மனக்கறை

அழகானதொரு கடற்கரைப்புறம் அசிங்கமாகிப்போன கதை:

க்ரொனொலா: இரண்டு வாரங்களுக்கு முன்பு - பணிமுடிந்து நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு தன்னார்வ lifeguardகள் மத்தியதரைக்கடற்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் தோற்றமுடைய ஒரு குழுவினரால் "இது எங்களுக்கான கடற்கரை. இங்கு எங்கே வந்தாய்? போ" என்று பயமுறுத்தப்பட்டார்கள். "எல்லாருக்குமான கடற்கரையில், உங்களைப் பாதுகாக்கவே நாங்கள் செயல்படுகிறோம்" என்று பதில் சொன்னதற்கு பரிசு மூர்க்கமான தாக்குதல். தாக்கப்படுவதைக் கண்டு சண்டை விலக்க ஓடிவந்த மூன்றாவது lifeguardம் பலமாகத் தாக்கப்பட்டார்.

ஒரு வாரத்திற்கு முன்: கடற்கரையில் lifeguardகள் தாக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் மத்தியகிழக்கு நாடுகள்/மத்தியதரைக்கடற்பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள் போன்று தோற்றமுடையோர் தாக்கப்பட்டார்கள். காவலர் பாதுகாப்பளிக்க நேரிட்டது. lifeguard சங்கத்தினர் சில லெபனானியர்களுக்குத் தம் அலுவலகத்தில் பாதுகாப்பளித்தார்கள்.

அணிதிரண்ட அன்றிரவும், தொடர்ந்த இரவுகளிலும்: தம்மினத்தவர் தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நொருக்கப்பட்டு, வீடுகளுக்கு கற்களெறியப்பட்டன.

பதிலுக்குப் பதில் என்று தொடர்கிறது சிட்னியில்.

பதட்டம் நிலவுகிறதென்றும், பிரச்சனைப்பட்டார்களென்றும் சொல்கிற ஊடகங்கள், பிரச்சனைகளுக்கான அடிப்படைக் காரணங்கள் பற்றி அலட்டிக் கொள்வதாய்க் காணோம். சம்பந்தப்பட்டவர்கள்: லெபனான்/பக்கத்து நாடுகளிலிருந்து இங்கே வந்து குடியேறியோர்/இரண்டாம் தலைமுறை & வெள்ளையர். (ஆக, அவுஸ்திரேலியனை, இன்னொரு அவுஸ்திரேலியன் தாக்குகிறான்!). இந்த வெள்ளை அவுஸ்திரேலியர்களுக்கு இருப்பது ஊடகங்களாலும் அமெரிக்காவுக்கு வால் பிடிக்கும் அரசினாலும் புகட்டப்படும் செய்திகள். இவர்களுக்கு மத்தியகிழக்கு நாடுகள் / மத்தியதரைக்கடற்பிரதேசங்களிலிருந்து வந்தவர்களென்றால் ஒரு பீதி. தீவிரவாதியாக இருப்பானோ.. குண்டு வைப்பானோ என்று. அந்த பாதுகாப்பின்மையே ஒருவித மூர்க்கமான தற்காப்பு உணர்ச்சியை வளர்க்கிறது.

இங்கே, லெபனானியர்களைப் பற்றிய பொதுவான அபிப்பிராயம் நல்லதன்று. இளைஞர்கள் சிலர் சேர்ந்தால் பொது இடத்தில் intimidating ஆக நடந்து கொள்வதுண்டு. இது லெபனானியர்கள் மட்டுமல்ல என்றாலும், கொஞ்சம் வன்முறை அதிகமானவர்கள் என்று கருதப்படுவதால் இவர்களே முன்னிறுத்தப்படுகிறார்கள். குழு வன்புணர்வுச் சம்பவங்களும் நடந்துள்ளன. வன்புணர்ந்த குழுவினர் இச்சமூகத்தினர் என்பதும் ஒட்டுமொத்த சமூகத்தின் மீது வெறுப்பையும், ஒரு வித அச்சத்தையும் தோற்றுவித்திருக்கிறது. எந்தச் சமூகத்திலும் பிரச்சனைக்குரியவர்கள் சிறு அளவில் இருக்கத்தான் செய்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ளாமல் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த எல்லாருமே இப்படியானவர்கள் என முத்திரை குத்துவது எனக்கென்னவோ முட்டாள்தனமாகப் படுகிறது.

பிடுங்குப்பாடாக (நன்றி வசந்தன்) இருக்கிறதைப் பற்றி லெபனானியரொருவர் பத்திரிகைக்கு "எப்போதும் ஒரு படி குறைவாகவே நடத்த/பார்க்கப்பட்டோம்; குழு வன்புணர்வுச் சம்பவங்கள் நடந்த போது ஒட்டுமொத்தமாக(அந்த ஒரு சிலர் காரணமாக) எங்கள் சமூகம் ஒதுக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்டோம். இப்படியானவற்றால் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம்." என்று சொல்கிறார். கடைசியாக அவர் சொல்லியிருப்பது என்ன தெரியுமா? "வன்முறைக்குக் காரணம் முஸ்லிம் லெபனானியர்கள்தான்; அவர்களுடனான பிரச்சனை அவர்களுடனேயே பேசித்தீர்க்கப்படவேண்டிய ஒன்று. அதனால் கிறிஸ்துவ லெபனானியர்களான எங்களைப் பலிகடாவாக்காதீர்கள்". இது எப்படி இருக்கு?

