இரண்டாம் தரிப்பு

-:சற்றே நீண்ட இடுகை, பஞ்சி பாராமல் எழுதச் சொல்லி பிரபா சொன்னதால் :O) :-

பரீ(நன்றி சிறி அண்ணா)யிலிருந்து அடுத்த நாடு நோக்கின பயணம். இந்தப்பயணம் ரயிலில். [ஐரோப்பாவில் ரயில், பேருந்து மூலம் பயணம் செய்வது பிரசித்தம். ஒவ்வொரு பிரதான நகரத்திலிருந்தும் இன்னொரு நகரத்திற்கு ரயிலோ பேருந்தோ செல்கிறது. பயன்படக்கூடிய சுட்டிகள் கீழே.]


ரயிலைப் பற்றி் - மிகவும் வசதியான இருக்கைகள். துப்பரவான கழிவறைகள்.பயணப்பொதிகளை வைப்பதற்கென்றே ஒவ்வொரு பெட்டியின் முன் பின் பகுதிகளில் தனியிடம். இரண்டு எதிரெதிர் இருக்கைகளுக்கு நடுவே ஒரு மேசை.(மடிக்கக்கூடியதாக இருக்கும்). முன்பதிவு செய்து வைத்திருந்தது TGVயில். இது ஒரு கடுகதி ரயில். பயணம் ஆரம்பித்துக் கொஞ்ச நேரத்தில்/குறிப்பிட்ட பகுதிகளில் பயணிகளை உட்கார்ந்திருக்கச் சொல்லி அறிவுறுத்தப்படுமாம். வண்டி மிக வேகமாகப் போவதால் சமநிலை தவறக்கூடும் என்பதாலேயே இப்படிச் சொல்லப்படுகிறது என்று எனக்குச் சொல்லப்பட்டது. நின்று பார்க்கத்தான் வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

கார் டு நோட் (Gare du Nord)இற்கு நாங்கள் போக்குவரத்து நெரிசலுக்கூடாக நீந்திப் போய்ச் சேர்ந்த போது நேரம் காலை 7.42. ரயிலோ 7.45இற்கு. சின்னையா சொல்லச் சொல்ல காலை ஆறரை வரை முதல்நாள் கடையில் எங்களுக்குத் தேவையானதைக் கேட்கத் தெரியாமல், எங்கள் நிறத்தில் தெரிந்த ஒருவரைப் பிடித்ததில் அவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்து தமிழும் தெரிந்தவராகி இருந்து விட்ட பாவத்தில், அவருதவியால் வாங்கிக் கொண்டு வந்த சிம் மை செல்பேசியில் போட்டு நோண்டிக்கொண்டிருந்துவிட்டுக் குளிக்கப்போன கண்ணன் வாங்கின திட்டை
நான் திரும்ப வாங்கவேண்டும் என்பதால் அவரை மட்டும் காருக்குள் விட்டுவிட்டு அடுத்தாய் வண்டி எத்தனைக்கு என்று பார்க்க கண்ணன், தம்பியுடன் சேர்ந்து நானும் ஓடினேன்.

பயணச் சீட்டு விற்பனைப் பகுதிக்குப் போனால், அங்கிருந்த பெண் சொன்னதின் படி அடுத்த TGV அன்று மாலைதான். வேறென்ன வண்டியுள்ளது என்று விசாரித்தால், SNCF இருக்கிறது. ஆனால் பயண நேரம் அதிகம் என்றார். சரியென்று அதற்குரிய சீட்டை வாங்கினால், அது TGVயினதை விட 40யூரோ குறைய என்று சொல்லி அந்தக் காசை மீளத் தந்தார். ஆனால் 9.40க்கு ரயில் புறப்படுவதோ கார் லெ எஸ்ற்றிலிருந்து(Gare l'est). அங்கே போய் ரயிலேறினோம். இரண்டு மணித்தியாலங்களின் பின் கண்விழித்தேன். பிரான்சின் நகர்ப்புறம் மறைந்து புல்வெளிகள் நிறைந்த நாட்டுப்புறம் கண்ணில் பட்டது.



