மனவருத்தம்

சென்ற கார்த்திகை மாதத்தில் ஒரு நாள் வீட்டுக் கணினியில் வலை மேய ஆயத்தமாகும் போது ( நான் இன்னும் dial-upதான்) திடேரென்று பார்த்தால் ஒரு பிக்கினி அணிந்த பெண்ணின் படம் கணினித் திரையின் வலது மூலையில் வந்திருந்தது. என்னடா இது இவ்வளவு பாதுகாப்பு போட்டிருந்தும் எரிதமாக குறிப்பிட்ட தளத்திற்கான சுழற்றி(dialer) தரவிறக்கியிருக்கிறதே என நொந்து கொண்டே அதை கணினியிலிருந்து நீக்கியிருந்தேன். அப்போது ஒன்றும் பிரச்சனையாக மனதில் தோன்றவில்லை. பிறகு 2- 3 நாடகளில் கணவர் வந்து தான் கணினியில் ஏதொ வேலை செய்து கொண்டிருக்கும் போது நான் மேலே குறிய படியே சுழற்றி தெரிந்ததாயும் தான் அதை நீக்கியதாயும் குறிப்பிட்டார். இப்படியான பாலியல் தளங்களுக்குச் செல்லும் பழக்கமோ தேவையோ எங்களிருவருக்கும் இல்லை.அப்பத்தான் கணவர் சொன்னார் எங்கள் வீட்டிற்கு வந்து தங்கியுள்ள உறவினரின் விளையாட்டாக இருக்குமென்று. நான் நம்பவில்லை..எரிதம் பற்றி,வலையுலாவி அபகரிக்கப்படுவது பற்றி அறிந்திருப்பதால் அப்படியான ஒரு நிகழ்வாக இருக்கலாம் என கணவரிடம் கூறியிருந்தேன்.

தனக்கும் அவை பற்றித் தெரியுமெனவும், தான் உறவினருக்குக்கென்று கொடுத்திருந்த பயனர் பெயருக்குரிய குக்கீஸ் ஐ பார்த்ததாகவும் சொன்னார். அதில் முழுக்கவும் பாலியல் தளங்களே இருந்ததாம். இந்த அண்ணாவின்(இந்த வார்த்தைக்கு தகுதியானவரே இல்லை அவர்!) அறையில் தான் கணினி இருந்தது..ஆகவே நல்ல வசதியாக போய் விட்டது அவருக்கு. எங்கள் சீப்பு,பவுடர்,கிறீம் எல்லாமும் அதே அறைக்குள். ஆகவே இரவில் படுக்க முன்பு கிறீம் போட எடுக்கச் செல்லும் பாசாங்கில் அவரது அறைக் கதவை தட்டி உள் நுழைந்தால் கணினித் திரையில் கடைசிச் சாளரம் குறுகிச் செல்வது தெரியும். நான் அறையிலிருந்து வெளியேறும் வரை வேறு ஒன்றுமே வலை மேய்வதில்லை அவர்.ஏன் வலை தொடர்பை ஏற்படுத்தி வோல்பேப்பரையே பார்க்கிறார் என நானும் கேட்டதில்லை!!

இதற்குப் பிறகு கணவர் அவரிடம் பேசி சில நாட்கள் இல்லாமலிருந்தது. பிறகு இப்போ மீண்டும் தொடங்கியுள்ளது.உறவினரது சொந்த அண்ணனே "இவன் பொறுப்பில்லாதவன்..சரியான சோகுசுப் பேர்வழி" என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். சரியான படிப்புமில்லை.7ம் வகுப்புடன் நிறுத்தியவர். நியூசிலாந்தில் கடந்த 5- 6 ஆண்டுகளாக இருந்தவர். 36 வயதாகிறது. எல்லாருக்கும் திருமணம் செய்து வைத்தீர்கள் ..எனக்கும் செய்து வையுங்கள் என தொல்லை கொடுக்க, அதை தாங்க மாட்டாமல் பெற்றோரும் இந்தியாவில் BCom பட்டதாரியான, 12 வயது குறைந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவ்வளவிலும் நல்ல விஷயம் சீதனம் வாங்காதது. இப்போ இங்கே வந்துள்ளார்.. மனைவி இன்னும் இந்தியாவில்.

சரியான படிப்பில்லாததால் வேலை கிடைக்கவில்லை. ஏதாவது தொழில்சார் கல்வி கற்றுக்கொள் என்ற கணவருக்கு தொண்டை காய்ந்தது தான் மிச்சம். இப்போ இன்னொரு உறவினது கடையில் சில நாட்களும் ஹொட்டேல் ஒன்றில் மிச்ச நாட்களுமாய் வேலை செய்கிறார். மனைவி வந்தால் தேவைப்படும் என சேமிப்பு பழக்கமெல்லாம் கிடையாது. உடற்பயிற்சிக்கு ஜிம்மிற்கு செல்வதும், கடனட்டையில் ப்ரான்ட் பொருட்கள் வாங்குவதுமே பொழுது போக்கு. தொலை பேசி அட்டை இருக்கையில் அதிலும் கதைத்து..இன்னும்.. நேரடி தொடர்பிலும் கதைத்து, வந்த பில் கட்டப்படவில்லை. அப்படி ஒரு தொகையை தொலைபேசிக்கு யாரும் ஒரே மாதத்தில் கட்டி நான் கேள்விப்பட்டதில்லை. கட்டணம கட்டாததால் எங்கள் வீட்டில் தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார்கள். அன்றைக்கு ஒரு நாள் காலை 10 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு வீடு வந்தால் எங்கோ தண்ணிர் சத்தம்..குளியலறையில் கேட்பாரற்று சுடுநீர் ஓடுகிறது..பிற்பாடு விசாரித்ததில் அவர் 1 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டதாய் சொன்னார். ஏன் டென்சன் ஆகுறீங்க?என்று கேட்கிறார்.தொலைபேசிக்கட்டணத்தை எப்படி பெறுவது என்று தெரியவில்லை!!! ஒவ்வொரு நாளும் இரவில் நான் சுத்தம் செய்யும் சமையலறை எப்படி வேலை முடிந்து வீட்டிற்குப் போனால் குப்பையாகிறது என்பது, தெரிந்த ஆனாலும் புரியாத, மாயம்.