கடற்கரை எல்லாருக்குமானது; தனிப்பட்ட குழுவுக்கோ அதைச் சார்ந்தவர்களோ மட்டுமானதல்ல என, வாழ்க்கை முறையைக் காக்க வெளிக்கிட்டவர்கள் - lifeguards மீதான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் - வன்முறைக்கு எதிரானதாக ஒலிக்கத் தொடங்கியது எப்படி/எப்போது இனவெறி சாற்றும் ஒன்றாக முகம் மாற்றித் தடம் மாறியது என்று தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறார்கள்.

இனவெறி எல்லாருக்குமில்லை. இருக்கிற சிலர் அதை வெளிக்காட்ட நல்லதொரு சந்தர்ப்பமாகவே இதைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு வெள்ளையர் அல்லாதோர் எவரும் அவரவர் சொந்த நாட்டிற்குத் திரும்ப வேண்டியவரே. அவுஸ்திரேலியா ஒரு பல்கலாச்சார நாடு என்பதோ, வேறு நாட்டிலிருந்து வந்து இங்கு வாழ்வோர் நாட்டுக்குச் செய்யும் பங்களிப்பைப் பற்றியோ இவர்கள் சிந்திப்பதில்லை. இவர்கள் ஒருபுறமென்றால், மறுபுறத்தில் இங்கே வந்து வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டுள்ளோரின் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட சமூகத்தினர் ஊடகங்கள், அரசு புண்ணியத்தில் சாதாரண சராசரி மனிதர்களாய், குடிமக்களாய்ப் பார்க்கப் படாமல் விடப்படுகையில், அதன் காரணமாக ஏற்படும் ஆத்திரம், காழ்ப்புணர்ச்சி என்பவற்றால் ஆட்கொள்ளப்பட்டு வேண்டாத செய்கைகள்/பேச்சு/எண்ணங்களுடையவர்களாக மாற்றப்பட்டவர்களாய் காணப்படுகிறார்கள்.

அத்தகைய கொஞ்சப்பேரின் முட்டாள்தனத்தாலும் குறுகிய மனப்பாங்கினாலும் ஒரு வேண்டாத சிறு பொறியாய் ஆரம்பித்தது பெரிதாய்ப் பரவுகிறது. கடுமையான சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலே இந்தப்பிரச்சனையை கட்டுமீறிப்போவதிலிருந்து உடனடியாய்த் தடுக்கும். நாளாந்த நடவடிக்கையோ வாழ்க்கையோ கொஞ்சம் பாதிக்கப்பட்டாலும், உடனடியாக மேலும் இனவெறி தூண்டும் வன்முறைச் சம்பவங்கள் நடக்காதிருக்கும்படி கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல், காவலர்களுக்கு இன்னும் கூடிய அதிகாரங்கள் அளிக்கப்படல் போன்றவை வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கையையும் தீவிரத்தையும் குறைக்க உதவும்.

ஆனால், என்னதான் அதிகாரங்கள் வழங்கப்பட்டாலும், சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டாலும் இருபகுதியினருமே பதிலுக்குப் பதில் என்று நடந்து கொண்டால் ஒரு நாளும் முடிவு வராது. Political correctness பார்த்து, நோகாமல் நொய்யாமல் தீர்வு காண்பதென்பது முடியாது. இரு தரப்புமே பிரச்சனை இருபக்கமும் இருக்கிறதென்பதை உணர்ந்து அதைப் பற்றித் தெளிவாகப் பேசி தீர்க்கமான முடிவெடுத்து அதனைச் செயற்படுத்த முற்படும் வரை, இப்போது க்ரொனலாவிலும் மரூப்ராவிலும் நடப்பது தொடர்ந்து வேறு வேறு இடங்களில் வெவ்வேறு வடிவங்களில் தலைதூக்கி, ஊடகங்களுக்குச் சிலநாள் தீனியாய் இருக்குமேயன்றி சுமுகமான உறவுள்ள சமூகம் உருவாகும் சூழ்நிலை தராது.

4 படகுகள் :

துளசி கோபால் December 15, 2005 5:18 pm  

நல்ல நடுநிலையான பதிவு ஷ்ரேயா.

இங்கேயும் இந்த கலாட்டாவை ரெண்டு மூன்று நாட்களாகத் தொடர்ந்து தொலைகாட்சியில் கண்பித்தபடி இருக்கிறார்கள்.

தாணு December 15, 2005 8:14 pm  

//எந்தச் சமூகத்திலும் பிரச்னைக்குரியவர்கள் சிலர் இருக்கத்தான் செய்வார்கள் என்று தெரியாமல் மொத்த சமூகத்தையும் முத்திரை குத்துவது// அட அங்கே கூட அதே மனோபக்குவம்தானா?

`மழை` ஷ்ரேயா(Shreya) December 16, 2005 10:26 am  

துளசி் - ஊர் இரண்டுபட்டால் ஊடகக்கூத்தாடிக்குக் கொண்டாட்டம்!!!

தாணு - வீட்டுக்கு வீடு வாசல்படி! எங்கேயும் இருப்பது தான் என்று தோன்றுகிறது. :O(

வசந்தன்(Vasanthan) June 27, 2006 2:11 am  

நல்ல பதிவு.

பெட்டகம்