நீண்டதாகத் தோன்றும் நாள் எது? _ _ _ _ _கக் காத்திருப்பது (இடைவெளியை உங்களுக்குப் பொருத்தமானதை வைச்சு நிரப்பணும்) என்டு சொல்லாதீங்க. ஏனெண்டா நான் அதைப் பற்றிக் கேட்க இல்ல. ஒரு கிழமையில நீண்ட நாள் என்று நீங்க உணருற நாளைப் பற்றிக் கேட்கிறன்.
வெள்ளிக் கிழமை சனி-ஞாயிறை எதிர்பார்ப்பதிலயே கழிந்து விடுகிறது. வியாழக்கிழமையில அட வாரஇறுதிக்கு இன்னும் ஒரு நாள்தானே என்டு உற்சாகம் வந்து விடும். புதன்கிழமை வந்தால் 'அப்பாடா! கிழமையின் நடுப்பகுதி தாண்டியாச்சு' என்றொரு ஆசுவாசம்.
திங்கள் இருக்குதே, அதுதான் ஒரு கிழமையிலயே மிகவும் விரைவில போவது (எனக்கு). சரி சரி.. வாரஇறுதிக்கு அடுத்ததா. வாரஇறுதிக்கு இறக்கை கட்டி விட்டிருக்கு அல்லது கால்ல சக்கரம் பூட்டியிருக்கு. அல்லது இரண்டுமே. எப்பிடி வருது எப்பிடிப் போகுது என்று தெரியாமல் பறந்தோடுகிற 2 நாட்கள். கொஞ்சம் நின்டு நிதானிச்சுப் போகச் சொல்லணும்.. போகாட்டிக் கூடப் பரவால்ல இல்லையா? :O)
விழாக்காலம் தானே.. நத்தார் வந்துது 4 நாள் வார இறுதியோட. ஆங்கிலப் புத்தாண்டு வந்துது 3 நாள் வார இறுதியோட. இப்பிடியெல்லாம் நீண்ட வாரஇறுதியில ஆறுதலா இருந்திட்டு இன்னும் 12 கிழமை காத்திருக்க வேணும் அடுத்த நீண்ட வார இறுதிக்கு. என்ன கொடுமை இது கலண்டர்!
ஐந்து நாள் வேலை செய்தால் மூன்று நாள் வார இறுதியாக இருக்க வேண்டும். எவ்வளவு நல்லா இருக்கும். (அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில 4 நாள் வேலை 3 நாள் வார இறுதியென்று கொஞ்ச நாள் செயல்படுத்திப் பாத்தார்களாம். ஒரு நாளைக்குப் பத்து மணி நேரம் வேலை. உற்பத்தித் திறன் அதிகரித்ததாம். பலருக்கும் திட்டம் பிடித்தும் இருந்ததாம். எனக்கும் பிடித்துத்தானிருக்கு.) இப்ப இருக்கிற 2 நாள் நடைமுறையில, சனிக்கிழமை கொஞ்சம் வீட்டு வேலை செய்து (அல்லது செய்ற மாதிரிப் பாவனை பண்ணி) எங்கேயும் போய் வந்தால் ஞாயிறு 'என்னைப்பார்' என்று ஓடி வந்து விடுகிறது. கொஞ்சம் ஆறிக் கீறி என்னவும் செய்வமெண்டா டாட்டா பாய்பாய் ச்சீரியோ என்டுட்டு ஞாயிறும் தப்பியோடின சனிக்கிழமையைப் பிடிக்க ஓடிடும். பிறகென்ன நீலமான (எழுத்துப் பிழையில்லை) திங்கள். ஆனா நீளம் தெரியாத் திங்கள்.
வேலைக்குப் போகிற நாட்களில் இந்த செவ்வாய் இருக்கே.. அது தன்ட செவ்வாயாலே ("உனக்கு இருக்குடீ" என்டு) எங்களை (என்னைப்) பார்த்துச் சிரிக்கிறது போலும். திங்கள் காலையில் 8.30 மணிக்கு ஒரு வேலை ஆரம்பித்து முடித்து நிமிர்ந்தால் எப்படியும் 10மணிக்குக் குறையாது. அதே வேலையை செவ்வாயன்று செய்து பாருங்கள்.. ஒன்பதேகால் கூட ஆகியிருக்காது. உண்மையாத்தான். நகருதா என்று அடிக்கடி கூர்ந்து பார்க்க வைக்கிற மணிக்கூடு செவ்வாய்க்கிழமைக்கே சொந்தம். நல்ல வேளை இந்த மாதம் எஞ்சியிருக்கிற பொது விடுமுறையான அவுஸ்திரேலியா தினம் செவ்வாய்க் கிழமை வருகிறது. நீண்ட வாரஇறுதி இல்லாதது கவலைதான்.. ஆனால் செவ்வாய் வேலை இல்லையென்பது அந்தக் கவலையை ஈடு செய்துவிடுகிறது. செவ்வாய்க்கிழமைகள் எத்தனை மணித்தியாலங்களைக் கொண்டவை? கட்டாயம் 24க்கும் கூடவாகத்தான் இருக்க வேண்டும்.
செவ்வாய்க் கிழமைகளை தேசிய வேலை செய்யாத நாளென்று அறிவிக்க வேணும். "ஹலோ, மிஸ்டர். கெவின் ரட், திஸ் இஸ் ஷ்ரேயா ஸ்பீக்கிங்..."
செவ்வாய்.. நீ கெதியில செல்வாய்!
இருந்தும் இல்லாமலும் ஒரு ஆரம்பம்
ஒரு புள்ளிதான் தேவையாயிருக்கிறது
எல்லாத் தொடக்கங்களுக்கும்.
சந்திப்புகளுக்கும் அறிமுகத்திற்கும்
காத்திருப்புகளுக்கும் பிரிவுகளுக்கும்
அனுபவங்களுக்கும் ஞாபகங்களுக்கும்
கரைந்து போகிற எந்தவொரு தருணத்துக்கும்.
கோவத்தினையும் குழப்பங்களையும்
தீர்வுகளையும் தீர்மானங்களையும்
அழுகை/சிரிப்புகளையும் பயணங்களையும் மாற்றங்களையும்
ஆரம்பித்து வைக்கிற அதே புள்ளிதான் எதற்குமே தேவைப்படுகிறது
இதை எழுதவும் கூட.
அன்புக்கு மட்டும் ஏதுமில்லை
காலத்தின் சுவாசத்தைப் போல - என்றென்றைக்கும்
அது ஆரம்பமற்றதாய் இருக்கிறது
அம்மாவைக் கண்ட முதல் நாளினை ஒத்ததாய்.