அந்தப்பெண் வருவதற்குரிய குடிவரவு வேலைகளை போன மாதம் தான் செய்தார். இவர் வந்ததோ ஒக்டோபரில்.கல்யாணம் எவ்வளவு பொறுப்பான விஷயம் என்பது இவருக்கு விளங்கவில்லை. உடல் தேவைக்காகத் தான் அவசரப்பட்டாரோ என நினைக்கத் தோன்றுகிறது. சேமிப்பொ, முறையான நடத்தையோ, பழக்கவழக்கங்களோ இல்லாத பொறுப்பில்லா மகனென அறிந்தும் திருமணம் செய்து கொடுத்த பெற்றோரை..அறிந்தே ஒரு பெண் வாழ்வில் கை வைத்துள்ள இவர்களை என்ன செய்வது?சரியாக விசாரித்தறியாமல் சீதனம் இல்லாததற்காய் தலையை நீட்டிய அப்பெண்ணின் குடும்பத்தை என்ன சொல்வது??

எழுதி விளையாடு பாப்பா 2



நடுக்கட்டத்தில் உள்ள எழுத்து கண்டுபிடிக்கப்படும் அனைத்து சொற்களிலும் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதை நேற்று சொல்ல மறந்து விட்டேன்...மன்னிக்கவும்..

நேற்றைய புதிருக்கு விடை: உளி,இளை,இடை,ஆளி,ஆடி,ஆவி,இடு,இவை, ஆட்டி,விளை,விடு,இட்டு,விட்டு,விடை,இயை,விளையாடு,வாடி, வாளி,வாட்டி,விடாய்,விளையாட்டு

இன்றைய புதிர்

ல்ற்
ம்
ய்ச்


எழுதி விளையாடு பாப்பா

இங்கே ஆங்கில நாளிதழொன்றில் வரும் இந்தப்புதிர் விளையாட்டு தமிழில் எந்தளவிற்குச் சாத்தியமென்று தெரியவில்லை. அவர்களுக்கோ 26 எழுத்துக்களுடன் சுலபமாக முடிந்து விடும், தமிழிலோ 247 அழகிய எழுத்துக்கள். அது மட்டுமன்றி உயிர், மெய், உயிர்மெய் என மூன்று வகை எழுத்துக்கள்.இங்கே அவ்வாறு மூன்றாகப் பிரிக்காமல் உயிர், மெய் என இரண்டாக மட்டுமே தந்திருக்கிறேன்.9 கட்டங்களிலுமுள்ள எழுத்துக்கள் அனைத்தையும் ஒருமுறை மட்டுமே பாவித்து 9 எழுத்துக்களாலான சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும். கண்டுபிடிக்கும் ஏனைய சொற்கள் 3 அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும். தந்த சுட்டியில் போய்ப் பார்த்தால் விளையாட்டினை சுலபமாக விளங்கிக் கொள்ளலாம்.

நான் கண்டு பிடித்துள்ள சொற்கள்: மழை, அது, அதை, அமைதி,அமை,அமைத்து,அழை,அழி, அமிழ்,அளி,அழுத்தி,அமிழ்த்து,அளித்து,தளி,அழைத்தும்,அளை,மழைத்துளி(ம்+அ+ழ்+ஐ+த்+த்+உ+ள்+இ= 9 எழுத்துக்கள்)

ம்ள்த்
த்ழ்


உதாரண்ம் விளங்கியிருக்குமென நினைக்கிறேன். விளையாட்டிற்குப் போவமா?கீழுள்ளதில் சொற்களைக் கண்டுபிடியுங்கள்.
ட்
ள்
ய் ட்வ்


உங்களுக்கும் ஏதாவது 9 எழுத்துள்ள சொல் இப்புதிரில் இடம்பெற விரும்பினால் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

விக்கிரமாதித்தன்

முதலில் விக்கிரமாதித்தன் கதைகள் அறிமுகமானது அம்புலி மாமாவின் மூலம்.(2ம் தரம் அறிமுகமாகாது...ஏற்கெனவே தெரியும் என்பதால்..ஹி..ஹி)அப்போதெல்லாம் "அடே எவ்வளவு வீரன், புத்திசாலியாக இந்த வேதாளத்திற்கு பதில் சொல்கிறானே" என்ற வியப்பும் அதோடு கூடவே "இந்த வேதாளம் எப்போதடா இவன் கையிலிருந்து பறக்காதுவிடும்"என்ற நினைப்பும் கதை வாசிக்கும் போது கூடவே வரும். சமீபத்தில் விக்கிரமாதித்தன் கதை என்கிற முழுக்கதைத் தொகுப்பு ஒன்று கிடைத்தது. இதை வாசித்த பிறகு மேல்வீட்டிலிருந்தவன்(!) தெருவுக்கு வந்து விட்டான்.

வேறென்ன பின்னே!!...எங்கே போனாலும் அவனுக்கு கிடைக்கும் வெற்றியில் மகிழ்ந்து குறிப்பிட்ட கதையில் வரும் மாந்தர் தத்தம் மக(ள்க)ளையோ சகோதரி(களை)யோ இவனுக்கு கொடுப்பார்களாம்..இவனும் அவர்களுடன் "உல்லாசமாக" காலம் கழிப்பானாம்(சரியான "அலைச்சல்" ஆளாக இருந்திருப்பான் போலிருக்கிறது!!). இவனது முந்தைய மனைவிகளும் இவன் கூட்டிக் கொண்டு வருகிறவர்களை (அதாவது புதுமனைவிகளை)அன்புடன் வரவேற்பார்களாம். எந்தப் பெண்ணுக்கு இதற்கு மனம் வரும்?இந்த அழகில், பெண்ணுக்கு வகுத்திருக்கும் நியதி என்று வேறு 1008 வெறுப்பேற்றும் விஷயங்கள்!! (இவதான் இதுகளைப் பற்றி வடிவா நறுக்கென்று எழுத சரியான ஆள்!!)

காளி பக்தனாம்..இப்படிப் பட்டவனுக்கு நினைத்த மாத்திரத்திலேயே அவவும் காட்சி கொடுப்பாவாம்!!அட அட அட!!! இன்னும் எழுதலாம் புத்தகத்திலிருந்த மேதா விலாசங்களை..சும்மா ஏன் நற நறத்து இரத்த அழுத்தத்தை கூட்டிக்கொள்ள?

வாழ்வியல் அல்லது உங்கள் நடத்தை!

நீங்கள் செய்யும் செயல்களை எடுத்துக் கொள்ளுங்கள்...ஏதாவது ஒன்று..ம்ம்?

இப்போது உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்...நான் செய்ய போகும் / செய்து கொண்டிருக்கும்/செய்து விட்ட இந்தச் செயலை ஒரு ஒளிவு மறைவுமின்றி என் பெற்றோரிடம் என்னால் சொல்ல முடியுமா?இதையே "ஒரு சிறு மாற்றமும் இன்றி பின்பற்று" என என் பிள்ளைகளிடம் சொல்ல முடியுமா என்னால்??

