சிட்னியில் இசைப்புயல்

நிகழ்ச்சிக்குப் போயிட்டு வந்து (என்ன நிகழ்ச்சியென்று கேட்பவர்கள் இதற்குப் பிறகு இந்தப்பதிவை வாசிக்கக் கடவது!!) அதைப்பற்றின என்னுடைய நினைப்பை போட வேணும் என்கிற எழுதப்படாத வலைப்பதிவு விதிப்படி நான் தட்டச்சத்தொடங்க முன்னமே, ஏன் இன்னும் பதியவில்லை என்று நிறையப்பேர் (நிறையப்பேர் என்டுறது இருவரைத்தான் என்று எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குந்தானே) கேட்டதால(யும்) இந்தப்பதிவு. எள் விழக்கூட இடமில்லாதளவு கூட்டமெண்டு நான் சொல்ல மாட்டன்; ஏனா? ஆட்கள் நடந்து போறதுக்கு இருக்கை வரிசைகளுக்கிடையில நடைபாதையெல்லாம் இருக்கும், எள்ளைப்போட்டா அதிலயும், பட்டும் நகைகளுமா, தலைமயிருக்கு அளவுக்கதிகமான களிம்பெல்லாம் பூசிக் கொண்டு வந்திருந்த ஆட்கள்ட தலையிலயும்தான் விழுந்திருக்கும். (பிறகு சிலவேளை தலையில எள்ளோட வாறதே ஒரு நாகரீகமான ஒன்றாக மாறவும் சந்தர்ப்பம் இருக்கு!)

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொன்னபடிக்கு 13,000 சனம். ஆனா எனக்கென்னவோ அதை விட இன்னும் கொஞ்சம் கூடப்பேர் இருந்த மாதிரி இருந்தது. சரி அதை விடுவம். எத்தினை பேர் வந்தா என்ன..கனபேர் என்டுறது தான் தேவை. அதிசயமா, நாங்களும் எங்கட "நேரத்துக்குப் போகாத" கலாச்சாரத்தை கைவிட்டுட்டு சரியான நேரத்துக்கு இருக்கையில! ஆனா ரஹ்மான் குழுவினர் பாவம், நாங்க நல்லபிள்ளைகளா மாறீட்டமெண்டு தெரியவில்லைப் போல, கொஞ்சம் பிந்தித்தான் வந்தார். முதல்ல மெல்பேணில போலவே ஹிந்திப் பாடல்களோட தொடங்கினது. "ரெலிபோன் மணிபோல்" பாட்டை ஹரிஹரன் வந்து கால்வாசி தமிழ், மீதி ஹிந்தியில படிச்சார். தமிழ்ல பாட்டுத்துண்டு வர தமிழ்ச்சனம் உற்சாகக்கூச்சல் போட்டிச்சினம். எங்களுக்கு முன்னுக்கு இருந்த வெள்ளை தம்பதியருக்கு ஏனெண்டு விளங்கல்ல. ஆளையாள் பார்த்து தோளைக் குலுக்கிக் கொண்டாங்க. "மெல்பேண் மலர்"க்குப் பதிலா "சிட்னி மலர் போல்" என்டு மாத்திப் படிக்க, பின்னுக்கிருந்த கொஞ்சப்பேர், "there's no such flower" என்டு ஹரிஹரனுக்கு விளங்கப்படுத்த வெளிக்கிட்டாங்க.