வகை: கிறுக்கினது
தேவதைகளின் புன்னகை மந்திரம்
இரவு நேரத்துக் காவல்காரர்களாய் பிறையும் நகரத்து வெளிச்சம் விழுங்காத பத்துப் பன்னிரண்டு நட்சத்திரங்களும் கூடவே முழித்திருக்கின்றன. நினைப்பு முழுவதையும் இன்றைக்குக் கண்ட & காணாத அழகிய சிறு பெண்கள் ஏனோ நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் பகுதியில் இருப்பவர்களுக்கான அறிமுகக் கூட்டம் இன்று. அங்கே வந்த இரண்டு அழகிகளுக்கும் 2-3 வயது. ஒருத்திக்குக் கை கொள்ளாதளவு சொக்லட். ஒவ்வொருவரிடமும் போய் "High 5" கொடுத்து அவர்களிடமிருந்து சொக்லட்டை வாங்கிக் கொண்டா. உறையுடனே இருந்த சொக்லட்டை ஒரு கடி கடிப்பா.. பிறகு கையில் இடமில்லாவிடில் அம்மாவிடம் கொடுத்துவிடுவா. அவவின் தலையில் இருந்த இரட்டைத் தென்னைகள் சிறுவயதுத் தலைவாரல்களை ஞாபகப் படுத்திப் போயின. சொர்ணாவாம் பெயர்.. பேசாமல் சொக்லட் என்றே வைத்திருந்திருக்கலாம்.
வந்த மற்றவவோ எம்மி என்னைப் பற்றிச் சொன்னதை நினைவுக்குக் கொணர்ந்தா. எங்கே நடந்தாலும் ஒரு துணி அவவின் கையில் இருந்தது. கோழிக்குஞ்சின் மஞ்சள் நிறத்தில் வெள்ளையினால் கோலம் போட்ட துணி. அவவைப் பார்த்தாலே ஒரு கோழிக்குஞ்சைப் போல தூக்கிக் கொள்ள வேணும் போல இருந்தது. தாய் சொன்னா அந்தத் துணி எப்போதும் அவவோடேயே இருக்குமாம். நானும் சின்னனில 'தூய' என்று என்னால் அழைக்கப்பட்ட துணி இல்லாமல் படுக்க மாட்டேன் என்று எம்மி சொன்ன கதையும் அந்தக் குட்டிப் பெண்ணை இன்று மாலை கண்டதிலிருந்து என்னோடேயே இருக்கிறது.
"எறும்பு கிட்ட வர மாணாம் சொல்லுங்க" இரண்டரை வயதில் இலங்கை வந்த போது அழகி #3 சொன்னது. இவ பாடினபடி"இன்னிசை பாடி வரூம்ம்ம் இளங்காற்றுக்கு உடுக்கமில்லை" என்றுதான் எனக்கு அந்தப் பாடல் இப்போதும். இன்னும் ஒரு மாதத்தில் பதின்மப் பருவத்தில் காலடி எடுத்து வைப்பா. ஓ! இந்த நாட்கள் எங்கே தான் போகின்றன?
அழகி #4 குட்டித் தேவதை அஞ்சலி. இவரது கொஞ்சும் தமிழ் கேட்கப் பிடிக்கும். இவவின்இடுகையொன்றைக் களவாடிவிட்டார்களாம் :O(
வகை: கிறுக்கினது
விதம் விதமான வேண்டுதல்கள் இவ்வுலகில்
எனக்கு அளவான வெப்ப நிலையிலும் பேருந்துக்குள்ளிருந்த மற்ற எவருக்குமே வெக்கையாவும் இருந்த ஒரு காலைப் பொழுதில் தான் அந்தக் கபில நிறக் கண்ணழகியிடம் நான் மாட்டிக் கொண்டேன்.
பேச ஆரம்பித்து, கையில் வைத்திருந்த புத்தகத்தை வாசிக்கவொண்ணாமற் பண்ணியதன் பேரிலும் அந்தக் காலைப் பொழுதிலேயே சளசளவென்று ஒன்றேகால் மணித்தியாலத்துக்கு வழி நெடுகலும் பேசிக் கொண்டே வந்ததிலும் அந்தப் பெண்ணை இனிக் காணக் கூடாது என்று நான் வேண்டிக் கொண்டதில் எனக்கு வியப்பில்லை. அன்றுதான் கண்டு பேசிய என்னிடம் தன் குழந்தையின் படங்கள் காட்டி, தங்களுடனே வசிக்கும் மாமியார்/மாமனார் பற்றி 4-5 லொறி கொள்ளக்கூடியளவு குறை சொல்லி, தான் இறங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் போல தன் செல்பேசி இலக்கம் தந்து போன அந்தப் பெண்ணைக் காணக் கூடாதென்ற என் வேண்டுதல் கொஞ்ச நாட்களுக்குப் பலித்தது. ஆனாலும் மெர்பியின் விதி வேலை செய்தது நேற்று.
வீடு நோக்கிய பயணத்திற்கு, ஓடோடி வந்தும் பேருந்தைத் தவற விட்டுவிட்டேன்(12B / Sliding Doors திரைப்படங்களின் ஞாபகம் வருதா?) . அடுத்ததாய் வந்து நான் ஏறிய பேருந்துக்குள் அவவைக் கண்டேன். பார்த்ததும் சிரித்தா. உசைன் போல்ட்டின் வேகம் மட்டும் எனக்கு இருந்திருக்குமானால் பிடித்திருக்கக் கூடிய பேருந்தில் இந்தப் பெண் இல்லாமல் புத்தகத்தோடு மட்டுமானதாய் அமைந்திருக்கக் கூடிய பயணத்தை நினைத்துக் கொண்டு எரிச்சலாய் விதியே என்று சிரித்து வைத்தேன்.
சாதாரணமான உரையாடல்கள், கேள்விகளினூடே politically incorrect ஆனதும் மற்றவரின் அந்தரங்கத்துள் அத்துமீறுவதுமான கேள்விகளும் என்னிடம் கேட்கப் பட்டன. இதுவரை பட்டும் படாமல் பதில் சொல்லிக் கொண்டு வந்த நான் ஒரு கட்டத்தில் நெளிய ஆரம்பித்திருந்தேன். அதைப்பற்றி அவ ஏன் கவலைப்பட!!! "இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல நான் விரும்பவில்லை" என்று சில இடங்களில் சொல்லியும் திரும்பத் திரும்பத் துளைத்தவவை நினைக்க நினைக்க எரிச்சலாயும் அதே நேரம் வியப்பாயும் இருக்கிறது. எப்படி முடிகிறது இவர்களால்?
இந்தியப் பெண்கள் எல்லாத்தையும் தமக்குள்ளேயே மூடி வைத்து புழுஙகி மனவுளைச்சலுக்கு ஆளாகுகிறார்களென்றும் அதனாலேயே இந்தியப் பெண்களைக் கண்டால் பேசினால் அவர்களை மனம் திறந்து பேசப் பண்ணுவதற்குத் தான் முயற்சிப்பதாயும் சொன்னா. கதை பிடுங்க யோசிக்கிறாவோ என்று ஒரு எண்ணம் எனக்குள் ஒரு கணம் வந்து போனது. குமுதம் ஆ.வி போன்றவற்றில் வரும் மாமியார்-மருமகள் சண்டை பற்றிய நகைச்சுவைத் துணுக்குகள் பார்த்தது போல இருந்தது அவவின் மாமனார், மாமியார் குறைப் படலம். என்னிடம் கேட்டா நீயும் மாமனார்-மாமியாருடனா வசிக்கிறாய் என்று? இல்லை என்றேன். அவர்கள் வந்து போவார்களா அவர்களின் தலையீடு உண்டா என்ற கேள்விக்கு அவர்கள் உயிருடன் இல்லை என்று சொன்னேன். ஓ! என்றவர், தனது மாமனார்-மாமியாரைப் பிடிக்காததால் அவர்களின் தலையீடு இருப்பதால் அவர்களுக்கு ஏதேனும் கெட்டது நேரட்டும் என்று வேண்டிக் கொள்கிறாவாம். அவவைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. ஏன் இப்படி?
