ஏன்?எப்படி?உங்களுக்குமுண்டா?

குறிப்பட்டதொரு பதிவைத் தேடுகையில் இது கண்ணில் பட்டது. சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதம் எழுதி draft ஆகவே இருந்தது. இன்றைக்குப் பதிகிறேன்.

````````````````````````````````````

உங்களுக்கும் இப்பிடித் தோன்றியிருக்கக் கூடும்; அநேகமாக எதையாவது பார்த்தால் ஒரு சொற்றொடரோ அல்லது ஒரு சொல்தானும் மனதில் சட்டெனப் படும். புல்லைப்பார்த்தால் "அட! புல்லு" என்பதையோ, கடலைப் பார்த்து எவ்வளவு பெரிதாயிருக்கிறது என்று நினைத்துக்கொள்வதையோ இங்கு சொல்லவில்லை.

போன கிழமை படிக்கட்டில் கால் வைத்த போது ஏனோ "உதறி விரித்தது போல"
என்று தோன்றிற்று. எப்பவாவது வாசித்த ஒரு கவிதையிலிருந்தோ கட்டுரை/கதையிலிருந்தோ வந்திருக்க வேண்டும். குட்டையான கட்டிடங்களுக்கு மத்தியில் உயரமானதைக் கண்டால், ஒரு bookmark போல என்று நினைத்துக் கொள்வேன். என் நண்பிக்கு எல்லாக்கட்டிடங்களும் (குறிப்பாக கபில (brown) நிறப் பூச்சுள்ளவை) கேக் துண்டுகள் மாதிரித்தான் தெரிகின்றன. :O) கிளைபரப்பி அடர்ந்து நிற்கும் மரத்தைக் கண்டால் "காற்றுக்கு விசிறி விடுகிறது" என்றும், இலைகள் சலசலக்க கிளைகள் ஆடுகையில் "அலையடிக்கிறது" என்றும் தோன்றும். இப்படி நிறைய.

இதெல்லாம் தன்னிச்சையாகத் வந்து விழுகின்றனவா அல்லது நாங்கள் முதலில் வாசித்த/பார்த்த ஏதாவது மனதில் தங்கி, ஒரு சிறு தூண்டல் கிடைத்ததுமே வெளி வருகிறதா? உதாரணமாக, இலையுடன் கிளை அசைகையில் அலையடிப்பது என்று எனக்குத் தோன்றுவது நேற்று நீருக்கடியிலுள்ள பவழ(ள?)ப்பாறைகள் பற்றிய விவரணப்படத்தில் பார்த்த கடற்தாவரத்தின் இலை அசைவு மனதில் தங்கியதினாலாயிருக்கலாம். காரணமிருந்தேயாக வேண்டிய கட்டாயமில்லை.

இதைப்போலவே மாறாய், ஒரு சொல்லை/ வசனத்தைச் சொன்னதும் சில உருவங்கள்/வடிவங்கள்/பிம்பங்கள் மனதில் தோன்றும். இப்படி, மனம் எதனால் இப்படிச் செயற்பட்டு புரிந்து கொள்ள முடியாத இணைப்புகளை உருவாக்குகிறது? இந்த இணைப்புகளின்/உருவ(க)ப்படுத்தல்களின் பயன் என்ன?

மழையின் ஆறு

கூப்பிட்ட பொடிச்சிக்கு நன்றி.

மதி தனது ஆறுப்பதிவில் சொன்னது போல, இந்தப்பட்டியல் இந்தக்கணத்துக்குரியதுதான். நாளைக்குக் கேட்டால் கட்டாயம் சற்றேனும் மாறியிருக்கும். கீழிருப்பவை எந்தவித ஒழுங்கிலுமில்லை. முதலாவதாக இருப்பது முதலாவதாயோ கடைசியா இருப்பது கடைத் தேர்வாகவோ இல்லை. வேண்டுமானால் ஞாபகம் வந்த ஒழுங்கென்று வைத்துக் கொள்ளலாம்.


பிடித்தவற்றில் சில
1. மென்மையான தூறலோ பேரிரைச்சலோ - மழை.