இரண்டு கேள்விக்குமே உங்கள் பதில் ஆம் என்றால் உங்கள் நடத்தையில் பிரச்சனை இல்லை. இதுதான் நீங்கள் கடைப்பிடிக்கவேண்டிய Code of conduct. ஒரு நாளும் பிழை செய்ய மாட்டீர்கள்.

இதுதான் இந்துமதம் சொல்லும்..தர்மா!

இன்று TRAC இல் uncleஜெகா சொன்னது!

சிறுவர்களும் சிறுவர் பாடல்களும்


தோழி வீட்டில் இந்த வார இறுதியில் நடக்கவிருக்கும் TRAC இற்கு கோலம் செய்து கொண்டிருந்தோம். அப்போது அவர்களது வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்களில் ஒரு 3 வயதுப் பிள்ளையும் இருந்தா. ஒரு பாட்டுப் பாடிக் காட்டுங்கோ என்று தோழியின் தந்தை கேட்க ஆங்கில சிறுவர் பாடலான Twinkle Twinkle Little Star என்பதை பாடிக் காட்டியது பிள்ளை. அதற்கு அவர் "அப்பிடி இல்லை..இப்பிடி பாட வேணும்" என சொல்லி கர்நாடக இசை பாணியில் ஆலாபனையெல்லாம் செய்து பாடிக் காட்டினார். குழந்தை சிரிக்க ஆரம்பித்தது. "கிளுகிளு" என்று என்ன ஆனந்தமான சிரிப்பு! என்னதான் இருந்தாலும் சின்னப் பிள்ளைகளின் சிரிப்பின் வசீகரமே தனி!!

இதற்குப் பின் பேச்சு இலங்கையில் கற்றுத் தரப்படும் ஆங்கில சிறுவர் பாட்டுகளைப் பற்றித் திரும்பியது. தனது ஆசிரிய நண்பர் சொன்னதாக தோழியின் தந்தை சொன்னார்..மேற் சொன்ன அதே Twinkle Twinkle Little Star பாட்டை கற்பித்துவிட்டு அதன் அர்த்தமும் சொல்லிக் கொடுத்திருக்கிறார் முதல் நாள். அடுத்த நாள் வகுப்பில் பாடிய போது ஒரு பிள்ளை பாடிற்றாம் " Twinkle Twinkle Little Star.....like a diamond in the 'கை' " என்று. இன்னும் சிரிப்பு என்னவென்றால் அது நகைக்கடை உரிமையாளரின் பிள்ளையாம்! சொன்னது சரிதானே!!

தோழியின் தந்தையே தொடர்ந்தார்..ஒருநாள் வேலை நிமித்தம் வெளியிற் சென்ற போது ஒரு சிறுவன் பாலர் பாடசாலை முடிந்து வீட்டிற்குச் செல்கையில் படித்த பாட்டை பாடிக் கொண்டு போயிருக்கிறான். என்ன பாடுகிறான் என்று அறியும் ஆவலில் அவனுக்கு சற்று நெருக்கமாக பின்னாலேயே நடந்து சென்றாராம். அவன் பாடுகிறான் "கூப்பிட்ட பின் little toffee தின்..." இவருக்கோ பாட்டின் ராகம் ஞாபகம் வந்தாலும் இவன் என்ன பாடுகிறான் எனப் புரியவில்லை. பிறகு தான் விளங்கியதாம் "Ding dong bell..pussy's in the well, who put her in, little Tommy thin..." என்று.

பிறமொழி சொற்களை தெளிவாகவும் அர்த்தத்துடனும் கற்பிக்காவிட்டால் இப்படித்தான் போலிருக்கிறது!

அலையே..நீ அலையாதிருக்கக் கடவது!


ஏற்கனவே அலை பாய்ந்த நிலையில் இருக்கின்ற எம்மேல் ஏன் இந்த அலை பாய்ந்தது?

இயலுமான உதவியை இங்கிருந்தே செய்து விட்டு, அது போய் சேரவும், இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்கும், ஏனையோருக்கு இழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்திக்குமாக என்று வேண்டுதல்கள் நிறைந்த கனத்த மனதுடன் வலம் வருகிறோம்.

இலங்கை-இந்தியாவுக்குச் சென்று மீட்பு / நிவாரண பணிகளில் ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? மருத்துவச் சேவை போன்று அத்தியாவசிய துறைகளில் பயிற்சியுள்ளவர்கள் மட்டுமா இங்கிருந்து செல்லலாம்? தயவு செய்து அறியத் தரவும்.

அதிகாலை என்ன வேளை?

தமிழ் மருத்துவ நிதியத்தினர் நடாத்திய முத்தமிழ் மாலை 04 இல் இடம்பெற்ற நாடகத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. "ஆரொடு நோகேன்" என்ற பெயரில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைக்களுக்கு யாரை நோவது என்பதே கருப்பொருள். நகைச்சுவையாக நல்லாக இருந்தது. அதிலே கூடவே நடித்த ஒருவரின் கடி சொல்லி மாளாது. நடிக நடிகையர்(சரி சரி...நீங்க "நினைப்புத்தான்" என்று சொல்வது கேட்கிறது!!) நிகழ்ச்சிக்குப் அடுத்த கிழமை உணவகமொன்றில் ஒன்று கூடினோம். அங்கே வைத்து ஒருவர் கடித்த கடி இருக்கிறதே...

ஒருவர்: அண்ணா, ரிமோட் கொண்டுவந்தனிங்களா?கடியர்: அவவை வீட்ட விட்டிட்டு வந்திட்டனே!!

நாடகத்தின் ஒளிப்பிரதியைப் பார்க்கையில், அதிலே நாடக இயக்குனர் சொன்னார் "இந்த நாடகத்தை உங்கள் முன் அரங்கேற்றுவது என் பாக்கியம்"அதற்கு 'கடி'யர் "அது யாரது பாக்கியம்?".."எங்களுக்குத் தெரியாம எப்பிடி நாடகத்தை மேடையேத்தினவ?"

பாட்டுக் கச்சேரி வைத்தோம்...கடி மன்னன் பாடுகிறார்..."றாவும் கள்ளும் கைகளில் ஏந்தி..."(பாலும் பழமும் கைகளில் ஏந்தி..)"உளுந்து வடையை சட்னியில் தொட்டு சாப்பிட்டு பாரு ஊ .., என் பேரு வடையப்பா,சூடான வடையப்பா...சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாய்ப் போயிற்று.

