டும் டும் டும்

அப்பாடா.. ஒருமாதிரி திரும்பவும் வலைபதிய வந்துட்டன். வேலை பரவாயில்ல. போய் வாறதுக்குத்தான் eachway கிட்டத்தட்ட 80 நிமிசம் எடுக்குது. வீட்ட வந்து சமைச்சு சாப்பிட்டு படுக்கத்தான் நேரம் சரியா கிடக்கு. 2 கிழமை பயிற்சியெல்லாம் இந்த XPSP2 வெளியீட்டுக்குத் தான். ஒவ்வொருநாளும் 6- 7 handouts. வாசிச்சிட்டு போகோணும். இதுக்கு நடுவில சிட்னியில எனக்குக் கிடைச்ச முதல் நண்பிக்கு கலியாணம். வைச்சாளே கலியாணத்தை..காலம 8 மணிக்கு. விடியப்புறம் 5.15க்கு கிணிகிணியெண்டு சத்தம் போட்ட கடிகாரத்திட(உண்மையாவே "கடி"காரம் தான்) தலையில ஒண்டு போட்டுட்டு திரும்பிப் படுத்தன். 7.30 மணடபத்தில நிக்கச் சொன்னது ஞாபகம் வந்து துலைக்க...2.30 மணிக்கு படுத்து 5.30க்கு எழும்பின 3 மணித்தியால நித்திரை காணாது என்டு சொன்ன உடம்பும் மனமும் வலுக்கட்டாயமா ("V" குடிச்ச மாதிரி ;o) )உசார்ப்படுத்தப்பட்டன.பிறகென்ன...வழமையா நடக்கிற சீலைப்போராட்டம். நேரங்காலம் தெரியாம தலைப்பு பிளீட் வரமாட்டனெண்டு...ஆ!"இந்த சீலையை கண்டு பிடிச்சவன் மட்டும் என்ட கையில கிடைச்சா..."என்று வழமையான வீர வசனம். சரி "அன்புள்ள அத்தானை" எழுப்பி குளிக்க அனுப்பி நேரத்தைப் பாத்தா..ஐயய்யோ 6.30.!! தேத்தண்ணிக்கு தண்ணி வைச்சு, இரவு 2க்கு (பின்னேரம் மண்டபம் சோடிக்கப் போய் வேலைகள் செய்து நல்லா கூத்தடிச்சு,அங்கருந்து பொம்பிளையப் போய் பாத்திற்று வீட்ட வர 10.30- 11மணி, சீலைய அயர்ன் பண்ணி வச்சு{அம்மாவின் அருமை இப்பத்தானே தெரியுது!} வடிவா வெட்டி ஒட்டி கீறி வச்சிருந்ததையெல்லாம் சேர்த்தெடுத்து)செய்து முடிச்ச வாழ்த்து மடலை (scan பண்ண யோசிச்சனான்...பிறகு நித்திரக்களையில மறந்திட்டன்.)அதுக்கெண்டு தனிய விசேசமா செய்த பைக்குள்ள வைச்சு செலொடேப்பால ஒரு ஒட்டு. (அட...என்ன இது இன்னும் இந்த பிளீட் சரி வருதில்லயே..grr!)தென்னாபிரிக்காக்கு குடும்பம் நடத்தப் போறவக்கு வித்தியாசமா என்ட கையாலயே ஒரு மடல் செய்து குடுத்திருக்கிறம்.

மண்டபத்துக்கு வந்து அதில நிண்ட ஒரு அன்ரிய பிடிச்சி ஒருமாதிரி பிளீற்ற வழிக்கு கொண்டு வந்தன். பிறகு வழமையான சின்னச் சின்ன வேலைகள் செய்திட்டு கலியாணம் பாக்க வசதியா நண்பிகள் கூட்டம் முன்னுக்கு போய் இருந்து கொண்டம். இதுக்குள்ள என்னையும் சேர்த்து 4 பேர் தலை மயிர நேராக்கியிருந்தை கண்டு ஆச்சிரியப்பட்டிட்டன்.( தலைமயிரில ஒரு பரிசோதனை முயற்சியும் செய்யப் போறல்ல நான். 3 மாசத்துக்கு ஒருதரம் அடில வெட்டுறதோட சரி. தலை மயிர் நேராக்க வேணுமென்டு கன நாள் ஆசயா கிடந்த.ஒரு மாதிரி நிறைவேத்திட்டன்!) வழமையா எல்லாத்தயும் கதைச்சு கொள்ளுறனாங்க...இந்த முறை ஒத்தரும் தலைமயிர் அலங்காரத்த பத்தி மூச்சும் விடல்ல. சும்மா சொல்லப்படா... எல்லாற்ற ஒசிலும் நல்லாத்தான் இருந்தது. கல்யாணம் நல்லபடியா நடந்துது.

