ஒலிம்பிக் தேசம் 4 ஒ.தே 3

பாரசீக போர் :
பரந்து கொண்டிருந்த பாரசீக பேரரசின் அரசனாக முதலாம் டரியுஸ் கிமு 519ல் முடி சூடினான். பாரசீக மன்னன் சைரசினால் வெற்றி கொள்ளப்பட்டு பாரசீக ஆட்சியின் கீழிருந்த அயொனியர்கள் அதிருப்தியடைந்திருந்தனர். கிமு 419ல் மிலெட்டூசைச் சேர்ந்த அரிஸ்டகோரஸ் என்பவன் கரையோரக் குறுநிலங்களை இணைத்து ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தினான். 5 வருடத்தில் டரியுஸ் இதனை அடக்கி விட்டாலும், இந்தப் பிரதேசத்திற்குள் இல்லாதிருந்தும் கொந்தளிப்பிற்கு உதவிய அதென்ஸ் மீது சீற்றம் கொண்டான். "என்னையா சீண்டுகிறாய்..உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று வில்லன் வசனம் பேசி பழிக்குப் பழி வாங்க நினைத்த டரியுஸ் ஸ்பார்ட்டாவிடம் உதவி கோரினான். கிரேக்கத்தையே வெற்றி கொள்ளும் மாஸ்டர் ப்ளான் அவனிடம் இருந்ததை ஸ்பார்ட்டா புரிந்து கொண்டு உதவ மறுத்ததால் டரியுஸ் தன் முயற்சியை கிடப்பில் போட வேண்டியதாயிற்று. ஆனாலும் முற்று முழுதாக தன் திட்டத்தை கை விடவில்லை; கிமு 490ல் பாரசீக இராணுவம் மரதன் என்னும் இடத்தில் வந்து குவிந்தது. 10,000 பேரை மட்டுமே கொண்டிருந்தாலும் கிரேக்கர்கள் பாரசீகத்தை தோற்கடித்தனர். "எங்களூரில் இந்திரவிழா நடக்கிறது" என்று ஸ்பார்ட்டா இந்தப் போரில் பங்கேற்கவில்லை.

இன்னொரு போர் தொடுக்க திட்டம் தீட்டிய டரியுஸ் அது நிறைவேறும் முன்னமே மண்டையைப் போட; தந்தையின் கனவை நனவாக்கும் பொறுப்பு ஸெர்க்ஸீசின் தலையில் சுமத்தப் பட்டது. பரந்து விரிந்த தனது சாம்ராஜ்யத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் போர்வீரர்களை (மொழிபெயர்ப்பாளர்களுக்கு நல்ல மவுசாக இருந்திருக்குமோ...) அழைத்துக் கொண்ட ஸெர்க்ஸீஸ் தரை + கடல் வழிப் போருக்கு ஆயத்தம் செய்தான். பாரசீகர்கள் (தற்போதைய) இயரிசோசிற்கு அருகில், தங்கள் கடற்படை பயணிக்கத் தக்கதாக ஒரு கால்வாயைத் தோண்டினார்கள். இதன் மூலம் அதொஸ் மலையடிவாரத்தில் ஆர்ப்பரிக்கின்ற கொந்தளிப்பான கடலில் பிரயாணம் செய்வதை அவர்களால் தவிர்க்க முடிந்தது. கிரேக்கத்தின் மத்திய மற்றும் தென் குறுநிலங்கள் கொரிந்தில் சந்தித்துக் கொண்டன. பாரசீகர்களை தோற்கடிக்கும் வழிமுறை பற்றிய மந்திராலோசனை நடந்தது. ஸ்பார்ட்டாவின் தலைமையின் கீழ் தரைப்படை+கடற்படையும், இப்படைகளுக்கான தந்திரோபாயங்கள் மற்றும் வியூகங்கள் அமைக்கும் பணிக்கு அதென்ஸின் தலைவனான தெமிஸ்டோக்கிள்சும் என தீர்மானிக்கப்பட்டது. ஸ்பார்ட்டா அரசன் லியோனிடஸ், தெர்மோபைலி எனும் இடத்திலுள்ள கணவாயை காக்கும் பொருட்டு தன் படையினரை அங்கு இட்டுச் சென்றான். குறுகலான இக்கணவாயே கிரேக்கத்தின் வடக்கிலிருந்து மத்திய பிரதேசத்திற்குச் செல்வதற்கான பிரதான வழி. எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் கணவாயைத் தக்க வைத்துக் கொண்டிருந்தனர். எட்டப்பர்களும் காக்கைவன்னியர்களும் அங்கேயும் இருந்தார்கள். எந்தப் பாதையால் மலையைக் கடந்து போவது என்பதை எதிரிக்கு கிரேக்க எட்டப்பன் சொல்லிவிட்டான். கிரேக்க வீரர்கள் பின்வாங்க நேரிட்டது. லியொனிடஸ் தீரத்துடன் சாகும் வரை போராடினான்.

ஸ்பார்ட்டாவும் அதன் ஆதரவாளர்களும் தமது 2ம் நிலை பாதுகாப்புக்குரிய செயற்பாடுகளை முன்னெடுத்த அதே நேரம் பாரசீகர்கள் அதென்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். நகரை விட்டு வெளியேறி தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு தன் குடிகளுக்கு தெமிஸ்டோக்கிள்ஸ் கட்டளையிட்டான். பாரசீக இராணுவம் அற்றிகாவை தரைமட்டமாக்கி அதென்ஸிற்கு தீ மூட்டி எரித்தழித்தது. ஆனாலும், கிரேக்க கடற்படை திறமையான வியூக அமைப்பினால், ஒடுங்கலான சலாமிஸ் கடலில் பாரிய பாரசீக போர்க்கப்பல்களை பொறி வைத்து அழித்தது. கரையிலிருந்து தன் படையினரின் தோல்வியைக் கண்ணுற்ற ஸெர்க்ஸீஸ் இராணுவப் பொறுப்புகளை தனது தளபதி மாடோனியசிடம் கையளித்து விட்டு வெறுப்புடன் தாயகம் திரும்பினான்.

ஒருவருடம் கழித்து ஸ்பார்ட்ட தளபதி போசோனியஸின் (ஒரு வேளை "Pause button" ஐ கண்டு பிடித்தவரோ...) தலைமையில் கிரேக்கம் வெற்றிவாகை சூடியது, அதெனிய கடற்படை மைக்கெலி என்னும் இடத்திற்குச் சென்று அங்கு மீதமிருந்த பாரசீகக் கடற்படையை துவம்சம் செய்ததுடன், பாரசீக ஆட்சியின் கீழிருந்த அயொனிய குறுநிலங்களையும் விடுதலை செய்தது.

தொடரும்

0 படகுகள் :

பெட்டகம்