ஏழே சுரமா?.. இன்னும் இருக்கா?


நான் ஐந்தாம் ஆண்டு படிக்கும் போது, வெள்ளைக் கலையுடுத்து  விபுலானந்தாக் கல்லூரிக்குப் படிக்கப் போய், தானும் படிச்சுக் கொண்டு எங்களுக்கும் வீணை படிப்பிச்சா வாசி அக்கா (வீணை வாசிச்சதால அந்தப் பெயரில்லை. வாசுகி, மருவி வாசி ஆகிவிட்டது). அதுதான் கர்நாடக சங்கீதம் என்று அறிமுகமானது. வீட்டில பெரியண்ணர் மேகமே மேகமே என்டு தமிழ்ப்பாட்டுப் போடுவார். சின்னண்ணர் இங்கிலிசில பாட்டுப் போடுவார். இரண்டாமாள்தான் எனக்கு மைக்கல் ஜக்சனையும் நுஸ்ரத் படே அலி கானையும் காட்டிவிட்டவர். அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் நிற்கட்டும். என்னண்டு உலகம் ஒரு பொசிபிள் சங்கீத பூஷணத்தை இழந்ததெண்டு சொல்லுறன். 

ஆறாமாண்டு படிக்கும் போது இசை, நடனம், சித்திரம் என்டு பிரிப்பார்கள். முதல்ல எல்லாரும் சங்கீதம் (மேனாட்டு, கர்நாடகம் என்டு அதுக்குள்ளே 2 வகை. பள்ளிக்கூடத்தைப் பொறுத்து இரண்டுமோ அல்லது ஒன்றோ இருக்கும்). பிள்ளைகள் முதல்ல சங்கீதம் என்டு போறது. ஆசிரியை பாடச் சொல்லிப் பார்த்து தனக்கு தொண்டைத்தண்ணி வத்தாத அளவில உள்ள பிள்ளைகள் வடிகட்டிட்டு மிச்சங்களை நடன வகுப்புக்கு அனுப்ப, அவவும் வடிகட்டிட்டு சித்திரத்துக்கு அனுப்பி விடுவா. நடனத்தும் சித்திரத்துக்கும் விரும்பியே போற ஆட்களுமுண்டு. சங்கீதம் தன்னட்டப் படிக்கிற தைரியத்திலயோ என்னவோ என்னட்ட வாசியக்கா சொன்னா சங்கீதத்துக்குப் போகச் சொல்லி. நானும் போனன். பாடினன். ஆசிரியை எனக்குச் சங்கீதம் வராது என்டு சொல்லி அனுப்பிவிட்டா. அது உண்மையா இல்லையா எண்டு தெரியாது, ஆனாலும் பாட வராது என்று மனதில பதிந்து விட்டது. வந்து வீணை வாத்திச்சிட்ட சொன்னா அவவிட அம்மா , எங்கட ஊருக்கே பாலர் வகுப்பு எடுத்தவக்கு கோவம் வந்திட்டு. அதென்னண்டு, நீ சளியோட போய் பாடினனியா என்டு கேட்டா!! பிறகு அபிநயம் கொஞ்ச நாள் பிடிச்சு பிறகு கொழும்பு வந்ததும் சித்திரத்துக்கு மாறி திட்டித்திட்டி சோமசுந்தரப் புலவரிட பேத்திட்ட பள்ளிக்கூடத்தில படிச்சு ஒரு சி ஐயும் சித்திரத்துக்கு எடுத்தாச்சு.

பதின்ம வயசில கிடைச்சார்கள் சசி அண்ணாவும் சியாமாண்ணாவும். இசையமைப்பார்கள், பள்ளிக்கூட கலைவிழாக்களில் கலக்குவார்கள். அவருக்கெல்லாம் பாட்டு எழுதிக் குடுத்திருக்கிறமாக்கும்! இப்பவும் ஞாபகமிருக்கு, ஒரு முறை எதோ பாடிக் காட்டச் சொன்னார். நான் சொன்னன் எனக்குப் பாட வராது என்டு. ஏன் சொன்னார், உண்மையாத்தான் சொன்னாரா என்டெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, அலெறிக்ஸ் ஐஸ்கிறீம் கடைக்குப் பக்கத்திலே இருந்த ஷகியின் வீட்டில் நாங்க இருந்த மேசையில் பின்னேர வெயில் விழுந்து கொண்டிருந்த நேரம் சியாமாண்ணா சொன்னார் "everyone can sing".

சிட்னி வந்ததும் வீணையைத் தொடங்கினேன். தொடங்கினேன் என்பதற்குப் பன்மை இருந்தால் அதைச் சொல்லுவது தான் இங்கே பொருத்தமாயிருக்கும். அப்பதான் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க அறிந்து கொண்டேன். பாட வராது. அதன் நுணுக்க அழகுகள் விளங்காது. ஆனாலும் பிடிக்கும். அருணா சாய்ராமும் பொம்பே ஜெயசிறியும் என்னோடு எங்கேயும் வந்தார்கள். வருகிறார்கள். கொஞ்ச நாளைக்கொரு தரம் கேட்கிற பாடல்களின் வகைகள் மாறும். முழு கர்நாடக சங்கீதத்திலிருந்து தனி வாத்தியம் போய் நாட்டியத்துக்கான பாடல் வகைளுக்குள் தாவி நாடு தாண்டி மொழி தாண்டி அறியாத இடமெல்லாம் போய், திரும்பவும் பழகியதொன்றிடமே வாரங்கள்/மாதங்கள் கழித்து வந்து சேர்வேன். சில நாட்களை ஒரே பாடலே நிறைத்ததுமுண்டு.அது எல்லாருக்கும் உள்ள அனுபவந்தானே!