ஒரு சின்ன விசயம்..கூறைத் தட்ட வாங்க முன்னம் மாப்பிள்ளைட காலில கலியாணப்பொம்பிள விழுந்து கும்பிட்டவ. இத நான் ஒரிடத்திலயும் இதுக்கு முதல் காணல்ல. முருகன் கோயில் ரவி ஐயா தான் கலியாணம் நடத்தினவர். ஒரு வேளை இந்திய முறையா இருக்கலாம் என்டு நினைக்கிறன். ஏன் விழுந்து கும்பிடுற? என்னப் பொறுத்த வரையில கொஞ்சம் பிற்போக்காப் பட்டுது. இன்னொண்டு என்னண்டா அருந்ததி காட்டினவங்க. இளஞர் தின விழா இதழ்ல ஒராள், தான் எழுதியிருந்த கட்டுரையில மண்டபத்துக்குள்ள(பகல்ல) நடக்கிற கலியாணத்தில கூரைக்குள்ளால பாக்க முடியாத நட்சத்திரத்தை காட்டுறதப் பற்றி சொல்லிருந்தவர். பொம்பிள இந்த கட்டுரைய வாசிச்சிருக்கிறா போல..சிரித்து விட்டு மாப்பிள்ளையிடம் என்னவோ சொல்ல அவரும் சிரித்தார்.ஐயாவும் சிரித்தார். எங்களுக்கும் கட்டுரை ஞாபகம் வர நாங்களும் சிரிச்சு வச்சம். நல்ல சாப்பாடு. சந்தோசமாக, நல்ல படியா முடிஞ்ச கலியாணம். பொம்பிள-மாப்பிள மனம் நிறைஞ்சு வாழோணும் என்டு வாழ்த்திறன்.

விரைவில் வருவேன்

புதிதாய் வேலை தொடங்கி, பயிற்றுவிக்கப்படுகிறேன். சிலநாளாய் மழையைக் காணவில்லையென்று வானம் பார்க்கிறவர்கள் அடுத்த கிழமை அண்ணாந்து பார்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஒ.தே விரைவில் தொடரும்.

ஒலிம்பிக் தேசம் 3 ஒ.தே 2

கிமு 1200- 800
டோரியர்கள் கிரேக்கப்பெருநிலத்தில் பரந்த போது குறுநிலங்களைத் தரைமட்டமாக்கி அதன் குடிகளையும் தமக்கு அடிமகளாக்கினர். பின்னர் கிரீட்டையும் ஆசியாமைனரின் தென்மேற்குக் கரையோரப்பகுதியையும் கைப்பற்றினர். தெசலியர் என அறியப்பட்ட ஒரு இந்தோ-ஐரோப்பிய இனத்தவர் தெசலியில் வந்து குடியேறினர். கிரேக்கத்தில் முன்பிருந்தே வசித்து வந்த பழங்குடிகளில் எயோலியர் ஆசியாமைனரின் வடமேற்குக் கரைக்கும்; அயனியர் மத்தியகரைக்கும், லெஸ்போஸ், சமோஸ்(சமோசா அல்ல!!),கியோஸ்(பவித்ராவின் பூனைக்குட்டி அல்ல!!) ஆகிய தீவுகளுக்கும் இடம்பெயர்ந்த போதிலும் இவர்களிற் சிறு பகுதியினர் அவ்வாறு குடிபெயராது அற்றிக்காவிலும் நன்கு பலப்படுத்தப்பட்ட அதென்ஸிலும் தங்கியிருந்தனர். டோரியர்களின் ஆக்கிரமுப்புடன் ஆரம்பிக்கும் அடுத்த 400 வருட காலம் கிரேக்க வரலாற்றின் இருண்ட காலமாக வர்ணிக்கப்பட்டாலும் டோரியர்களை அவ்வளவு எளிதில் உதாசீனம் செய்து விட முடியாது. இவர்கள் தான் இரும்பை கிரேக்கத்திற்குக் கொண்டு வந்தனர். மட்பாண்டங்களை அலங்கரிப்பதில் புதுவிதமான முறையை கொண்டிருந்தன்ர். ஜியொமெட்ரிக் (தமிழில்??) உருவங்களை வரைந்தனர்.இவர்களாக இந்த அலங்கார உருவங்களைக் கண்டுபிடித்தனரா அல்லது அற்றிக்காவின் அயனியர்களிடம் ஏற்கெனவே பழக்கத்திலிருந்த அலங்காரக்கலையை மெருகேற்றினரா என்பது இன்னும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. ஆண் கடவுளரை வணங்கிய டோரியர்கள் பிற்பாடு மைசீனிய கடவுளரில் பொசெய்டொன், ஸீஸ், அப்பொலோவையும் சேர்த்து வணங்கினர். முடியாட்சி முறை கிமு800ம் ஆண்டளவில் முடிவிற்கு வந்து, மைசீனிய நாகரிகத்தில் போன்று நகர் சார்-குறுநில ஆட்சி ஏற்பட்டது. இக்குறுநிலங்களில் ஆட்சியதிகாரம் செல்வந்தரான நிலவுடமைப் பிரபுக்கள் கையில் இருந்தது.

