்னதான் யோசித்தும் ஞாபகம் வரவில்லை. தெரிந்தால் சொல்கிறீர்களா?

அதோடு சேர்த்து இந்தப்பாட்டும்: கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி.. கையிலே வேல் பிடித்த கருணை சிவபாலனை.. (படத்தில வந்த அதேதானுங்கோ..)

நன்றி.

பிடிக்கவில்லை

எனக்கு மனிதர்களைப் பிடிக்கும். பிடிக்காத ஆட்களென்று பார்த்தால் (அதற்காக தீராத பிறவிப்பகை என்றெல்லாமில்லை) ஒருகை விரல் கொண்டு எண்ணிவிடக்கூடியளவு பேர்தான் தேறுவார்கள். நம் எல்லோருக்குமே வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பத்திலாவது ஒரு சக மனிதப்பிறவியின் மீது வெறுப்பு வந்திருக்கும். எனக்கு, அப்படியே வெறுப்பு வந்தாலும் அம்மனிதர்களுடனான அடுத்தடுத்த சந்திப்புகளில் நிகழ்பவைகளால் அநேகமான வேளைகளில் அந்த வெறுப்பின் தாக்கம் குறைந்துவிடும். புதிதாய்ப் பதிவு செய்கையில் பழையனவற்றைத் தூக்கிப்போடுவது மனித இயல்பா?

பிடிக்காமற் போவதற்கான எனது வகைப்படுத்தல்:

  • சிலரைப் பார்த்த(தா)லே பிடிக்கது.
  • சிலருடன் பேசியபின் பிடிக்காது. (கண்ணைப்பார்த்து/முகத்தைப்பார்த்துப் பேசாமை)
  • சிலருடன் ஆரம்பமே சரியாயிராது.
  • சிலரது பழக்கவழக்கங்கள்/குணங்கள் பிடிக்காது (ஆளைப் பிடிக்காமற் போவதற்கும் பழக்கவழக்கம்/குணங்களைப் பிடிக்காமற் போவதற்கும் வேறுபாடு உண்டெனத் தெரிந்தாலும் அதைச் செய்வதற்கு அறிவைச் சரியாய்ப் பிரயோகிப்பதில்லை!)

கொஞ்ச நாளாய்க் கவனிக்கிறேன், மிகவிரைவிலேயே (இவ்வளவு நாளும் இருந்ததை விடச் சற்று அதிகமாக)ஆட்களைப்பற்றிய அபிப்பிராயம் உருவாகி, என்னையறியாமலேயே வகைப்படுத்தல் ஆரம்பித்துவிடுகிறது. பார்த்த விதம் சரியில்லை, ஏன் இப்படிச் சத்தம்போடுகிறான்/ள், உதவவில்லை, கதைப்பது அறிவற்றதனமாய் உள்ளது - இப்படி (அநேகமாக) மிகச் சாதாரணமாய் கணக்கிலெடுக்கத் தேவையே இல்லாத விதயங்களெல்லாம் காரணிகளாய் அமைகின்றன. சிலவேளைகளில் மேற்கூறியவை எழுப்புவது எரிச்சலுணர்வாயிருப்பினும் அதையும் வெறுப்பெனக் கொள்கிறேன் போலவும் தோன்றுகிறது. என் சகிப்புத்தன்மை/பொறுமை இவையெல்லாம் தேய்கின்றனவோ? அறளை பெயருதோ??? :O(

எழுத ஆரம்பித்த நேரத்திலிருந்து இடையிடையே வேறு வேலைகளும் செய்ததால், பதிவு செய்ய நினைத்ததில் அரைவாசியே மேலே எழுதப்பட்டிருக்கிறது. மீதி மறந்து போய்விட்டது. இந்த வார இறுதியில் ஞாபகம் வந்தால் முழுமையாய் எழுதி மீள்பதிவு செய்வேன். இல்லாட்டி, இப்படியே.. அரைகுறையாய்!(இதுவும் பிடிக்கவில்லை)

பி.கு: இதை வகைப்படுத்துபவர் "அனுபவம்" என்று வகைப்படுத்தவும் , நன்றி.

இழவரசர்!!




மின்னஞ்சலில் வந்தது.
சரியாத்தானே தலைப்பை எழுதியிருக்கிறன்?

சாறு!

வழமை போலவே என் பிற்பகல் பழச்சாற்றை உறிஞ்சிக் கொண்டிருக்கிறேன். அப்பிள், வாழைப்பழம், கரட், இஞ்சியுடன் எப்போதேனும் தோன்றினால் மாம்பழமும் அரைத்த சாறு. இதைத் தட்டச்ச ஆரம்பிக்க இரண்டு மூன்று நிமிடங்களுக்கு முன்பு உள்ளெடுத்த ஒருவாய்ச்சாறு மின்னல் போன்று ஒரு ஞாபகத்தைக் கிளப்பிப் போனது. வந்த ஞாபகம் மின்னல் போல என்று சொல்கிறேன் ஏனென்றால் வந்த வேகத்திலேயே மறைந்தும் விட்டதனால்.