இப்போது முன்னையிலும் அதிகமாக வேண்டிக் கொள்கிறேன்.. அந்தப் பெண்ணைக் காணக் கூடாதே என்று. காலையில் அவவின் தரிப்புத் தாண்டும் வரை தூங்குவது போல நடிக்கவும் மாலையில் ஏறும் முன் பேருந்தை நோட்டம் விடவும் நேர்கிறது. சாதாரணமான ஒரு பேருந்துப் பயணம் இப்படி ஒரு திகிலளிக்கும் ஒன்றாய், தொங்கல் (Suspense) நிறைந்ததாய் அமையக்கூடும் என்று யார்தான் நினைத்தார்கள்! எதேதோ வேண்டுதல்களைப் பலிக்க வைக்கிற எத்தனையோ கோயில்களும் கடவுளரும் இருக்கின்றனரே.. ஒருவரைக் காண வேண்டாமென்றால் அதிலே எந்தக் கோயில் எந்தச் சாமிக்கு நேர்ந்து கொள்ள வேண்டும்?
வகை: இப்பிடியும் நடந்துது
என்னுடன் இருக்கும் நீ
உன்னோடு பேசுவது தான் எவ்வளவு இதமாய் இருக்கிறது. உன் வீட்டு முற்றத்து நித்தியகல்யாணியைப் போல எப்போதும் புன்னகைக்க வைக்கிறாய். எனக்கு எப்போது தொலைபேச வேண்டும் என்பதை எப்படியோ உன்னால் அறிய முடிகிறது. எப்படியடி? இன்றைக்கும் எடுத்தாய் - வேறு சில ஆற்றாமைகள் கோபங்களுடன் கூடவே ஒரு மணி நேரமாய் எல்லாப் பெட்டிகளுக்குள்ளும் தேடிக் கிடைக்காத ஆனாலும் வீட்டிற்குள்ளே கட்டாயம் இருக்கிற 3 காமாட்சி விளக்குகளிலும் எரிச்சல் தோன்றி, அதை இறக்க வழியின்றி, ஒரு சுவர் அலுமாரிக்குள் அடைத்து வைத்திருக்கிற பிள்ளையாரை நான் முறைத்து திட்ட ஆரம்பிக்கையில்.
நீயென்று ஸ்கைப்பில் கண்டதும் இயலாமையில் வந்த அழுகை எட்டிப்பார்த்தது உண்மை. "என்னடி செய்ற" என்ர ஒரு கேள்வி போதுமாக இருக்கிறது என் விளக்குத் தேடல் எரிச்சல்களைக் கொட்டிவிட. உன்னுடன் பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஒரு சிறு பெட்டியைத் திறந்ததில் 2 விளக்குகள் கிடைத்தன. சிரிக்கிறாய் நீ. எனக்கு எப்படி இதமாய் இருக்கிறாயோ, அப்படி உனக்கு நானுமிருக்கிறேன் என நம்பிக் கொள்கிறேன்.
அடுத்து மற்றவரால் என்ன சொல்லப்படும் என என்னாலும் உன்னாலும் சொல்ல முடியும். எப்படி அது சாத்தியம் என்பதும், எப்படி உன்னிடம் சொல்லும் போது மட்டும் உப்புச் சப்பில்லாத விதயங்களும் சுவையானவையாகின்றன என்பதும் எனக்குப் புரிவதேயில்லை. எலி பிடித்த அதிமுக்கியமான கதை சொல்லத் தொடங்குகிறேன், என்னைத் தவிர உன் உலகத்தில் வேறு யாருமில்லை என்ற பாவனையில் கதை கேட்கிறாய். வேறெவருக்கும் சொல்லும் போது சிரிப்பே வராத எலி பிடித்த கதை உன்னிடம் சொல்லப்படும் போது மட்டும் வயிறு வலிக்கும் படியான நகைச்சுவையாகிப் போகிற மாயம் என்ன? அன்றைக்கொருநாள் உன்னுடன் கதை பேசிச் சிரித்த ஞாபகம் என் முன் வந்தமர்ந்திருக்கிறது. எதற்கோ உனக்குக் கண் கலங்க அதைப் பார்த்து நானும் அழ பிறகு நாம் அழுவதைப் பார்த்து நாமே சிரித்துக் கொண்டதொரு அழகிய பொழுது. உலகம் முழுவதிலும் எல்லாத் தோழிகளுக்கிடையிலும் இருப்பது போலவே எங்களுக்கேயான பிரத்தியேக சிரிப்புக்கள், பேச்சுக்கள். இதை எழுதுகையில் கூட உன் சீரியல் கனவு சிரிக்க வைக்கிறது. வீட்டிற்குள் பின்கதவால் நுழைவதற்குக் கள்ளன் எடுக்கும் முயற்சியைக் கனவாக, அதுவும் தொடர்ந்த கனவாகக் கண்டவள் நீயாய்த்தானிருப்பாய்.
பதின்ம வயதின் இறுதியிலும் இருபதுகளின் ஆரம்பத்திலும் நடந்தவைகளை இப்போது நினைத்தால் வேறெவருக்கோ நடந்தது போலத் தோன்றுகின்றன. கண்ணீராலேயே ஒரு கடிதம் போட்டேன் உனக்கு, கல்யாணமாகின பிறகு ஒரு முறை வந்த போது அதைக் காட்டினாய். இன்னும் வைத்திருப்பாயோ என்னவோ!! உன் கணவன் உன் காதலனாயிருந்த காலத்தில் என்னால் "மிரட்ட"ப்பட்டதற்கு மன்னித்துக் கொள்; எக்காரணங் கொண்டும் உனக்கு வலித்து விடக் கூடாதென்பதே என் நோக்கமாய் இருந்தது. அதை நீயும் தெரிந்து கொண்டிருந்தாய். என் மீதான அவன் பயங் குறித்துப் பேசிச் சிரித்திருக்கிறோம். என்னிடம் பயப்பட்ட ஒரே சீவன் - அவனிடம் பேசிக் கொள்ள வேண்டும் ஏன் அப்படி இருந்தது என்பதை. உன் விருப்பமான படிப்பை முடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டாய் என எனக்குத் தெரியும். ஒன்றுமே செய்யாமல் வீட்டில் இருப்பதன் அலுப்புப் புரிகிறது. ஆனால் கண்ணம்மா இந்த நேரத்தை உன்னை அறிந்து கொள்ளப் பயன்படுத்து. உனக்கான நேரம் வரும். நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
கொழும்பின் ஏதாவதொரு வீதியில் மழையில் நனைந்தபடி ஒருவரையும் சட்டை செய்யாமல் உன்னோடு மீண்டும் நடக்கத் தோன்றுகிறது. இன்றைக்கு ஏனோ உன்னிடம் பேசிக் கொண்டேயிருக்க வேண்டும் போல இருக்கிறது. பபிள் கரைசலுடன் வருகிறாயா மஞ்சள் வெயிலோடு ஒரு புல்வெளிக்கு?
love u டி..