கடைசியாய் பாடினார் இன்னுமொரு மாற்றிய பாட்டு... இதற்கு சிரிப்பு வரவில்லை..எல்லார் முகத்திலும் அப்பட்டமாய் தெரிந்தது வலி.

'80களில் வந்த பாடலாம்.."அதிகாலை..சுப வேளை..உன் ஓலை வந்தது..."
மாற்றிய பிறகு: "அதிகாலை..கெட்ட வேளை..பொம்பர்(bomber) வந்தது.."

கதவுகளை பூட்டுங்கள்


நீண்ட நாட்களுக்கும் மகவுப்பிரச்சனைகளுக்கும் பிறகு பிறந்த அரிய மகளாய், செல்லத் தங்கையாய் வளைய வந்த 6 1/2 வயது அழகான குட்டிப் பெண் இன்று இல்லை. தன் தகப்பன் மறைவையொட்டி தாயார் மகனுடன் இலங்கை சென்றிருந்த வேளையில் செல்லப்பெண் சிறகடித்துப் பறந்துவிட்டாள். அப்பாவும் மகளுமாய் நண்பர் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். நண்பர் வீட்டில் நீச்சல்குளத்திற்கு போடப்பட்டிருக்கும் பாதுகாப்பு வேலியின் காந்தப்பூட்டு சரியாக அடித்துச் சாத்தாததால் திறந்தேயிருந்திருக்கிறது. பிள்ளையை காணவில்லையெனத் தேடும் போது நீச்சல் குளத்தில் உயிரற்றவளாகத் தான் கண்டிருக்கிறார்கள். cleft pallete குறைபாடு இருந்ததால் நீச்சல் கடினம்.

நேற்று viewing. தாய் விறைத்துப் போய் உட்கார்ந்திருக்க, தந்தையோ தூங்கும் மகளின் கன்னந் தடவி தலை வருடுகிறார். மனம் தாங்கவில்லை. என்னையறியாமலே கன்னத்தில் நீர்க்கோடுகள்.

தயவு செய்து உங்கள் கதவுகளையும் பூட்டுகளையும் சரியாகப் பூட்டுங்கள்.

சிக்குபுக்கு ரயில்

நகருக்குள்ளே எத்தனை விதமான இடங்கள்..அத்தனையும் நடந்தே பார்த்து விடும் தூரம் தான் ...என்றாலும் சிட்னி சிற்றிக்குள்ளேயே 8 - 10 நிமிட நடை தூரத்தில் ரயில் நிலையங்கள். நான் இன்னும் போய் பார்க்காத லண்டனின் நிலக்கீழ் இரயில் போல் இங்கு நகருக்குள்ளே மட்டுந்தான். புறநகர் பகுதிகளில் ஊரிலிருப்பது போல் நிலத்தின்மேல். மேலும் கீழுமாக இரண்டு "மாடிகள்" கொண்ட பெட்டிகள்.

சிற்றிரெயில் என அழைக்கப்படும் ரயில் வலைப்பின்னல். ஒருநாளும் நேரத்திற்கு வருவதில்லை. திடீரென்று சில சேவைகள் இரத்துச் செய்யப்பட்டு "இதனால் ஏற்படும் சங்கடங்களுக்கு சிற்றிரெயில் மனம் வருந்துகிறது" என்று சொல்வார்கள். பிந்தி வருவதால் எற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக குறிப்பிட்ட நிலையத்தில் ரயில் நிற்காமலும் போவதுண்டாம். இவற்றையடுத்து பயணிகளிடம் எழுந்த அதிருப்தி சொல்லில் அடங்காது. தொலைக் காட்சியில் ஒரு பயணி current affairs நிகழ்ச்சியில் சொன்னார் இந்த ரயில் சேவைக்கு பணங் கொடுத்து கடவுச்சீட்டு வாங்கி பயணிப்பது அபத்தமான செயல் என்று. நியு சௌத் வேல்ஸின் முதல்வர் கடந்த திங்கட் கிழமையை இலவச பயண நாளாக அறிவித்தார். இது பயணிகளை அமைதிப்படுத்தும் என நினைத்தாரோ என்னவோ..அவர் நினைப்பில் மண். (இதைப் போலவே முன்னரும் சில ^இதே முதல்வரின் கீழ்^ இலவச பயண நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன). இதற்குப் பிறகாவது ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா பார்க்கலாம்!

சிற்றிரெயிலுக்கு செல்லப்பெயர்கள்: சிற்றிஃபெயில், சிலிரெயில்

மருத்துவமனைகளின் நிலை இன்னும் மோசமானது. அவசர சிகிச்சைப் பிரிவில் கிட்டத்தட்ட 6 மணித்தியாலத்திற்கும் மேலான காத்திருப்பு, இடமின்மையால் நோயாளிகள் திருப்பி அனுப்பப்படும் நிலை என்று பல பிரச்சனைகள். அது பற்றி இன்னொருநாள்.

கண்ணோடு கண்

ஒருவருடன் கதைக்கும் போது அவரது கண்களைப் பார்த்து கதைப்பது எவ்வளவு நேரத்திற்கு சாத்தியம்? அவரிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை/ நீங்கள் பிழை செய்யவில்லை என்றாலும் சில வினாடிகளுக்கு மேல் கண்ணைப் பார்த்துக் கதைக்க முடிவதில்லையே..ஏன்?முகத்தைப் பார்த்து உரையாடுகிறோமே தவிர கண்ணைப் பார்த்து அல்ல. எங்களுடைய விஞ்ஞான ஆசிரியை நேரே கண் பார்த்துத் தான் கதைப்பா. நல்ல அழகான கறுப்புவண்டு போல கண்கள்...மிஞ்சிப் போனால் அவரின் கண்ணை 10 செக்கனுக்கு மிஞ்சி நேரே பார்க்க முடியாது. அவ்வளவு தீவிரம். ஏதோ உள்ளுக்குள் உள்ளதெல்லாம் அவருக்குத் தெரிந்து விடுமோ என்று தோன்றும். x-ray என்று அழைப்போம்.

சரி மீண்டும் கேட்கிறேன்...தொடர்ந்து ஒருவரது கண் பார்த்துக் கொண்டு அவருடன் உரையாடுவது என்பது வலுக்கட்டாயமான தொடர் பயிற்சியின் மூலம் செய்யக் கூடியதாகுமா? விஞ்ஞான ஆசிரியை போன்ற ஒரு சிலர் தவிர ஏனையோர், உரையாடலின் போது மற்றவர் கண்ணைப் பார்த்து கதைப்பதை ஏன் தவிர்க்கிறோம்?? நேர்கொண்ட பார்வையுடன் கூடிய உரையாடல் ஏன் சிறுவயதிலிருந்தே பழக்கத்தில் இல்லை? சிறுவர்களுக்கு அறிவுறுத்தி, பழக்கத்தில் இயல்பான ஒன்றாய் கொண்டுவர முடியாதா?