3, 4 ஹிந்திப்பாட்டுக்குப் பிறகு வந்த உன்னிமேனன் முதல் முறையா ஏஆரோட அவுஸ்திரேலிய மேடையில பாடச் சந்தர்ப்பம் தந்ததுக்கு நன்றி சொல்லீட்டு சிவமணியின்ட மேளதாள் அடிகளோட தொடங்கினார் "என்ன விலை அழகே" என்டு. அரங்கம் அதிர்ந்தது என்டு கேள்விப்பட்டிருக்கிறன், சனிக்கிழமைதான் அதின்ட முழுப்பரிமாணத்தையும் உணரக்கூடியதா இருந்தது. "ஹே"க்களும் "யேய்"க்களும்! வந்திருந்த கூட்டத்தில தமிழாட்கள்தான் 65 - 70%. சிட்னிக்கு சங்கர் மகாதேவன் வரவில்லை. அவருக்குப் பதிலாத்தான் உன்னிமேனன். உன்னிமேனன் பாடப்பாட அங்க இங்கயென்டு வெளிக்கிட்ட சின்னச்சின்ன வெளிச்சம் அரங்கு முழுக்க திட்டுத்திட்டா நிறைய்..ய்..ய்ய்.ய!! நானும் என்ட பங்குக்குத் "ஒளிவீச" கைத்தொலைபேசியை எடுத்து on பண்ணிட்டு தலைக்கு மேலை துக்கிப்பிடிச்சு பாட்டுத்தாளத்துக்கேற்ற மாதிரி எல்லாரோடையும் சேர்ந்து ஆட்டிக் கொண்டிருந்தன் (ஊரோட ஒத்துவாழ் என்டு சின்னனில சொல்லித்தந்திருக்கிறங்களே!!). பார்க்க நல்ல வடிவா இருந்தது. நாங்கள் தமிழ்க்குஞ்சுகள் ஆட்டினதைக்கண்டு தங்கட பாட்டுகளுக்கு மற்றவையும் "ஒளிவீச" வெளிக்கிட்டாங்க, ஆனாச் சரிவரல்ல. கடல்ல போற தனிக்கப்பலின்ட ஒரு விளக்கு மாதிரி அங்கயும் இங்கையுமாத்தான் அவர்களுக்கு ஏலுமாயிருந்துது. நாங்களும் அடிக்கடி தூக்கித்தூக்கி ஆட்டினாலும், பிறகு எல்லாரும் சவுத்திட்டம். உன்னிமேனனுக்குக் கிடைச்ச ரசிகர் சத்தத்தை வைச்சு ரகுமான் பிடிச்சிட்டார் தமிழ்ச்சனம்தான் இதுக்குள்ள நிறைய என்டு. பிறகென்ன, ஹிந்தி!ஹிந்தி!! என்டு பின்னாலயிருந்து கொஞ்சம் கூச்சலைச் சகிச்சுக்கொள்ள வேண்டியதாகிட்டுது. ஆனாப்பாருங்க ரஹ்மானுக்கு நல்ல வசதி, அவற்ற பாட்டுகள் தமிழ்லயும் ஹிந்தியிலயும் இருக்கு. இரண்டு மொழியையும் கலந்து பாடி ரெண்டு தரப்பையும் சந்தோசமாக்கினாங்க.

"அந்த அரபிக்கடலோரம்" பாட்டைத் தொடங்கிவிட ரஹ்மான் வந்தார். "ஹம்மா ஹம்மா"வை கொஞ்சம் வித்தியாசமா எல்லாம் படிச்சுட்டு பாட்டைத் தொடங்கினாங்க. பாட்டு முடியக்கிட்டவா நல்ல விரைவான தாளமா மாத்தி சனத்தை எழும்பி ஆட வைச்சிட்டார். தைய தையா சைய சையாவையும் அப்பிடித்தான் விரைவாயெல்லாம் பாடினாங்க. சிவமணி தன்ட "கை"வரிசையைக் காட்டினார். அவரோட சேர்ந்து பொஸ்னியாலேருந்து வந்த ஒரு பெண் (பொம்பே ட்ரீம்ஸுக்கு பாட்டுப் படிச்சவவாம்) பாடினா. முதல்ல opera பாட்டு மாதிரி இருந்தது, பிறகு கொஞ்சம் வித்தியாசமா வந்துது. என்ன உயரம் அவ!! இப்பிடி மூச்சை இழுத்துப் பிடிச்சுப் பாடுறதெண்டா எவ்வளவு பயிற்சி செய்திருக்கோணும். அசந்து போனன். முன்னுக்குப் பாடிக்கொண்டிருக்க, பின்னால நெருப்பு, கதகளி, இன்னும் வேறயென்னவோ மாதிரியெல்லாம் தனியொராள் பெரீ..ஈ..ஈ..சா உடுப்புப் போட்டுக் கொண்டு வந்து அங்காலயும் இங்காலயும் என்று ஒரே இடத்தில நின்டு அசைஞ்சு கொன்டிருந்தார். காதல் ரோஜாவே பாட்டுக்கு பின்புல நடனம் கொஞ்சம் (நல்ல மாதிரிச் சொல்லுறதெண்டா..) வித்தியாசமா இருந்துது. ஆணும் பெண்ணும். ஆண் அவக்குக் கிட்டப்போறதும் ஏதோ மீள்கயிற்றில(elastic) கட்டுப்பட்டவர் மாதிரி பிறகு இழுபட்டு மற்றப்பக்கம் வாறதுமா கொஞ்சம் ballet அசைவுகளோட அமைஞ்சிருந்தது நடனம்.