அந்த ஒற்றை வரி
தொடர்வண்டிப் பயணத்தின் போது மனதிற்குள்ளேயே அழகாய் உருக்கொடுத்துச் சிங்காரித்திருந்தேன் அந்த இடுகையை. வீட்டுக் கதவு திறந்தேன். அந்த இடுகையெங்கே? வண்டியிலேயே மறந்து விட்டேனா? அல்லது இறங்கி நடந்து வரும் வழியில் தொலைத்தேனா? "துளிர்த்து, வளர்ந்து, நிறம் மாறி, உதிர்ந்து காற்றிலலைந்து, தரை தடவி், மக்கி, உரமாய் மண்ணுக்குள் ஊறி, வேர் பிடித்து மரத்துக்குள் போய், சத்தாகித் திரும்பத் துளிர்த்து வரும் அந்த இலை போலே என்றென்றைக்குமான எங்கள் அலைதல்களோடேயே நீயும் நானும்" என்று நினைவில் பிசுபிசுத்தது எப்படியோ தொற்றிக் கொண்டு வந்துவிட்ட ஒற்றை வரி.
அணிந்தணிந்து மென்மையாகிப் போன பிரியமானதொரு ஆடையைப் போலே கவிந்திருக்கிறது வெள்ளியிரவு. மிஞ்சிக் கிடந்த அந்த ஒற்றை வரியை நூல் போலப் பிடித்துக் கொண்டு மீதி இடுகையை திரும்பவும் நெய்துவிடலாமென்று பார்க்கிறேன். வரவேயில்லை. காணாமல் போய்விட்ட அந்த இடுகை, இளவரசியின் பதினெட்டு மெத்தைகளுக்கும் கீழே இருந்த பட்டாணியைப் போல என்னை உறுத்துகிறது. யோசித்துக் கொண்டு அவவைப் போலவே விழித்திருக்கிறேன். இளவரசி பாவம். அவவுக்கும் வலைப்பதிவிருந்திருந்தால் ஒருவேளை பட்டாணியால் பறிபோன நித்திரையைப் பற்றி ஏதேனும் எழுதியிருக்கக்கூடும்.
வகை: கிறுக்கினது
மூன்றே கேள்விகளும் சில சுழற்சிகளும்
வழமையா, வேலையிலொரு அணியினுடையதோ தனிப்பட்ட ஒருவரதோ செயல்திறன் எதிர்பார்த்த அளவில இல்லாமக் குறைஞ்சு போயிருந்தா, அதைத் தேத்தி எடுக்கிறதுக்கு ஒரு செயற்றிட்டம்(project) போட்டு நாலு பேரை வைச்சுப் பழையநிலைக்குச் செயற்றிறனைக் கொண்டு வரக் கூடியதாயிருக்கும். அப்பிடியான திட்டங்களுக்காக அலுவலகத்திலே எப்ப பார்த்தாலும் திட்டஅணிக் கூட்டம் நடக்கும். (அங்க யாரு இப்பவே கொட்டாவி விடுறது?). அப்பிடியான கூட்டங்களுக்குப் போய் பொறுக்கிக் கொண்டு வந்த ஒரு சில பயனுள்ள விதயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்டு பாக்கிறேன். எனக்குப் பழக்கமில்லாதளவு நீளமான பதிவு.
ஒரு சின்னக் குறிப்பு: இதில சொல்லப்போறவை உங்களைச் செப்பனிடவோ வேலை செய்யிற விதத்தை மேம்படுத்தவோ மட்டுமில்லாமல் இப்ப ஈழத்தமிழர் எதிர்நோக்கியிருக்கிற நிலைக்கும் பயன்படும்.
விதயத்துக்கு வருவம். பல சந்தர்ப்பங்களில பார்த்தால் செயல்திறனைத் தேத்தி எடுக்கவென்டு கொண்டு வரப்பட்ட அந்தத் திட்டம் அடிப்படையா இருக்கிற பிரச்சனைகளை கருத்தில கொள்ளுறதில்ல. உதாரணமா, அடிப்படைப் பிரச்சனையை நோய் என்டு எடுத்துக் கொண்டா, செயற்திறன் குறையிறது அந்நோயின் அறிகுறிதான். செயற்திறன் பழையபடி மேலுக்கு வருது என்டா நோயிட அறிகுறிதான் கவனிக்கப்பட்டு இல்லாமலாக்கப் பட்டிருக்கு ஆனால் நோய் இன்னும் இருக்கு என்டு பொருள்.
எங்கட சூழல் மாற்றங்களால நிரம்பின ஒன்று. சில நேரங்களில மாற்றம் எங்கள் மேல திணிக்கப்படுது & அதனுடைய விளைவுகளை நாங்கள் சமாளிக்கப் பழகிக் கொள்ள வேண்டியிருக்கு. சில நேரத்தில ஏலவே இருக்கிற நிலையை மேம்படுத்துறதுக்காக நாங்களாக் கொண்டு வாறதாவும் மாற்றங்கள் இருக்கு. எங்கேயோ வாசிச்சது: முன்னேற்றமெல்லாம் மாற்றமெனினும் மாற்றமெல்லாம் முன்னேற்றமல்ல.
நாங்க வழமையா இயங்குற/சிந்திக்கிற முறையில மாற்றம் கொண்டு வாறது கொஞ்சம் தயக்கம் தாற விதயம்தான். என்னென்ன குந்தகம் விளையக்கூடும் என்டு யோசிப்பது இயல்பு. இப்பிடியான யோசனைகளுக்குப் பதிலை நாங்களே கண்டடையக் கூடியதாப் பயன்படுத்த "முன்னேற்றத்துக்கான மாதிரியுரு" என்டு சொல்லக்கூடியதொன்டு இருக்கு. "முன்னேற்றத்துக்கான மாதிரியுரு"(model for improvement) வை 1992ல் நோலன் லாங்லி(Nolan Langley) என்பவர் பிரசுரித்தார். இந்த மாதிரியுரு, முன்னேற்றத்துக்கு இட்டுச் செல்லக்கூடிய வகையில் யோசனைகளை வடிவமைச்சு, அவற்றைச் சீர்திருத்தி, செயற்படுத்திப் பார்ப்பதற்கு ஒரு கட்டமைப்பைத்(framework) தருது.
