சின்னச் சின்னச் சந்தோசங்கள்

நிறைய நாளாக(வருடங்கள் என்று சொல்லணுமோ!!) ஒரு உடற்பயிற்சியும் இல்லாமல் இருந்துவிட்டேன். உடம்பின் சீத்துவம் பென்னா (அண்ணர்) போன ஆண்டு வந்திருந்த போதுதான் ஓடி வெளிச்சுது. அந்தாள் இருக்கிறதே மலை நிறைஞ்ச நாட்டில. அவரிட வீட்டுக்குப் பின்னாலயும் முன்னாலும் பக்கவாட்டிலேயும் என்று மலை மயம். அது வழியே ஏறி இறங்கி அநியாயத்துக்கு fit ஆக இருந்திச்சு மனிசன். நம்ம ஏறி இறங்கினதெல்லாம் வீட்டில இருந்த படியிலயும் மனிசரிலயும்தான்!! அவரோட குன்றொன்று ஏறுவமென்று போனன். என்க்கும் மலையேறிறது விருப்பம். ஆனா மலை இல்லாத இடத்தில (அதாரது பென்டில் ஹில், செவன் ஹில்ஸ் எல்லாம் இருக்கே என்டுறது!!) நான் என்ன செய்ய!

சரி, பென்னா ஏறினார். நான் ஏறப் பார்த்தன். ம்கூம்... அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ என்டு நான் திரும்பி சிட்னிக்கு வந்திட்டேன். பென்னா காத்தோட சண்டை பிடிச்சு மலையேறின கதை கங்காரு கொவாலாப் பதிவில வாசிக்கக் கிடைக்கிறது. சந்தோசமா சைக்கிலும் ஓட spinning என்ட வகுப்புக்குப் போய் வண்ணம் காட்டினார். ஆனா தங்கச்சி ரோடிலே மட்டும் கிழமைக்கு ஒருதரம் போல சைக்கில் ஓட்டிட்டு விட்டுட்டா. இப்பிடி இருக்க, வீட்டிலே ஒரு நண்பன் தங்க வந்தான். இரண்டு மாதம் நாங்க உண்டு வளர்ந்தம். எங்களுக்கே சகிக்காம ஓகஸ்ட் மாசத்துக் குளிரையும் பொருட்படுத்தாம ஒவ்வொரு நாளும் 2 கிலோமீட்டர் (அதாவது செய்தமே!) நடந்து கொஞ்சம் வளைஞ்சு குனிஞ்சு நிமிர்ந்து உடற்பயிற்சி செய்தம். மிஞ்சிப் போனா 1 மாதம் தான். அவன் ஊருக்குப் போனதும் இங்க உடற்பயிற்சி நிறுத்த்ம்.

புது வேலையொன்றில சேர்ந்து நாலைஞ்சு கிழமையால நிமிர்ந்து பாத்தா அங்க இலவசமா ஒரு ஜிம் இருக்கு. விடுவமா.. 4 கிழமையா போறன். கொஞ்சம் குரொஸ் ட்ரெய்னர், கொஞ்சம் ட்ரெட்மில். இந்தக் கிழமை துடுப்பு வலிக்க ஆரம்பித்திருக்கிறேன். உடற்பயிற்சி செய்த முதல் கிழமை வேணாமென்று போய்விட்டது. ஆனாலும் விடுவதில்லை என்று உறுதி பூண்டிருக்கிறேன். கடந்த வாரமெல்லாம் உடற்பயிற்சி செய்து முடித்ததும் ஒரு .. என்ன சொல்லலாம், buzz.. ஒரு புத்துணர்ச்சி இருந்தது. இரண்டரைக் கிழமைப் பிரயத்தனத்தின் பின் இன்றைக்குத்தான் களைப்பில்லாமல் 1கி.மீ. முழுமையாக ஓட முடிந்திருக்கிறது. என் 5 கி.மீ. ஓட்ட இலக்கை விரைவில் அடைந்து விடுவேன் என்று நம்புகிறேன்.