கிமு 800- 480குறுநில ஆட்சி மீளவும் ஆரம்பித்த காலகட்டத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு என்பனவற்றின் உற்பத்தி மிகுந்திருந்தமை கிரேக்கர்களை கடல் வணிகம் நோக்கிச் செலுத்தியது. பினீஷியர்களின் வீழ்ழ்ச்சியாலேற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டு புதிய கிரேக்க குடியேற்றங்கள் வட ஆபிரிக்கா, சிசிலி,இத்தாலி, தென் பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டன.பினீஷிய மூலாதாரங்களைக் கொண்ட எழுத்துக்களும் கிரேக்கர்கள் சேர்த்த உயிரெழுத்துக்களும் கொண்டதாக உருவான கிரேக்க எழுத்து வடிவம் குறுநிலங்களை ஒன்றிணைத்தது. எல்லாக் குறுநிலங்களுக்கும் பொதுவான மைசீனிய வரலாற்றைக் கூறும் ஹோமரின் படைப்புக்கள், எல்லாக் குறுநிலங்களிலுமிருந்து வீரர்கள் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டி, கருத்துப்பரிமாற்றத்திற்கு டெல்ஃபி என்பன கிரேக்கர்களுக்கு ஒரு தேசிய உணர்வை அளித்தன. இக்காலகட்டம் இடைக்காலம் என அறியப்படுகிறது.

குறுநிலங்கள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான அமைப்பில் கட்டப்பட்டன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட அக்ரொபொலிஸ்(அக்ரொ-உயர்ந்த, பொலிஸ்- நகரம்)அந்த நிலத்தின் உயரமான இடத்தில் நிர்மாணிக்கப்பட்டது. இந்த அக்ரொபொலிசில் தான் நாட்டின் திறைசேரி, கோயில்கள் என்பன அமைந்திருந்தன. இதுவே முற்றுக்கைகளின் பொது மக்கள் தஞ்சம் புகுமிடமாகவும் விளங்கியது. அக்ரொபொலிசிற்கு வெளியே ஒரு சந்தையும் அதற்கும் அப்பால் குடியிருப்புகளும் அமைந்திருந்தன. சுயாட்சியின் கீழிருந்ததால் தத்தம் தேவைக்கேற்ப சட்டமியற்றி ஆட்சி நடத்திய குறுநிலங்கள் தம்மிடையே சண்டைகளையும் போர்களையும் ஏற்படுத்திக் கொண்டன.பரம்பரையாக அதிகாரத்தைப் பெற்றதனால் பிரபுக்கள் சாதாரண மக்களால் வெறுக்கப்பட்டனர். சில குறுநிலங்கள் புரட்சிக்காரர்களின் ஆட்சிக்குட்பட்டன.இதனை ஆரம்பித்து வைத்தவர் (கிமு 650)கொரிந்தைச் சேர்ந்த கைப்செலோஸ். பதவிகளைப் பரம்பரையாகப் பெறாது பலவந்தமாகக் கைப்பற்றிய இவர்கள் சாமானிய குடிமக்களின் நன்மையைத் தம் கருத்தில் கொண்டவர்களாக நோக்கப்பட்டார்கள்.

அதென்ஸ்:
புரட்சிக்கார்களின் ஆட்சிக்கு சில குறுநிலங்கள் உட்பட்டாலும் அதென்ஸ் இன்னமும் பிரபுத்துவ அதிகாரத்தின் கீழேயே இருந்தது. ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கப்பட்டு அம்முயற்சி தோற்கடிக்கப்பட்ட நிலையில் ட்ராகோ எனப் பெயர் கொண்ட சட்டவியலாளர் கிமு620 இல் மிகக் கடுமையான சட்டங்களை இயற்றினார். உதாரணம்: காய்கறி திருடினால் மரணதண்டனை. :O( கிமு 594ல் சோலோன் என்பவர் தலைமை சட்டவியலாளராக நியமிக்கப்பட்டார். குடிமக்களின் எல்லாக் கடன்களையும் இரத்துச் செய்ததுடன் கடன் காரணமாக அடிமைப்பட்டிருந்தவர்களையும் விடுதலை செய்தார். எல்லா அதென்ஸ்வாசிகளும் சட்டத்தின் முன் சமமாகக் கருதப்படவேண்டும் என அறிவித்து பரம்பரையாக அதிகாரங்களை சுவீகரிக்கும் வழக்கத்தையும் இல்லாதொழித்தார்.சட்டமியற்றுபவர்களையும் அதை நிலைநிறுத்துபவர்களையும் மக்களே வாக்கு செலுத்துவதன் மூலம் தேர்ந்தெடுக்கும்படி செய்தார். இவரது சீர்திருத்தங்கள் ஜனநாயகத்தின் வருகைக்கு கட்டியம் கூறுபவையாக அமைகின்றன.ஜனாதிபதிகளுக்கு முன்னோடியாக சோலோன் திகழ்கிறார்.