2. மழைக்கு இதமாய் வாழ்த்து மடல் (நன்றாக ஆக்குகிறேனென்று சொல்லி அதை அசிங்கமாக்குவதைப் பற்றிப் பேசப்போவதில்லை :O\ ) செய்தல் அல்லது ஒரு புத்தகத்தை யன்னற்கட்டில்/யன்னலருகில் இருந்து வாசித்தல். ஏலவே வாசித்து முடித்த ஒன்றானால் எழுமாறாகப் பொறுக்கிய ஒரு பக்கத்தை வாசித்தல் - எனக்கு மட்டுமே என்று நினைத்திருந்த பழக்கம் இன்னொருவருக்குமுண்டு என்று இரண்டு நாட்களுக்கு முன் அறியக்கிடைத்தது. வியந்து கொண்டேன்.
3. பயணிப்பது. சைக்கிளுக்குத் தனீ இடம்
4. நண்பர்களுடன் வெட்டி அரட்டையாய் இல்லாமல் குறிப்பாகத் தேர்ந்தெடுத்து விதயங்கள் பேசுவது.
5. பெயர் தெரியாமல் ஆரம்பம் தவறவிட்டுப் பார்த்துப் பிடித்துப் போகிற அந்தப் பின்னிரவுப் படப்பெயரின் தேடல்
6. வீணை வாசிப்பு



பிடித்த இசை/இசையமைப்பாளர்
1. SBS வானிலை அறிக்கை காட்டுகையில் போடுகின்ற இசை - அநேகமாக. இதில் இந்த மாதம் குறிப்பாகப் பிடித்தது: மாலி. இத்துடன் ABC போடுகின்ற குறும்பட (என்னவென்று வகை பிரிக்கத் தெரியவில்லை) இசை
2. ஷ்யாமாண்ணா - விரைவில் உடனடிச் சூழல் தவிர இன்னும் நன்கு அறியப்படுவார் எனும் நம்பிக்கையுண்டு. எனது பதின்மப்பருவத்தில் நிகழ்ந்ததுக்கெல்லாத்துக்கும் ஒரு பின்னணி இசையாய். (என் பாட்டு இன்னும் ஞாபகமிருக்கிறது yay!!)
3. பாத்திய - சந்துஷ்
4. இளையராஜா/ஏஆர் ரகுமான்
5. என்னையறியாமல் அசைய வைக்கும், கரைக்கும் எதுவும்
6. யானி - இன்னமும் நீட்டுத் தலைமயிரின் வசீகரிப்புப் போகவில்லை என்று அம்மா சொல்லிக்கொள்ளக்கூடும்!! ;O)


எப்போதும் சிரிக்க வைப்பவர்கள்/உற்சாகப்படுத்துபவர்கள்/சும்மா பேசினாலேயே ஆசுவாசப்படுத்துபவர்க
ள்
1.
ண்ணன்
2. சஷி அண்ணா
3. அம்மா
4. ஷாமினி
5. மிஸிஸ் ஜோண்
6. ஷகி


பாதிப்பவர்கள் / பார்வை சீரமைப்பவர்கள் (தொடர்ந்தும் நான் கற்
றுக்கொண்டிருப்பதால் இறந்தகாலத்தில் போட யோசிக்கவில்லை)
1. அம்மா
2. பென்னா (இவரெழுதி, கொதியில் நான் கிழித்துப் போட்டு அம்மா ஒட்டி வைத்திருப்பதை அனுப்பச் சொல்ல வேண்டும்) :O)
3. ரஞ்சன் அண்ணா & சாந்தி அக்கா (என் பதின்ம வயதுப் பார்வைகளை - அவர்களறியாமலே - மாற்றியதில் இத்தம்பதியருக்கு முக்கிய பங்குண்டு)
4. நண்பர்கள் சிலர்
5. வலைப்பதிவர் ஓரிருவர்
6. ரீச்சர்


வாசித்தவற்றில் பிடித்தவை
1. மணல் வீடு, அக்னி நட்சத்திரம்
2. யாரெழுதினதென்றோ பெயரோ தெரியாமல் ஆனந்தவிகடனில் வந்து, மனிங் ப்ளே
ஸ் சம்சன் புத்தக நிலையத்தில் கட்டி வைத்திருந்த அந்தப் புத்தகம். அது உண்மைக்கதையென்று ஆசிரியர் சொல்லியிருந்தார்.
