அறிவித்தல்

தமிழ் கற்பிக்க ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்கலாம் என்று சொன்னேன் தானே..அதற்கு டோண்டு ராகவன் தன்னாலியன்ற உதவி செய்வதாக கூறியுள்ளார். சந்திரவதனாவும் உதவுவதாக சொன்னா. இருவருக்கும் நன்றி. ஒருத்தரும் தமிழ் வாத்தியாரக முன்மொழியப்படவில்லை. எனவே நானே உருவாக்கப்போகிறேன். (தலையில் அடித்துக் கொள்ளும் சத்தம் நிறையவே கேட்கிறது! :0)). எனக்கு பள்ளிக்கூடத்தில் திட்டித் திட்டிப் படித்த இலக்கணம் கொஞ்சம் தான் ஞாபகத்திலிருக்கிறது. என்ன ஒழுங்கில் ஆரம்பிக்கலாம் என்பது பற்றி ஒரு மூளைப்புயல் நடத்திக் கொண்டிருக்கிறேன் ..எனக்குள்ளே. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன். இந்த வலைப்பதிவை (அடிப்படை தோற்றத்துடன்) உருவாக்கியிருப்பினும் இன்னும் பதிவுகள் எதுவும் இல்லை. அதிகாரபூர்வமாக தொடங்க சில நாட்கள்/ வாரங்கள் ஆகலாம். என்ன பெயர் வைக்கலாம் தலைப்பாக?யார் பதிவதாக போடலாம்?

என் கிறுக்கல் பலகையில் கேட்டிருப்பதை மீண்டும் இங்கே கேட்கிறேன். இலங்கையில் பள்ளிக்கூடத்தில் பாட நூல்கள் இலவசம். எனக்கு அப்புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள வசதியுண்டு. இந்தியாவில் பாடப்புத்தகங்கள் என்ன முறையில் விநியோகிக்கப்பட்டன?இலவசமாகவா அல்லது வாங்க வேண்டியிருந்ததா? குறிப்பாக ஏதாவது புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்டதா? இவற்றை எங்கே பெறலாம்? வலைப்பதிவரில் யாராவது தமிழை கல்லூரியில் பட்டப்படிப்பிற்காக அல்லது வேலை நிமித்தமாக படித்தவர்கள் இருக்கிறார்களா?

நிறையக் கேள்விகள் கேட்கிறேன்..உங்கள் கருத்துக்களை அறியத்தரவும்.


அறிவித்தல் 2: சிட்னி முருகன் கோயிலின் மஹோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகிறது. பூங்காவனம் சி.மு.இளைஞர் வட்டத்தினரால் வருடா வருடம் பொறுப்பேற்கப்பட்டு விமரிசையாக நடத்தப் பெறும் நிகழ்வு.. அதற்கு ஆயத்தம் செய்யுமுகமாக வரும் சனிக்கிழமை(19-மார்ச்) பலகாரம் தயாரிக்கப்பட இருக்கிறது. மத்தியானம் 1 மணி போல ஆரம்பிக்க யோசித்திருக்கிறோம். சிட்னி வாழ் இளைஞர்கள்/சிட்னி விருந்தாளிகள் விருப்பமிருந்தால் வந்து உதவலாம். மேலும் தகவல்களை இங்கே பெற்றுக் கொள்ளலாம். பாமினி எழுத்துரு தேவைப்படும்:

