ஒரு மாணவியையும் ஓர் ஆசிரியரையும் பற்றி.

இன்றைக்கு நண்பியுடன் அவளது பிள்ளைகளின் அனுமதிப் படிவத்தைக் கையளிப்பதற்காக அருகிலுள்ள பள்ளிக்கூடத்திற்குச் சென்றிருந்தேன். இங்கே ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பள்ளிக்கூடம். ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் எல்லை வகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கும், அந்த எல்லைக்குள்ளே வசித்தாற்தான் அந்தக் குறிப்பிட்ட பள்ளிக்கு அனுமதி. வேறு பள்ளிக்கூடத்திற்குப் போக முடியாது. எல்லைக்குட்பட்டிருந்தால் அனுமதி அப்பள்ளியில் தந்தேயாக வேண்டும். வேறு கதையில்லை. 6ம் வகுப்பிலிருந்து உயர்நிலைப் பள்ளி செல்லும்போது பரீட்சை ஒன்றிருக்கிறது. தேறினால் பிடித்தமான பள்ளிக்கூடத்திற்கு அனுமதிக்கு விண்ணப்பித்துப் (கிடைத்தால்) போகலாம்.

சரி, இன்றைய சின்னக்கதைக்கு இதொன்றும் அவசியமில்லை.(அப்ப ஏன் சொன்னேன்?) படிவங்களைக் கையளித்து வெளியில் வந்தோம். காரியாலயத்திற்கும் வெளிக்கதவுக்கும் இடைப்பட்ட ப்குதியில் பள்ளி நூலகம். அதை நாங்கள் கடந்து கொண்டிருந்த போது ஒரு மாணவி அதற்குள்ளிருந்து வெளியில் வந்தா. பத்து அல்லது பதினொரு வயதிருக்கும். "Whoo! next is Maths. I love Maths. Here I come" என்று துள்ளிக் கொண்டு வகுப்பை நோக்கிப் போனா. நண்பியும் நானும் புன்னகைத்துக் கொண்டோம்.

எனக்கும் கணிதம் மிகவும் பிடித்தமான பாடமாக இருந்தது 7ம் ஆண்டு வரை. கொழும்பு வந்ததும் பிடிக்கவேயில்லை. 8ம் ஆண்டு கொஞ்சம் பரவாயில்லை (புத்தகமும் கொஞ்சம் சிறிதானது போல ஒரு மாயை. அது மாயை தான் ..ஏனென்றால் 7ம் ஆண்டுக்குரிய புத்தகத்தினைப் போலல்லாமல் தடிப்பம் குறைக்கப்பட்டு நீள அகலம் அதிகரித்திருந்தது. அவ்வளவுதான்). ஆசிரியர்களால்தான் பெரும்பாலும் பாடங்களில் விருப்போ வெறுப்போ ஏற்படுகிறது என்பதை நம்புகிறேன். ஒன்பதாம் ஆண்டில்தான் ஒரு நல்ல, வல்ல, அன்பான, அறிவான (அதாவது எப்பிடி படிப்பிச்சா எங்களுக்கு வால் உட்பட எல்லாம் ஏறும் என்று தெரிந்த) அழகான ஒரு ஆசிரியர் வாய்த்தார். திருமதி ஜோண். அவவின் பாடம் என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். நானும் விதிவிலக்கில்லை. ஒன்பதாம் ஆண்டில் புதிதாய் அப்பள்ளிக்கூடத்தில் சேர்ந்திருந்தேன். முதல் நாளே வெளியில் ஏதோ பிராக்குப் பார்த்துக் கொண்டிருந்தவளை "நீர் பாத்துக்கொண்டிருக்கிறதை விட இன்டெரெஸ்டிங்கா சொல்லித்தருவன்" என்று சொல்லித் (திட்டாமல்) தன்பக்கம் திரும்ப வைத்தவர். 9 - 11 ம் ஆண்டுக்குக் கணிதவகுப்பு அவருடையது. 11ம் ஆண்டில் பொதுப் பரீட்சையில் கணிதப் பரீட்சை முடித்து வெளியில் வந்து அவவிடம் விடைகள் பற்றிப் பேசுகையில் தான் உறைத்தது ஒரு (இலகுவான) முழுக் கேள்வியைத் தவறவிட்டிருந்தது. அதுக்காக திரும்பப் போய்ச் செய்யவா முடியும்? நெஞ்சுத் தண்ணி வத்தினது போல உணர்ந்து கைகாலெல்லாம் சில்லிட்டுப் போய் நிற்கையில் அவவிடம் திட்டும் வாங்கிக் கட்டிக் கொண்டேன். நல்ல காலத்திற்கு சிறப்புச் சித்தி(D) கிடைத்தது.

அந்தப் பெண் அப்படி சொல்லித் துள்ளிக் கொண்டு போனதும் எனக்கு திருமதி ஜோணின் ஞாபகம்தான் வந்தது. திருமதி ஜோணைப் போல ஒரு கணித ஆசிரியர் வாய்த்திருக்கலாம் அம்மாணவிக்கும். இன்றைய பொழுதை அழகானதாக்கிப் போன அந்தப் பெண்ணுக்கு நன்றி.

0 படகுகள் :

பெட்டகம்