சொல்லத்தான் நினைக்கிறேன்

நிறையச் சொல்லோணும் போல, ஆனா என்னத்த எப்பிடி எங்க தொடங்கிச் சொல்லுறதெண்டு தெரியாம முழிச்ச/தவிச்ச அனுபவம் இருக்கா? அப்பிடித்தான் எனக்கு வழமையாவே இருக்கிறது.

nervousஆனா (இல்லாட்டிப் பொய் சொல்லக்குள்ள)தான் நான் வழமையா வளவளவெண்டு அலட்டுறது. இல்லாட்டிக் கொஞ்சம் அமைதியா நல்ல பிள்ளையா (இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ட மாதிரி) இருந்துகொள்ளுவன். ஆனாலும் எப்பவும், ஆரோடையும் பகிர்ந்து கொள்ளோணும் என்டு நினைக்கிறவைகளைப் பற்றிச் சிந்தனை ஓடும். படிச்ச புத்தகமோ, நடந்த விசயங்களோ இல்லாட்டி மனசில வாற எண்ணங்களோ - இப்பிடி நிறைய. என்னதான் நெருங்கின நட்பிருந்தாலும், எதையும் பேசக் கூடியதாயிருந்தாலும் பல விசயங்கள் சொல்லப்படாமலே போய் விடுகின்றன.

கடந்த சில ஆண்டுகளில இது கூடினாப்போல தான் தெரியுது. புதிதாய் எதையுமே கதைக்ககூடியவர்களின் அறிமுகம் கிடைத்து நல்லாப் பழகியிருந்தாலும், ஏதோ தடுக்கும். இவர்கள் என்ன நினைப்பார்களோ என்டுற நினைப்பாலயோ என்டு நீங்கள் நினைச்சா நான் பொறுப்பில்ல. (அந்த எண்ணம் எப்பவாவவது வருமா என்டு அம்மா ஒரே கேக்கிறவ). என்னெண்டு சொல்லத்தெரியல்ல. ஆனா ஏதோ
ஒன்டு - இதப்பற்றிக் கதைக்காம விடுவம் என்டு எண்ண வைக்கும். அதுவும் சில விசயத்துக்குத்தான். [குழப்புறனா?] அது என்ன, ஏனெண்டு இன்னுந் தெரியாது.

சொல்லாமப் பூட்டிப் பூட்டி வைக்கிறதுகள் நிறைஞ்சு மூச்சு முட்டுமாப் போல வரும் சில நேரம். அப்ப மட்டும், வன்தகடு நிறம்பினா கொஞ்சக் கோப்புகளை அழிச்சு இடமெடுக்கிற மாதிரி, சிலது மட்டும் வெளியில கொட்டும். எனக்கிருக்கிற ஒரு தோழிக்கு இதுக்கு முற்றிலும் எதிர்க்குணம். அவ சொல்லாம உள்ளுக்கு வைச்சுக் கொண்டிருக்கிறதுதெண்டு பாத்தா ஒருகைவிரல் விட்டு எண்ணலாம். அந்தளவுக்குக் கதை. முதலொருக்கா அவவிட்டக் கேட்கப் போக, உள்ளுக்கு வைச்சிருந்து என்ன செய்யிறது? சிந்தனை ஊறுகாய் போடுறதோ என்டு பதில் தந்தவ. எப்பிடி அவவுக்கு ஏலுமாயிருக்கென்டு இப்பவும் யோசிக்கிறனான்.

சரி நேர இன்னொராளிட்டக் கதைக்கத்தானே வேண்டாமெண்ணுது மனம், அப்ப எழுதிப் பாப்பமெண்டாலும் (அதுக்கு ஒரு "இது" வேணுமெண்டதையெல்லாம் கணக்கில சேர்க்காம விடுவம்), ம்கூம், வரமாட்டுதாம். சொல்லல்லண்டா ஒண்டும் குறையப் போறதில்லத்தான். ஆனா எத்தினையோ பேர் ஒரு ரெண்டு வரிக் கவிதையிலையோ, இல்லாட்டி ஒரு கதையிலையோ, கட்டுரையிலயோ தங்களை/ தங்களின்ட எண்ணங்களை எவ்வளவு அழகா வெளிப்படுத்திறாங்க என்டு பாத்தால் ஆசையா இருக்கு. அட, இதை நானும் யோசிச்சனான்/வாசிச்சனான்/பாத்தனான் என்டு மனதில படும். ஆனா அந்தளவுக்கு எளிமையா அழகா வெளிப்படுத்தத் தெரியல்லையே என்டு தோணும். பிறகென்ன, சொல்லத் தெரியாட்டிச் சொல்லத் தேவையில்ல என்டிட்டு இன்னும் சேரச் சேர பூட்டிப் பூட்டி வைக்கிறது தான். அது என்னையுமறியாமலேயே வெளிவாறது தாதிக்கு முன்னால உடைஞ்ச கொட்டின மாதிரிச் சந்தர்ப்பங்களிலதான்.

இனி அப்பிடி ஒரு சந்தர்ப்பம் வேண்டாமெண்டு எழுதத் தொடங்கினன். ஏன் அப்பிடிச் சொல்லவெளிக்கிட்டனான்? என்ட எண்ணங்கள் என்னையறியாம வெளிவாறதை எண்ணி வெட்கப்படுறனா? ஆனா அப்பிடி வெளிவாறது எப்பவும் எல்லாருக்கும் நடக்கிற ஒண்டுதானே.. என்டு யோசிக்கத் தொடங்கி, பதில் இன்னும் கிடைக்காம, கேள்வியையும் சேர்த்துப் பூட்டி வைக்கிறன், இப்போதைக்கு.

பெட்டகம்