சில மணித்தியாலங்கள் போனதும் ரயில் சுவிஸிற்குள் நுழைந்தது. எனக்கு எந்தப் பக்கம் படமெடுப்பதென்றே தெரியவில்லை..அவ்வளவு அழகு. இந்தப்பக்கம் பார்த்தால் பச்ச்ச்சைப் புல்வெளிகள், அந்தப்பக்கம் மலைகள். இரண்டு பக்கங்களிலும் பச்சை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, கருஞ்சிவப்பு என்று இலையுதிர்காலம் நிறந்தீட்டின இலைகளுடன் மரங்கள். கோடையிலும் பார்க்க இலையுதிர் காலத்திற்றான் இந்நாடு அழகாயிருக்கும் என்று தோன்றுகிறது. சிறு நீர்நிலைகளும் அவற்றில் மீன்பிடிப்பவர்களும் அவர்கள் வசித்திருக்ககூடிய பண்ணை வீடுகளும் எங்களைக் கடந்து போன காட்சிகளுள் அடங்கும்.

பாசல் நகரை அடைந்து அடுத்த ரயிலேறி - சுங்க அதிகாரிகள்/காவலர் எங்கிருந்து வருகிறோம், எங்கு நிற்போம், எவ்வளவு நாட்களுக்கு என்று கேட்டுவிட்டு உள்ளே சுவிசுக்குள்ளே விடுகிறார்கள் - வின்ரத்தூர் நகரை அடைந்தோம். தங்கியிருந்த வீட்டில் சுவிஸிலேயே பிறந்து வளர்ந்த இரு சிறு பெண்கள். நல்ல்ல்லாவே தமிழ் கதைக்கிறார்கள்/எழுதுகிறார்கள்
/வாசிக்கிறார்கள்.

ஒரு பாலர் பாடசாலைக்கு அடுத்த நாள் போனோம். வகுப்பில் எத்தனை பிள்ளைகளோ அத்தனை பேரின் தாய்மொழியிலும் 'வணக்கம்' என்று சொல்லி ஒரு வரவேற்புப் பாடல் ஒவ்வொருநாட் காலையிலும் படிக்கப்படுமாம். நல்லம் என்ன? பாலர் பாடசாலைகளில் கரல்ஸ் பாடிப் போகிற வழக்கம் இருக்கிறது. Turnip கிழங்கினை சிறு மூடியுள்ள ஒரு சட்டி போல வெட்டிக் கொண்ட பின் - கிண்டியெடுத்த கிழங்கின் உள்ளீடு அவித்து ஒரு சூப் மாதிரிச் செய்யப்பட்டு ஊர்வலம் போவதற்கு முதல் நாள் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் - அதற்குள் மெழுகுதிரி வைத்து ஊர்வலம் போவார்கள்.. வீடு வீடாய் கரல் பாடிக் கொண்டு. அநேகமானோர் இனிப்புகள் பரிசளிப்பார்களாம். நாங்கள் போன அன்று இருவரும் ஊர்வலம் போய் வந்திருந்தார்கள்.

போய் நின்ற நாள் முதல் அங்கத்தேய வெண்ணெய்க்கட்டிகளையும் சொக்கிளேற்றையும் ஒரு கை பார்த்தோம். :O) பிரபல காப்புறுதி நிறுவனமான வின்ரத்தூர் க்ரூப் இந்நகரத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டது. வின்ரத்தூரின் பிரபல தேவாலயத்தைப் பார்க்கக் கிடைக்கவில்லை. ஆனால் புனித தந்தையர் பேதுரு+பவுலின் ஆலயத்தைப் போய்ப் பார்த்தேன். நடந்து போகக்கூடிய தூரத்தில் இருந்ததும் தனி ஆராய்ச்சிக்குக் காரணம். ஆனால் கமரா பிழையான தெரிவில் விடப்பட்டிருந்ததால் அநேகமான படங்கள் தெளிவாக வரவில்லை. :O



அமைதியான ஆலயத்தைச் சுத்தஞ் செய்தபடி ஒருவர். சுவர் முழுதும் விவிலியத்துக் கதைகள் சொல்லும் ஓவியங்கள். அத்துடன் வேலைப்பாடுடைய உட்கூரை. சிறு உருவங்கள் (புனிதர்களாயிருக்கலாம்) அமைந்த stained glass windows. விட்டு வரவே மனமில்லை. நீர்வீழ்ச்சி பார்க்கப் போவதென்றிருந்தபடியால் மனமில்லாமல் திரும்பினேன்.

சுட்டிகள்:
www.eurorailways.com
www.raileurope.com
www.eurostar.com
www.busabout.com
www.eurolines.com
www.europeforvisitors.com

முதல் தரிப்பு -II


அடுத்ததாய்ப் பார்க்கப்போன இடம் - வர்சாய் அரண்மனை. சொல்லத்தெரியாமல் வர்சாய்ல்ஸ் என்று வாசித்துக் கொண்டு திரிந்தேன். வரைந்து நிறந் தீட்டின மாதிரிப் புற்தரை. இதைப் பராமரிக்க எவ்வளவு மினக்கட வேணும்! மூன்று பக்கங்களிலும் அரண்மனைத் தோட்டங்கள்.


