மாயாவும் மணற்புயலும்

இங்கே SBS என்று ஒரு தொ.கா.நிலையமொன்றுண்டு. அதிலே பல உலகத் திரைப்படங்கள் ஒளிபரப்படுவது வழக்கம். இந்தியப் படங்களாக நான் அதில் பார்த்தவை: டெரரிஸ்ட், தில்வாலே துல்கானியா லே ஜாயேங்கே<--இதை the braveheart takes away the girl என்பது போல மொழி பெயர்த்திருந்தார்கள்.), Sandstorm, மற்றது மாயா. சாண்ட்ஸ்டோர்மும் மாயாவும் எனக்குள்
ஏற்படுத்திய உணர்வுகளை மற்ற இரண்டும் ஏற்படுத்தவில்லை. டெரரிஸ்ட் படம், சில விடயங்களைக் காட்டிய விதம்(portray பண்ணிய விதம்) ஒரு விளங்கிக் கொள்ளாத / புரிந்து கொள்ளாத தன்மையைக் காட்டியது என்றே நான் நினைத்தேன்.

மணற்புயல் - வெள்ளி இரவு 12 - 1 மணியளவில் திரையிட்டார்கள் (அந்த நேரம் எதுக்கு முழிச்சிருந்து தொ.கா பார்த்தேன் என்றெல்லாம் கேட்கக் கூடாது) நடித்தவர்களில் நந்திதா தாஸை மட்டுமே அடையாளம் கண்டு கொண்டேன். படத்தில் அவவினது கதாபாத்திரத்துக்குப் பெயர் சன்வரி தேவி. கதையின் பின்புலம் ராஜஸ்தான். மட்பாண்டங்கள் செய்து விற்று பிழைப்பை நடத்தும் கீழ்ச் சாதிப் பெண்ணாக நந்திதா தாஸ். பிழை செய்தால் தட்டிக் கேட்கும் பெண். இவளைப் பற்றிக் கேள்விப்பட்டு, அரசாங்கத்தால் நடத்தப்படும் " ஸதின்" அமைப்பில் சேர அழைக்கிறார் ஒரு பெண்மணி. முதலில் இல்லையென்றாலும் பிறகு (ஷ்ரேயா நித்திரை கொண்டுவிட்டபடியால் ஏன் என்று தெரியவில்லை) போய் அதில் சேருகிறாள். இவ்வமைப்பு பெண்களுக்கானது. சிறு வயதுத் திருமணங்களை எதிர்ப்பது. ஊரில் ஒரு "உயர்"சாதியினரது சின்ன மகளுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. வைபவத்தின் போது போலீசார் வந்து அத்திருமணத்தை நிறுத்தி விடுகின்றனர். ஆனாலும் கையூட்டு வாங்கிக் கொண்டு திருமணம் நடத்தும் பெரியவர்களைக் கைது செய்யாமல் விடும் போலிஸ் அதிகாரி, தனக்குத் தகவல் வந்தது ஊருக்குள்ளிருந்து தான் என்று கிடைத்த கையூட்டுக்கு நன்றிக்கடன் செலுத்துகிறார். ஆரம்பிக்கிறது கஷ்டகாலம் சன்வரி தேவிக்கு. தொல்லை மேல் தொல்லை கொடுத்தும் அசையாமல் நிற்கும் அவளைப் பார்த்து ஊர்ப்பெரியவர்களுக்கு ஆத்திரம். சரியான பாடம் புகட்ட வேண்டும், அப்பத்தான் இவளது கொட்டம் அடங்கும் என்று சொல்லி, ஊர்த்தலைவர் உட்பட 5 பேர் சேர்ந்து அவளது கணவனுக்கு முன்னாலேயே அவளுடன் வன்புணர்கிறார்கள். இவர்கள் மீது வழக்குத் தொடர்கிறாள் ச.தேவி. அவளைக் காக்க இயலாமற் போனதை எண்ணிக் குமுறும் கணவனது நடிப்பு தத்ரூபம். படம் பார்க்கையில் ஆத்திரமும், கையாலகாத்தனமும் நம்மையும் தாக்குகின்றன. முறைப்பாடு செய்யக் காவல் நிலையத்திற்குச் செல்லும் சன்வரி தேவி தம்பதியை , கையூட்டுப் பெற்ற அதே அதிகாரி, மருத்துவச் சான்றிதழ் பெற்று வரும்படி சொல்லி திருப்பி அனுப்பி விடுகின்றான்.ஸதின் அமைப்பில் சேர்ந்ததாலேயே சன்வரி தேவிக்கு இத்தனை பிரச்சனைகளும் என்று உணர்ந்த அவ்வமைப்பின் அதிகாரி (ச.தேவியை சேர அழைத்த அதே பெண்) எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவுகிறா. இவர்களது வழக்கு, தத்தம் அரசியல் ஆதாயத்துக்காகப் பலரால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது & வழக்கு எவ்வாறு சாட்சியங்களும், அதிகாரிகளும் விலைக்கு வாங்கப்படுவதால் அலைக்கழிக்கப்படுகிறது என்பதே மீதிக் கதை.

சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளைப் பார்க்கப் பார்க்க இரத்தம் கொதிக்கிறது. ஆனாலும் என்ன நடந்தாலும் அயராது போராடும் சன்வரி தேவியும் உறுதுணையாக நிற்கும் கணவனும் மனதில் நிற்கிறார்கள்.