3. Kite Runner
4. The Alchemist
5. தமிழில் ஈழமுரசோ/உதயனோ ஏதோவொன்றில் வந்து, வாசித்த விலங்குப் பண்ணை
6. The Gate
....ஏதோ இரண்டு சொன்ன மாதிரி இருந்துது..அதற்கிடையில் ஆறா?


பிடித்த திரைப்படங்க
ள்
1. அஞ்சலி
2. ஹிமாலயா
3. ப்ளாக்
4. மறுபடியும்
5. பெயர் மறந்து போன எத்தனையோ ஆசிய/சுவீடிஷ்/அரபு மொழிப்படங்கள். குறிப்பாக, மூன்றாம் பரிசான சப்பாத்துக்காக ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு முதலாவதா வந்த சிறுவனின் ஏமாற்றம் பற்றினது..
6. பாட்டுகளுக்காக & பின்னணி இசைக்காகவே பிடித்த படங்கள்.



மறக்காத இடங்கள்
1. பாட்டிவீடு
2. பெரியம்மா வீட்டுப் பின் முற்றம்
3. கம்பகா
4. ரீச்சர்வீட்டுக் கொய்யாமரமும், மாமா மத்தியானம் படுக்கிற கொட்டிலும்
5. பள்ளிக்கூட விடுதி/கடல் தெரியும் வகுப்பறைகள்
6. மனம் குழம்பினபோது போய் சிலதடவைகள் உட்கார்ந்த அந்த மத்தியான வேளையின் சுடுபாறை
...........இதுவும் ஆரம்பித்ததுமே முடிந்துவிட்டதே!!



போக விரும்பும் நாடுகள்(இலங்கை தவிர்த்து):
1. இந்தியா
2. அயர்லாந்து (அந்த அக்சன்ற்றுக்காகவும், பச்சைப்பசேலுக்காகவும்)
3. கிரேக்கம்
4. கம்போடியா
5. திபெத்
6. நோர்வே (இந்த முறை ஒழுங்காப் பார்க்க)



திருத்த வேண்டிய (என்னைப்பொறுத்தவரை) கெட்ட பழக்கம்/மாற்ற வேண்டியது
1. செயல்கள் தள்ளிப்ப்போடுவது
2. பல நேரங்களில் நேரம் தவறுவது
3. ஓம் ஓமென்று சொல்லிச் சொல்லியே ஒன்றைச் செய்யாதிருப்பது
4. குறிப்பறியாமை
5. எடுத்ததை முடிக்காமல் இன்னொன்றுக்குத் தாவுவது
6. அலட்டுவது



செய்ய வேண்டுமென நினைத்திருப்பவை
1. இன்னும் படமெடுக்க
2. நீச்சல் கற்றுக் கொள்ள
3. மலையேற
4. இன்னும் நிறைய வாசிக்க
5. இதுவரைக்கும் இல்லாமலிருக்கிற ஒரு "பெரியாள் உரையாடல்" (அல்லது ஒரு கடிதமேனும்) - என் அண்ணாவுடன்
6. லொஜிக் உதைத்ததில் நின்று போன "படைப்பை"த் தொடர



தொடருங்கள் என்று அழைக்க விரும்புவது:

ஹீரோயினி!

ஒரு ஊரிலே... இல்லை, பல ஊர்களைக் கொண்டதொரு பெரிய ஊரிலே ஒரு ராணி இருந்தாவாம். இருந்தாவாம் என்ன.. இருக்கிறாவாம். அவ கனவு காணுறதிலதான் ராணியாம். என்னது? இந்தக்கதை வேண்டாமா? பிறகு வேற கதை சொல்லிறன். இன்டைக்கு இந்தக் கதைதான்.

என்னுடன் கூடப்படித்த தோழிக்கு 21ம் பிறந்தநாளாம். கொண்டாடுறாவெண்டு போறன். அங்கே போனால் பள்ளியில் ஒரே வகுப்பை என்னோட பகிர்ந்து கொண்ட நண்பிகள். (ஒரு நண்பனையும் காணேல!!) எங்கள விட ஒரு வகுப்புக் கூடின ஆட்களில 4 பேர். அதில ஒராளுக்கு என்னைத் தெரியும். நானும் அவவும் ஆளையாள் கண்டதும், தன்னுடன் இருந்த ஆட்களுக்கு என்னை அறிமுகப்படுத்துறா. ஆனா வேறென்னவோ பெயர் சொல்லி. என்னடா இது என்று யோசிக்கிறேன். எனக்குப் பெயர் மாற்றினது எனக்கே தெரியவில்லையோ??