ஸ்பார்ட்டா:
ஐந்து கிராமங்களைக் கொண்டதான ஒரு குறுநிலம் பெலொபொனீஸ் குடாநாட்டில் ஸ்பார்ட்டா என்னும் பெயரோடு விளங்கிற்று. இங்கே முடியாட்சி நிலவியது. டோரியர்களின் வழித்தோன்றல்களான ஸ்பார்ட்டாவாசிகள் லக்கோனியாவின்(பெலொபொனீஸ்) ஒரிஜினல் குடிகளான ஹெலொட்ஸை தம் அடிமைகளாகக் கொண்டிருந்தனர். சமூக ஒழுங்கானது கட்டுப்பாடுகள் நிறைந்த இராணுவ அடிப்படையில் அமைந்திருந்தது.பச்சிளங் குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டு, குறையுடையவர்களாகக் காணப்பட்டால் (இறக்கும் வரை) மலையுச்சியொன்றில் விடப்பட்டார்கள்( பெற்றோர் நிலை..நினைக்கவே மனதைப் பிசைகிறது!). 7 வயதினை அடைந்ததும் சிறுவர் தத்தம் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு கட்டாயமான, கடுமையான இராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டார்கள். சிறந்த போர்வீரரை 'உற்பத்தி' செய்வதற்கு இம்முறை பின்பற்றப்பட்டது. சிறுமியர் இந்தப் போர்ப்பயிற்சியில் ஈடுபடுத்தப்படவில்லையாயினும், பின்னாளில் அவர்கள் சுகதேகிகளாகி, பலசாலிகளான ஆண் மகவுகளைப் பெற்றெடுக்கும் முகமாக சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. விமர்சனம் எதுவும் யாராலும் முன்வைக்க முடியாதபடி நடந்த ஸ்பார்ட்டா ஆட்சியில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லாது போனமையால், மற்ற குறுநிலங்கள் கனவு கண்ட ஒரு ஸ்திரத்தன்மை காணப்பட்டது. அதென்ஸ் வர்த்தக ரீதியாகப் பலம் பெற, ஸ்பார்ட்டா திறம்பட இயங்கும் இராணுவ இயந்திரமாக விளங்கியது. இவ்விரண்டு நகரங்களும் ஏனைய குறுநிலங்களை விட மேலோங்கி நின்றன.

ஒலிம்பிக் தேசம் 2 (ஒ.தே 1)

சைக்ளேட்ஸ் நாகரிகம்

இந்நாகரிகத்தின் வரலாறு (தமிழ்ச்சங்கத்தைப் போன்று) 3 காலகட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. முதல்(கிமு 3000 - 2000), இடை(கிமு 2000 - 1500), கடை(கிமு 1500 - 1100).இந்நாகரிகத்தினர் உலகிற்கு விட்டுச் சென்ற சொத்துகளில் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடிப்பன பரிஸ் மார்பிளிலான சைக்ளேட் சிற்றுருவங்கள். இச்சிற்றுருவங்கள் மட்டுமல்லாது வெண்கலம், எரிமலைக் குழம்பிலிருந்து பெறப்படும் ஒருவகைக் கல்- இவற்றாலான ஆயுதங்கள், தங்கநகைகள், கல் & களிச் சாடிகள் சட்டிகள் போன்றவற்றையும் இக்காலத்திற்குரிய எச்சங்களிலிருந்து நாம் காணலாம். தேர்ச்சி பெற்ற மாலுமிகளான சைக்ளேட்ஸ் நாகரிகத்தினர் மைலோஸ், தேரா(தீரா)(தற்போதைய சன்டோரினி) நகரங்களை மையமாகக் கொண்ட மிகவும் செழிப்பானதோர் கடல்சார் வாணிபத்தை நடத்தினர். அவர்கள் தமது ஏற்றுமதிப் பொருட்களை ஆசியாமைனர், ஐரோப்பா, வட ஆபிரிக்கா,கிரீட், மற்றும் கிரேக்கப் பெருநிலம் ஆகியவற்றிற்கு அனுப்பினர். இவர்கள் ஏஜியன், அயனியன் கடற் துறைமுகங்களை தம் பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களாக கொண்டிருந்தனர். மேலும் இத்தாலி, ஸ்பெயின் போன்ற மேற்கு சந்தைகளுக்குரிய கடல்வழிப்பாதையை பினீஷியர்கள், மினோஅர்களுக்கு முன்னரே பயன்படுத்தினர். மினொஅன், மைசீனியன் நாகரிகங்களின் பாதிப்பு இந்நாகரிகத்தில் காணப்பட்டது. தேராவில் எற்பட்ட எரிமலை வெடிப்பினால் இந்நாகரிகம் அழிவுற்றது என வரலாற்றாசிரியர்கள் நினைக்கின்றனர். இந்த எரிமலை வெடிப்பு என்றுமில்லாத அளவுக்கு பேரழிவை உண்டாக்கியதொன்றாகக் கருதப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட தேரா, காணாமல் போனதாகக் கருதப்படும் "அட்லான்டிஸ்" இன் தலைநகரமாக நம்பப்படுகிறது.

