சாப்பாடு, சட்டை & சாயம்

நல்லகாலம் , மூச்சு விடுவது ஒரு தன்னிச்சையான செயல்... இல்லாட்டி இருக்கிற வேலைக்குள்ளே அதைச் செய்ய மறந்து போய், நிறைவேறாத ஆசை உள்ள ஆவி/பேயாய் (<--இப்பவே இதுதான் என்டு பெயர்!!) உலாவாமல்(நன்றி சில பல சினிமா & கதைகள்)..உங்களைப் பாட வைக்க (வேறென்னத்தை.. "சோதனை மேல் சோதனை" தான்!) திரும்பவும் வந்திருக்கிறேன்.

தெ.து.வ.ப.ச.செ. - மன்னிப்புக் கேட்கிறேன்.. எனக்குத் தொலைபேச முயற்சித்தீர்கள். ஆனாலும் அந்த நேரத்துச் சூழ்நிலைகளால் பதிலளிக்க முடியவில்லை! விரைவில் தொடர்பு கொள்கிறேன்.


------------------------------------------------------------------

சரி, விதயத்துக்கு வருவோம்...இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை என்று வானொலி, தொ.காவில் சொல்வது போல வாசிக்கவும்! >>> இன்றைய எரிச்சல்..வழங்குவோர்: பிரம்மகுமாரிகள் ராஜயோக நிலையம். (கலை - hint, hint!! ;o)

முக்கியமாக இவர்கள் கடைப்பிடிப்பதில் இரண்டை (என் பார்வையும் கலந்து சொல்கிறேன்) தாமே அல்லது "7 நாள் உபதேசம் பெற்ற" தங்கள் கூட்டத்தினர் சமைத்தாலொழிய இவர்கள் வேறிடத்தில், வேறு யார் வீட்டிலும் "சமைக்கப்பட்ட" உணவை உண்பதில்லை. பழமோ, பொதி செய்யப்பட்டிருப்பதிலிருந்து எவ்வித மாற்றமுமின்றிப் பரிமாறக்கூடியதாய் இருக்கும் உணவு/பானங்களைத் தவிர "ஞானம்" பெறாதவர் வீட்டில் உண்ணார்கள். ஏனா? நல்ல கேள்வி கேட்டீர்கள்!

"ஞானம்" பெறாதவர்கள் 1. உணவு தயாரிப்பு முறை அறியாதவர்கள் (அதாவது நல்ல எண்ணங்களோடே சமைக்க வேண்டும் என அறியாதவர்கள்) 2. அதனால், என்ன எண்ணங்கள் மனத்தில் ஓடிக்கொண்டிருக்க சமைத்தார்கள் என்று தெரியாமையால், தற்செயலாய், தேவையற்ற/வீணான எண்ணவோட்டம் அந்த நேரத்தில் அவர்கள் மனதில் இருந்திருந்தால் அது உணவு மூலமாக தம்மை வந்தடையும். இது இவர்களது "தூய்மையைக் கெடுக்குமாம்". உடன்படுகிறேன்.. எண்ணங்கள் உணவின் தன்மையில் மாற்றமேற்படுத்துமென.


இவர்களே சமைப்பார்கள்..ஆனால் உள்ளி (பூண்டு), வெங்காயம் - இவை சமையலில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டா. ஏனென்ற கேள்வி வருகிறதா? இந்த உள்ளி, வெங்காயம் இவை பாலுணர்வைத் தூண்டுமாம். அந்தந்த வயதில் இயல்பாய் நிகழ்வதற்கு, இவர்கள் ஏன் வலுக்கட்டாயமாக அணைபோட முயற்சிக்கிறார்கள்? அல்லது வெங்காயம், உள்ளி போட்டு சாப்பிட்டுக்கொண்டு இருந்தவரை இவர்களுக்கு அதீதமான பாலுணர்ச்சிதான் இருந்ததா!

வெள்ளை ஆடைதான் அணிவார்கள். அதிலும் முழுக்கைச் சட்டை. அதிலும் சேலை அணிவோர் - கேட்கவே வேண்டாம். கழுத்தோடு ஒட்டிய இரவிக்கைக்கழுத்து, முழுக்கை, சாதாரண இரவிக்கை போன்று இடுப்படியில் நிற்காமல் இன்னும் நீளமாய். ஆக மொத்தம் இரவில பார்த்தீர்களோ - தெரியாத ஒருவருக்கு lift கொடுத்து, அவர் காரை விட்டு இறங்கி நுழைந்த இடம் றொக்வூட் சவக்காலை என்று கண்ட ஒரு மாமாவுக்குப் போல - உங்களுக்கும் காய்ச்சல் வருவது சர்வ நிச்சயம்.

ஏன் இந்த நீட்டு ப்ளவுஸ்? சேலை கட்டினால் இடுப்புத் தெரியுமல்லவா? அப்பிடி இடுப்புத் தெரிவது கூடவே இருந்து தியானம் பயில்வோர்க்கு(பெண்கள் முன்னால் அமர ஆணகள் பின்னாலாம், மாறியே அமர்ந்தாலும் தியான நிலையத்தில் காண்கிற மற்ற நேரங்கள்!!) இடைஞ்சலாக..கவனத்தைக் குலைப்பதாக இருக்ககூடாதாம்.

எனக்கு விளங்கவில்லை, ஏற்கெனவே உள்ளி, வெங்காயமின்றிச் சாப்பிடுபவர்கள் & தியானத்திற்கென வருபவர்கள், கேவலம் ஒரு சின்னத்துண்டு தசையால் கவனம் சிதறுவதா? அப்ப இவர்கள் கவனம் தியானத்தில் இல்லையா? அப்படியானால் (இவர்கள் சொற்படி பார்த்தால்) உள்ளி, வெங்காயம் சாப்பிடுபவருக்கும், "பாலுணர்வு தூண்டப்படாமல் இருக்கும்" இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? மனிதன் மனிதன் தான். அவனது அடிப்படை இயல்புகளைக் குலைத்து, அதற்குச் சாயம்
பூசுவானேன்?

பெட்டகம்