இந்த மாதிரியுருவில ஒன்றையொன்று சார்ந்த 2 பகுதிகள் இருக்கு.
1. யோசித்து, சீர்தூக்கிப்பார்க்கும் பகுதி. பின்வரும் 3 கேள்விகளையுடையது:
2. செயற்பாட்டுப் பகுதி: 4 பிரிவுகளுண்டு. பகுதி 1 இல் (யோசித்து, சீர்தூக்கிப்பார்க்கும் பகுதி)பெறப்பட்ட முடிவுகளை அடைவதற்காய்ச் செயலில் இறங்கல். இதிலே,
.
ஆக, முன்னேற்றத்துக்கான மாதிரியுரு கீழ உள்ள மாதிரி அமையும்:
முன்னேற்றுறத்துக்கு எடுக்கிற எந்த முயற்சியையும் வடிவாத் திட்டமிட்டுச் செய்வது இலக்கை வெற்றிகரமா அடைவதுக்கு வழிவகுக்கும். மேல காட்டின மாதிரியுருவைக் கொஞ்சம் விளக்கமாப் பாப்பம். முதல்ல கேள்விகள் பகுதி:
1. எதைச் சாதிக்க /நிறைவேற்ற முயல்கிறோம்?
இந்தக் கேள்வி :
போன்றவற்றுக்குரிய விடைகளை உய்த்தறிவதின் மூலம் உங்கட அடிப்படை நோக்கத்தைத் தெளிவாக்க உதவுது.
உதாரணமா, ஒரு உணவகத்திலே சாப்பாடு சுவையில்ல என்டா,
- இப்ப இருக்கிற நிலை: சாப்பாட்டைச் சாப்பிட முடியவேயில்ல.
- மேம்படுத்தல்: சுவை கூட வேணும் - உப்பு சரியாப் போட வேணும், உறைப்புக் குறைக்க வேணும்
- விரும்பிய விளைவு: எப்ப நினைச்சாலும் அட! அதுவல்லோ சாப்பாடு என்டு (சாப்பிட்டவர்கள்) மீண்டும் மீண்டும் தேடி வரச் செய்யோணும்.
- இனிமேல் வித்தியாசமாக: வெவ்வேறு வகையான உணவுகளையும் சுவையாகத் தயாரிக்கிறது, சமைக்கத் தெரிந்த சமையல்காரரைப் பணிக்கு அமர்த்துவது
2. ஏற்படுகிற மாற்றம் முன்னேற்றந்தானா என எப்படி அறிவது?
இந்தக் கேள்விக்குரிய நோக்கம், ஏற்பட்ட மாற்றத்தை அளவிடுறது எப்படி என்பதைத் தீர்மானிப்பது. மாற்றமேற்பட்டதை அறிவது அளவீடில்லாமல் சாத்தியமில்லை. இந்தக் கேள்வி கேட்கப்படும் போது பின்வரும் துணைக்கேள்விகள் அதில் தொக்கி நிற்கின்றன:
இதுக்கு உதாரணமா, உங்கட வலைப்பதிவுக்கு அதிகமான வாசகர்களை வரவழைக்க முயலுறீங்க என்டால்,
- அளவீடுகள்: வலைப்பதிவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை, பின்னூட்டங்களின் எண்ணிக்கை, எப்படியான பதிவுகளுக்கு அதிகமான வாசகர்கள்
- தேர்ந்தெடுக்கப்படும் அடிப்படை: வாசகர்கள் வருவதைக் கணிக்க உதவுது
- எதை அளக்கின்றன: ஒவ்வொருத்தரும் எத்தனை முறை பதிவுக்கு வருகிறார்கள் என்பதை
- அளக்கும் முறை: ஐபிஎண்ணை வைத்து அளக்கலாம்
- அள்வீட்டுத் தொகுப்பு: புள்ளிவிவரச் சேவையை வழங்கும் தளங்களில் ஒன்றையோ, பலதையோ பயன்படுத்தலாம்.. அதான் வெத்திலைபாக்கு வைக்காத குறையாக் கூப்பிடுறாங்களே...
3. முன்னேற்றம் ஏற்படுதற்கு என்ன மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்?
கடைசிக் கேள்வியான இதற்குரிய பதில், உங்கள் இலக்கை அடைவதற்கு / முன்னேற்றமடைவதற்கு தேவையான மாற்றங்களில் எவற்றை முயல ஆயத்தமாய் இருக்கிறீர்கள் என்று தெளிவு படுத்தும்.
கடைசிக் கேள்விக்குரிய உதாரணத்திற்கு, உங்களுக்கு வேலை அதிகம் என்று வைத்துக் கொள்வோம்(என்ன வைச்சுக் கொள்ளுறது, அதேதான் என்டு நீங்க புலம்புவது கேட்குது), குறைப்பதுதான் இலக்கு.
- அநேகமாய்ப் பயன் தரக்கூடியவை: வேலை நேரத்தில் வலை மேயாதிருப்பது, ஒவ்வொரு நாளும் இன்னும் ஒரு மணி நேரம் கூடுதலாய் வேலை செய்வது. இந்த 2 வழிகளும் பயன் தரும் என்பதற்கு ஆதாரம்: பணியை முடிக்கக் கிடைக்கிற மேலதிக நேரம்.
- நல்ல வழியென நினைப்பவை: சீரான பணிமுறைகளைக் கையாளல், உங்கட அலுவலகத்திலேயே உள்ளவருடனான தொடர்பாடல் முறையை தொ.பே அல்லது நேரிலே பேசுதல் ஆக மாற்றல் (பதிலுக்காகக் காத்திருக்க வேண்டிய நேரம் குறையும்தானே.. கெதியா வேலையை முடிச்சு கெதியா வீட்ட போகலாம்)
- வேறெங்காவது பயன்பட்டவை இங்கு: முடிந்தால் வேலையை எந்திரமயமாக்கிறது (அப்ப வேலை போயிருமே என்டு கேட்டால் நான் பதில்ல மாட்டேனேஏஏஏ..)
- வேற புதிய வழிகள்: மேலாளரிடம் சொல்லிப் பளுவைக் குறைப்பது(நடக்கிற காரியமா என்று யோசிக்காம செய்து பார்க்கலாம், சரி வராட்டி் அதேயளவு வேலையத்தானே செய்யப்போறீங்க), சக பணியாளரோடு பேசியோ சொக்ளேற் கையூட்டாக் குடுத்தோ கொஞ்ச வேலையை அவரிடம் தள்ளி விடுவது, வேலை செய்யும் நேரத்தை மாற்றுவது - 9-5 செக்குமாடா இல்லாமல் 8-4 அல்லது 11-7 என்று உங்களுக்கு உசார் அதிகமிருக்கிற நேரத்துக்கு வேலையை மாற்றிக் கொள்வது, பளு குறைந்த வேறு வேலைக்கு மாறுவது.
மேல சொன்னவற்றில வேலைப்பளுவைக் குறைப்பதற்காய் எந்த மாற்றத்தைச் செய்ய நீங்கள் ஆயத்தம் என்ட தெளிவு இதுகளுக்குப் பதில் (உண்மையாச்) சொல்லேக்க கிடைக்கும்.