முதுநிலை ஆய்வு செய்கிறா என்று பகிடி பண்ணுமளவுக்கு நான் மூஞ்சிப் புத்தகத்தில் குடியிருந்த காலம் அது. ஒரு நாள், நாலு வருசமிருக்கும், சியாமாண்ணா ஒரு பாட்டைப் பகிர்ந்திருந்தார். பாட்டைப் போய்ப் பார்த்தவள்தான். இன்னும் அவ்வகையில் சந்தோசமாகச் சிக்கிக் கிடக்கிறேன். அது பாகிஸ்தான் கோக்ஸ்டூடியோ (CokeStudio)பாட்டு. இசைத் திறமையை வெளிக் கொண்டு வர என்று கோககோலா நிறுவன ஆதரவில் நடக்கிற நிகழ்ச்சி. பார்த்ததும் அதிலிருந்த அத்தனையும் என்னை ஈர்த்தது. அதைப்பார்த்ததும் இந்தியாவின் கோக்ஸ்டூடியோ தேடிப் பார்த்தேன். இசையிருந்தது. திறமையிருந்தது. என்றாலும் ஏதோ ஒன்று குறைவது போல உணர்ந்தேன். ஒரு வித செயற்கைத் தன்மை நிகழ்ச்சி  முழுவதும் விரவிக்கிடந்தது என்னை அதிகம் ஈர்க்கவில்லை. பாக் இசைத்திருந்த விதம் வித்தியாசமாயிருந்தது. நாட்டுப்புற, சூபி, நாடோடிகள் மற்றும் தொழிலாளர்கள் பாடல்களோடு அன்றாட வாழ்வியல் சொல்லும் பாடல்களும் கொண்டதாக இருந்தது. கர்நாடக இசையை 'morning raga' படத்தில் காட்டுவது போல ஒரு கலவை. இளந்தலைமுறையை ஈர்ப்பதற்காய் இருக்கலாம் அவர்கள் இந்த கலவை முறையை தேர்ந்தது. சரி இதிலென்ன என்கிறீர்களா, அப்பாடலை வழ்மையாகப் பாடும் ஆட்களையும், அவர்களது ஆடை ஆபரணங்கள் அவர்கள் பாவிக்கிற வாத்தியங்களையும் சேர்த்துக் காட்டியிருப்பார்கள். செவிக்கும் கண்ணுக்கும் ஒரு சேர விருந்து. சாப்பாடு என்டு கடைக்கு ஒரு ஆள் போக அவர் எதிர்பார்த்த வழமையான சாப்பாடாய் இல்லாமல் விதம் விதமாய் இருந்தால் அவருக்கு எப்படி இருக்கும். அப்படி இருக்கிறது எனக்கு கோக் ஸ்டூடியோ. பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். பாடலின் பொருள் கூட பலவற்றிற்குக் கிடைக்கிறது. உண்மையான விருந்துதான். பாட்டுகளிலும் அதனைப் பாடுபவர்களின் தோற்றத்திலும் அவர்தம் உடை, ஆபரணங்களிலும் தான் எத்தனையெத்தனை நுணுக்கங்கள் வித்தியாசங்கள். இத்தனையும் ஒரே நாட்டுக்குள்!!! நிலத்திலுள்ள விரிப்புகளை அருகில் காட்டுகிறார்களில்லை என்ற குறைதான் எனக்கு. பழங்காலத்திலே பாவித்த நரம்பு, தோல், காற்று, கொட்டு வாத்தியங்களென்று கூடப் பார்க்க முடிகிறது. உண்மையில் வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறது கோக்ஸ்டூடியோ.

அண்ணா பகிர்ந்தது ஜுக்னி. பாட்டில் ஆரிவ் லோகரின் உசாரோடு சேர்ந்து மீஷாவின் சிரிப்பு அள்ள்ளிக் கொண்டு போகும். 4ம் நிமிடத்தில் இரு வேறு தருணங்களில் வருவது, சேர்ந்து முத்துக்குளித்து அனுபவத்தைப் பகிரும் சந்தோசம். 07ம் நிமிடம் 47ம் நொடியில் மீஷா சிரிப்பார் பாருங்கள்.. அகிலன் கச்சேரியில் கஜனைப் பார்த்துப் புன்னகைப்பது பற்றிப் படலைக்காரர் சொல்லும் போது எனக்கு இதுதான் ஞாபகம் வரும். அடுத்து என்ன விளையாட்டெல்லாம் வரப்போகுது என்டு தெரிந்த ஒரு சிரிப்பு. இந்தப்பாட்டு ஒரு உதாரணம்தான். இதோட சேர்த்து piano guys என்று தேடி, ஒரு பியானோவும் ஒரு செலோவும் எங்கெல்லாம் போய் வருகின்றன எப்படியெல்லாம் நம்மை மயக்குகின்றன என்று பாருங்கள்.

சியாமாண்ணா சொன்ன 'எல்லாராலும் பாட முடியும்' என்பதற்கு அவர் சொன்ன சந்தர்ப்பத்தினையும் தாண்டிய பொருள் இன்றைக்கு எனக்குத் தெரியும். எல்லாருக்கும் பாட வரும். எல்லாருக்கும் பாட்டும் இருக்கிறது.   

0 படகுகள் :

பெட்டகம்