சரி, பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வோம் என்று போகிறேன். கையிலே அன்பளிப்புகளொன்றும் இருக்கவில்லை. (நான் போறதே பெருசு. இதுக்குள்ள அன்பளிப்புத் தேவையில்லைத்தானே!!). ஒரு காவிப்பூச்சுள்ள கட்டடம். (கட்டின இடமெண்டா கட்டிடம் தானே..ஏன் கட்டடம் என்று எழுதுறோம்?? ஒருவேளை நான் மட்டுந்தானோ தாடி போர்வைக்கு வெளிலையா உள்ளுக்கா என்ட கதை மாதிரிக் குழம்பிட்டன்??)

கட்டிடமெண்டதும் பெரிசா இஞ்ச பிள்ளையிட முதலாம் பிறந்த நாளுக்கு வாடகைக்குப் பிடிக்கிற ஹோல் மாதிரியென்று யோசிக்காதீங்க... அந்தக்காலத்து இலங்கை பஸ் ஸ்டாண்ட் சீமெந்தால கட்டியிருப்பாங்களே..அதுமாதிரி ஒரு சின்ன இடம். அங்கே மற்றத்தோழிகள் சுற்றிவர இருக்க இவ சிதிலமான கொங்கிறீற்/சீமெந்துத் தரையில இருக்கிறா. ஓட்டுக் கூரை. அங்கே போனாலும் ("லும்" என்டுறது ஏனெண்டு கொஞ்சத்தில சொல்றன்) என்னைக் கண்டு கொள்வார் இல்லை. பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதிருந்த அதே “குழுவில சேராததால்” வாற (நானேன் சேராம இருக்கப் போறன், “சேர்க்கப்படாததால் வாற” என்டு வாசிக்கவும்) ஒரு பாதுகாப்பின்மை (என்ன பணியாரப் பாதுகாப்பு? ஆசிரியையிட்ட தனியப் பேச்சு வாங்கத் தேவையில்லை! அவ்வளவுதான்!!) அல்லது ஒரு தனிமையா/தாழ்வா உணர்ந்த மாதிரி (கனவுக்குத் திரும்புறன். நீங்களும் வாங்க) உணர்ந்தன். சரி, இவர்கள் கதைக்கப் போறதில்லை என்டபடியால இறங்கி அந்தக்கட்டிடத்தைச் சுற்றினன். இவங்க இருந்த இடத்துக்கு இடப்பகுதியில ஒரு கதவு. சரி, கொஞ்ச நேரம் இந்த அறைய ஆராய்வம் என்டு போனா அது ஒரு கழிப்பறையாம். அதுவும் பழைய தரைச் சாயலில்! வாளியொண்டு ஒரு மூலையில் கவிழ்த்து வைக்கப் பட்டிருக்கு. அதுக்குள்ள நிக்கத் தேவையில்லையென்று வெளியில வாறன்.

இப்ப, என்னைக் கண்டிட்டு, நண்பிகள் கூட்டம் கூப்பிடுது. (கழிப்பறைக்குள்ள போய் வாறதுதான் தகுதியா அல்லது முன்னம் கண்ணுக்குத் தெரியாம இருந்து அதுக்குள்ள போயிட்டு வந்த பிறகு தெரியிறனா என்டு எனக்கு விளங்கல்ல). வாழ்த்துறன் என்ட தோழியை. அப்பத்தான் (கனவிலையே) யோசிக்கிறன், என்னண்டு இவக்கு 21 வயசா இருக்கும்? இந்த வருசம் n வயசாயெல்லா இருந்திருக்கோணும் என்டு.