கற்போம் கற்பிப்போம்

சந்திரவதனாவின் பதிவில் இதை வாசித்ததும் ஒரு வாரமாக என் மனதில் நாளொரு மேனியும்(இது எப்படி சாத்தியம்..கூடு விட்டு கூடு பாய்கிறதா?) பொழுதொரு வண்ணமுமாக ( டியுலக்ஸ் பூச்சு உபயத்தில்) வளர்ந்து வந்த ஒரு எண்ணம் வலுப்பெற்றுள்ளது. சிறுவயதிலிருந்தே தமிழை படித்திருப்பதால் எங்களுக்கு இங்கே எண்ணங்களை எழுத்தில் பரிமாறிக் கொள்வது இலகுவாக இருக்கிறது. புலத்தில் வளரும் எங்கள் அடுத்த தலைமுறையினரின் தமிழறிவு எந்தளவில் இருக்கிறது? வகுப்புக்குப் போய் இருந்து 1 - 2 மணித்தியாலம் செலவழித்து, தான் உபயோகிக்காத மொழியைப் படிப்பதால் என்ன பயன் என்று தான் பல சிறார்கள் நினைக்கிறார்கள். இணைய மேய்தல் ஒரு பொழுது போக்காக இருக்கின்ற இவர்களுக்கும், தமிழ் படிக்க விரும்பும், தமிழில் கருத்துப் பரிமாற்றம் செய்ய விரும்பும் எவருக்கும் உதவியாக, கற்றலின் ஆரம்பமாக ஒரு தமிழ் கற்பிக்கும் பதிவினை உருவாக்குவோமா?

பாலர் பாடசாலைகளில், முதலாம் வகுப்புகளில் போன்று “ஆனா”, “ஆவன்னா” சொல்லி ஏடு தொடக்கி, கொஞ்சங் கொஞ்சமாய் சொற்களை அறிமுகப்படுத்தி, இலக்கணத்தையும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் முறையில் எழுத்தறிவிக்கலாம்.(இப்பிடியாவது, நேர் நேர், நேர் நிரை எல்லாம் எனக்கும் தெரியவரட்டுமே!!). இந்தப்பதிவில் சின்ன வகுப்புகளில் மாதிரி இடையிடையே சிறுவர் பாட்டுக்களையும் ( உ+ம் க.தோ. வெருளி, ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி..) சேர்த்துக் கொள்ளலாம்.

விளக்கங்களை ஆங்கிலத்தில் இடலாம். பிறகு தேவையேற்படின் பிரெஞ்சு, ஜேர்மன், மற்றும் வேறு மொழிகளிலும் விளக்கங்களைத் தரலாம். வலைவசம் (“கைவசம்” இப்படி உருமாறிவிட்டது!) மொழிபெயர்ப்பாளர் டோண்டு ராகவன் இருக்கிறார், அவரிடம் கேட்கலாம். (உங்களிடம் அனுமதி கேட்காமலே, உங்களிடம் உதவி கேட்கலாம் என்று எழுதி விட்டேன் டோண்டு ராகவன், மன்னிக்க வேண்டும்.) (நீங்க இனிமேல் தப்ப முடியாது :o) )

என்ன சொல்றீங்க? யாரைத் தமிழ் வாத்தியாராகப் போடலாம்?

ஓ போடுங்க!

சில நாட்கள்/வாரங்கள்/மாதங்கள் மிகவும் விரைவாக ஓடி மறைகின்றதா? இல்லாட்டி நான் அதனுடன் போட்டி போடுற வேகம் குறையவா? (சுசந்திகா / பீ.டி உஷா / மரியன் ஜோன்ஸ் / கதி ஃப்ரீமன் தரவழியா இருக்க வேணுமோ!!)

வீட்டில் இருக்கும் போது இப்படி இருப்பதில்லை (9 மணிக்கு பள்ளியெழுகின்ற வார இறுதிகள் இதற்குள் சேர்த்தியில்லை!!) ஒருவேளை வேலைக்குப் போவதால்தான் காலம் இப்படி (என் மாட்டேற்றுச் சட்டத்தில்..என் சார்பாக..ம்ம்..relativly :o) )கடுகதியில் ஓடி மறையுதா?