இன்றைக்கு அப்படி நிறுத்தாமல் ஒடி முடித்ததும் ஒரு சந்தோசம் வந்தது பாருங்கள்.. இன்னமும் என்னில் ஒட்டியிருக்கு. இந்தப் பதிவிலே சொல்ல வந்ததே அதைப் பற்றித்தான். ஆனா வேற திக்கில் கொஞ்சம் போய்விட்டது. சின்னச் சின்னச் சந்தோசங்கள். ஒரு நாளின் வண்ணத்தையே மாற்றி விடுகிற நிகழ்வுகள். ஞாயிற்றுக் கிழமை அப்படி இரண்டு விதயங்கள். அன்றைக்கு என் சிட்னித் தங்கச்சியின் பிறந்தநாள் பரிசுக்கு புதையல் வேட்டை உருக் கொடுத்திருந்தோம். கூடச் செய்ய வேண்டியவர் விடுமுறையில் இந்தியாவில். ஒரு தடயம் நாங்கள் நினைத்ததை விட அவவுக்குக் கடினமாக அமைந்து விட்டது. கண்டு பிடித்ததும் குரலாலேயே துள்ளினா. அதுவும், எல்லாம் முடிந்த பிறகு அவ இறுக்கிக் கட்டிப் பிடிச்சு "இன்றைய நாளுக்கு நன்றி அக்கா" என்றதும் என்க்கு அதே சந்தோசத்தைத் தந்தது.

வீட்டுக்குப் போக ஆயத்தப்படுத்துகையில் பலத்த மழை. மாமா நின்று நிதானமாய்ப் போங்கள் என்றார். ஆறு மணியாயிற்று, அவர் சாமி கும்பிடப் போனார். அவர் சாமி கும்பிடும் போது உடனிருப்பது ஒரு அலாதியான அனுபவம். என் பக்தியோ பெல் வளைவு மாதிரி. திருவிழாக் காலங்களில் உச்சத்தைத் தொடும். அவருடன் கூட நின்று சாமி கும்பிட்டு, தேவாரம் பாடி திருநீறும் பூசிக் கொண்டு புறப்பட்டேன். மழை சற்றே ஓய்ந்திருந்தது போல விளையாட்டுக் காட்டியது. அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு இரண்டு நிமிடங்களில்லை. கொட்ட
த் தொடங்கியது. அன்றைய நாளை அசை போட்டபோட்டபடியே ஒரு அமைதியான பாதையில் வந்து கொண்டிருந்தேன். ஒரு கிழவர் இருக்கையுள்ள உருட்டிக் கொண்டு போகிற நடையுதவி உபகரணத்தைத் மெல்ல்ல்ல்லத் தள்ளிக் கொண்டு நடந்து கொண்டிருந்தார். 70- 75 வயதுதானிருக்கும். ஒரு இளநீல சேர்ட் அணிந்திருந்தார். அதில் மழை நனைத்த தடங்கள் கொஞ்சம் கடும்நீலநிறமாகத் தெரிந்தது. எனக்கோ அவரைக் கண்டதும் அடே நனைந்து கொண்டு போகிறாரே, ஏதேனும் வருத்தம் வந்தால் என்ன செய்ய, பாவம் என்று தோணியது. ஏற்றிக்கொண்டு போய் விடலாமா என்றும் என்ன மாதிரியா ஆளோ என்றும் நான் இரண்டு விதமாக யோசித்து முடிப்பதற்குள் அவரைக் கடந்து போயிருந்தேன். கடைசியில் ஏற்றிக் கொள்ளலாம் என்று நினைத்து வாகனத்தைத் திருப்பிக் கொண்டு வந்து அவரிடம் "கொண்டு போய் விடவா, நனைந்து கொண்டு போகிறீர்களே" என்றால்", தன் தலையைச் சுட்டி "எனக்குத் தலையில் சுகமில்லை" என்றார் மனிதர். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. "என்னிடம் குடையிருக்கிறது; ஆனால் நனையப் பிடிக்கும் என்பதால் நடக்கிறேன். என்னைப் பற்றிக் கவலைப்படாதே" என்று சொல்லி மீண்டும் நடக்க ஆரம்பித்தார். என் உதட்டில் ஒட்டிக் கொண்ட புன்னகை வீடு வந்த பின்னும் அகலவில்லை. அன்றைய நாளை அரை நிமிடத்தில் மிகவும் அழகானதாக்கிப் போனார் அந்தக் கிழவர்.

இப்படிச் சின்னச் சின்னச் சந்தோசங்கள் போதுமானதாயிருக்கு வாழ்க்கையை அனுபவிக்க.

பெட்டகம்