அடுத்ததா, தி-செ-க-மு சுழற்சி. இதை அடுத்த பதிவில பாப்பம்.
என்ன செய்ய?
திகைத்தல்களுடன் ஆரம்பிக்கிறது தினம்
இதற்கு மேலும் என்ன என்று நினைத்தால் - விஸ்வரூபமாய்
இன்னுமொரு பயங்கரம் விரிகிறது
கையாலாகத்தனத்தின் ஒற்றைப் பிரதிநிதியாய் வழிந்தோடுகிறது கண்ணீர்,
வேறென்ன செய்ய முடிகிறது?
எம் தப்பித்தல்களுக்காய்
வெட்கப்படவும் குற்றவுணர்ச்சி கொள்வதும் தவிர்த்து?வகை: கிறுக்கினது
உலாத்தப் போக..
இந்தப் பதிவு நான் மறக்காமலிருப்பதற்காக.
பயணங்கள் சுகம் தருபவை. போய்ச் சேருமிடம் குறித்த பார்வையோடே பலர் பயணங்களை அணுகுகிறோம். அப்படியில்லாமல் பயணத்தையே இரசித்து முடிவுடம் போய்ச் சேருவோர் நம்மில் எத்தனை பேர்? பயணம் போகலாம் என்று நினைத்தவுடன் மனதில் தோன்றும் அந்த விவரிக்கவியலாப் பரபரப்பும், பயணத்திற்குத் தேவையான ஆராய்ச்சிகளில் இறங்கி முடிவெடுக்கும் போதும் ஏற்படும் கிளர்ச்சி என்பன இனிமையானவை. முடிவிடமடைந்ததும் வேறு விதமான உணர்ச்சிகளாக உருவெடுத்துக் கொள்பவை. பயணத்தை ஒழுங்கு படுத்தும் போதோ, அல்லது பயணித்துக் கொண்டிருக்க்ம் போது இருக்கும் எதிர்பார்ப்பு அங்கு போய்ச் சேர்ந்ததும், 'அடடா..வந்து விட்டோமே' என்றிருக்கும் எனக்கு. (நிறைய நாள் எதிர்பார்த்து திட்டமிட்டுப் போன ஐரோப்பியப் பயணம் அப்படித்தான் இருந்தது பாரிஸ் போயிறங்கின கொஞ்ச நேரத்துக்கு)
விமானப் பயணமே எனக்குப் பிடித்தமானது. சிலருக்குப் பயம், சிலருக்கு ஒன்றும் பண்ணாமல் உட்கார்ந்திருக்க வேண்டுமே என்ற சலிப்பு - எனக்கு இதெல்லாமில்லை. படத்தையோ அல்லது யன்னலுக்கூடாக முகிலோ நிலமோ வானமோ பார்த்து ரசித்து, பக்கத்தில் இருப்பவருடன் பேசி, பணியாளருக்கு மணிக்கொரு தரம் வெந்நீருக்காகத் தொல்லை கொடுத்து, தூங்கியெழுந்து நிறைக்கும் பயணம். இதில் பிடிக்காமலிருக்க, பயப்பட என்ன இருக்கிறது?
போக/பார்க்க நினைத்திருக்கிற இடங்கள்/நாடுகளைப் பட்டியலிட்டு வைக்க நினைத்தது தான் இப்பதிவின் ஆரம்பம். பட்டியல் ஒரு வித ஒழுங்கிலுமில்லை:
- அவுஸ்திரேலியா
- மொரோக்கோ
- இலங்கை
- நியுஸிலாந்து
- இந்தியா
- அந்தமான்-நிகோபார்
- காஷ்மீர்
- கம்போடியா
- நேபாளம்
- கிரேக்கம்
- அயர்லாந்து
- ஸ்கொட்லாந்து
- வேல்ஸ்
- வடதுருவம்
- பிரான்ஸ்
- சுவிட்சர்லாந்து
- நோர்வே
- டென்மார்க்
- சுவீடன்
- தாய்லாந்து
- மாலைதீவு
- கனடா
- ஐஸ்லாந்து
- கிரிபற்றி
- எத்தியோப்பியா
- தென்னாபிரிக்கா
- எகிப்து
- மடகாஸ்கர்
- இந்தோனேசியா(பாலித் தீவு)
- ஈரான்
- துருக்கி
- ஆப்கானிஸ்தான்
திடீரென்று முடிவெடுத்து வெளிக்கிடும் spontaneous பயணங்கள் இல்லவே இல்லாதளவுக்காய் வெகுவாய்க் குறைந்து விட்டன. வாழ்க்கைச் சுழலில் அப்பயணங்களால் வரும் வசதிக்குறைவுகள் கருத்தில் கொள்ளப்பட்டு பல நல்ல அனுபவங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறேன். ஹென்ரிக்கோவுக்கும் பேர்ணடெட்டுக்கும் மீண்டும் வாழ்த்துக்கள். அவர்கள் முடிவு சரியானது. (அவர்களைப் பற்றி இன்னொரு நாளைக்குக் கட்டாயம் பேச வேண்டும்)
--O-0-O--
பயணமென்று சொன்னதும் அண்ணாவுடன் போனவையே ஞாபகத்தில் மின்னுகின்றன. முக்கியமாக ஒரு பயணம். 1999ம் ஆண்டு - நான்கோ ஐந்து நாட்களுக்கு பன்னிரண்டு பேர் செல்லும் வாகனத்தில் பதினெட்டுப் பேர் போனோம். எங்கெங்கெல்லாமோ சுற்றினோம்..சுற்றிய இடமெல்லாம் வரலாற்றுச் சின்னங்கள் மிகுந்திருந்தன. மிகிந்தலை, பொலன்னறுவை, அனுராதபுரம், கதிர்காமம், சிகிரியா, பெயர் மறந்த இன்னும் வேறு இடங்கள். குளம்/ஆறு கண்டால் நிறுத்திக் குளித்துக் கும்மாளமிட்டு பக்கத்திலேயே எங்காவது ஒரு ஆச்சி வைத்திருந்த கடையில் கிடைக்கிற சோறு-கறியோ அல்லது பாண்-சம்பல்-வாழைப்பழம்-தேநீரோ அல்லது பழங்களோ உண்டோம். ஒரு நாள் அரைநிலவொளியில் vanக்குள் சிலர் தூங்க, மீதி துணி விரித்து குளத்தங்கரையில். இன்னொருநாள் அனுராதபுரத்துப் புத்தர்களையும் தாண்டி நிறையத்தூரம் போய் - எங்கள் குழுவிலிருந்த ஒருவரது அக்கா கற்பித்துக் கொண்டிருந்த பள்ளிக்கூடத்தில் இராத் தங்கினோம். தோட்டத்து மரவள்ளி கிண்டியெடுத்து அவித்து சம்பலுடன் உண்டோம். என் கிராமத்திலிருந்து வெளியேறிய சிங்களவர் சிலரும் எங்கள் குழுவிலிருந்தனர். என் கையெழுத்துப் புத்தகத்தில் அவர்களில் ஒருவர் தமிழில் எழுதித் தந்த 'இனன்களுக்கிடையிலான ஒற்றுமை ஓங்குக!' இன்னும் என்னிடமிருக்கிறது. அதைப் பார்த்துத் திருத்தி 'இனங்களுக்கிடையிலான ஒற்றுமை ஓங்குக!' என்று இன்னொரு தாளில் அவரிடமெழுதிக் கொடுத்த என் அபத்தமும் ஞாபகமிருக்கிறது.