எட்டிப் பார்த்தேன்

காணாமல் போனவர்கள் என்று ஒரு பட்டியலில் என் பெயரையும் சேர்த்து விட்டுடாதீங்க. ஏதோ கிடைக்கிற சொற்ப நேரத்தில் வலை மேய்கிறேன்..பின்னூட்டம் அளிக்க முயல்கிறேன்..பல வேளைகளில் மின்னஞ்சல் பார்க்க மட்டுமே நேரம் வாய்க்கிறது. விருந்தோம்பல்+அதற்கான நேரம் பற்றி இப்போது தான் முழுமையாக உணர்கிறேன். எப்படியும் இன்னும் 2/3/4 கிழமைகளில் வழமைக்குத் திரும்பிவிடக்கூடும். அது வரை சில தளங்கள் உங்களுக்காக:

  • அலுவலகத்தில் பொழுது போகவில்லையா(!?) இங்கே போங்க.
  • மூளைக்கு வேலை வேண்டுமா..அதற்கு ஓரிடம்.
  • போதைக்கு அடிமையாவதைப் போல கல்லூரியில் கிட்டத்தட்ட ஒன்றிரண்டு மாதங்களுக்கு என்னை தன் அடிமையாக்கியது இது (இப்பிடி நிறைய இங்கே)
  • இணையத்தின் தொல்லை தாங்கவில்லை..ஒருவழி பண்ணனும் என்று நினைத்தால்..வழி இதோ!

அரக்கர்கள்

இங்கே அவுஸ்திரேலியாவில் ஏறத்தாழ 400 அரக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காலத்தில் ஏதடா அரக்கர்கள் என்று பார்க்கிறீர்களா? இந்தப் பாதகர்களை வேறெந்தப் பெயர் கொண்டு விளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்து, அந்தக் கொடுமையை படம் பிடித்து இணையத்தில் தளம் அமைத்து காட்டுகிறார்களாம். இந்த மாதிரியான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்களை கைவசம் வைத்திருந்தனர் என்கிற காரணத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஆசிரியர்கள், வைத்தியர், சட்டத்தணிகள், கணினி இயக்குநர், காவற்துறையினர், மற்றும் பிள்ளை பராமரிப்பாளர்களும் அடங்குவராம்! (இவர்களில் ஐந்தாறு பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்). பாடசாலை கழிப்பிடங்கள்/குளியலறைகளில் கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கொடுமையிலும் கொடுமை 0 - 3 வயதான பாலகரும் குழந்தைக் காப்பகங்களில் அவர்களது nappy, உடைகள் மாற்றும் போது படம் பிடிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களது காமவெறிக்கு அளவில்லையா? தத்தம் குடும்பத்தில் குழந்தைகளுடன் இவர்கள் வாழவில்லையா? தம் குழந்தைகளை வேறொருவர் இப்படிச் செய்தால் பொறுப்பார்களா? எங்கே போகிறது சமுதாயம்?

கண்ணீர்

மரணம் மனித வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத அங்கம் தான் என எனக்கு மீண்டும் ஒரு முறை நினைவுறுத்தப் பட்டிருக்கிறது. அம்மாவைப் போலவே அன்பாயும் ஒரு தோழியைப் போலே நேசமாயும் ஒரு ஆசிரியைக்குரிய ஆதுரத்துடனும் பலர் வாழ்வில் அறியப்பட்ட teacher இன்று இல்லை.

மனது கனக்கிறது.

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு..

குடும்பம் என்பது முதலில் துணையுடன் தான் ஆரம்பிக்கிறது. பிறகு குழந்தைகள் என்று வந்து விட்ட பிறகு குழந்தைகளும் அவர்களது தேவைகளுமே பிரதானமாகி முன்னிலைப்படுத்தப் படுவது இயல்பே. குழந்தைகள் + அவர்களது தேவைகளை நிறைவேற்றுவது முக்கியமானதுதான். ஆனாலும் துணையும் முக்கியமல்லவா? தம்பதியரிடையே பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் உருவாவதற்கு வீட்டு வேலைகளை பங்கிடுவதிலிருந்து பிள்ளை வளர்ப்பு வரை காரணிகள் நிறையவே உண்டு. வாழ்க்கையானது வேலை, குழந்தைகள், தேவைகளை(வீடு வாங்க/கட்ட, சாதனங்கள் வாங்க) நிறைவேற்றுதல் என்பவற்றில் கழிகிறது. இந்தப் பயணத்திலே கூடவே வரும் துணைக்கென மட்டும் தனியே எவ்வளவு நேரத்தை ஒதுக்க முடிகிறது? கல்யாணம் கட்டி xx வருஷமாச்சு /பிள்ளை பெத்தாச்சு, இதுக்கு மேலே என்ன தனிமை என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். இருவரின் தனிமை உடற் சுகத்துக்காகத்தான் என்றில்லை. அதற்கும், அதையும் மீறியதாக மன சுகத்திற்கும், கணவன் மனைவிக்கு இடையிலான புரிந்துணர்தலை வளர்ப்பதற்குமான ஒரு நேரமே அது.

வீட்டுக்குள்ளே தான் என்பதில்லை. கடற்கரையில், பூங்காவில் ஓர் நடை, ஒரு திரைப்படம், உணவகத்தில், அல்லது இருவருக்கும் பிடித்தமான ஒரு பொழுது போக்கு..படகோட்டலாம், கண்காட்சிகளுக்குப் போகலாம். ஒரு 2 மணித்தியாலத்திற்கு அல்லது ஒரு காலை/மாலை வேளைக்கு நண்பர்களிடம் / உறவினர்களிடம் babysittingக்கு கேட்கலாம். (அவர்களதுதிருமண ஆண்டு நிறைவு நாளன்று அவர்களது குழந்தைகளை பார்த்துக் கொள்ள offer பண்ணுங்கள்.. நீங்கள் babysitting க்கு கேட்ட மாத்திரத்திலேயே சரியென்பார்கள்!!)

