ஹீரோயினி!

ஒரு ஊரிலே... இல்லை, பல ஊர்களைக் கொண்டதொரு பெரிய ஊரிலே ஒரு ராணி இருந்தாவாம். இருந்தாவாம் என்ன.. இருக்கிறாவாம். அவ கனவு காணுறதிலதான் ராணியாம். என்னது? இந்தக்கதை வேண்டாமா? பிறகு வேற கதை சொல்லிறன். இன்டைக்கு இந்தக் கதைதான்.

என்னுடன் கூடப்படித்த தோழிக்கு 21ம் பிறந்தநாளாம். கொண்டாடுறாவெண்டு போறன். அங்கே போனால் பள்ளியில் ஒரே வகுப்பை என்னோட பகிர்ந்து கொண்ட நண்பிகள். (ஒரு நண்பனையும் காணேல!!) எங்கள விட ஒரு வகுப்புக் கூடின ஆட்களில 4 பேர். அதில ஒராளுக்கு என்னைத் தெரியும். நானும் அவவும் ஆளையாள் கண்டதும், தன்னுடன் இருந்த ஆட்களுக்கு என்னை அறிமுகப்படுத்துறா. ஆனா வேறென்னவோ பெயர் சொல்லி. என்னடா இது என்று யோசிக்கிறேன். எனக்குப் பெயர் மாற்றினது எனக்கே தெரியவில்லையோ??

சரி, பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வோம் என்று போகிறேன். கையிலே அன்பளிப்புகளொன்றும் இருக்கவில்லை. (நான் போறதே பெருசு. இதுக்குள்ள அன்பளிப்புத் தேவையில்லைத்தானே!!). ஒரு காவிப்பூச்சுள்ள கட்டடம். (கட்டின இடமெண்டா கட்டிடம் தானே..ஏன் கட்டடம் என்று எழுதுறோம்?? ஒருவேளை நான் மட்டுந்தானோ தாடி போர்வைக்கு வெளிலையா உள்ளுக்கா என்ட கதை மாதிரிக் குழம்பிட்டன்??)

கட்டிடமெண்டதும் பெரிசா இஞ்ச பிள்ளையிட முதலாம் பிறந்த நாளுக்கு வாடகைக்குப் பிடிக்கிற ஹோல் மாதிரியென்று யோசிக்காதீங்க... அந்தக்காலத்து இலங்கை பஸ் ஸ்டாண்ட் சீமெந்தால கட்டியிருப்பாங்களே..அதுமாதிரி ஒரு சின்ன இடம். அங்கே மற்றத்தோழிகள் சுற்றிவர இருக்க இவ சிதிலமான கொங்கிறீற்/சீமெந்துத் தரையில இருக்கிறா. ஓட்டுக் கூரை. அங்கே போனாலும் ("லும்" என்டுறது ஏனெண்டு கொஞ்சத்தில சொல்றன்) என்னைக் கண்டு கொள்வார் இல்லை. பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதிருந்த அதே “குழுவில சேராததால்” வாற (நானேன் சேராம இருக்கப் போறன், “சேர்க்கப்படாததால் வாற” என்டு வாசிக்கவும்) ஒரு பாதுகாப்பின்மை (என்ன பணியாரப் பாதுகாப்பு? ஆசிரியையிட்ட தனியப் பேச்சு வாங்கத் தேவையில்லை! அவ்வளவுதான்!!) அல்லது ஒரு தனிமையா/தாழ்வா உணர்ந்த மாதிரி (கனவுக்குத் திரும்புறன். நீங்களும் வாங்க) உணர்ந்தன். சரி, இவர்கள் கதைக்கப் போறதில்லை என்டபடியால இறங்கி அந்தக்கட்டிடத்தைச் சுற்றினன். இவங்க இருந்த இடத்துக்கு இடப்பகுதியில ஒரு கதவு. சரி, கொஞ்ச நேரம் இந்த அறைய ஆராய்வம் என்டு போனா அது ஒரு கழிப்பறையாம். அதுவும் பழைய தரைச் சாயலில்! வாளியொண்டு ஒரு மூலையில் கவிழ்த்து வைக்கப் பட்டிருக்கு. அதுக்குள்ள நிக்கத் தேவையில்லையென்று வெளியில வாறன்.

இப்ப, என்னைக் கண்டிட்டு, நண்பிகள் கூட்டம் கூப்பிடுது. (கழிப்பறைக்குள்ள போய் வாறதுதான் தகுதியா அல்லது முன்னம் கண்ணுக்குத் தெரியாம இருந்து அதுக்குள்ள போயிட்டு வந்த பிறகு தெரியிறனா என்டு எனக்கு விளங்கல்ல). வாழ்த்துறன் என்ட தோழியை. அப்பத்தான் (கனவிலையே) யோசிக்கிறன், என்னண்டு இவக்கு 21 வயசா இருக்கும்? இந்த வருசம் n வயசாயெல்லா இருந்திருக்கோணும் என்டு.

