அறைக்குள் பூக்கள்


 அறையெங்கும் கமகமக்கிறது

 காற்றில் மிதக்கும் வாசனை.

கதவு திறந்திருக்கிறது

மரத்தில் உள்ள பூக்கள் அறைக்குள் நடமிடுகின்றன. 

இங்கே பூக்கள் பூக்கள் அல்ல. 

 


 

 

 

சேய்மை

முதலில் அம்மா மட்டுமே இருந்தார். அவருக்குள் நான் இருந்தேன். 
 
பிறகு, அவர் அதே ஊரில் வேலைக்குப் போவார், வீட்டில் எம்மியுடன் பத்திரமாய் நானிருந்தேன். 
அம்மா எப்போதும் இருந்தார் - பாடசாலையில் நானும் வைத்தியசாலையில் மருந்தாய் அம்மாவும் இருக்கையிலும், பக்கத்து நகருக்குப் போன போதும், விடுமுறைக்கு எம்மியுடன் போகும் நாட்களிலும், வண்டியேறி அம்மாவுடன் பயணம் போகையிலும். 
 
போர் எங்களூருக்கும் வந்து கதவைத் தட்டிய பொழுதிலும் அம்மா இருந்தார். பிறகு நாங்கள் அந்தச் சிறு தீவின் கிழக்கிலும் மேற்கிலுமாய் ஆனபோதும் எழுவான்கரையில் சூரியனோடு சேர்த்து அம்மாவும் இருந்தார். 
 
தீவின் படுவான்கரையில் மீண்டும் சேர்ந்து கொண்டோம். பதின்மத்தின் அத்தனையையும் நான் காட்ட, அம்மாவாய் மட்டுமே இருந்தார் அம்மா. அவரில்லாமல் -  தந்தைக்கொப்பான அண்ணனுடனே இருந்தாலும் கூட - நான் தவிப்பேன் என்பதை நோர்வேயிலுள்ள ஒரு கிராமமே  நினைவு தெரிந்த என் இருபதுகளின் ஆரம்பத்தில் முதலில் எனக்குச் சொன்னது. காலப்போக்கில் மனதின் அடுக்கொன்றில்  அந்த அறிதல் மறைந்து போயிற்று. அப்பொழுதும் அம்மா இருந்தார்.
 
குட்டித்தீவிலிருந்து அகன்று பெருந்தீவில் வாழ்வு என்றானது. அப்போதும் அம்மா இருந்தார். தொலைபேசியின் மறுமுனையிலும் கணினித் திரையிலும்.. அல்லாத போதுகளிலும்.
நினைவழிவு நோய் அம்மாவைப் பற்றிக் கொள்ள முன்பு இத்தனை இறுக்கமாய் நான் அம்மாவைப் பற்றிக்கொண்டதில்லை என்றே நினைக்கிறேன். அன்பும் பாசமும் இருந்தன. ஆனால் வாழ்க்கை என்முன் விரிந்து கிடந்தது. என்னிலும் 45 ஆண்டுகள் மூத்த அம்மாவுக்கு வயது போகிறது என்பது பற்றிச் சிந்தித்திராத காலம் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். 
 
அம்மா - சுதந்திரமாய்த் தன்னிறைவாய், எல்லாவற்றையும் தானே கவனிப்பவராயும் மற்றவருக்கும் செய்து தருபவராயும் இருந்தார். 
எங்கேயும் பயணிக்கத் தெரிந்த, 
எந்த அலுவலகத்திற்கும் போய் வேலைகளை முடிக்கத் தெரிந்த, 
பயமில்லாத, 
ஊக்குவிக்கிற, 
எல்லாருடைய பிறந்த நாட்களையும் ஞாபகம் வைத்திருந்து வாழ்த்து மடல் அனுப்பும்,
தொலைபேசுகிற, 
யாரையும் அன்புடனே எப்போதும் பார்க்கும் அம்மா கொஞ்சம் கொஞ்சமாய்க் காணாமல் போகத் தொடங்கினார். 180 பாகை மாற்றம். அவரில் தங்கியிருந்த எம்மில் அவர் சார்ந்து கொண்டார். அது புதியதாய் இருந்தது. அம்மா இருந்தார்.
 
என்னத்தை எப்படி எப்போது எங்கே செய்ய வேண்டுமென்று அம்மாவுக்குத் தெரியாமல் போனால் என்ன செய்வது? யோசித்திருக்கிறேன். 
அப்படியே அம்மா அவற்றைத் தெரியாதவரானார். அதுவும் புதியதாய் இருந்தது. அம்மா இருந்தார்.
 
