போர்களும் போர்வீரர்களும்

துளசியின் ANZAC நாள் பற்றிய பதிவை வாசித்த பின் உடனே எழுத வேணுமென நினைத்திருந்தேன்..இப்பத்தான் எழுதுகிறேன்.

சமூகக் கல்வி, இலங்கையில் படித்தவர்களுக்கு அறுவையான பாடம். இத்துடன் பல பேரால் தரித்திரம் என ஏசப்படும் சரித்திரமும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கும். ஏசி ஏசித்தான் அதை படிப்பதே!

நான் இப்போ சொல்ல வருவது நான் எப்படியெல்லாம் ஏசினேன் என்பதை அல்ல. சமூகல்வியிலா அல்லது வரலாற்றிலா என்று ஞாபகமில்லை..உலக வரலாறு பற்றிய ஒரு பகுதி இருந்தது. அதில், நடந்த உலகப் போர்களைப் பற்றியும் ஐ.நா சபை எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதைப் பற்றியும் இருக்கும். என் ஞாபகத்திற்கு எட்டியவரை (எட்டாட்டி கொக்குத்தடிதான்! :o) ) அதிலே போர்களேற்பட என்ன காரணி தூண்டுதலாக இருந்தது என்றும் என்னென்ன நாடுகள் எந்தப் பக்கம்(போரில்!!) கட்சி சேர்ந்தன என்பதைப் பற்றியும் தான் இருக்கும். ஜப்பானுக்குக் குண்டு போட்டதும் படித்தோம். ஆனால் இவை அனைத்துமே மேலோட்டமாக ஏதோ ஒரு சம்பந்தமில்லாத ஒன்றைச் சொல்வது போலவே கையாளப்பட்டிருந்தன. எனக்குத் தெரிந்து, ஹிட்லர் ஒரு சர்வாதிகாரி என்பதைத் தவிர, அவன் அரங்கேற்றிய இனப்படுகொலை பாடத்திட்டத்தில் இருக்கவில்லை (அல்லது, படித்து, நான் தான் மறந்து போய் விட்டேனோ தெரியாது! தெரிந்தவர்கள் சொல்லுங்கள்).

{ஆஷ்விட்ஸிற்கு இரயில் மூலம் அனுப்பபட்ட கணக்கற்ற யூதர்களைப் பற்றியும் அவர்களின் கொடுமையான இறுதிநாட்களைப் பற்றியும் அறிந்திருப்பீர்கள். இந்த ரயில் பயணங்களில் ஒன்றிலிருந்து பலர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். அதைப் பற்றிச் சொல்லும் The Twentieth Train" (எழுதியவர்: Marion Schreiber, இது Silent Rebels:The true story of the raid on the twentieth train to Auschwitz என்ற பெயரில் முன்னர் வெளியிடப்பட்டது) புத்தகத்தைத் தான் இப்போது நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசித்து முடிந்தவுடன் அதைப்பற்றிய ஒரு தனிப்பதிவை இடுகிறேன்.}

இலங்கையில் இருந்தவரை உலகப்போர்களைப் பற்றிய எனது அறிவு மிக மிக மிகக்குறைவு. இங்கே சிட்னிக்கு வந்த பின்னரே நான் பல டொக்யுமென்ட்ரிகளைப் பார்த்தும், புத்தகங்கள் & அச்சிதழ்களை வாசித்தும் இப்போர்களைப் பற்றி அறிந்து கொண்டேன். அவுஸ்திரேலியாவிலிருந்து எண்ணிலடங்காதோர் போருக்குச் சென்றமையால் இந்நாடு போர்களின் ஞாபகார்த்தத்திற்கு பெரும் மதிப்பளிக்கிறது.

என் சந்தேகம் இது தான்...உலகப்போர்கள் இரண்டும் நடைபெற்ற காலப்பகுதியில் இலங்கையும் (அவுஸ்திரேலியா போன்றே) பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டிருந்தது. இலங்கையிலிருந்து இப்போர்களுக்குச் சென்ற (போயிருக்கிறார்களெனக் கேள்விப்பட்டிருக்கிறேன்) வீரர்கள் நினைவு கூரப்படுவதுண்டா?இல்லையெனின் ஏன்? இந்தியாவில் எப்படி?

பெட்டகம்