இரவுகள்

பொதுவிலே இரவுகள் அழகானவை. அதிலும் மழையைப் போர்த்திக் கொண்ட இரவுகள் எப்பவும் எனக்கு மிகவும் பிடித்தமானவையாக இருந்திருக்கின்றன. அவற்றுடன் கூடவே நித்திரை கொள்ளப் போக வேண்டுமென்று தோன்றவே மாட்டாமல் விழித்திருந்து பாடல் கேட்கிற இரவுகளும். பாசாங்குகள் ஏதுமற்று எங்களைப் பகிர்ந்து கொள்வதால் இந்த இரவுகளுடன் மிகவும் இயல்பான நெருக்கம் உருவாகிறது- உற்ற நட்பொன்றினைப் போல. இன்றைக்கும் உட்கார்ந்திருந்தேன்(இருக்கிறேன்). மனதை சங்கடப்படுத்தும்/நடப்புச் சூழலிலிருந்து வெளியே ஒரு கனவுலகுக்குக் கொண்டு போகவோ அல்லது ஞாபகங்களைக் கிளறவோ வைக்கிற இசை மட்டுமே துணை வருகிறது.

இரவுப் பொழுதுகளில்தான் நிறையத் தோன்றுகிறது. இதையிதை இப்படியிப்படி எழுதலாம், இப்படி ஒளிப்படம் எடுக்கலாம், வாழ்த்து மடல்களின் வடிவமைப்பு, தொடர்பற்றுப் போய்க் கொண்டிருக்கும் ஆட்கள் என்றெல்லாம் ஒரு நீரூற்றுப் போல யோசனைகள் பிரசவிக்கின்றன. ஞாபகமிருக்கும் என்று குறிப்பெடுக்காமல் தூங்கிப் போவதே வழக்கமாகிப் போயிருக்கிறது எனக்கு. இன்றைக்கும்போய் படுகையில் சரிந்தால் எப்போதும் நடப்பது போலவே எங்கெங்கெல்லாமோ சுற்றி தொடங்கின எண்ணத்துக்குச் சற்றும் சம்பந்தமில்லாத இன்னுமொரு எண்ணம் ஓடிக்கொண்டிருக்கையில் தூங்கிப் போகப் போகிறேன். அதற்கென்ன அவசரம்.. இன்னும் கொஞ்சம் உட்கார்ந்திருக்கலாம் - வந்திருக்கும் மழையுடன் பேசிக் கொண்டு. மழை போல மனதைக் கழுவுகிற/நிறைவைத் தருகிற விதயங்கள் மிகக்குறைவு. சிரபுஞ்சி போகவேண்டும்..ஓரிரவுக்காவது.

பெட்டகம்