குழாயூடாக வாய்க்குள் வந்த அந்தக் கொஞ்சச் சாறு தட்டியெழுப்பிய ஞாபகம் எனது சிறுபருவத்துப் பரிச்சய வாசனைகளிலோ அல்லது சுவையிலோ ஒன்று என்பது மட்டும் தெரிகிறது. என்னவென்று ஞாபகப்படுத்திக் கொள்ள மீண்டும் மீண்டும் உறிஞ்சிச் சுவைக்கிறேன். வலுக்கட்டாயமாகச் செய்யப்படும் எதுவும் இயல்புமில்லை அத்துடன் எதிர்பார்க்கும் பலனைத் தருவதுமில்லை என்று உணர்த்திச் செல்கிறது என் தொண்டையில் இறங்கிக் கொண்டிருக்கும் பழச்சாறு.

இது கொலைகளின் கதை

மு.கு: இளகிய மனதுடையவர்கள் இதை வாசிக்க வேண்டாம்..பிறகு என்னுடன் சண்டைக்கும் வர வேண்டாம்.

பகல் பலது வீட்டிலே கழிந்த போது ஆசையில் எடுத்து/வாங்கி வந்து பார்த்துப் பார்த்து தேவையறிந்து உரமிட்டு வளர்த்ததுவும், பள்ளிக்குப் போகையிலேயும் பாசத்துடன் கவனித்ததுவுமாய் இருந்த என் செல்லச் செடிகள்... ( "இவ்வளவு மரம் ஏன் வளர்க்கிறீங்க? கரப்பொத்தான் எல்லாம் வரும்". "இல்லை அப்பிடி ஒன்டும் வராது. நான் கவனமாப் பார்ப்பன்")

வாடிப்போய்த் தண்டுடன் இலையில்லாமல் நின்று வளர்ச்சி நிறுத்தப் போராட்டம் நடத்தின வாழைக்குத் தலை வெட்டி, ("ஐயோ! ஏன் வெட்டுறீங்க? ஒரேயடியா சாகப்போகுது". "இல்ல.. இப்பிடி வெட்டினா வருமாம்..--- சொன்னவ ".) இலைகள் வர, விசேட நாளுக்கெல்லாம் தலைவாழை கிடைத்ததுவும்..("அப்பவே சொன்னன் தானே! :O) ")

தாவரமும் அதன் வளர்ப்பும் பற்றி நண்பியின் ஆர்வம் தொற்றியதில் அது பற்றிய வகுப்புகளுக்குப் போனதொரு ("அவக்கு back yard இருக்கு, அவ அதுக்கு மரம் வைப்பா. உம்மட நிரம்பின பல்கனியில இனியெங்க இடம்?". "இல்லையில்ல, எப்பிடிப் பராமரிக்க என்டு படிக்கத்தான் நான் போறன்") ஆர்வக் கோளாற்றுக் காலத்தில் வாங்கின பூந்தொட்டிகளும், சிலபல செடிகளும் ஏற்கனவே இருந்த பலகணித் தாவரக் குடும்பத்தில் கலந்தனவே. ( "இன்டைக்கு இவ்வளவும்தானா?". ":O ")

சமையலறையின் சேதன மீதிகள் போட்டு வளர்த்ததில் ஒன்றாய் நன்றாக கிளையும், கிளையில் இலையும் விட்டு, கரப்பொத்தான் தொடங்கி சிலந்தி வரை பலதுக்கும் புகலிடமாய் ("அப்பவே சொன்னன்..இதெல்லாம் போடாதையும் என்டு!கேட்டாத்தானே!! ") நின்ற இரட்டைப்பிறவிக் கருவேப்பிலையை வகுப்புக்குப் போய் பெற்றதாக நினைத்துக்கு கொண்ட அசட்டறிவின் காரணமாய்ப் பிரித்து, துணையிழந்த சோகத்தில் அவற்றை ஆழ்த்தியதும் ("வீண் வேலைகள் செய்யிறது"), அத்துடனே பக்கத்தில் நின்ற அழகான கானேஷன் தண்ணீர் தண்ணீரென அலறியது கேட்காமல், அதை தொண்டை வற்றச் சருகாக்கியதும், எனதருமைச் சிலந்திப் புல்லும் அதே கதிக்காளாகியதும்.. :O(

தேயிலையும், முட்டைக் கோதும் போட்டு வளர்த்த ரோசாச்செடியெல்லாம்வெறும் முள்ளாகி நின்று ("ரோசாப்பூவெண்டா எப்பிடி இருக்கும்?" .."Grrrr"), வளரப் பார்த்த வத்தகை, வான் பார்த்து, பூமி ஆராய்ந்து, வராமலே போனதுவும் என்று தாவர சங்கமத்துள் பலதும் வளர்த்திளைத்தேன் நான் - மெய்யே கள்ளியொன்று என்றறிந்து இன்புற்றேன். ( "எல்லாம் போய் இப்ப இதுவா!")

கவனியாது விட்டாலும், இன்னும் இருக்கிறேன் பார் என்று காட்டி மகிழ வைக்கும் அன்பான கள்ளிச்செடிகளுக்கும் (" நல்லகாலம், ஒன்டும் செய்யாம விட்டிருக்கிறீர்..உயிரோட நிற்குது", ":O("), வீட்டுக்குள்ளே இருப்பதனால் தப்பிப் பிழைத்திருக்கும் மூங்கிலுக்கும் துணையாய் நேற்றுக் கிடைத்த Kangaroo Paw வுக்கு "மேற்தட்டு" வாழ்க்கை வெறுப்பது எப்பவோ.. அன்றைக்கு மீண்டும் ஒரு கொலை நடந்திருக்கும்.

பெட்டகம்