ஒரு வேலையை செய்யும் போது, அதாவது செய்யும் ஒரே விடயத்தையே கருத்தொருமித்துச் செய்யும் போது நேரம் போவது தெரிவதில்லை. இதற்கு, புத்தகம் வாசிப்பது(பாடப் புத்தகம் அல்ல), நித்திரை கொள்வது போன்றவை நல்ல உதாரணங்கள். (பி.கு: கலர் தெரப்பியும் இதிலே சேர்த்துக் கொள்ளப்படலாம் ;o) ). எதிர்மறையாக, இதெல்லாம் செய்ய வேண்டுமே என்று 4 - 5 விடயங்களை பட்டியல் போட்டுக் கொண்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்தால் ஒன்றுமே செய்படாது, நேரம் மட்டும் விட்டது தொல்லை என்று காணாமல் போயிருக்கும்.இது என் சார்பான நேரம் கழிதலின் வேகம் மட்டுமே. எனக்கு விரைவாக ஓடி மறைந்த ஒரு நாள் மற்றொருவருக்கு மிக நீண்டதான ஒன்றாக தோன்றலாம்..அது அவர் சார்பான நேரத்தின் வேகம். எல்லாருக்கும் பொதுவாக செலவழிந்து கொண்டிருக்கும் நேரமோ ஒரே வேகத்தில் தான் கழிகிறது.( உ+ம்: எனக்கு வேகமாக கழிந்த ஒரு நாளும் மற்றவரது நீ..ஈ..ண்ட நாளும் அதே 24 மணி நேரத்தைத் தான் கொண்டவை!)

எப்படி இவளிடமிருந்து தப்பியோடலாம்(உங்களைப் போலவே?)என்று சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தை இழுத்துப் பிடித்து, அலுவலகத்தில் பணியும், வீட்டில் "தார்மீகக் கடமைகளும்"(அடக்கி வாசிக்கிறதப் பற்றி ஷ்ரேயா கேள்விப்பட்டதேயில்லை!!) என்று செய்ய வேண்டியிருக்கிறது. ஆக இப்பிடியெல்லாம் நேரத்துடன் மல்லுக்கட்டும் போது, என்னுடைய இந்த வலைப்பதிவில் செலுத்தும் கவனம் மிகக் குறைவே. அதைப்பற்றி மனவருத்தமாக இருக்கிற போதெல்லாம் கை கொடுப்பது என்னுடைய "நாளைக்குச் கட்டாயம் செய்ய வேண்டும் / செய்து விடுவேன்" என்கிற சோம்பேறி மனப்பாங்கு தான்.(யாரது "நன்றே செய்வார்; அதை இன்றே செய்வார்" ங்கறது? ஷ்ஷ்!!).

அலுவலகம் / வீட்டுவேலைகள் /குடும்பம் இதெற்கெல்லாம் மத்தியில் பதிவுகளையும் கவனித்துக் கொள்ளும் எல்லா வலைப்பதிவாளர்களுக்கும் ஒரு பெரீ..ய்ய்..ய "ஓ"!.