வாழ்க்கையில் சில கேள்விகள் விடாமல் திரும்பத்திரும்பத் தோளில் தட்டும். அம்மா என்னை மறந்து போனால் என்ன செய்வது? இந்தக் கேள்வி என்னைப் பலநாட்கள் துரத்தியபடி இருந்தது. சில நாட்களில் எட்டிப்பிடித்து விடும். சில நாட்களில் அக்கேள்வியை எதிர்கொள்ளாவண்ணம் மனதைத்  திசைதிருப்பி விடுவேன்.  
அப்படியே அம்மா மறந்தும் போனார். அதுவும் புதிதாய் இருந்தது. 
'அம்மாவால் மறக்கப்படுதல்' எனும் பாதைவழியே பயணித்தல் என்பதுவும் விதிக்கப்பட்டதொரு வாழ்வனுபவமாகிற்று. 
அம்மாவே மறந்து விட்டால் குழந்தை என்ன செய்வது? தன்னிரக்கம் வழியும். அம்மாவும் அவரது அன்பும் அரவணைப்பும் ஆறுதலும் அறிவுரையும் தைரியமும் மிகவும் தேவைப்பட்ட காலகட்டத்தை அவையின்றிக் கடந்து கொண்டேன். 
அம்மா இல்லாது போய்க்கொண்டிருந்தார்.. ஆனாலும் இருந்தார்.

எனக்கு மிகவும் பிடித்த 'மொழி பெயர்த்த மௌனம்' கவிதையில் இப்படி எழுதியிருப்பார் கார்த்திக் வேலு: 
"... குழந்தைகளுக்குக் குளிப்பாட்டி, தலை சீவி, 
சட்டை அணிவித்து விடு. 
அவர்களுடன் நடை பயில்.."
தன்னையும் மறந்து காலத்தையும் கடந்து நிகழ்கணத்தில் மட்டும் வாழ்ந்திருந்த அம்மாவுடன் அதைத்தான் செய்தேன். மணிமுடி போன்றும் காதணிகளாயும் பூக்களை அவருக்கு அணிவித்தேன். அவர் அதுவரை ஒருபோதும் இட்டிரா மருதோன்றியையும்.
அதுவும் புதிதாக இருந்தது.  
அம்மா இல்லாதிருந்தார். ஆனாலும் இருந்தார்.
 
நடவாது போனார். படுக்கையிலானார். கையைத் தடவிக் கொடுத்தும், காலுக்கு எண்ணெய் பூசியும், பலருக்கு மருந்தாகவே இருந்தவரின் புண்ணுக்கு மருந்திட்டும், என்ன பேசுவதென்று தெரியாத பகல் வெக்கைப்பொழுதுகளில் சும்மா செல்லம் பொழிந்தும், சில நேரங்களில் வெறுமே கையைப் பற்றியபடியே உறங்கிப் போயும் அவர் அருகிருந்தேன்
புறப்படும் போது கொஞ்சிச் சொன்னேன் "கஷ்டப்படாதீங்க. போகோணுமெண்டா போங்க". 
அப்போதும் இருந்தார்.
 
வழியனுப்பிய போதில், தளைகளற்று, பேரன்பில் திளைத்திருக்கின்றார் அம்மா என்பது போலவும் ஏதோ அடுத்த கட்டத்திற்கு மெதுவாய் நகர்ந்திருக்கிறார் போலவும் தோற்றிற்று. இன்னும் இருக்கிறார் என்பதாய். 
 
அம்மா இல்லாமல்தான் இருந்தார்.. ஆனால் இருந்தார். அம்மா இல்லாது இருத்தல் என்பது புதினமான ஒன்றாக இருக்கிறது. மனம் துழாவுகிறது. பாதுகாப்பாய் உணரக்காணோம். அரண் இருந்த இடம் வெற்றிடமாய் வெறுமையாய் இருப்பது, பெயரறியா உணர்வுகளையும் சேர்த்து மிகவும் புதிதாய் அந்தரிப்பாய் அந்நியமாய் ஒண்ணாமல் இருக்கிறது.
அம்மா காணாமற்றுப் போய்விட்டார். 
இப்போ, சட்டை அணிவித்துத் தலைசீவிப் பூ வைத்துவிட அம்மா இல்லாமல் நான் என்ன செய்யட்டும்?   