மினோஅன்
கிரீட்டின் மினோஅன் நாகரிகம் கிழக்கிலிருந்த எகிப்திய, மொசப்பொத்தேமிய(ஈராக்) நாகரிகங்களின் தாக்கத்தைக் கொண்டிருந்தது. இதுவரை ஐரோப்பாவிற் காணப்பட்ட எந்த ஒரு நாகரிகத்தையும் விட சிறந்ததாக விளங்கியது. சைக்ளேட்ஸ் நாகரிகத்தைப் போன்றே இத்ன் வரலாற்றையும் தொல்பொருளாராய்ச்சியாளர் 3 காலப்பகுதிகளாகப் பிரிக்கின்றனர். முதல் (கிமு 3000- 2100), இடை(கிமு 2100- 1500), கடை(கிமு 1500- 1100). முதல்(கிமு 3000- 2100) காலகட்டத்தில் நியோலித்திக் வாழ்க்கை முறையின் பல அம்சங்கள் இன்னும் புழக்கத்தில் இருந்தன. படிப்படியாக கிட்டத்தட்ட கிமு 2500ம் ஆண்டளவில் மக்கள், நோசோஸ்சை ஆண்ட மினோஸ் என்ப்படும் புராண அரசனின் பெயரால் அறியப்பட்ட தனித்தன்மை வாய்ந்ததொரு நாகரிகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இடைக்காலத்தை(கிமு 2500 - 1500) மினோஅன் பொற்காலம் எனலாம். அப்போது அவர்கள் அழகிய வேலைப்பாடுகளுடைய மட்பாண்டங்கள், உலோகவேலைகள், என்பனவற்றை தமது தொழிற்திறமை, கற்பனை என்பனவற்றை மூலமாகக் கொண்டு தயாரித்தனர். தனது இறுதிக்காலத்தில் வர்த்தகரீதியாகவும் இராணுவரீதியாகவும் வீழ்ச்சியுற்றது. இதற்குக் காரணமாயிருந்தது கிரேக்கப்பெருநிலத்தைச் சேர்ந்த மைசீனிய நாகரிகத்தின் வளர்ச்சியாகும். டோரியன் ஆக்கிரமிப்பாளர்களும், இயற்கை அனர்த்தங்களும் கிரீட் தீவைச் சூறையாடி அதன் திடீர் அழிவுக்குக் காரணமாயின. சைக்ளேட்ஸ் நாகரிகத்தினரைப் போலவேஇவர்களும் சிறந்த கடல் வல்லரசாக விளங்கினர். பினீஷியர்கள், கிரேக்கர்களுக்கு இவர்களே கடல்துறை முன்னோடிகள். இவர்களது பொருட்களும் மத்தியதரைக்கடற் பிரதேசத்தை தமது சந்தையாக கொண்டிருந்தன. எகிப்தியர்களால் மிகவும் மதிக்கப்பட்ட, போற்றப்பட்ட polychrome கமரெஸ் பாண்டங்களின் உற்பத்தி இடைக்காலத்தில் செழித்தது. கிமு 1700ம் ஆண்டளவில் நொசொஸ், ஃபீஸ்டொஸ், மாலியா, சேக்ரோஸ் எனும் இடங்களீல் பெரும் பூமியத்திர்ச்சி ஏற்பட்டது. இதனால் அழிந்த அரண்மனைகளை மீளக்கட்டும் போது அவற்றை ஒரு சிக்கலான கட்டமைப்பில் பல இரகசியப்பாதைகள், அடுக்குமாடிகள் உடையதாயும், அரச புரங்கள், ஊழியர் தங்குமிடம், வரவேற்புக்கூடங்கள், களஞ்சிய அறைகள், பட்டறைகள் என்பனவற்றுடன் உயர்தரமான, முன்னேற்றமடைந்த கழிவுநீர் அகற்றுவதற்கான கால்வாய் கட்டுமானமும் கட்டப்பட்டது. மினோஅன் ஈரச்சுதை(fresco) ஓவியங்கள் இவ்வரண்மனைகளின் உட்புறங்களை அலங்கரித்தன(இவற்றை தற்போது இராக்லியொன் தொல்பொருளாராய்ச்சி அருங்காட்சியகத்தில் காணலாம்). ஈரச்சுதை ஓவியங்கள் சாதாரணர் வீட்டிலும் காணப்பட்டன. இவ் ஓவியங்களில் சமய ஊர்வலங்கள், விளையாட்டுகள், எருதுச்சண்டை, தாவரங்கள், கடல் என்பன இடம்பெற்றன. இந்நாகரிகத்தினர் வாழ்வில், இயற்கையில் கொண்டிருந்த விருப்பை, ஈடுபாட்டைவெளிப்படுத்துவதிலும் மகிழ்ச்சியான, அமைதியான மக்கள் என்பதைக் காட்டுவதிலும் இந்த ஓவியங்கள் முக்கிய பங்கு வக்கின்றன. மினொஅன் நாகரிகத்தினர் கல்வியறிவுடையவர்களாகத் திகழ்ந்தனர். இவர்களுடைய ஆரம்ப எழுத்து வடிவம் எகிப்திய 'ஹைரோகிளிஃப்' ஐ ஒத்திருந்தது. பின்னர் கோட்டு வடிவ எழுத்திற்கு முன்னேறினர். இதனை தொல்பொருளாய்வாளர் Linear A என அழைக்கின்றனர். இவ் எழுத்து வடிவம் இன்னும் decipher பண்ணப்படவில்லை. இந்த எழுத்து வியாபார ஒப்பந்தங்கள், கொடுக்கல்வாங்கல்கள், அரச களஞ்சியத்திலிருந்த பொருட்களின் பட்டியல் என்பனவற்றை குறித்து வைக்க மட்டுமே பயன்பட்டது எனவும் தனிமனித கருத்துக்கள் இவ்வெழுத்துருவில் பதியப்படவில்லை எனவும் கருதப்படுகிறது. இந்நாகரிகத்தின் கிமு1500க்குப் பின்னான அழிவு மைசீனிய ஆக்கிரமிப்பாளரால் மட்டுமன்றி சைக்ளேட்ஸ் தீவுகளில் ஒன்றான தேராவில் ஏற்பட்ட எரிமலைக் குமுறலால் தூண்டப்பட்டு ஏற்பட்ட பூமியதிர்ச்சி தன்பங்கிற்கு உருவாக்கிய பேரலைகளால் ஏற்பட்டதும் என வரலாற்றாசியர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