அப்பிடி என்ட மூளை கொஞ்சம் வேலை செய்ய எத்தனிக்கையில, கீயா மாயாவெண்டு ஒரே சத்தம். என்னெண்டு பாத்தா காலிமுகத் திடல்ல மாதிரி படிக்கட்டோட உரசி கடலலையடிக்குது. விளிம்புக்குப் போய் நின்டு பாக்கிறன். பெரியதொரு அலையெழும்பி (கடற்கோள்?) வருது. ஆனா இன்னும் கரைக்கு வரயில்ல. அலை எழும்பின படி நிக்க, அதுக்குப் பின்னாலும் முன்னாலும் என்டு மாறி மாறி (தொ.கா.வில, படம்பிடிச்ச எதையாவது, இன்னொண்டோட ஒப்பிட க்ராபிக்ஸ் பயன்படுத்திற மாதிரி) ஒவ்வொரு நகரங்கள் தோன்றுது. என்னெண்டா, அலையிட உயரத்தோட அந்த நகரங்களில இருக்கிற கட்டிடங்களின்ட உயரத்தை ஒப்பிட்டு, எது உயரமா இருக்கோ, அதுக்கேத்த மாதிரி உயரமானதைப் பின்னுக்கும், கட்டையானதை முன்னுக்கும் படபடவெண்டு மாறி மாறிக் காட்டுப் படுது. (ஆர் காட்டினதெண்டு எனக்குத் தெரியாது!!). பாத்தால் அலை கரைக்கு வருது (பின்ன, எவ்வளவு நேரந்தான் அசையாம க்ரபிக்சுக்கெண்டு நிற்கிறது).

இப்பிடி அலை வந்தா தடுக்கவெண்டு(!!) ஒரு திரை மாதிரி ஒன்று வைச்சிருக்கிறாங்க. கடல்ரோந்துப் படையினரும் அவங்கட விசைப்படகில வந்து ஸ்டைலா ஒரு வளைவடிச்சு நிண்டாங்க. திரைய இறக்கோணும். ஒராள் முயற்சிக்கிறார். அது ஒரு கம்பில சுத்தியிருக்கு. அடிக்கிற காத்தில அவரால திரைய விரிக்க முடியுதில்ல. அந்தக் கம்பிட ஒரு முனை வந்து நாங்க நிண்டு புதினம் பாக்கிற தரைக்கு வந்து "டணங்" கெண்டு விழுகுது. அப்ப ஒராள் வந்து, அந்த "டணங்"கி விழுந்ததைப் பிடிச்சு இழுக்க, திரை விரியுது. எல்லாரும் வந்து நிண்டு பாராட்டுறாங்க. ஆரையா? என்னைத்தான். ஏனா? கடல் ரோந்து வீரரே செய்யக்கஷ்டப்பட்டதை நாந்தான் செய்து திரைய விடுவிச்சது.

குறிப்பல்லாத குறிப்பு:: பாராட்டு விழாவோ ஏதோவெண்டு கனவு தொடரத் தொடங்க, விடிகாலைக் கனவு பலிக்குமெண்டு தெரிஞ்சோ அல்லது தெரியாமலோ, நான் கனவிலையாவது ஒரு VIP ஆகிறது பிடிக்காமலோ மிச்சக்கனவைக் கலைத்த தொலைபேசி அழைப்பை .........!!!

தேங்கிய சில - 3


தெருவில் அலைந்தவர்களும், பாலியல் தொழிலாளியாயிருந்தவரும், வெளிநாடு போகவென்று வந்து முகவரால் ஏமாற்றப்பட்டு நிர்க்கதியாய் நின்றவரும், பெண்போராளியென்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவரும், இன்னுமின்னும் எத்தனையோ சூழ்நிலைகளால் தன்னிடம் தள்ளப்பட்டவர்களைக் கொண்ட அதே "பெண்களுக்கான தடுப்பு நிலையம்".

தையல், கூடை பின்னல் போன்ற "பெண்களுக்குரிய" கைத்தொழில்கள் கற்றுத் தருகிறார்கள். அழகழாக பொம்மைகளும், ஆடைகளும் கைவினைப்பொருட்களும் நிறைந்து கிடக்கின்றன. அதனை விற்பார்களாம்.(விற்று வரும் காசு யாருக்குப் போகும்? தயாரித்தவர்களுக்கு உரிமையானது அவர்களிடமே போய்ச் சேருமா அல்லது சுரண்டலா என்று இன்றைக்குத்தான் கேள்விகள் எழுகின்றன.)

