அந்த ஒற்றை வரி

தொடர்வண்டிப் பயணத்தின் போது மனதிற்குள்ளேயே அழகாய் உருக்கொடுத்துச் சிங்காரித்திருந்தேன் அந்த இடுகையை. வீட்டுக் கதவு திறந்தேன். அந்த இடுகையெங்கே? வண்டியிலேயே மறந்து விட்டேனா? அல்லது இறங்கி நடந்து வரும் வழியில் தொலைத்தேனா? "துளிர்த்து, வளர்ந்து, நிறம் மாறி, உதிர்ந்து காற்றிலலைந்து, தரை தடவி், மக்கி, உரமாய் மண்ணுக்குள் ஊறி, வேர் பிடித்து மரத்துக்குள் போய், சத்தாகித் திரும்பத் துளிர்த்து வரும் அந்த இலை போலே என்றென்றைக்குமான எங்கள் அலைதல்களோடேயே நீயும் நானும்" என்று நினைவில் பிசுபிசுத்தது எப்படியோ தொற்றிக் கொண்டு வந்துவிட்ட ஒற்றை வரி.

அணிந்தணிந்து மென்மையாகிப் போன பிரியமானதொரு ஆடையைப் போலே கவிந்திருக்கிறது வெள்ளியிரவு. மிஞ்சிக் கிடந்த அந்த ஒற்றை வரியை நூல் போலப் பிடித்துக் கொண்டு மீதி இடுகையை திரும்பவும் நெய்துவிடலாமென்று பார்க்கிறேன். வரவேயில்லை. காணாமல் போய்விட்ட அந்த இடுகை, இளவரசியின் பதினெட்டு மெத்தைகளுக்கும் கீழே இருந்த பட்டாணியைப் போல என்னை உறுத்துகிறது. யோசித்துக் கொண்டு அவவைப் போலவே விழித்திருக்கிறேன். இளவரசி பாவம். அவவுக்கும் வலைப்பதிவிருந்திருந்தால் ஒருவேளை பட்டாணியால் பறிபோன நித்திரையைப் பற்றி ஏதேனும் எழுதியிருக்கக்கூடும்.

பெட்டகம்