கணவன் - மனைவி உறவு விசேஷமானது. எல்லா விஷயங்களைப் போலவும் இந்த உறவை வளர்க்கவும் வளப்படுத்தவும் முயற்சி தேவை. அதற்கு செய்யக் கூடிய சில சின்ன விஷயங்கள்:

  • மற்றவர் முன்னிலையில் துணையை சிறுமைப்படுத்தாதீர்கள் மாறாக.. பாராட்டுங்கள் (என் கணவர் எனக்குப் பிடிக்குமென்று --- கற்றுக் கொள்கிறார் / --- செய்தார் ; என் மனைவி ஓவியம் வரைவதில் கில்லாடி etc)
  • இப்படித்தான் இருக்க வேண்டும் / செய்ய வேண்டும் என்று ஒன்றிலும் கட்டாயப்படுத்தாதீர்கள். இருவருமே தனி மனிதர்கள். சேர்ந்து செய்ய என்ன வழி என்று பாருங்கள்
  • சின்னதாய் ஆச்சரியப்படுத்துங்கள் - வெகு நாளாய் நச்சரிக்கப்படும் விஷயத்தை செய்து முடியுங்கள். மனைவி ஒரு shelf போட்டுத்தரச் சொல்லிக் கொண்டே இருக்கிறாரா...அவர் சந்தைக்கு போய் வர முன்னம் செய்து வையுங்கள்)
  • குழந்தைகளுக்குப் போலவே துணைக்கும் செல்லங் கொடுங்கள்.
  • பிடித்த விஷயங்கள், கனவுகள், பயங்கள், மற்றும் என்னென்னவோ அதையெல்லாம் பற்றி கதையுங்கள். (துணை கதைக்க வரும் போது நீங்கள் பிஸியாக இருந்தால் எடுத்துச் சொல்லுங்கள்: "கொஞ்சம் வேலையாக இருகிறேன். இதை முடித்ததும் முதல் வேலை நீ என்ன சொல்கிறாய் என்பதை கேட்பது தான்". சொன்னது போல தேடிப் போய் என்ன விஷயம் என்று கேட்க மறக்கக் கூடாது!!)
  • துணையின் கருத்து கேட்கவோ, உற்சாகப்படுத்தவோ, நன்றி சொல்லவோ, மன்னிப்புக் கேட்கவோ தயக்கம் வேண்டாம்.

இதெல்லாம் நானாக சொல்லவில்லை. பெரியவர்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள். மேலே குறிப்பிட்டது மட்டுமன்றி இன்னும் பல முக்கியமான சின்ன விஷயங்கள் இருக்கின்றன.. நீங்களும் சொல்லுங்களேன்.சின்னச் சின்ன விஷயங்கள் தான்...ஆனாலும் நிறையவே தாக்கத்தை உண்டு பண்ணும். பிறகென்ன , துணை பாத்ரூமில் + எப்போதும் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" என்று பாடிக் கொண்டிருப்பார்!! (வீட்ல இனி காதல் சாம்ராஜ்யம் தான்!!)

பி.கு:- என் உபயமாக:

  • கருத்து வேறுபாடா?தலையே போனாலும் பிள்ளைகளுக்கு முன்னால் சண்டை பிடிக்காதீர்கள்!!
  • காதல் கடிதம் அல்லது ஒரு மடல் அனுப்புங்கள்
  • துணைக்கு கண்ணடித்துப் பாருங்கள்!! இதைப் போல ரொமான்டிக் ஆன விஷயம் வேற ஒன்றுமே இல்ல. (அடடா!!)

பார்த்தேன்..ரசித்தேன்

Jacquis Perrinன் நெறியாள்கையிலும் Bruno Coulaisன் இசையிலும் வெளிவந்துள்ள ஒரு நேபாள(most likely திபெத்திய) மொழிப்படம் 'ஹிமாலயா'. மனதை வருடும் மெல்லிய இசையும், அழகான காட்சியமைப்பும் கொண்ட இந்தப் படம் டின்லே தாத்தா தானியக் கதிர்களுக்கூடாக நடந்து வருவதுடன் ஆரம்பிக்கிறது. உப்பு வாங்கி வந்து அதை வேறோரிடத்திற்கு கொண்டு சென்று விற்று தானியம் வாங்கும் வாழ்க்கை. உப்பு பெற்று வரும் வழியில் டின்லேயின் மகன் இறந்து விடுகிறான். அவனது தோழனான 'கர்மா'வின் மேல் டின்லே சந்தேகப்படுகிறான். குரோதம் மனதில் கொழுந்து விட்டெரிகிறது. பரம்பரையாக அக்குடியினரின் தலைவர் பதவி டின்லேயின் குடும்பச் சொத்தாகவே இருந்து வருகிறது. டின்லேயின் பேரனோ பாலகன். தலைமைப் பதவிக்காகவே கர்மா தன் மகனை கொன்றான் என் நம்பும் டின்லே இந்த முறை caravanகளுக்கு நானே தலைமேயேற்கிறேன் என்று சொல்லி ஆயத்தப்படுத்துகிறான். சோதிடம் பார்த்து, நல்ல நாளில் புறப்படும் இவர்களது வழக்கத்தையும் மீறி கர்மா தனது இளவட்டத் தோழர்களுடன் முதலே புறப்படுகிறான். டின்லே, பிக்குவாக இருக்கும் தனது 2ம் மகனிடம் சென்று தன்னுடன் வருமாறு உதவி கோருகிறான். மகன் தயங்கவே அவனுக்கு ஏசிவிட்டு ஊருக்கு வந்து ஆயத்தங்களைச் செய்கிறான். மகன் 2 நாட்களில் வந்து சேர்கிறான். சோதிடர்கள் குறித்த நன்னாளில் டின்லேயினதும் அவனது சம வயதான 'கிழ' வட்டங்களினதும் பயணம் தொடங்குகிறது.

கர்மாவின் கூட்டத்தினரை எட்டிப் பிடித்தனரா, அவனுடன் சமாதானம் ஏற்பட்டதா என்பதும், வழியில் அவர்கள் கற்றுக் கொள்ளும் பாடங்களும், டின்லே, பிக்குவான இளைய மகன் , கர்மா, டின்லேயின் மருமகள் பேமா, பேரன் பசாங், . இவர்களது தனிப்பட்ட பயணங்களுமே கதை. சின்னச் சின்ன மனதைத் தொடும் காட்சிகள். மரம் என்றால் என்ன எனக் கேட்கும் பசாங், கர்மாவின் வில்வித்தை மீது அபார பிரமிப்புக் கொண்டவனாக இருக்கிறான். கர்மாவின் சிறுவயது தோழியாக டின்லேயின் மருமகள் பேமா. தான் குற்றமற்றவன் என்பதை டின்லேக்கு எடுத்து சொல்ல முயலுகின்ற,இளமைத் துடுக்கு நிறைந்த வீரனாக கர்மா....

நடித்தவர்கள் பாத்திரமாகவே ஒன்றிப் போயிருக்கிறார்கள். நீண்ட நாட்களின் பின் நிச்சயமாக கண்ணுக்கும் காதுக்கும் மனத்திற்கும் ஒரு விருந்து. கிடைத்தால் எடுத்துப் பாருங்கள்.