தொடக்கத்தில வந்து ஒரு குட்டி ஒரு ஆள் துள்ளிக்கொண்டு ஒரு ஹிந்திப் பாட்டுப் படிச்சார், பேர் கைலாஷ் ஆக இருக்க வேணும். நீட்டுத்தலைமயிரும் ஆளும்..பார்க்க முசிப்பாத்தியா இருந்துது. பிறகும் வந்து நடுவில என்னவோ ஹிந்தில கதைச்சுப் போட்டு நல்ல ஆட்டம் போடக்கூடிய பாட்டுகள் ரெண்டை ஆட்டம் போட்டுக் கொண்டே பாடினார். உச்சஸ்தாயிக்குப் போற திறமான குரல்.

சொல்ல மறந்திட்டனே..நிறைய்ய்ய்ய்ய விசிலடிச்சான் குஞ்சுகள்..எனக்குப் பக்கத்திலயிருந்த 50+ வயதுப் பெண்மணி உட்பட!

ஒரு பொப் பாட்டொண்டு பாடினவர் ஹரிஹரன்..வாய்க்கேல்ல. நல்ல காலம் சின்னப்பாட்டு. ட்ரம்ஸுக்கு ஏத்த மாதிரித்தான் கனபாட்டுகள். எனக்கு விளங்கல்ல ஏன் "தங்கத்தாமரை மகளே"யை மறந்தாங்க என்டு. போய்ஸ் படப்பாட்டு "சரிகாமே..பதநிசே" தான் கடைசியா ஆட வைச்ச பாட்டு. பிறகு 'வந்தே மாதரம்' பாடி விரைவில் மீண்டும் சந்திப்போம் என்டு சொல்லி நிகழ்ச்சியை முடிச்சார் இசைப்புயல்.

காட்டப்பட்ட முப்பரிமாணக் காட்சிக்கும், இசை நிகழ்ச்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஏன் லண்டனுக்கு முப்பரிமாணக்கண்ணாடி போகவில்லையெனக் கண்டுபிடித்தேன். (தெரிந்து கொள்ள விரும்பினால் தனிமடல் போடவும்). இசைநிகழ்ச்சி - மிகவும் திறமானதென்று சொல்வதற்கில்லை, ஆனாலும் இசைப்புயலுக்கும், சிவமணிக்கும் அந்தப் புல்லாங்குழலிசைத்தவருக்கும் (நவீன்குமாரென நினைக்கிறேன், சரியாய்த்தெரியவில்லை) பொஸ்னியப் பெண்ணுக்கும், கைலாஷ்க்கும் ..(நான் போட்டிராத) hats off! உள்ளம் கேட்குதே once more! :O)

இந்த நிகழ்ச்சி மூலம் அவுஸ்திரேலிய டொலர் 100,000 உதயன் சிறுவர் இல்லத்துக்கு கிடைக்கும். அதிலே ஒரு கொஞ்சமாய் என் பங்கும்...

15 படகுகள் :

துளசி கோபால் September 19, 2005 11:45 am  

வரமுடியாத குறையைப் போக்கினதுக்கு நன்றி.

அந்தக் கண்ணாடி விஷயம் என்ன?
இதையே தனிமடலாப் பாவிச்சு, எனக்கொரு தனிமடலிலே பதில் எழுதுங்க.

`மழை` ஷ்ரேயா(Shreya) September 19, 2005 12:05 pm  

//இதையே தனிமடலாப் பாவிச்சு, எனக்கொரு தனிமடலிலே //

பதில் வருது வருது.. வந்துகிட்டேயிருக்கு! :O)

இளங்கோ-டிசே September 19, 2005 12:31 pm  

உங்கள் பதிவை வாசிக்கும்போது ஏ.ஆர். ரஹ்மானின் ரொரண்டோ நிகழ்வை சிலவருடங்களுக்கு முன் தவறவிட்டது குறித்து சற்றுக் கவலையாக இருக்கிறது (அப்போது வசித்து வந்தது இன்னொரு நகரமாகவும் இருந்ததும் ஒருகாரணம்)
.....
//பதில் வருது வருது.. வந்துகிட்டேயிருக்கு! :O) //
ஏதோ 'மழை' வருகிறது மாதிரிச் சொல்கின்றீர்கள். 'மழை' ஷ்ரேயா என்பது பொருத்தமாய்த்தானிருக்கிற்து :))).

`மழை` ஷ்ரேயா(Shreya) September 19, 2005 12:50 pm  

//ஏ.ஆர். ரஹ்மானின் ரொரண்டோ நிகழ்வை சிலவருடங்களுக்கு முன் தவறவிட்டது குறித்து சற்றுக் கவலையாக இருக்கிறது //

நல்ல ஆட்டம் போட்டிருக்கலாம் டிசே! (கும்பலோட சேர்ந்து ஆடேக்குள்ள தனிக்கவனம் வராதெண்ட தைரியந்தானே! :O)

//ஏதோ 'மழை' வருகிறது மாதிரிச் சொல்கின்றீர்கள்//

எல்லாம் ஒரு சேட்டைக்குணந்தான் ;O)

அன்பு September 19, 2005 1:50 pm  

நல்லா ஆட்டம்போட்டிருக்கீங்க...
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!