மைசீனியர்
மினோஅன் நாகரிகத்தின் வீழ்ச்சியும் மைசீனிய நாகரிகத்தின் அசுர வளர்ச்சியும் சமகாலத்தில் நடந்துள்ளன. கிமு 1900- 1100 வரை ஆயுளை கொண்டிருந்த மைசீனிய நாகரிகத்தின் உச்சகட்டமாக பொற்காலமாக கிமு1500- 1200 வரையான காலத்தைச் சொல்லலாம். இந்நாகரிகத்தின் பெயர்க் காரணம் மைசினீ எனப்படும் புராதன நகரம். ஒரு பொது ஆட்சியாளரின் கீழ் அமைதியாக இருந்ததை குறிப்பதாக நகரங்களை சுற்றி மதில்களோ சுவர்களோ அற்ற மினொஅர்களின் அரசாங்கத்தைப் போலன்றி மைசீனிய நாகரிகத்தில் பல சுதந்திர குறு நில ஆட்சிகள் காணப்பட்டன. கொரிந்த், பைலோஸ், திரைன்ஸ் இவற்றுடன் பலம்மிக்க மைசினீயும் இச்சுதந்திர குறுநிலங்களுக்குள் சில. இலகுவில் தற்காத்துக் கொள்ளக்கூடியதான மலையுச்சிகளிலே மதிலாற் சூழப்பட்ட அரண்மனைகள் காணப்பட்டன. மைசீனியர்களின் முதுசொம் தங்கநகைகள், அழகுக்கலைப் பொருட்கள் என்பன. இவற்றை தற்போது அதென்ஸிலுள்ள தொல்பொருளாராய்ச்சி அருங்காட்சியத்தில் காணலாம். இவர்களுடைய எழுத்து Linear B என அறியப்படுகிறது. இதனை decipher பண்ணிய மொழி ஆய்வாளர்களால் கிரேக்க மொழியின் ஆரம்ப வடிவம் என இது அறியப்பட்டுள்ளது. கிரேக்கக் கடவுளரின் முன்னோடிகளை இம்மக்கள் வணங்கியுள்ளனர். போர்வீரராய் விளங்கிய இந்நாகரிகத்தினர் மறுபிறப்பில் நம்பிக்கை உடையவராய் இருந்தனர். கிமு 1500ம் ஆண்டளவில் மினொஅன் இடங்கள் அழிக்கப்படுகையில் மைசீனியர்களும் ஒரு சில இடங்களைத் தாக்கியுள்ளனர். மைசீனிய குறுநிலங்கள் சேர்ந்து ட்ரோயை எதிர்த்துப் போர் தொடுத்தமை குறிப்பிடத்தக்கது. மைசீனிய நாகரிகத்தின் தாக்கம் கிரீட்டையும் தாண்டி எகிப்து, மொசப்பொதேமியா, இத்தாலி வரை சென்றிருந்தது என்பதற்கு அவ்விடங்களில் தொல்பொருளாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் சான்று பகர்கின்றன. இந்த மைசீனிய நாகரிகம் இத்தாலி, லிபியா, அருகேயிருந்த கிழக்குப் பிரதேசங்கள் என்பனவற்றிற்குப் பரவியது. உள்நாட்டுப் பூசல்களாலும் டோரியர்களின் கிமு1100ம் ஆண்டளவிலான படையெடுப்பினாலும் இந்நாகரிகம் அழிவுற்றது. இதன் மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஏஜியன் தீவுகள், சைப்ரஸ் மற்றும் லிபியாவுக்கு இடம் பெயர்ந்தனர்.