பரிசிலிருந்து, தனது அரசியல் குழப்பங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டிருக்கவென்று வந்து தங்கியிருந்தானாம் 14ம் லூயி மன்னன். அப்படியே படிப்படியாகக் கட்டிக் கட்டி 2600+ அறைகளும் பென்னாம் பெரிய தோட்டங்களுமுள்ளதாக இந்த அரண்மனை உருவெடுத்திருக்கிறது.


நாங்கள் போன நாளன்று அரசியரின் அறைகளிலொரு பகுதி திறந்திருந்தது. அதன் முகப்பில் தங்க முலாம் பூசிய கடிகாரம். விட்டால் எல்லவற்றுக்குமே தங்க முலாம் பூசியிருப்பார்கள் போல! காட்சிக்கு விக்ரொறீ, அடிலேய்ட் என்ற இருவர் பாவித்த பொருட்கள் சில இருந்தன. அவர்களின் பாவனையிலிருந்த பெரிய ஓவியங்கள், கட்டில், பியானோ, புத்தக அலுமாரி, கண்ணாடி என்று பலவித பொருட்கள் காட்சிக்கு வைத்திருந்திருந்தார்கள்.









குளிர் காலமென்றாலும் கூட்டம். கோடைக்கு நினைத்தும் பார்க்கேலாது என்று எண்ணுகிறேன்.


தோட்டங்களில் வேலை நடந்து கொண்டிருந்தது. சிலைகளை மூடியிருந்தார்கள். பூச்சாடிகள் இரண்டு ஆளுயரமாய் . அவற்றையும் மூடியிருந்தார்கள். குளிர்காலத்தில் பனி படிந்து/தங்கி விடக்கூடும் என்பதால்.

பெரிய பெரிய நிலைகளும் அவற்றைச் சுற்றிச் சிலைகளும் என்று பார்க்கப் பார்க்க ஆசையாக இருந்தது.

குட்டிக் குளங்களுக்கு நடுவே சிலைகள். கால் நோகும் வரை தோட்டத்தில் உலாவினதில், மரத்தாசை பிடித்த எனக்கு நிறையப் படங்கள் எடுக்கவும் வாய்ப்புக் கிடைத்தது.





இலையுதிர் காலம்/குளிர்காலம் என்றதால் சில மரங்கள் மொட்டையாயும், சில நிறம் நிறமாய் இலைகள் கொண்டும்.. படமெடுத்துத் தீரவில்லை!

போன இரண்டாம் நாடு பற்றி அடுத்த பதிவாய்ப் போடுகிறேன்.

முதல் தரிப்பு

முதலாவதாய்ப் போன நாடு பிரான்ஸ். போதவே போதாத ஆறே நாட்கள். படிகளும் croissantsம் நிறைந்த பரிஸ். அவசரத்துக்குப் போவதானால் கூட 30சதம் கொடுத்தாக வேண்டும் பொதுவிடங்களில். இப்படியே உழைத்து பெரும்பணக்காரராய்விடலாம் போல! பரிசில் கண்ட இன்னுமொன்று எல்லா வீட்டுக்கும் ஒரு குட்ட்ட்டி பலகணி இருப்பதுதான். ஆட்கள் நிற்கமுடியாது.. ஆனால் பூந்தொட்டிகள் உட்காரலாம்.


வழமையாக எல்லாரும் பார்கிற ஐபல் கோபுரம் பார்க்கப் போனோம். எனக்குத் தேவையாயிருந்த மாதிரி - நான் கோபுரத்தின் உச்சியைத் தொடுவது போல - படமெடுக்க என்னோடு சேர்ந்து வந்த இரண்டு படக்காரர்களாலேயும் முடியவில்லை. தடை செய்யப்பட்டிருந்தாலும், வளையத்தில் கோர்க்கப்பட்டிருக்கும் உலோகத்தாலான கோபுரச் சிற்றுருவங்களை 'சல் சல்'லென்றுபடி ஆட்டியபடி வழி மறிக்கும் சிறு வியாபாரிகள் நிறைந்திருந்தார்கள். பழங்காலத்தைய சிற்பங்கள்/சிலைகள்.