(இயக்குநனர் திக்விஜய் சிங்கின் முதல் படம்) மாயாவின் கதைக்களமோ வேறு. ஒரு சின்னப்பெண். தாய் தந்தையரை விட்டு, உறவினர் வீட்டில் வளர்கிறாள். அவ்வுறவினரின் மகனும் இவளும் நல்ல நண்பர்கள். அந்த உறவினரது வீடு முழுக்க பல்லிகள். பல்லியை இந்தப்படத்தில் ஏதோ ஒரு குறியீடாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். என் மரமண்டைக்கு எது என்னவென்று எட்டவில்லை :o(

ஒரு நாள் இவள் பெரிய பெண்' ஆகி விடுகிறாள். மாயாவை அவளது ஊருக்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செகிறார்கள். இவ்வளவு நாளும் சுதந்திரமாக விட்டவர்கள் கொஞ்சம் கட்டுப்பாடுகள் போடுகிறார்கள் என்று மாயாவுக்கும் உறவினச் சிறுவன் சஞ்சய்க்கும் பிடிக்கவில்லை. முன்பு மாதிரி விளையாடப் போக முடியாதே!! தாய் தந்தையரிடம் அழைத்துச் செல்லப்படும் மாயாவுக்கு அவளது உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விளக்குவார் யாருமில்லை. மாறாக அவள் தன் வயதுக்குரிய விடயங்களில் ஈடுபடும்போது, இடைநிறுத்தப்பட்டு 'நீ இப்போது ஒரு பெரிய/வளர்ந்த பெண்' என மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்படுகிறாள். ஊரிலுள்ளவர்களுக்குச் சொல்லி ஒரு பெரிய விருந்தும் விழாவும் என வீட்டவர் அவளைத் தயார்ப்படுத்துகின்றனர். என்ன விருந்து என்ன விழாவென்று எம்மையும் எதிர்பார்க்க வைக்கிறது. விருந்து நாளும் வருகிறது. அழகாக அலங்கரித்த மாயாவை கோயிலுக்கு அழைதுச் செல்கிறார்கள். பூசையோ, ஏதோ நடைபெற்ற பின் அவளை கதவுகள் கொண்டதொரு மண்டபத்துக்குள் வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கிறார்கள். என்ன நடக்கப் போகிறதென்று அறியாது விட்டாலும், தான் போகவில்லையென மறுக்கும் மாயா வலுக்கட்டாயமாக அவ்வறைக்குள் அனுப்பப்படுகிறாள். சஞ்சய் அது பிடிக்காமல் அவளை மீட்கும் நோக்கில் கதவை நோக்கி ஓடுகையில், அவனது பெற்றோரால் இழுத்து நிற்பாட்டப்படுகிறான். அங்கே அந்தப் பூட்டிய மண்டபத்துள் அழும் மாயாவும், அவளைக் காக்க இயலாமல் நாமும். அறை/மண்டபத்தின் நடுவே ஒரு மேடை. பலிபீடம் என்பது பொருத்தமாயிருக்கும். அப்பீடத்தின் விளிம்பிலிருந்து 10 வயத்துக்குரிய முழங்கால் கீழே தொங்க, மாயா அணிந்திருந்த சேலையைக் காணோம். அந்தக் கால்களுக்கு நடுவே தலைமைப் பூசாரி. அவளது கால் துடிப்பதுவும், பூசாரியின் புணர்வுச் செயற்பாட்டின் காலசைவும் காட்டப்படுகிறது. மாயாவின் அலறலில் திடுக்கிடும் சஞ்சய். ஏதோ கெட்டது தான் நடக்கிறது என அவன் உணர்கிறான். வரிசையாய் எல்லாப் பூசாரிகளும் மாயாவை 'ஆசீர்வதித்த' பின்பு, துவண்டுபோய் நடக்கமுடியாம்ல் வெளியே வரும் மாயா. இந்த விருந்தும் பூசையும் இதற்குத்தானாம். சஞ்சய்யின் சினேகிதன், அவனது சகோதரிக்கும் பூசாரி கெடுதல் செய்து விட்டதால் அவர் மேல் கோபமுடையவனாக இருக்கிறான். அவனும் சஞ்சயும் சேர்ந்து பூசாரி வீட்டிற்குள் இறைச்சியை எறிகிறார்கள்.அவர்களுடன் கூடவே எனக்கும் ஒரு அற்ப சந்தோசம்.

பருவமெய்தும் பெண்களை பூசாரிகள் புணர்வதால் அப்பெண்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என நம்பும் ஒரு சமுதாயம். இத்தனைக்கும் படத்திலே மாயாவின் பெற்றோர் படிப்பறிவற்றவர்கள் அல்லர். இதுவும் சன்வரிதேவியினதைப் போன்றே ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவியது. இந்த வழக்கம் இந்திய அரசினால் தடை செய்யப்பட்டாலும், இன்னும், வருடத்திற்கு கிட்டத்தட்ட 5000 சிறுமிகள் இக்கொடுமைக்கு (அவர்களது பெற்றோராலேயே) உட்படுத்தப்படுகிறார்கள் என்று ஒரு அதிர்ச்சியான புள்ளிவிவரத்தையும் இயக்குனர் தருகிறார். எனக்கு விளங்கவில்லை, ஒரு தாயானவள் தான் இப்படியான ஒரு கொடுமைக்குட்படுத்தப்பட்டதை, தனக்கு எவ்வளவு கஷ்டமாயிருந்ததென்பதை மற்ந்து விடுவாளா? மகளுக்கு அந்தக்கஷ்டம் வேண்டாமே என்று நினைக்க மாட்டாளா? அறிவில்லையா இவர்களுக்கு? இவ்வழக்கம் இன்னும் தொடர்கின்றமைக்கு யார் காரணம்?

படம் பார்க்கும் போது எவ்வளவு ஆத்திரமாகவிருந்ததோ, அதை விட இன்னும் பல மடங்கு எழுதுகையில்.

பெட்டகம்