பெயர்கள் பலவிதம்

பெயர்..இது இல்லாமல் ஒரு பணியாரப் படிவமும் நிரப்ப இயலாது. அதிலயும் இந்த குடும்பப்பெயர் இருக்கே..அதைப் போல தலையிடி பிடிச்ச விஷயம் வேற இல்ல. வெள்ளைக்காரனுக்கு குடும்பத்துக்கென்றே ஒரு பெயர் இருக்கும். அவனுக்கு என்று ஒரு பெயர் வைத்தாலும் திரு."குடும்பப்பெயர்" என்று கூப்பிட்டால் கட்டாயம் திரும்பிப் பார்ப்பான். ஆனால் எங்கள் நிலமை வேறு, குடும்பத்துக்கென்று (சில விதி விலக்குகள் உண்டு)தனிப் பெயர் இல்லை. அவரவருக்கென்று வைத்த பெயர்தான் அவர் சார்ந்த குடும்பத்துக்கும் பெயராகிறது. வெளிநாட்டில் படிவம் நிரப்புகையில் எப்படிப் போடுகிறீர்கள்? ஆண்களுக்குத் தான் தலை போகும் பிரச்சனையா இது தென்படுகிறது. (உதாரணத்துக்கு அப்பா:சின்னத்தம்பி, மகன்: யோகன் என்று வைத்துக் கொள்வோம்)மகன் தனது குடும்பப்பெயராய் அப்பாவின் பெயரைப் போட்டால் திரு. சின்னத்தம்பி என்று தான் விளிக்கப்படும். யோகனும் அப்பாவைத்தான் கூப்பிடுகிறார்கள் என்று தேமே என்று உட்கார்ந்திருப்பான். மாறிப்போடுவது தான் அவனுக்கு தன்னை விளிக்கிறார்கள் என்பதை உணர்த்தும். இங்கே பலர் அப்படித்தான் அப்பாவின் பெயரை முதல்/வைக்கப்பட்ட பெயராயும் தன் (உண்மையாக) வைக்கப்பட்ட பெயரை குடும்பப்பெயராகவும் இடம் மாற்றிக் கொள்கிறார்கள். அப்படி மாற்றாமல் தன் பெயர் தனக்கும் அப்பா பெயர் குடும்பப்பெயராகவும் வைத்துக் கொண்டிருக்கும் நம்மவரும் உளர்.

இந்த குடும்பப்பெயர் வழக்கம் எங்கிருந்து எதற்காகத் தோன்றியயது? ஒரே இனத்தவர்/ குடும்பத்தினரை இனங்காணவேண்டிய தேவை சண்டை/சொத்து இவற்றைத் தவிர வேறே எதற்கு இருந்தது? அந்தக் காலத்தில் பெண்களுக்கு இது ஒரு முக்கியமான அடையாளமாக இருந்திருக்க வேண்டும் என் நினைக்கிறேன். இப்பெண்கள், இன்னாருடைய மனைவி/மகள் என்று (அப்பெண்களின்) வாழ்வில் காணப்படும் ஆண்களை வைத்தே நோக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு பெண்ணானவள் எடை போடப்படும் போது முதலில் இன்னாருடைய மகள்/மனைவி என்று குடும்ப விவரம் அலசப்பட்ட பின்னரே அவளது accomplishments பார்க்கப்படுகின்றன. பெண்கள் ஒரு ஆணைச் சார்ந்து நின்ற காலத்திற்கு வேண்டுமானால் இது பொருந்தியிருக்கலாம். ஆனால் பெண்கள் சுயமாக நிற்கிற இந்தகாலத்தில் இப்படிப்பட்ட பார்வை பொருத்தமானதாகத் தோன்றவில்லை.

எங்கள் ஊரில் வெள்ளைக்காரன் வரமுதல் பெண்களுக்கு நிர்வாகத் தேவைகள் இருந்ததா என்பது சரியாகத் தெரியவில்லை. அப்படியே இருந்திருந்தாலும் செல்வி.சின்னத்தம்பி, திருமதி.தங்கத்தம்பியுமாக அடையாளங் காணப்பட்டிருக்க மாட்டார்கள் என்று (நான்) நினைக்கிறேன். ஒரு பெண் வெள்ளைக்காரனின் வழக்கப்படி திருமணத்திற்குப் பின் திருமதியாகிறாள்.அதாவது தன் குடும்பப்பெயராக இவ்வளவு நாளும் உபயோகித்த தந்தையின் பெயரை விட்டு, கணவனின் குடும்பப் பெயரைத் தன் குடும்பப் பெயராக ஏற்கிறாள். இதப் பழக்கம் எப்போதிருந்து எங்கள் சமூகத்துக்குள் புகுந்தது?