நன்னடத்தை(!?)யுடையவராய், நம்பிக்கையுடையவராய் (தொடர்ந்து) காணப்படின், அலுவலகங்கள், அங்காடிகள், என்பவற்றைச் சுத்தம் செய்வதைக் குத்தகைக்கு எடுத்
துக் கொண்ட நிறுவனத்தின் மூலம் வேலைக்கனுப்பப்படுவர். அப்படி வெளியே போனவர்களில் சிலர் வேலைக்குப் போய்த் திரும்பாமல் தப்பின சம்பவங்களுமுண்டு. அப்படி நடந்தால் அவவுடன் கூடப் போனவர் பாடு அன்றைக்கு அவ்வளவுதான். அடியும் வசவுகளும் வாங்கி, வேலைக்குப் போவதிலிருந்தும் நிறுத்தப்படுவார்.

இத்தடுப்பு நிலையத்திற்கு ஒரு பக்கத்தில் தொழிற்சாலையொன்றுண்டு. அங்கே வேலைக்கு வருபவர்களுடன், மேலாளருக்குத் தெரியாமல் மதிலால் எட்டிப் பேசிச் செய்திகள் அறிவதில் ஆரம்பித்து, காதல் வயப்பட்டு தப்பியோடுவதும், காதல் முறிவடைந்தால் ப்ளேடால் கைகளைக் கிழித்துக் கொண்டு குருதி இவர்களுக்கிருக்கும் ஆசையை, தான் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுவதும் நடக்கும். இருக்கிற ஒரு தொலைக்காட்சியில் ஒன்பது மணி வரை நிகழ்ச்சிகள் பார்ப்பதும், ஆங்காங்கே உட்கார்ந்து கதை பேசுவதும் மட்டுமே இவர்களுக்கு பொழுதுபோக்காக இருக்கிறது.

வசிக்கும் சூழலில் காவலாளி தவிர ஆண்வாடையே இல்லை. என்னதான் அடைத்துக் கிடந்தாலும், மனதுக்குக் கடிவாளம் போட்டாலும், அவற்றையும் மீறி உடலின் தேவைகள் தலைகாட்டுவதில் தன்னினச் சேர்க்கையாளராகின சில பெண்களுடனும் பேசக் கிடைத்தது. மற்றப் பெண்களால் இவர்கள் ஒதுக்கப்படவில்லை. இப்பெண்களின் முதுகுக்குப் பின்னால் இவர்களைப் பற்றிக் கதைக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதில் எனக்கு ஐயமில்லை. போன பதிவில் சொல்லியிருந்த பெண்ணிடம் பேசுகையில் தன்னினச் சேர்க்கையாளரான இப்பெண்கள் குறித்து அவவின் கருத்துக்க் கேட்டதற்கு அவ "அது அவர்கள் சொந்த விசயம். எனக்கு வெறுத்தது அவர்களுக்கும் வெறுக்க வேண்டும் என்றில்லையே. உடல் தேவையை நிறைவேற்ற ஒரு வழி. அவ்வளவுதான்" என்று சொன்னதில் இருந்த முதிர்ச்சியை வழமையாக் குறுகிய கண்ணோட்டத்துடனே பாலுறவைப் பார்க்கும் எம் சமூகத்திலிருந்து வந்த ஒருவருடையது என்று நான் உணரக் கொஞ்சக் காலம் சென்றது.

மறந்து போயிருந்த இந்தத் தடுப்பு நிலையத்தில் இருக்கிறவர்களைப் பற்றின நினைவு இதை எழுதத் தொடங்கியதும் ஞாபகங்களை அசைபோட்டுப் பல கேள்விகளை எழுப்புகிறது. என் நினைவுத் திறனும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

நிலையத்தினதும் பெண்களினதும் சுகாதார நிலை என்ன? அவற்றைக் கவனிப்பது யார்?
வேலைக்கனுப்பப்படும் பெண்களினது சம்பளம் அவர்களிடம் சேர்கிறதா?
கைவினைப்பொருட்கள் விற்ற பணத்திற்கு என்ன நடக்கிறது?
வெளிவாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தப்படுகிறார்களா?
வெளியில் வந்தால் இவர்கள் என்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது?

விடை தெரியாத கேள்விகள் இன்னும் இன்னும் எழுகின்றன.

குறிப்பு: இன்னும் விரிவாக எழுதலாமே என்று ஒருவர் கேட்டிருந்தார். இன்னுமின்னும் இந்த அனுபவங்களைப் பற்றி தோண்டித்தோண்டி யோசிக்கையில் வருகிறதெல்லாம் மனவருத்தத்தையும் எழுப்பி, என்னைப்பற்றி நிறையக் கேள்விகளையும் முன்வைக்கிறது. அவை காரணமாகச் சுருக்கிச் சொல்லியிருக்கிறேன்.