என் அரசி

இன்றைக்கு அம்மாவின் 92ம் பிறந்தநாள்.  மற்றைய ஆண்டுகளை போலல்லாது முதல்முறையாக அம்மாவுக்குரிய வாழ்த்தை நான் மனத்திற்குள்ளே சொல்லிக்கொண்டேன். அவருக்குப் போய்ச் சேர்ந்திருக்கும்.  

பூவுலகில் அவரில்லை. ஆனாலும் நிறையப்பேரின் மனங்களில் வாழ்கிறார். கடந்த மாதம் ஏறாவூரில் நடந்த நினைவேந்தல் அதற்கு நல்லதோர் உதாரணம். வேலையொன்றைக் குறிப்பிட்டு, அதனைச் "செய்து தர இயலுமா" என்றே   பணியாளர்களிடம் கேட்கிற அம்மா, தன் விளையாட்டுப் பொருள்களாகிய வெற்றுக் குளிசை டப்பாக்களையும் சேலைன் போத்தல்களையும் பெற வேண்டிச் சில மாதங்களுக்கொருமுறை காய்ச்சலால் பீடிக்கப்படும் சிறுவனை அரவணைத்துப் பேசும் அம்மா, அம்மாவே மருந்து என நம்பும் உம்மாக்கள், போர்க்காலத் தட்டுப்பாட்டில், நோயாளர்களுக்குச் சுற்றுச்சூழலில் கிடைப்பதை வைத்துச் சிறப்புறச் சேவை செய்த அம்மா, அம்மாவைக் கண்டதும்  இரத்தம் படிந்த ஆயுதங்களைத் தாங்களாகவே கீழே போடும் /மடித்துக் கட்டிய சாரத்தைத் தழைய விடும் ஊரின் கத்தி/வாள் வீசும் 'வீரர்கள்' என்ற கோணங்களில் அம்மாவைப் பார்த்தோம். 

யாருமறியா இரவு மழைக்குக் காலைப் பூந்தோட்டம் சாட்சி என்று ரூமியின் கவிதை சொல்லும்.

எங்கள் ஊர். எங்கள் அம்மா.

அவருக்கு ஏறாவூர் மீதிருந்த அன்பு தெரியும். அப்படியே அம்மா மீது ஏறாவூருக்கும் என்று தெரியும், ஆனால் அது எந்தளவில் என்பதனை  நானோ  ஏன் அண்ணாவோ கூட நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது என்றே சொல்வேன். அன்றைக்கு ஏறாவூரின் சிம்மாசனமேறி அமர்ந்திருந்தார் அம்மா. பெயரிலும் 'ராணி' அல்லவா. 

அம்மா ஒரு ஆளுமை என்று நினைத்ததே இல்லை. ஆனால் இப்போது அது தெள்ளத்தெளிவாய் இருக்கிறது. அன்பும் அரவணைத்தலும் அவரது தனிப்பண்புகள். ஒரு நிபுணர்/திறமைசாலி ஒரு செயலைச் செய்யும் போது அது எளிதாக, 'இவ்வளவு தானா' என்பது போலத் தோன்றி, நாம் முற்படுகையில் கடினமாக இருக்குமல்லவா, அப்படித்தான் இவையும். அம்மாவுக்கு யார் எவர் என்று இல்லை, எல்லாரும் ஒன்றுதான். ஒத்து வரவில்லையா/அவர்களுக்கு விளங்கவில்லையா, பரவாயில்லை, அவர்களுக்கு நல்லது நினைத்து அப்படியே விட்டுவிடு என்பார். அதெப்படி என்றால் மிகவும் லேசான விஷயம் என்று பதில் வரும். 

எல்லாரிடமும் அன்பு காட்டவோ எல்லோரையும் அப்படியே நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்ளவோ  நம்மில் அனேகரால் முடிவதில்லை. என்னதான் முயன்றாலும் முட்டி மோதினாலும் அதில் இன்னும் நான் போவதற்கு நிறைய் ...யத் தூரம் இருக்கிறது. என்னைக் குறித்து அம்மா ஏமாற்றமடைந்து விடக்கூடாதே என்று தான் இப்போதெல்லாம் யோசிக்க வருகிறது. அப்படி இருப்பது உதவியாகக் கூட இருக்கிறது என்று சொல்லலாம். பிந்தித்தான் யோசிக்க நேர்ந்தாலும் சற்றாவது யோசிக்கிறேன் என்பது புரிகிறது.

வாழ்தல் என்பது எப்படி என்று  ஆற்றுப்படுத்தியிருக்கிறார். வாழலாம். 

பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா.   

  

 


பெட்டகம்