அப்பிடி என்ட மூளை கொஞ்சம் வேலை செய்ய எத்தனிக்கையில, கீயா மாயாவெண்டு ஒரே சத்தம். என்னெண்டு பாத்தா காலிமுகத் திடல்ல மாதிரி படிக்கட்டோட உரசி கடலலையடிக்குது. விளிம்புக்குப் போய் நின்டு பாக்கிறன். பெரியதொரு அலையெழும்பி (கடற்கோள்?) வருது. ஆனா இன்னும் கரைக்கு வரயில்ல. அலை எழும்பின படி நிக்க, அதுக்குப் பின்னாலும் முன்னாலும் என்டு மாறி மாறி (தொ.கா.வில, படம்பிடிச்ச எதையாவது, இன்னொண்டோட ஒப்பிட க்ராபிக்ஸ் பயன்படுத்திற மாதிரி) ஒவ்வொரு நகரங்கள் தோன்றுது. என்னெண்டா, அலையிட உயரத்தோட அந்த நகரங்களில இருக்கிற கட்டிடங்களின்ட உயரத்தை ஒப்பிட்டு, எது உயரமா இருக்கோ, அதுக்கேத்த மாதிரி உயரமானதைப் பின்னுக்கும், கட்டையானதை முன்னுக்கும் படபடவெண்டு மாறி மாறிக் காட்டுப் படுது. (ஆர் காட்டினதெண்டு எனக்குத் தெரியாது!!). பாத்தால் அலை கரைக்கு வருது (பின்ன, எவ்வளவு நேரந்தான் அசையாம க்ரபிக்சுக்கெண்டு நிற்கிறது).

இப்பிடி அலை வந்தா தடுக்கவெண்டு(!!) ஒரு திரை மாதிரி ஒன்று வைச்சிருக்கிறாங்க. கடல்ரோந்துப் படையினரும் அவங்கட விசைப்படகில வந்து ஸ்டைலா ஒரு வளைவடிச்சு நிண்டாங்க. திரைய இறக்கோணும். ஒராள் முயற்சிக்கிறார். அது ஒரு கம்பில சுத்தியிருக்கு. அடிக்கிற காத்தில அவரால திரைய விரிக்க முடியுதில்ல. அந்தக் கம்பிட ஒரு முனை வந்து நாங்க நிண்டு புதினம் பாக்கிற தரைக்கு வந்து "டணங்" கெண்டு விழுகுது. அப்ப ஒராள் வந்து, அந்த "டணங்"கி விழுந்ததைப் பிடிச்சு இழுக்க, திரை விரியுது. எல்லாரும் வந்து நிண்டு பாராட்டுறாங்க. ஆரையா? என்னைத்தான். ஏனா? கடல் ரோந்து வீரரே செய்யக்கஷ்டப்பட்டதை நாந்தான் செய்து திரைய விடுவிச்சது.

குறிப்பல்லாத குறிப்பு:: பாராட்டு விழாவோ ஏதோவெண்டு கனவு தொடரத் தொடங்க, விடிகாலைக் கனவு பலிக்குமெண்டு தெரிஞ்சோ அல்லது தெரியாமலோ, நான் கனவிலையாவது ஒரு VIP ஆகிறது பிடிக்காமலோ மிச்சக்கனவைக் கலைத்த தொலைபேசி அழைப்பை .........!!!

7 படகுகள் :

ரவி June 09, 2006 4:34 pm  

பிரிச்சி மேஞ்சிட்டீங்க போங்க...

ilavanji June 09, 2006 4:37 pm  

கண்ட கனவுல உங்களுக்கு இவ்வளவு ஞாபகம் இருக்கா?! :)

எனக்கெல்லாம் ஏதோ கனவு வந்ததே அது என்னதுன்னு யோசிக்கறதே பொழப்பு! கனவு Black&White லதான் வரும்னு கேள்விஞானம்! உங்களுக்கு எப்படி? (இவ்வளவு வெரரமா சொல்லறதால கேக்கறேன்... )

`மழை` ஷ்ரேயா(Shreya) June 09, 2006 4:56 pm  

செந்தழல் ரவி :O)

இளவஞ்சி - நமக்கெல்லாம் கலர்தான். அந்த விசயத்துல ஒரு வஞ்சனையும் கிடையாது. உங்களுக்கெல்லாம் (அதாவது ஆண்குலத்துக்கு) நாள் முழுக்கக் கலர் பார்த்ததில மூளையெல்லாம் கலர்னாலே மாடிலருந்து குதிச்சிரும்கிறதால தான் "கருப்பு-வெள்ளை". ஆனாலும் கறுப்பு-வெள்ளையிலே பாத்தா வித்தியாசமாதான் இருக்கும்னு நினைக்கிறேன்.

கனவெல்லாம் ஞாபகமிருக்கும். அலுவலகத்துலே மேலாளர் வந்து "செவ்வாக்கிழமை கேட்ட அறிக்கை எங்கே"ன்னாதான் ..ஏதோ மறதியாமே... அது வந்து தாக்கிரும்! :O)

துளசி கோபால் June 09, 2006 5:00 pm  

கனவு மெய்ப்பட வேண்டும்.

கார்திக்வேலு June 09, 2006 5:13 pm  

ஷ்ரேயா ,
பிராய்டா வந்து பார்த்து பின்னூட்டம்
போட்டால் தான் உண்டு :-)


இளவஞ்சி,
கனவு "கலரிலும்" உண்டு :-)

`மழை` ஷ்ரேயா(Shreya) June 09, 2006 8:05 pm  

கார்திக்வேலு - re. Freud, see below ;O)

துளசி - அர்த்தமென்ன கண்ட கனவுக்கு? :O)

கஸ்தூரிப்பெண் June 13, 2006 2:00 pm  

ஆழ்மனது ஆசையின் வெளிப்பாடுகள்தான் கனவுகள்.
ஊருக்கு போய் தோழிகளை காண வேண்டிய நேரம் வந்தாகிவிட்டது.
தொலைபேசியை எடுத்து, பயணச்சீட்டு பதிவு செய்யுங்கள்.

பெட்டகம்