தூது

கீழ இருக்கிறது போலத்தான் எண்ணமோடினது, சில சமீபத்திய புகைப்படங்களைப் பாக்கக் கிடைச்சதில. வழமையா எழுதுற மாதிரி எழுத வரேல்ல. அப்பிடி இருந்திருந்தா எவ்வளவோ நல்லாருந்திருக்கும் என்டு எனக்கே தெரியுது.

(disclaimer: பின்குறிப்பை வாசிச்சுட்டு மேற்கொண்டு வாசிக்கிறதா என்ட முடிவுக்கு வரவும். )

-------------------

எனக்குள் நிறைவது தான்
அவர்களுக்குள்ளும்

எவர் கடந்து போகையிலும்
ஏற்படும் அந்தச் சிறு வெளியை
தடவிச் சென்று நிரப்பும் நாசியின் நட்பு.

இன்று என்னுட் புகுந்து வெளிவருங் காற்றே,
நாளையோ மறுநாளோ
எப்போதேனும் அவர் நாசி சேர்ந்தால்
நீ என்னுள்ளிருக்கையில்
அவர்களை நினைத்துக் கொள்வதைச் சொல்.

இத்தனை நாட்களிலும் - நான்
அவர்களைக் காணாத போதுகளிலும்
அவர்கள் என்னை எண்ணாத போதுகளிலும்
எமக்குள் நிறைந்திருந்தாய் - காற்றே
போய்ச் சொல்,
நினைவுகள் சுருங்கிய போதிலும்
நேசிப்பு சுருங்குவதில்லையென்று.

என் கண்களுக்குத் தெரியும்,
நான் பார்த்தவை - இன்று
இக்கரையில் நானும்
அக்கரைக்கு அப்பாலுமாய் அவர்களும் நிற்கையில்
தூரங் கடந்த சகபயணி
காட்டிப்போன காட்சிகளில்
முன்னை நாட்களில் - பிரிவென்பதைச்
சந்திக்காதவரை நான் கண்டவை
இன்றைய பொழுதில் வேற்றுருவாய்

அப்படியேதானிருப்பர் என்றவென் எண்ணம்
பொடியாகி உன்னில் கலக்கக் கண்டாய்
ஆண்டுகளின் பசித்தீவிரத்தில்
உண்ணப்பட்டுப் போயிருக்கின்ற
உறவுகளிடம் - காற்றே
போய்ச்சொல்
உடல்கள் சுருங்கினாலும்
நேசிப்பு சுருங்குவதில்லையென்று

உன்னைக் கிழித்தபடி பறந்த - அந்த
உந்துருளிச் சவாரிகளின் சாரதியை
பயணி மீண்டும் காணும் வரை
சாரதிக்குப் பயணியை ஞாபகமில்லாப்
பொழுதொன்றில் அவருக்கும்,
உன்னூடாகக் கைகள் வீசிக் - கிளையிருந்து
குதித்து,
கைகளும் வால்களும் ஆட - கால்களுதறி
ஆளையாள் கண்டுகொள்ளும் வஞ்சமில்லா
வாஞ்சை மட்டும் நிரம்பியதாய்
ஓடிக் களைத்த போதுகளில்,
அவதி அவதியாய்ப் பேரளவுகளில்
உன்னை விழுங்கிய - என்
சிறுபருவத்து மாந்தரும் விலங்குகளும்,
அடிவாங்கிக் கற்ற பின்னும்
புகலிடந் தருமந்தத் தாவரங்களும்
எங்கெங்கிருப்பினும் - காற்றே
போய்ச்சொல்
தோல் சுருங்கினாலும்
நேசிப்பு சுருங்குவதில்லையென்று

அவர்களைத் தொட்டு - என்னிடம்
மீள்வாயெனின், எனக்கும் வந்து
சத்தமாய்ச் சொல்லிப் போ காற்றே
காலம் போல நேசிப்பும்
ஒருபோதும் சுருங்காதென்று.

-------------------

குறிப்பு: அறுவையாயிருக்கு(ம்! கட்டாயமா) . பாவம் நீங்க.

பெட்டகம்