ஒலிம்பிக் தேசம் 1

கிரேக்க வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.பரந்த கிரேக்கத்தின் பல பகுதிகளிலும் 1.5 - 2 மில்லியன் வருடத்திற்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதை தொல்பொருளாராய்ச்சி மூலம் அறியக் கிடைக்கின்றது. பெட்ரலோனா சல்கிடிகியில் (நாக்கு சுளுக்குதா?) கண்டெடுக்கப் பட்டதைப் போன்று fossilized மண்டையோடுகள், வீட்டுப்பாவனைப் பொருட்களின் மிச்சங்கள், நகைகள், பல்வேறு உலோகங்களினாலான கலைப் பொருட்கள் என்பன தொல்பொருள் ஆராய்ச்சியாளரினால் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவை கற்காலத்திலிருந்து கிரேக்கம் அடைந்த பண்பாட்டு வளர்ச்சிக்கான சாட்சிகளாகக் கருதப்படுகின்றன. நியோலித்திக் காலப் பகுதியில் (கி.மு 6800 - 3200) நிரந்தரக் குடியேற்றங்கள் கிரேக்கத்தில் அமையப்பெற்றன. இவை கால்நடை வளர்ப்பு, விவசாயம், பண்டமாற்று போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்ட சிறந்த பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்டிருந்தனவாம். கலையும் முக்கிய இடம் பெற்றிருந்தது. தொல்பொருளாராய்ச்சியின் போது அறியப்பட்ட/பெறப்பட்ட கட்டடக்கலையின் சிறந்த படைப்புகளின் இடிபாடுகள், கல்லறைகள், மனித்/மிருக உருவச்சிலைகள், நகைகள், நாணயங்கள், முத்திரைகள் மற்றும் அக்காலத்தில் மக்கள் பாவித்த கருவிகள் போன்றன நியோலித்திக் காலத்து நாகரிகத்திற்குரிய அடையாளங்களாகும். இக்குடியேற்றங்கள் அமைந்திருந்த இடங்களில் தற்போது அடையாளம் கணப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஆயிரத்தைத் தாண்டுகிறது. இவற்றிலே காலத்தால் முந்தியதாகக் கருதப்படுவது கி.மு 6000 ஐச் சேர்ந்ததாகும். இவற்றுள் பிரபலமானவை தெசெலியாவில் உள்ள செஸ்க்ளோ & டிமினி, கிரீட்டிலுள்ள வெர்னா, அர்கொலிடா, நொசோஸ் என்பன.