அப்புறம் இந்த வார்த்தைகளுக்கு எங்கட தமிழ்ல்ல என்னான்னு சொல்லுங்களேன் தயவுசெய்து...:
பிறகு எல்லாரும் சவுத்திட்டம்.
முசிப்பாத்தியா
வாய்க்கேல்ல.
திறமானதென்று ச

அப்புறம்

"மெல்பேண் மலர்"க்குப் பதிலா "சிட்னி மலர் போல்" என்டு மாத்திப் படிக்க, பின்னுக்கிருந்த கொஞ்சப்பேர், "there's no such flower" என்டு ஹரிஹரனுக்கு விளங்கப்படுத்த வெளிக்கிட்டாங்க.

வெளிக்கிட்டாங்க.ன்னா என்ன!?
"மெல்பேண் மலர்" என்றே ஒன்று உண்டா அல்லது அதன் பெயர் என்ன?

`மழை` ஷ்ரேயா(Shreya) September 19, 2005 2:23 pm  

அருஞ்சொற்பொருள்:

சவுப்பு என்பது சோர்வு. சவுத்திட்டம் = சோர்ந்திட்டம் = சோர்ந்து விட்டோம்

முசிப்பாத்தி = வேடிக்கை, களிப்படையச் செய்வது

வாய்க்கல்ல (வாய்க்கவில்லை) = நன்றாக வரவில்லை / நன்றாக இருக்கவில்லை.

திறமானது = மிக நல்லது(very good)

வெளிக்கிட்டாங்க = சொல்லத் தலைப்பட்டார்கள்.

இதுக்கு மேல விளக்கம் தெரியவில்ல அன்பு. மெல்பேண் மலர் என்ற ஒன்று இல்லை. கவிஞரின் கற்பனை மட்டுமே!

Ganesh Gopalasubramanian September 19, 2005 2:48 pm  

நல்லா எழுதியிருக்கீங்க ஷ்ரேயா

அது சரி அந்த கைலாஷ் நம்ம "மங்கல் மங்கல்" கைலாஷா... அப்படீன்னா "மங்கல் ஹோ" இருந்திருக்குமே :-))

`மழை` ஷ்ரேயா(Shreya) September 19, 2005 3:01 pm  

அவரேதான் கணேஷ்!

அன்பு September 19, 2005 3:58 pm  

இதுக்கு மேல விளக்கம் தெரியவில்ல அன்பு. மெல்பேண் மலர் என்ற ஒன்று இல்லை. கவிஞரின் கற்பனை மட்டுமே!

ரொம்ப நன்றி ஷ்ரேயா. இதுக்கே மேல என்ன விளக்கம் வேணும் - எனகுத்தான் தமிழ் தெரியுமே:)

கலை September 19, 2005 4:45 pm  

பார்த்து, ரசித்ததை எங்களிடமும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஷ்ரேயா. நமக்கு இது எல்லாம் பார்க்க, ரசிக்க கிடைப்பது அரிதோ அரிது :(

வசந்தன்(Vasanthan) September 19, 2005 6:05 pm  

வெளிக்கிடுதல் என்பது நேரடியாக 'புறப்படுதல்' என்ற கருத்தில் வரும். ஆனால் ஒரு வினையைத் தொடர்ந்து இச்சொல் வந்தால் 'முயற்சித்தல்' அல்லது 'தொடங்குதல்' என்ற பொருளில் வரும்.
எ-டு: சொல்ல வெளிக்கிட்டன் - சொல்ல முற்பட்டேன்.
வாசிக்க வெளிக்கிட்டன் - வாசிக்கத் தொடங்கினேன்.

தெய்வீகன் September 20, 2005 12:15 am  

Thanks for the review Shreya.

`மழை` ஷ்ரேயா(Shreya) September 20, 2005 8:35 am  

நன்றி வசந்தன்.

அன்பு September 20, 2005 12:52 pm  

நன்றி வசந்தன்.
(ஹிம்ம் நல்லா தமிழ் படிச்சிருங்கீங்க/ஞாபகம் வச்சிருக்கீங்கப்பா...:)

`மழை` ஷ்ரேயா(Shreya) September 20, 2005 1:49 pm  

அன்பு - அ.சொ.பொ.விளக்கம் கேட்க எங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் வராமலா போயிடும்? ;O)

பெட்டகம்