தயிரும் கித்துள்பாணியும் நிறைந்த அந்த நாட்களில் எங்களுக்குள் தமிழ்-சிங்களப் பேதம் இருக்கவில்லை. சண்டை எங்கோ வேறொரு கிரகத்தில் நடந்து கொண்டிருந்தது. அதற்கும் எங்களுக்குமான தூரம் ஒன்றினாலும் எட்டிப்பிடிக்க முடியாதபடி நீண்டு போயிருந்தது.
என் கிராமத்தின் அழகுக்கு அடுத்தபடியாக, அங்கிருந்து புறப்பட்டதன் பிறகு, நான் அழகான மனிதர்களையும் இடங்களையும் அப்பயணத்தின் போது கண்டுகொண்டேன். கல்முனை என்றால் என்ன, கம்பகா என்றால் என்ன..அன்பு மிக்க மனிதர்கள் எங்கேயும் அழகுதான்.
பின்நவீனத்துவம்
வலையில் நிறையப்பேர் பின்நவீனத்துவம் என்டு நிறைய எழுதிறாங்க. அந்தளவுக்கு எனக்குத் தெரியாது. ஆனாலும் "கண்ட" அளவில பின்நவினத்துவம் எண்டா இதுதான். :O))
New South Wales Art Gallery ல கண்டது.
வகை: படம் பார்
இரவுகள்
பொதுவிலே இரவுகள் அழகானவை. அதிலும் மழையைப் போர்த்திக் கொண்ட இரவுகள் எப்பவும் எனக்கு மிகவும் பிடித்தமானவையாக இருந்திருக்கின்றன. அவற்றுடன் கூடவே நித்திரை கொள்ளப் போக வேண்டுமென்று தோன்றவே மாட்டாமல் விழித்திருந்து பாடல் கேட்கிற இரவுகளும். பாசாங்குகள் ஏதுமற்று எங்களைப் பகிர்ந்து கொள்வதால் இந்த இரவுகளுடன் மிகவும் இயல்பான நெருக்கம் உருவாகிறது- உற்ற நட்பொன்றினைப் போல. இன்றைக்கும் உட்கார்ந்திருந்தேன்(இருக்கிறேன்). மனதை சங்கடப்படுத்தும்/நடப்புச் சூழலிலிருந்து வெளியே ஒரு கனவுலகுக்குக் கொண்டு போகவோ அல்லது ஞாபகங்களைக் கிளறவோ வைக்கிற இசை மட்டுமே துணை வருகிறது.
இரவுப் பொழுதுகளில்தான் நிறையத் தோன்றுகிறது. இதையிதை இப்படியிப்படி எழுதலாம், இப்படி ஒளிப்படம் எடுக்கலாம், வாழ்த்து மடல்களின் வடிவமைப்பு, தொடர்பற்றுப் போய்க் கொண்டிருக்கும் ஆட்கள் என்றெல்லாம் ஒரு நீரூற்றுப் போல யோசனைகள் பிரசவிக்கின்றன. ஞாபகமிருக்கும் என்று குறிப்பெடுக்காமல் தூங்கிப் போவதே வழக்கமாகிப் போயிருக்கிறது எனக்கு. இன்றைக்கும்போய் படுகையில் சரிந்தால் எப்போதும் நடப்பது போலவே எங்கெங்கெல்லாமோ சுற்றி தொடங்கின எண்ணத்துக்குச் சற்றும் சம்பந்தமில்லாத இன்னுமொரு எண்ணம் ஓடிக்கொண்டிருக்கையில் தூங்கிப் போகப் போகிறேன். அதற்கென்ன அவசரம்.. இன்னும் கொஞ்சம் உட்கார்ந்திருக்கலாம் - வந்திருக்கும் மழையுடன் பேசிக் கொண்டு. மழை போல மனதைக் கழுவுகிற/நிறைவைத் தருகிற விதயங்கள் மிகக்குறைவு. சிரபுஞ்சி போகவேண்டும்..ஓரிரவுக்காவது.
வகை: கிறுக்கினது
சந்திரா என்றொரு அழகி
என்னதான் படித்தாலும், நல்லோர் சகவாசம் இருந்தாலும் எவ்வளவு விதிக்கப்பட்டதோ அவ்வளவுதான் மதி என்று நிறுவிக் காட்டவும் சிலர். இவர்களை நினைத்தாலே கோபமும், அனுதாபமும், சிரிப்பும் ஒருங்கே வருகிறது. (தயவு செய்து யார், ஏன், என்ன என்றெல்லாம் கேட்காதீர்கள்.)
---- சரி, தொலையட்டும் அந்தக் கதை. சந்திராவைப் பற்றிப் பேசலாம்.
எடுத்துப் பேசும் போதெல்லாம் "எப்படியிருக்கிறாய்" என்ற கேள்வியுடன் ஆரம்பித்து அதற்குப் பதில் நான் சொன்னதுடன் நடந்தவைகளில் சிரிப்பானவற்றையோ அல்லது "அம்மா xx மணிக்குப் போனவ, இன்னும் வரேல்ல" என்றோ ""அம்மா சரியான குழப்படி, சொல்லுக் கேட்கிறேல்ல" என்றோ முறைப்பாடு சொல்லும் பெண் இன்றில்லை. உயிர் போய் 36 நாளாகிறது. மனிதர்களைக் கூர்ந்து கவனிக்க, உள்ளே தேடிப்பார்க்க என்று கடுமையாக ஞாபகமூட்டிக் கொண்டும் அட! இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாமே, அவருடன் அதிகநேரம் கழித்திருக்கலாமே என்று காலங் கடந்த ஞானோதயம் தரும் குற்றவுணர்ச்சிகளுடனும் கடந்து போயிருக்கிற ஒரு மரணம்.
செத்தவீட்டில் போன்று இதுதான் நடந்தது என்றெல்லாம் சொல்லப் போவதில்லை. முடிந்து போனபின் எங்கள் ஆறுதலுக்குத்தானே இந்த அக்குவேறு ஆணி வேறாகச் சாக முந்தி நடந்ததும், அவர் சொன்ன வார்த்தைகளுக்கு பொருளும் உள்ளர்த்தம் கண்டு பிடிப்பதும் கற்பிப்பதும். உசாராக சந்தோசமாக அன்பாக வாழ்க்கையை வாழத் தெரிந்த ஒருவர் இப்போது இல்லையே என்ற துக்கம்தான் அவரை அறிந்த சந்தோசத்துடனும் அவர் பற்றின ஞாபகங்களுடனும் சேர்ந்து மனதில் பூத்திருக்கிறது.
