ஒலிம்பிக் தேசம் 3 ஒ.தே 2

கிமு 1200- 800
டோரியர்கள் கிரேக்கப்பெருநிலத்தில் பரந்த போது குறுநிலங்களைத் தரைமட்டமாக்கி அதன் குடிகளையும் தமக்கு அடிமகளாக்கினர். பின்னர் கிரீட்டையும் ஆசியாமைனரின் தென்மேற்குக் கரையோரப்பகுதியையும் கைப்பற்றினர். தெசலியர் என அறியப்பட்ட ஒரு இந்தோ-ஐரோப்பிய இனத்தவர் தெசலியில் வந்து குடியேறினர். கிரேக்கத்தில் முன்பிருந்தே வசித்து வந்த பழங்குடிகளில் எயோலியர் ஆசியாமைனரின் வடமேற்குக் கரைக்கும்; அயனியர் மத்தியகரைக்கும், லெஸ்போஸ், சமோஸ்(சமோசா அல்ல!!),கியோஸ்(பவித்ராவின் பூனைக்குட்டி அல்ல!!) ஆகிய தீவுகளுக்கும் இடம்பெயர்ந்த போதிலும் இவர்களிற் சிறு பகுதியினர் அவ்வாறு குடிபெயராது அற்றிக்காவிலும் நன்கு பலப்படுத்தப்பட்ட அதென்ஸிலும் தங்கியிருந்தனர். டோரியர்களின் ஆக்கிரமுப்புடன் ஆரம்பிக்கும் அடுத்த 400 வருட காலம் கிரேக்க வரலாற்றின் இருண்ட காலமாக வர்ணிக்கப்பட்டாலும் டோரியர்களை அவ்வளவு எளிதில் உதாசீனம் செய்து விட முடியாது. இவர்கள் தான் இரும்பை கிரேக்கத்திற்குக் கொண்டு வந்தனர். மட்பாண்டங்களை அலங்கரிப்பதில் புதுவிதமான முறையை கொண்டிருந்தன்ர். ஜியொமெட்ரிக் (தமிழில்??) உருவங்களை வரைந்தனர்.இவர்களாக இந்த அலங்கார உருவங்களைக் கண்டுபிடித்தனரா அல்லது அற்றிக்காவின் அயனியர்களிடம் ஏற்கெனவே பழக்கத்திலிருந்த அலங்காரக்கலையை மெருகேற்றினரா என்பது இன்னும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. ஆண் கடவுளரை வணங்கிய டோரியர்கள் பிற்பாடு மைசீனிய கடவுளரில் பொசெய்டொன், ஸீஸ், அப்பொலோவையும் சேர்த்து வணங்கினர். முடியாட்சி முறை கிமு800ம் ஆண்டளவில் முடிவிற்கு வந்து, மைசீனிய நாகரிகத்தில் போன்று நகர் சார்-குறுநில ஆட்சி ஏற்பட்டது. இக்குறுநிலங்களில் ஆட்சியதிகாரம் செல்வந்தரான நிலவுடமைப் பிரபுக்கள் கையில் இருந்தது.

கிமு 800- 480குறுநில ஆட்சி மீளவும் ஆரம்பித்த காலகட்டத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு என்பனவற்றின் உற்பத்தி மிகுந்திருந்தமை கிரேக்கர்களை கடல் வணிகம் நோக்கிச் செலுத்தியது. பினீஷியர்களின் வீழ்ழ்ச்சியாலேற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டு புதிய கிரேக்க குடியேற்றங்கள் வட ஆபிரிக்கா, சிசிலி,இத்தாலி, தென் பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டன.பினீஷிய மூலாதாரங்களைக் கொண்ட எழுத்துக்களும் கிரேக்கர்கள் சேர்த்த உயிரெழுத்துக்களும் கொண்டதாக உருவான கிரேக்க எழுத்து வடிவம் குறுநிலங்களை ஒன்றிணைத்தது. எல்லாக் குறுநிலங்களுக்கும் பொதுவான மைசீனிய வரலாற்றைக் கூறும் ஹோமரின் படைப்புக்கள், எல்லாக் குறுநிலங்களிலுமிருந்து வீரர்கள் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டி, கருத்துப்பரிமாற்றத்திற்கு டெல்ஃபி என்பன கிரேக்கர்களுக்கு ஒரு தேசிய உணர்வை அளித்தன. இக்காலகட்டம் இடைக்காலம் என அறியப்படுகிறது.