இங்கே, எனக்கு நடந்த 2 சம்பவங்கள் சொல்கிறேன்:

முதலாவது, திருமணம் முடித்தவுடன் வந்த வம்பு. எனக்கோ அப்பாவின் பெயர் இருந்த இடத்தில் கணவர் பெயரைப் போட விருப்பமில்லை. அம்மா(இத்தனைக்கும் படித்தவர்.வைத்தியர்) சொன்னா அது கட்டாயமாம் என்று. எங்கேயிருந்து அவவுக்கு அந்த எண்ணம் வந்ததோ தெரியவில்லை. தாங்கள் எல்லாம் அந்தக் காலத்திலேயே எப்ப கலியாணம் முடிய கணவரின் பெயரைத் தன் பெயருடன் இணைப்பது என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பர்களாம்.(வேறே நினைவே இருக்கவில்லை போல என்று கிண்டலடித்தேன்!)இது தான் முறை என்றெல்லம் பெரிய்ய்.ய்..ய்ய விரிவுரை. எனக்கோ விருப்பமில்லை. என் மச்சானின் மனைவி பெயர் மாற்றம் செய்து கொள்ளாதவர். அவரிடம் பேசுவது என்று முடிவாயிற்று. அவ இருக்கவில்லை, என் மச்சானுடன் தான் கதைக்க முடிந்தது. அவர் சொன்னார், அப்படி பெயர் மாற்றச் சொல்லும் ஒரு சட்டமும் இல்லை என்று. அவர் என் கணவரிடம் கேட்டார் "ஷ்ரேயா உம்முடைய பெயருக்கு மாறுவது உமக்கு விருப்பமா?" அதற்கு கணவர் சொன்னார்.."மாறிறது விருப்பம். ஆனா அது அவட விருப்பம்" என்று. இதற்குப் பின்னும் அம்மாவின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு "-" போட்டு அப்பாவின் பெயரையும் கணவர் பெயரையும் இணைத்துக் கொள்ளச் சம்மதித்தேன். ஆனால் இங்கே எல்லா உபயோகத்திற்கும் பாவிப்பது அப்பாவின் பெயரை மட்டுமே. அலுவலர்கள் கேட்டால் "உங்கள் படிவங்களில் என் குடும்பப்பெயர் முழுவதும் அடங்காது" என்று சொல்லிவிடுவேன்.அவர்களும் விட்டு விடுவார்கள். கணவர் இதப் பற்றி ஒன்றும் சொல்வதில்லை. உள்ளே அரிக்குமோ என்னவோ! :o)

சம்பவம் 2: இங்கே

ஆக எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள் ஒரு பெண் கல்யாணமானால் பெயரை மாற்ற வேண்டுமென்று.அது அந்தப்பெண்ணின் தெரிவு என்பது புரிவதில்லையா? பலவந்தமாக மாற்றச் செய்வது தனிமனித சுதந்திரத்தில்/உரிமையில் தலையிடுவதாகும் அல்லவா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?திருமணமாகும் போது பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டுமா? நீங்கள் ஆணாக இருக்குமிடத்து உங்கள் மனைவி உங்கள் பெயரை தன் குடும்பப்பெயராக இணைத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பீர்களா? ஏற்கெனவே திருமணமாகி, மனைவி பெயர் மாறியுள்ளவர்களின் கருத்து என்ன?பெயர் மாற்றிய/மாற்றாத/மாற்ற விரும்பாமல் மாற்றிய மனைவியரின் கருத்து என்ன? கொஞ்சம் சொல்லுங்களேன்..

கிறுக்க இடம் இல்லை!!

கிறுக்கல் பலகையின் சேவை இனிமேல் காசு கட்டினாத்தானாம், நீங்க அப்படி ஒரு சந்தா அங்கத்தவரென்றால் உங்களுக்குரிய சேவை தொடர்ந்து தடையின்றி வழங்கப்படும். இலவசமா எழுதித்தள்ளுறவங்க தொகை அதிகமானதால இந்த முடிவை நேற்றிலிருந்து செயல்படுத்திறாங்க.

புதுசா கிறுக்கல் பலகை தேடிறன்..நல்லதொன்று கிடைச்சா சொல்லுங்க!

பெட்டகம்