கிட்டத்தட்ட கி.மு 3000 அளவில் அண்மையிலிருக்கும் (துருக்கியில்) ஆசியா மைனரிலிருந்து குடி பெயர்ந்த இந்தோ-ஐரோப்பிய இனத்தவர் கிரேக்கப் பெருநிலத்தில் கால் பதித்து அங்கிருந்த பழைய நியோலித்திக் மக்களை படிப்படியாக வெற்றி கொண்டனர். இந்தோ-ஐரோப்பியரிடம் காணப்பட்ட வெண்கலம் பற்றிய அறிவு தான் கிரேக்கத்தின் வெண்கல யுகத்திற்கு தோற்றுவாயாக அடையாளம் காணப்படுகிறது. வெண்கலத்தின் அறிமுகம் , ஏனைய உலோகங்கள் பற்றிய அறிவு தொழிநுட்பம் என்பன தேசத்தின் அன்றாட வாழ்க்கை, சமூக ஒழுங்கமைப்பு என்பவற்றில் மாற்றத்திற்கும், மற்றும் வர்த்தகத் தொடர்புகளுக்கும் வித்திட்டன. வெண்கலம் ஆயுதத் தயாரிப்பில் முக்கியமானதாகக் கருதப் பட்டதால் கருங்கடலிலிருந்து தெற்கு ஏஜியன் வரை வர்த்தகத் தொடர்புகள் ஏற்பட்டன. இவ்வர்த்தக வலைக்கட்டமைப்பு உலோக வியாபரத்திற்கே பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டது. ஏஜியன் கடற்பிரதேசத்தில் மீன்பிடியும் வணிகமுமே பிரதானமாக இருந்தன. இவையிரண்டிற்கும் ஏதுவாக இருந்ததால் கிரேக்க பெருநிலத்தை விட கரையோரப் பிரதேசங்களும் தீவுகளுமே அதிகளவு மக்கள் குடியேற்றத்தைக் கண்டன. இவ்விடங்களே இதன் மூலம் முதலாவது ஐரோப்பிய நாகரிகத்திற்கு வழி கோலின. வெண்கல யுகம் 3 பிரதான நாகரிகங்களுக்கு கருவறையாகியது. அவை: சைக்ளெடிக், மினோஅன், மைசீனியன் என்பன.

வெண்கல யுகத்தில் உலோக வேலைகள், உலோகச் சேர்க்கைகள் பற்றிய அறிவு வளர்ந்து அபிவிருத்தியடைந்து பல துறைகளிலும், முக்கியமாக விவசாயத்துக்குரிய கருவிகள், கலை வடிவங்கள் என்பவற்றில் எழுச்சிமிகு மாற்றங்கள் கொண்டுவந்தது. மேலும் இந்த காலகட்டத்தில் கால்நடை வளர்ப்பு, வர்த்தகம், விவசாயம், உற்பத்திகள் என்பன ஒரு ஒழுங்கிற்குள் வரையறுக்கப்பட்டு கட்டுக்கோப்புடன் வளர்ச்சியடைந்தன. தொழினுட்பத் திறமை, நகர அபிவிருத்தி,வேலைப்பகிர்வு, சமூக அமைப்பு, கலைவளர்ச்சி இவற்றுடன் (ஆரம்பநிலை) நிர்வாக அறிவும் திறமையும் கிரேக்கப் பெருநிலத்தை ஒரு சிறந்த நாகரிகம் உருவாவதற்கான விளைநிலமாக, அந்நாகரிகம் வளர்வதற்கு ஒரு தொட்டிலாக அடையாளப்படுத்தியது. முன்னே குறிப்பிட்டது போல வெண்கல யுகத்தில் 3 பிரதான நாகரிங்கள் இருந்தன. ஒவ்வொன்றும் தனித்தனி வழியே சென்று பல்வேறு கட்டங்களைத் தாண்டி வளர்ந்தன.

ஏஜியன் பிரதேசத்தில் செழித்ததும், ட்ரோயிலிருந்த துரோஜன் நாகரிகம், வடகீழ் ஏஜியன் தீவுகள் மற்றும் சைக்ளேட்ஸ் தீவுகளைச் சார்ந்த சைக்ளேட்ஸ் நாகரிகம் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டதும், முதலாவதான நாகரிகமாகும். இரண்டாவது கிரீட்டன்/மினோஅன் நாகரிகம். மத்தியகிழக்கு நாடுகளுக்கான கடல்வழிப் பாதையில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிரீட் தீவில் நிலை கொண்டிருந்தது.இதன் முக்கிய நகரங்கள் நோசோஸ், ஃபீஸ்டோஸ், ஸேக்ரோஸ் மற்றும் மாலியா என்பன. ( கி.மு 1500ல் மைசீனியரின் கையில் வரும் வரை மத்தியதரைக்கடற் பிரதேசத்தில் கிரீட் கலாச்சாரமும், வாணிபமுமே ஆதிக்கம் செலுத்தின.) மூன்றாவதாக குறிப்பிடப்பட்ட மைசீனியன் நாகரிகம் ஹெலனிக் அல்லது ஹெலடிக் எனவும் அறியப்படுகிறது. இந்நாகரிகம் கிரேக்கத்துப் பெருநிலத்திலும், குறிப்பாக பெலோபொனீஸ் குடாநாட்டிலும் செழித்தது. இதனுடைய முக்கிய நகரங்கள் மைசீனி,திரைன்ஸ், பைலோஸ்.


பெட்டகம்