குறுநிலங்கள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான அமைப்பில் கட்டப்பட்டன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட அக்ரொபொலிஸ்(அக்ரொ-உயர்ந்த, பொலிஸ்- நகரம்)அந்த நிலத்தின் உயரமான இடத்தில் நிர்மாணிக்கப்பட்டது. இந்த அக்ரொபொலிசில் தான் நாட்டின் திறைசேரி, கோயில்கள் என்பன அமைந்திருந்தன. இதுவே முற்றுக்கைகளின் பொது மக்கள் தஞ்சம் புகுமிடமாகவும் விளங்கியது. அக்ரொபொலிசிற்கு வெளியே ஒரு சந்தையும் அதற்கும் அப்பால் குடியிருப்புகளும் அமைந்திருந்தன. சுயாட்சியின் கீழிருந்ததால் தத்தம் தேவைக்கேற்ப சட்டமியற்றி ஆட்சி நடத்திய குறுநிலங்கள் தம்மிடையே சண்டைகளையும் போர்களையும் ஏற்படுத்திக் கொண்டன.பரம்பரையாக அதிகாரத்தைப் பெற்றதனால் பிரபுக்கள் சாதாரண மக்களால் வெறுக்கப்பட்டனர். சில குறுநிலங்கள் புரட்சிக்காரர்களின் ஆட்சிக்குட்பட்டன.இதனை ஆரம்பித்து வைத்தவர் (கிமு 650)கொரிந்தைச் சேர்ந்த கைப்செலோஸ். பதவிகளைப் பரம்பரையாகப் பெறாது பலவந்தமாகக் கைப்பற்றிய இவர்கள் சாமானிய குடிமக்களின் நன்மையைத் தம் கருத்தில் கொண்டவர்களாக நோக்கப்பட்டார்கள்.

அதென்ஸ்:
புரட்சிக்கார்களின் ஆட்சிக்கு சில குறுநிலங்கள் உட்பட்டாலும் அதென்ஸ் இன்னமும் பிரபுத்துவ அதிகாரத்தின் கீழேயே இருந்தது. ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கப்பட்டு அம்முயற்சி தோற்கடிக்கப்பட்ட நிலையில் ட்ராகோ எனப் பெயர் கொண்ட சட்டவியலாளர் கிமு620 இல் மிகக் கடுமையான சட்டங்களை இயற்றினார். உதாரணம்: காய்கறி திருடினால் மரணதண்டனை. :O( கிமு 594ல் சோலோன் என்பவர் தலைமை சட்டவியலாளராக நியமிக்கப்பட்டார். குடிமக்களின் எல்லாக் கடன்களையும் இரத்துச் செய்ததுடன் கடன் காரணமாக அடிமைப்பட்டிருந்தவர்களையும் விடுதலை செய்தார். எல்லா அதென்ஸ்வாசிகளும் சட்டத்தின் முன் சமமாகக் கருதப்படவேண்டும் என அறிவித்து பரம்பரையாக அதிகாரங்களை சுவீகரிக்கும் வழக்கத்தையும் இல்லாதொழித்தார்.சட்டமியற்றுபவர்களையும் அதை நிலைநிறுத்துபவர்களையும் மக்களே வாக்கு செலுத்துவதன் மூலம் தேர்ந்தெடுக்கும்படி செய்தார். இவரது சீர்திருத்தங்கள் ஜனநாயகத்தின் வருகைக்கு கட்டியம் கூறுபவையாக அமைகின்றன.ஜனாதிபதிகளுக்கு முன்னோடியாக சோலோன் திகழ்கிறார்.

ஸ்பார்ட்டா:
ஐந்து கிராமங்களைக் கொண்டதான ஒரு குறுநிலம் பெலொபொனீஸ் குடாநாட்டில் ஸ்பார்ட்டா என்னும் பெயரோடு விளங்கிற்று. இங்கே முடியாட்சி நிலவியது. டோரியர்களின் வழித்தோன்றல்களான ஸ்பார்ட்டாவாசிகள் லக்கோனியாவின்(பெலொபொனீஸ்) ஒரிஜினல் குடிகளான ஹெலொட்ஸை தம் அடிமைகளாகக் கொண்டிருந்தனர். சமூக ஒழுங்கானது கட்டுப்பாடுகள் நிறைந்த இராணுவ அடிப்படையில் அமைந்திருந்தது.பச்சிளங் குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டு, குறையுடையவர்களாகக் காணப்பட்டால் (இறக்கும் வரை) மலையுச்சியொன்றில் விடப்பட்டார்கள்( பெற்றோர் நிலை..நினைக்கவே மனதைப் பிசைகிறது!). 7 வயதினை அடைந்ததும் சிறுவர் தத்தம் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு கட்டாயமான, கடுமையான இராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டார்கள். சிறந்த போர்வீரரை 'உற்பத்தி' செய்வதற்கு இம்முறை பின்பற்றப்பட்டது. சிறுமியர் இந்தப் போர்ப்பயிற்சியில் ஈடுபடுத்தப்படவில்லையாயினும், பின்னாளில் அவர்கள் சுகதேகிகளாகி, பலசாலிகளான ஆண் மகவுகளைப் பெற்றெடுக்கும் முகமாக சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. விமர்சனம் எதுவும் யாராலும் முன்வைக்க முடியாதபடி நடந்த ஸ்பார்ட்டா ஆட்சியில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லாது போனமையால், மற்ற குறுநிலங்கள் கனவு கண்ட ஒரு ஸ்திரத்தன்மை காணப்பட்டது. அதென்ஸ் வர்த்தக ரீதியாகப் பலம் பெற, ஸ்பார்ட்டா திறம்பட இயங்கும் இராணுவ இயந்திரமாக விளங்கியது. இவ்விரண்டு நகரங்களும் ஏனைய குறுநிலங்களை விட மேலோங்கி நின்றன.

பெட்டகம்