வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன்.



(என் கருத்துப்  பிந்தியதாயினும், எதையும் மாற்றப் போவதில்லையாயினும்) நான் கற்ற மட்/ வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் சரஸ்வதி சிலை நிறுவல் எனக்கு தனிப்பட்ட அளவில் ஏமாற்றமளிப்பதாயுள்ளது.

சிலை நிறுவப்பட்டுவிட்டது. எதற்காயிருக்கலாம் என்று யோசித்துப் பிடிப்பது மிகச் சுலபம். அத இந்தப்பதிவில சொல்ல வரவில்லை. பள்ளிக்கூட வளாகத்தில் சரஸ்வதியின் சிலை ஏன் தேவையில்லை  என்பதற்கான காரணங்களை முன்வைப்பதே இதன் நோக்கம்.

1. கிறிஸ்தவ மிசனரிமாரால் 1820ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாயினும் இப்பள்ளி ஒரு தேசியப் பாடசாலையாதலால் தற்போது எவ்வித சமய சார்புடைய நிறுவனங்களாலும் நடத்தப்படுவதில்லை.

2. அரசியலும் சமயமும் கற்பிக்கப்பட்டாலும், பாடசாலையானது அரசியல் மற்றும் சமய சார்பற்றிருக்க வேண்டும்.

3. பாடசாலையில் இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மாணவிகள் கற்கின்றனர். சிங்கள அரசினால் இழைக்கபட்ட அதே அநீதி தானே இங்கும் கிறிஸ்தவ இஸ்லாமிய மாணவிகள்/ஆசிரியர்கள் மீது இந்துக்களால் பிரயோகிக்கப்பட்டுள்ளது.  சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுவதாலும் அவர்களின் குரல் மதிக்கப்படாது போவதாலும் ஏற்படும் மனவுளைச்சல், தொடரும் மனத்தாங்கல்கள் பற்றித் தமிழரான எங்களுக்குத்தான் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறதே. கற்றவைகளும் அனுபவங்களும் தேவையான எச்சந்தர்ப்பத்திலும் நமக்கு கை கொடுப்பனவாக இருக்க வேண்டும்.

4. இந்தச் சிலையை அமைப்பதற்கான செலவீடு என்னவென்று தெரியவில்லை. ஆனால், கணிசமான தொகையாக இருந்திருக்க வேண்டுமென்பது எனது கணிப்பு. உதாரணத்திற்கு ரூ 1,00,000 என வைத்துக் கொள்ளலாம். சிலை அமைப்பதை விட பின்வருவனவற்றில் ஏதாவொன்றிற்காவது அப்பணம் செலவழிக்கப்பட்டிருந்தால் பிரயோசனமாயிருந்திருக்கும் என நினைக்கிறேன்.


- பாடசாலை நூலகத்திற்குப் புத்தகங்கள் வாங்குதல்.
- விளையாட்டு உபகரணங்கள் வாங்குதல்
- கணினிகள் வாங்குதல்.
- அறிவியல் கூடத்திற்கான உபகரணங்களோ, வேதிப் பொருட்களோ வாங்குதல்.
- வேறு தேவையான உபகரணங்கள் / தளவாடங்கள் வாங்குதல்.
- வறுமையான குடும்பத்து மாணவியரில் ஒருவரையோ சிலரையோ தேர்ந்தெடுத்து அவர்களுக்கான படிப்புச் செலவை ஏற்றுக் கொள்ளல். பணத்தை வைப்பிலிடுவதன் மூலம் அதன் பாவனைக்காலத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
- தேவைப்படும் கட்டிடத் திருத்த வேலைகள் செய்து கொள்ளல்.


இவை மட்டுமே எனக்குத் தோன்றியவை. இதை விட இன்னும் பலவற்றிற்கு  இப்பணம் ஆக்கபூர்வமாகப் பயன்பட்டிருக்கலாம்.

மும்மதத்தவரும் கற்கும் பள்ளியில் பெரும்பான்மை மதத்தவர் தெய்வத்தின் சிலை சொல்வது என்ன? எல்லா நேரத்திலும் எல்லாருடைய கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியனவல்ல என்பதை நாம் அறிவோம். ஆனால், சரியான கருத்து (அது ஒன்றேயாயினும்) பகிரப்படும் போது அங்கே ஒரு உரையாடலுக்கான தேவை வருகிறது. சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் அமைகிறது. சிலைக்கான மெதடிஸ்த திருச்சபையின் கண்டனம் சமய சம்பந்தமானது என்றாலும் அக்கண்டனத்திற்குப் பதிலாக 'யார் என்ன சொன்னாலும் சிலை நிறுவல் நடந்தே தீரும்' என்று பதிலளித்த அதிபர் மாணவியருக்குச் சொல்லாமல் சொன்னது என்ன? ஏனையோரின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியனவல்ல என்பதைத்தானே!

பிந்திய செய்தி:
  http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=36876


My dear school, I am disappointed and ashamed. 


0 படகுகள் :

பெட்டகம்