இவரும் அவரும்


அவரைப் பார்த்தபடியே நின்றிருந்தார். கொண்டாட்டத்துக்கு வந்த இடத்தில் அவரைக் காணக்கூடும் என்பதே இவருக்குத் தோன்றியிருக்கவில்லை.  கடைசியாகக் கண்டு சில ஆண்டுகள் ஆகியிருந்தன. தன்னில் வரும் மாற்றம் பற்றி அறியாதவராய் நாட்களை  இவரைக் கொண்டு  நிரப்பி வழியனுப்புபவராய்  முன்னர் அவர் இருந்தார். என்ன  நடக்கிறது என்று அவர் உணர்ந்த போது இவர் வெகு தூரம் போய்விட்டிருந்தார். 

சிறுவனோடு விளையாடிக் கொண்டிருந்தவரைக் கலைத்தது முன் வந்து நின்ற உருவம். நிமிர்ந்து பார்த்தார். இவர் அவரைக் கண்ட முதல் நாளில் முகம் நிறைத்திருந்த அதே சிரிப்பு கணத்தில் விரிந்தது . ஆச்சரியத்தின் சாயம் பூசிய முகம். இறுக்கக் கட்டிக் கொண்டார். அவர் சமநிலை கலைந்தது போல இவர் மெல்ல உணர்ந்தார்.  தன்னால் அவர் மனம் அலைவுறுவது தெரிந்து தான் விலத்தி இருந்தார். ஆனால் சில நாட்கள் படுத்தி எடுக்கும். ஒருவரை இந்தளவுக்குத் தன்னால் அலைக்கவும் மனம் உழலவும் செய்ய முயும் என்பதே பெரிய போதையாக இருக்கும். பூனை எலியைச் சீண்டுவது போல,   தூண்டில் போட்டு மீனைப் பிடிப்பது போல, வறண்ட மண் நோக்கி விழும் சில துளி மழை போல வருத்துவார். இவருக்குப் போதையை ஏற்றும் வகையிலேயே இவருக்கான அவரது இயல்பான பதிலோ நடவடிக்கையோ இருக்கும். இவரை என்றும் நோகாத அவரை அப்போது சற்றே வெறுக்கவும் செய்வார்.  பிறகு பாவமாயிருக்கும். வருத்தாமல் விலத்தி இருப்பார், நெடுநாட்களுக்குப் பிறகு திரும்பவும் போதை தேவைப்படும் வரை .

பரஸ்பரம் விசாரித்துக் கொண்டார்கள். அவரோ இறக்க முடியாதவற்றைச் சுமந்தபடி இருந்தார். இவருக்குத் தாளாத ஆச்சரியம் இப்படியும் ஒருவரால் இருக்க முடியுமா, தொடர்ந்து சுமக்க முடியுமா, எதற்காக  என்றெல்லாம் மருகினார். தொடர்ந்து எழுந்த படியிருந்த கேள்விகள் இவரில் இடப்பற்றாக்குறையால் திணறிக் கொண்டிருந்தன. அவரவர் திக்கில் திரும்பி நடந்த போது, தான் அறிந்தே விரும்பித் தோற்கும் ஒரே இடத்தை மீண்டும் உறுதி செய்தவராக அவர் புன்னகைத்தார்.  இறக்கி விட முடியாக் கேள்விகள் இவரில் கனக்கத் தொடங்கியிருந்தன.

பெட்டகம்