சுழித்துக் கொண்டோடும் 'சுகந்தமான' செய்ன் நதியைக் கடந்து போய் தொடர்ந்து வளைக்கும் 'ஸ' போல நெளிந்த வரிசையில் நுழைவுச் சீட்டு வாங்க சேர்ந்து கொண்டோம். நகர்ந்து போன வரிசையில் திடீரென ஆங்கிலம் கேட்டது - அதுவும் ஒஸி வழக்கில். எனக்கா இனியில்லையென்ற மகிழ்ச்சி. போன இரண்டு நாட்களுக்குள் பொறுக்கின 'bon jour', 'au revoir' 'merci', 'madamme', 'monsieur' என்பவற்றை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாத ஆளுக்கு தெரிஞ்ச இங்கிலிபீசைக் கேட்டால் சொல்லவும் வேணுமா!! ஹொக்கிப் போட்டியொன்றுக்காக வந்திருந்த 4 பெண்கள். நல்லா அளவளாவி, போட்டிக்கு ஊக்கப்படுத்தி விடைபெற்றோம்.


கோபுரத்திலே மேலே ஏறினால் படமெடுக்க பொக்கற்றிலிருந்து கையை எடுக்க முடியவில்லை. குளிரோ குளிர். ஆனால் என்ன காட்சி.. நெப்போலியன் கோட்டை/அணையாவிளக்கு,
வெள்ளைத் தேவாலயம், லூயி மன்னனின் கோட்டை எல்லாம் தெரிந்தன.





[பரிசில் நடந்து கொண்டே இருக்கலாம் போல. cobble stone பாதைகளில் பழங்காலத்தைய வாழ்க்கை முறைகளைப் பற்றிப் பேசியபடி, அகலமான பாதைகளைச் செப்பனிட்டவர்களைப்பற்றிச் சிந்தித்தபடி நடந்தோம். வழமையாய்ப் பார்க்கும் நிறங்களிலான வானம்தான்.. பார்க்க ஆசையாய் இருந்தது. வீசும் காற்றிலே கிளையிலிருந்து தரைக்கு இடம் மாறும் இலைகள்; தரையிலேயே இடம் மாறித்திரியும் சருகுகள்(ஆனால் நாளைக்காலையில் தெருவில் அவை இரா). தொடர்ந்து நடக்கச் சொன்ன இருபுறமும் மரம் வளர்த்த தெருக்கள். நடப்பதற்காகவே இன்னொருமுறை போக வேண்டும்.முதல் முதலாய்ப் போகும் ஆர்வத்துடன்.]

அன்றைகே வெள்ளைத் தேவாலயமும் போகக் கிடைத்தது. நகரின் உயரமான இடத்தில் அமைந்திருக்கிறது. அதன் பெயர்:La Basilique du Sacré Coeur.

வெள்ளைக் கட்டிடடமென்பதால் 'வெள்ளைத் தேவாலய'மாக்கி விட்டார்கள். வழமையாய் என்னை நிற்கச் செய்யும் stained glass windows. என்னதொரு கூரை.. 25 - 30 ஆள் உயரமிருக்கும். உள்ளுக்குள்ளே சலன/ஒளிப்படமெடுக்க அனுமதியில்லை. நிறைய ஓவியங்கள். கூரையில் பென்னாம்பெரியதொரு ஓவியம். பிறரால் உருக வைகப்படவென்றே மெழுகுதிரிகள்.

ஆலயத்தின் மாதிரி உருவைச் செய்து வைத்து "உங்கள் ஆலயத்தின் தண்ணீருக்கும் மின்சாரத்துக்கும் உதவுங்கள்" என்று தமிழ் உட்பட 15 - 20 மொழிகளில் எழுதி வைத்திருந்தார்கள். எல்லாம் தாண்டி வந்ததும் ஒரு ஒரு வேண்டுதல்/பிரார்த்தனைப் புத்தகம். தமிழில் கூட இருந்தது - கிடைத்திருக்கிற ஆசீர்வாதங்களுக்கு நன்றி சொல்லி, பிள்ளைக்கு நடக்கவிருக்கிற திருமணத்திற்கு ஆசி வேண்டி என்று பலதரப்பட்ட வேண்டல்கள், இறைஞ்சல்கள். மனதில் சொல்லக்கூடியதை 'வணக்கம் கடவுளே' என்று நானும் தாளையும் மையையும் வீணாக்கி வெளியேறிய பிறகுதான் ஞாபகம் வந்தது ஏனையோர் போட்டதுபோல முகவரி போடாமல் வந்தது. அடடா..யார் வணக்கம் சொன்னதென்று யேசு யோசித்திருப்பாரோ?

பெட்டகம்