உலகமும் உரையாடல்களும்

ஒரு கேள்வி கேட்கிறேன்.. ஒருவர் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றைச் சாதித்திருக்கிறார் என்று சொன்னால் அதை ஏன் materialistic ஆக உள்வாங்கிக் கொள்கிறோம்? ஏன் 'சாதித்தல்/அடைதல்" என்பது பணத்தினதோ, புத்திசாலித்தனத்தினதோ, சமூகத்தில் அவரது இடத்தையோ அளவீடாக கொள்ளப் படுது? (மருத்துவப்படிப்புக்குக் தேர்ந்தானாம், அவளிட கடை நல்ல பெரிசு அல்லது அவர் கோயில் president) இதுகள் தானா சாதனைகள்? (தனக்கு விரும்பின/திறமையுள்ள துறையில படிச்சுத் தேருறதையோ அல்லது தொழில் செய்து முன்னேறுறதையோ குறையாச் சொல்லவில்லை. அதற்குத் தேவைப்படுற கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் I appreciate it)

பொருளைக் கொண்டு மனுசரை அளவிடுற இந்த உலகத்தில, நேர்மை, தீங்கு செய்யாமை போல நல்ல குணங்கள் இருக்கிறதோ, அதுகளை நெறியாக் கொண்டு வாழ்றதோ ஏன் மேற்சொன்னதுகள் போல ஒரு achievement ஆக கருதப்படுறல்ல? பார்க்கப் போனா உங்களாலயும் என்னாலயும் ஆன சமூகம் இப்படிப் பட்ட குணங்களோட வாழுற ஆட்களை மதிக்கிறல்ல. முகத்துக்கு முன்னால சிரிச்சிட்டு பின்னால் போய் பிழைக்கத் தெரியாத ஆள் என்டு ஏன் சொல்லுது?

என்ன திடீரெண்டு இப்பிடி சொல்லுறனென்டு பார்க்கிறீங்களா..

இருபதுகளின் நடுப்பாகத்தை எட்டிப்பார்க்கப் போகிற வயதில் ஒரு சக மனுஷி. அலைவரிசைகளும் இயல்புகளும் ஒத்துப்போறதாலேயோ என்னவோ இந்தப் பெண்ணோட பல விதயமும் பேச முடியுது. அது பிடிச்சுமிருக்கு.

இன்றைக்கு வழமையான நல விசாரிப்புகளுக்குப் பிறகு "it doesn't feel like I've achieved anything in life" என்றா. முதலாம் பந்தில சொன்னமாதிரியான அளவீடாக் கொள்ளப்படுற சாதிப்புகளை தான் இன்னும் செய்யல்ல என்டுறதுதான் - அதுகளை நினைச்சு ஒரு தாழ்வு மனப்பான்மையோட யோசிக்கத் தேவையில்ல என்டு தெரிஞ்ச - இவவுக்கு வந்த யோசனை. இவவோட நடக்கிற உரையாடல்கள் அனேகமாகக் கதைச்சு முடிஞ்ச பிறகும் சிந்திக்க வைக்கும். வழமையாகக் கதைக்கிற ஒரு தலைப்பாக வாழ்க்கை/வாழ்தல் இருந்தாலும் தன்ட வயசு ஆட்கள விடவும் மனமுதிர்ச்சி கொண்ட, தான் தேர்ந்த களத்தில் masters(முதுகலை?) படிக்கிற அவட கூற்று கொஞ்சம் யோசிக்க வைச்சது.

தேர்ந்தெடுத்த துறையில தன்னை இன்னும் மேம்படுத்திக் கொள்ளப் படிக்கிறா. முடிஞ்சளவு உதவிகள் செய்கிறா, ஒழுங்கான வழியில வாழுறா.. ஆனாலும், இப்படி யோசிக்கத் தேவையில்லை என்று தெரிந்து கொண்டும், இப்படி தான் ஒன்றும் சாதிக்கவில்லையே என்று ஒரு கொஞ்ச நேரத்துக்குத்தான் என்றாலும் நினைக்கிற மனநிலை எதனால வருது? கொஞ்ச நேரம் கதைச்சவுடன எழும்பின கேள்விதான், நல்ல முறையில் வாழ்க்கையைக் கொண்டு செலுத்திறது ஏன் சாதனையா கருதப் படுறல்ல என்டுறது.

இப்பிடியே அவவோட கதைச்சது வழமையா நடக்கிறது போல வளர்ந்து வளர்ந்து எங்கெயெங்கையோ போயிற்று. இப்படிப்பட்ட உரையாடல்களில எப்பவும் எனக்குச் சந்தோசம். தயக்கமில்லாம தங்கட மனசை வெளிப்படுத்தி, தங்களையும் உலகத்தையும் அவங்களுக்கே உரித்தான முறையில அலசி ஆராய்றதும் எடுக்கிற சரியான முடிவுகளும் நம்பிக்கை தருது.

கேள்விகள் கொண்ட, அதை அடக்கிவிடாமல் கேட்கிற இந்தத் தங்கைகள் அழகானவர்களாயிருக்கிறார்கள்.

பெட்டகம்