பி.கு: படத்தில் பணியாற்றியவர்கள் பற்றி இங்கே...

அழகிய தீயே

மேற்கூறிய படம் பார்த்தேன். கடைசியில் கதாநாயகிக்கு வந்த மிகவும் சினிமாத்தனமான "பூம்" தவிர படம் நல்லாத்தான் இருந்தது. எல்லாரையும் விட "டைசன்" தான் (கதாநாயகி வேற ஊர் போகிறா என்கிற போது) மிகவும் இயல்பாக முகபாவனை(!?) காட்டியிருந்தது!!. நவ்யா நாயரைப் பார்த்தால் கொஞ்சம் சுஹாசினி, கொஞ்சம் மீனா, மீதி தீபா வெங்கட்(தீபா வெங்கட் பகுதி ஒரு வேளை அவங்க பின்னணிக் குரல் கொடுத்ததால் ஏற்பட்ட மாயையாக கூட இருக்கலாம்!!) போல ( எனக்கு) இருந்தது. (யாரப் பார்த்தாலும் "முதல் எங்கியோ கண்ட மாதிரி இருக்கே" என்கிற என் வியாதி பற்றி இன்னொரு நாளைக்கு விரிவா சொல்றேன்! ;o) )

படத்தில் எனக்குப் பிடித்த காட்சி: நுளம்பு மருந்தின் புகை மூட்டத்திற்கூடாக வெள்ளைத் தேவதையாக நவ்யா நடந்து வருவது. வாய்விட்டு சிரித்தேன். நினைக்க நினைக்க சிரிப்பு வருது!

பி.கு 1: அழகான நெருப்பு என்று ஏன் பெயர் வைத்தார்கள்?
பி.கு 2: கதாநாயகி, அப்பா வீட்டில் வளர்த்த சீச்சுக்கு என்ன ஆச்சு?
பி.கு 3: "பாலா" கதாபாத்திரத்தை பார்த்தவுடன் ஏன் இவர் ஞாபகம் வந்தது???


ஒலிம்பிக் தேசம் 4 ஒ.தே 3

பாரசீக போர் :
பரந்து கொண்டிருந்த பாரசீக பேரரசின் அரசனாக முதலாம் டரியுஸ் கிமு 519ல் முடி சூடினான். பாரசீக மன்னன் சைரசினால் வெற்றி கொள்ளப்பட்டு பாரசீக ஆட்சியின் கீழிருந்த அயொனியர்கள் அதிருப்தியடைந்திருந்தனர். கிமு 419ல் மிலெட்டூசைச் சேர்ந்த அரிஸ்டகோரஸ் என்பவன் கரையோரக் குறுநிலங்களை இணைத்து ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தினான். 5 வருடத்தில் டரியுஸ் இதனை அடக்கி விட்டாலும், இந்தப் பிரதேசத்திற்குள் இல்லாதிருந்தும் கொந்தளிப்பிற்கு உதவிய அதென்ஸ் மீது சீற்றம் கொண்டான். "என்னையா சீண்டுகிறாய்..உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று வில்லன் வசனம் பேசி பழிக்குப் பழி வாங்க நினைத்த டரியுஸ் ஸ்பார்ட்டாவிடம் உதவி கோரினான். கிரேக்கத்தையே வெற்றி கொள்ளும் மாஸ்டர் ப்ளான் அவனிடம் இருந்ததை ஸ்பார்ட்டா புரிந்து கொண்டு உதவ மறுத்ததால் டரியுஸ் தன் முயற்சியை கிடப்பில் போட வேண்டியதாயிற்று. ஆனாலும் முற்று முழுதாக தன் திட்டத்தை கை விடவில்லை; கிமு 490ல் பாரசீக இராணுவம் மரதன் என்னும் இடத்தில் வந்து குவிந்தது. 10,000 பேரை மட்டுமே கொண்டிருந்தாலும் கிரேக்கர்கள் பாரசீகத்தை தோற்கடித்தனர். "எங்களூரில் இந்திரவிழா நடக்கிறது" என்று ஸ்பார்ட்டா இந்தப் போரில் பங்கேற்கவில்லை.

இன்னொரு போர் தொடுக்க திட்டம் தீட்டிய டரியுஸ் அது நிறைவேறும் முன்னமே மண்டையைப் போட; தந்தையின் கனவை நனவாக்கும் பொறுப்பு ஸெர்க்ஸீசின் தலையில் சுமத்தப் பட்டது. பரந்து விரிந்த தனது சாம்ராஜ்யத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் போர்வீரர்களை (மொழிபெயர்ப்பாளர்களுக்கு நல்ல மவுசாக இருந்திருக்குமோ...) அழைத்துக் கொண்ட ஸெர்க்ஸீஸ் தரை + கடல் வழிப் போருக்கு ஆயத்தம் செய்தான். பாரசீகர்கள் (தற்போதைய) இயரிசோசிற்கு அருகில், தங்கள் கடற்படை பயணிக்கத் தக்கதாக ஒரு கால்வாயைத் தோண்டினார்கள். இதன் மூலம் அதொஸ் மலையடிவாரத்தில் ஆர்ப்பரிக்கின்ற கொந்தளிப்பான கடலில் பிரயாணம் செய்வதை அவர்களால் தவிர்க்க முடிந்தது. கிரேக்கத்தின் மத்திய மற்றும் தென் குறுநிலங்கள் கொரிந்தில் சந்தித்துக் கொண்டன. பாரசீகர்களை தோற்கடிக்கும் வழிமுறை பற்றிய மந்திராலோசனை நடந்தது. ஸ்பார்ட்டாவின் தலைமையின் கீழ் தரைப்படை+கடற்படையும், இப்படைகளுக்கான தந்திரோபாயங்கள் மற்றும் வியூகங்கள் அமைக்கும் பணிக்கு அதென்ஸின் தலைவனான தெமிஸ்டோக்கிள்சும் என தீர்மானிக்கப்பட்டது. ஸ்பார்ட்டா அரசன் லியோனிடஸ், தெர்மோபைலி எனும் இடத்திலுள்ள கணவாயை காக்கும் பொருட்டு தன் படையினரை அங்கு இட்டுச் சென்றான். குறுகலான இக்கணவாயே கிரேக்கத்தின் வடக்கிலிருந்து மத்திய பிரதேசத்திற்குச் செல்வதற்கான பிரதான வழி. எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் கணவாயைத் தக்க வைத்துக் கொண்டிருந்தனர். எட்டப்பர்களும் காக்கைவன்னியர்களும் அங்கேயும் இருந்தார்கள். எந்தப் பாதையால் மலையைக் கடந்து போவது என்பதை எதிரிக்கு கிரேக்க எட்டப்பன் சொல்லிவிட்டான். கிரேக்க வீரர்கள் பின்வாங்க நேரிட்டது. லியொனிடஸ் தீரத்துடன் சாகும் வரை போராடினான்.

ஸ்பார்ட்டாவும் அதன் ஆதரவாளர்களும் தமது 2ம் நிலை பாதுகாப்புக்குரிய செயற்பாடுகளை முன்னெடுத்த அதே நேரம் பாரசீகர்கள் அதென்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். நகரை விட்டு வெளியேறி தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு தன் குடிகளுக்கு தெமிஸ்டோக்கிள்ஸ் கட்டளையிட்டான். பாரசீக இராணுவம் அற்றிகாவை தரைமட்டமாக்கி அதென்ஸிற்கு தீ மூட்டி எரித்தழித்தது. ஆனாலும், கிரேக்க கடற்படை திறமையான வியூக அமைப்பினால், ஒடுங்கலான சலாமிஸ் கடலில் பாரிய பாரசீக போர்க்கப்பல்களை பொறி வைத்து அழித்தது. கரையிலிருந்து தன் படையினரின் தோல்வியைக் கண்ணுற்ற ஸெர்க்ஸீஸ் இராணுவப் பொறுப்புகளை தனது தளபதி மாடோனியசிடம் கையளித்து விட்டு வெறுப்புடன் தாயகம் திரும்பினான்.

ஒருவருடம் கழித்து ஸ்பார்ட்ட தளபதி போசோனியஸின் (ஒரு வேளை "Pause button" ஐ கண்டு பிடித்தவரோ...) தலைமையில் கிரேக்கம் வெற்றிவாகை சூடியது, அதெனிய கடற்படை மைக்கெலி என்னும் இடத்திற்குச் சென்று அங்கு மீதமிருந்த பாரசீகக் கடற்படையை துவம்சம் செய்ததுடன், பாரசீக ஆட்சியின் கீழிருந்த அயொனிய குறுநிலங்களையும் விடுதலை செய்தது.

தொடரும்

ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா?

கடந்த ஞாயிறன்று(தந்தையர் தினம்) சிட்னி தந்தையருக்கு வானத்திலிருந்து கிடைத்த பரிசு புகைப்படங்களாக. ..(படங்கள் தரவிறக்கப் பட அதிக நேரம் எடுக்கிறது. இன்னொரு வலைமேயும் சாளரத்தைத் திறந்து, வேறு பக்கத்திற்கு ஒரு விசிட்டடித்து வரவும், தரவிறக்கவும் முடியவும் சரியாக இருக்கும். அசௌகரியத்திற்கு மன்னிக்க!)

தடதடவென வந்து விழுந்த சிறு பனிக்கட்டிகள், வெப்பநிலை திடீரென்று தாழ்ந்தமையால் மறுநாள் காலை வரை நிலத்தோடு ரகசியம் பேசின.
கனேடிய, ஐரோப்பிய நகரங்களில் காணக்கிடைக்காததா என்று நீங்கள் நினைக்கக் கூடும். சிட்னிக்கு இது ஒரு "freak storm". இப்படியான நிகழ்வு மிக அபூர்வம். :o)

கேள்விகளுக்குரிய பதில்கள்

சில நாட்களாய் சில கேள்விகள் குடைகின்றன. (ஜே.கே.கிருஷ்ணமூர்த்தியை வாசித்ததன் விளைவு!!) தன்னை அறிதல் என்கிற வகைக்குள் அடங்கும் என்றே நினைக்கிறேன். மிகப் பழைய கேள்விகள் தான்...என்றாலும் புதிதாய் ஒவ்வொருவருக்குள்ளும்.....

1. நீங்கள் யார்?
இந்த உடலா?இத்தனை கேள்விகள் கேட்கும் மனமா?அதற்கும் மீறிய ஒன்றா?

2. நீங்கள், நீங்களே தான் என்பதை எப்படி அறிகிறீர்கள்? (How do you know "you are you'?)
இரவு படுக்கப் போகிறீர்கள். காலையில் எழுந்ததும், "இரவு படுக்கைக்குப் போன அதே ஆள்தான் நான்" என்பதை எப்படி, எதன் மூலம் உணர்கிறீர்கள்?ஞாபகங்கள் மூலமா?இரவு நித்திரையிலே மறதி வந்து விட்டதென்று வையுங்கள்..அப்போது உங்கள் நிலை என்ன? மறதி வந்தவர் தன்னை எப்படி உணர்கிறார்?

3.மகிழ்ச்சி என்பது எந்த நிலையில் ஏற்படும் உணர்வு?போதும் என்கிற மனப்பான்மையில் எழுவதா?பரீட்சையில் சித்தியெய்திய திளைப்பா? சலனமற்ற ஒரு பொழுதில் உணரப்படுவதா? திருப்தி, elation,அமைதி என வெவ்வேறு வார்த்தைகளால் குறிப்பிடப்படும் ஒன்றுதானா மகிழ்ச்சி என்பது? சரி - அப்படியே வைத்துக் கொள்வோம்; இத்தனை வார்த்தகளிருக்க மேலும் ஒரு சொல் ஏன், அதே நிலையை குறிக்க? திருப்தி, திளைப்பு, அமைதி என்பன வெவ்வேறான நிலைகள்/ உணர்ச்சிகள். அவை எப்படி மகிழ்ச்சியாக முடியும்? மேலும் மகிழ்ச்சி என்பது புறக்காரணிகளில் தங்கியிருக்கும் ஒன்றாக(எனக்குத்) தெரியவில்லை. அனேகமான பொழுதுகளில் "சந்தோசமாயிருக்கிறாயா ஷ்ரேயா" என்று என்னையே நான் வினவிக் கொள்ளும் போது, எனக்குள்ளிருந்து ஆமென்ற பதிலே வருகிறது. அந்தக் கணத்தில் நான் எப்படி உணர்கிறேன்?ஆமென்ற பதில் என் மனநிலையை சார்ந்து வருகிறதா அல்லது மகிழ்ச்சியே என் இயல்பு நிலையா?

இவற்றுக்கு பதில் கிடைக்க உள்நோக்கிய பயணம் ஒன்றே வழி என்பது தெரிகின்றது. ஆனாலும் பதில்கள் எனக்குள்ளேயிருக்குமா அல்லது பிரபஞ்சத்தின் ஒரு தகவல்தளத்திலா??

பெட்டகம்