இறக்கப் போகிறார் என்று தெரிந்ததும் அதற்காகக் காத்துக் கொண்டிருப்பது பெருங் கொடுமை. அது போன்ற கொடுமைகள் எண்ணிக்கையில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடியனவாய்த்தான் இருக்கும். அதைவிட வெறுங் காலுடன் கொளுத்தும் வெயிலில் வறண்டு போனதொரு ஆற்றின் கரையில் அல்லது பாறையில் அசையாமல் நெடுநாட்களுக்கு நின்று கொண்டேயிருக்கலாம். மற்றவர் இருக்கட்டும்.. அவரது உடல் ஒத்துழைக்க மறுப்பதை உணர்ந்து கொண்டாலும் கருப்பையில் உருவாகின கணத்திலிருந்து கூடவே இருந்து கடந்த சில வருடங்களாக தோழிகள் போல ஒன்றாக வாழ்ந்திருந்தவள் இறக்கபோகிறாள் என்று அறிந்தும் எந்த நிமிடம் வரை என்று அறியாதிருப்பது போல வதை வேறொன்றும் வேண்டாம் என்று தோன்றுகிறது.
அந்த நாளையும் மழையைப் பூசிக் கொண்ட தொடர்ந்து வந்த நாட்களையும் கடந்து வந்த ஒரு பிற்பகலில் சந்திராவின் உடைமைகளினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த போதுதான் அந்த குறிப்பேட்டைக் கண்டேன். எண்ணற்ற குடும்பங்களுக்கே உரித்தான பரகசியமான இரகசியக் கதைகள். அதிலொன்றுதான் - அடுத்த தலைமுறைக்கு அரசல் புரசலாகத் தெரிந்த கதை..சந்திராவின் கோணத்திலிருந்து.
சிறுவயது வாழ்க்கையும், பட்டப்படிப்புக்கு புனே மற்றும் கல்கத்தா சென்றதும், சிங்களவரைக் காதலித்து மணந்த குற்றத்திற்காய் மூத்த தமக்கையின் குடும்பம் விலக்கினதும், எத்தியோப்பியாவுக்கு கற்பிக்கப் போனதும், அங்கு வேறொருத்திக்குக் கணவரால் பிறந்த பிள்ளைகளையும் அவற்றின் தாயையும் தனதாய் வரித்துக் கொண்டதும், அதையொட்டிய தனது உணர்ச்சிகளையும், பின்னர் தொழில் நிமித்தம் கிரிபத்தி போனதும், கணவர் இறந்த பின் தனியொருவராய் உழைத்து பிள்ளைகளைப் பார்த்ததும், அவர்களுக்கென்று வாழ்க்கை அமைய உதவினதும், தன் மாணவர்கள் பற்றியும், பிறகு நாடு திரும்பி மூத்த தமக்கையின் கணவர் இறந்து போயிருக்க அங்கு சென்று 34-35 வருடங்களின் பின் சகோதரிகளின் சந்திப்பும், அங்கு கூடவே அக்கா இறக்கும் வரையிருந்ததும், அதற்குப் பின் இரட்டைச் சகோதரியுடனிருந்த அன்றாட வாழ்க்கையும் விரிவான எழுத்தில் குறிப்பேட்டின் தாள்களில் நிரம்பியிருந்தது. ஆங்காங்கே அதற்குள் பழைய கடிதங்கள்(1965-69, 1977இல் எழுதியவை), இந்தியாவுக்குப் போக வீட்டிலிருந்து கொழும்பு சென்ற தொடர்வண்டிப் பயணச் சீட்டு(1950களின் ஆரம்பம்), பட்டம் கிடைத்ததென்று அறிவித்த தந்தி, பிள்ளைகளின் ஓவியங்கள், கவிதைகள் என்பனவும் ஒரு வாழ்க்கையின் மௌனச் சாட்சியங்களாய் அந்தக் குறிப்பேட்டில் கொட்டிக் கிடக்கக் கண்டோம். முன்முடிவுகளோ பின்முடிவுகளோ இல்லாமல் பார்க்கிறேன்; அவரெடுத்த முடிவுகளின்படி அதுதான் சந்திரா என்கிற மனுஷியின் வாழ்க்கை.
வாழ்க்கைச் சரிதையை எழுதி வைக்க வேண்டும் என்று சொல்லுகிற கிறிஸ்தவ சமயப் பிரிவொன்றில் சந்திரா சேர்ந்து கொண்டதில் எங்களுக்கும் ஒரு வாழ்க்கையை, வாழ்ந்தவரின் கண்ணுடாகப் பார்க்கக் கிடைத்தது. வாழ்ந்த வரைக்கும் அவர் சம்பாதித்துக் கொண்ட அன்பும் மனிதர்களுமே அதற்குச் சாட்சியம். நிறையப் பேரை இப்படியாக அவர்களின் பார்வையில் தெரியாமல் போய் விடுகிறது. பிறர் கொடுக்கிற நிறக் கண்ணாடிகளுக்கூடாகவே அவர்களின் வாழ்க்கையைப் பார்க்கிறோம்.
வாழ்க்கைக்குத் தேவையானது என்ன என்பதை - முழுமையாக ஒரு எதிர்பார்ப்புமில்லாமல் அன்பு செலுத்தி, எவரென்றாலும் உள்ளன்போடு பழகி, எல்லாருக்கும் நல்லதே நினைத்து நன்மையே செய்த/செய்கிற - சந்திரா மற்றும் அவரது இரட்டைச் சகோதரி போன்ற அழகிகளிடமே கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது.
[சந்திராவின் இரணைக்கும், சந்திராவை அறிந்தவர்கள் எல்லாருக்கும், சந்திரா இருக்கும் போதிருந்தே இருக்கும் நடைமுறை பின்பற்றி முன்வீட்டுப் பிள்ளைகள் தொடர்ந்தும் நீர் வார்த்துக் கொண்டிருக்கிற சந்திராவின் பூஞ்செடிகளுக்கும்.]
வகை: இப்பிடியும் நடந்துது , குழையல் சோறு
உலகமும் உரையாடல்களும்
ஒரு கேள்வி கேட்கிறேன்.. ஒருவர் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றைச் சாதித்திருக்கிறார் என்று சொன்னால் அதை ஏன் materialistic ஆக உள்வாங்கிக் கொள்கிறோம்? ஏன் 'சாதித்தல்/அடைதல்" என்பது பணத்தினதோ, புத்திசாலித்தனத்தினதோ, சமூகத்தில் அவரது இடத்தையோ அளவீடாக கொள்ளப் படுது? (மருத்துவப்படிப்புக்குக் தேர்ந்தானாம், அவளிட கடை நல்ல பெரிசு அல்லது அவர் கோயில் president) இதுகள் தானா சாதனைகள்? (தனக்கு விரும்பின/திறமையுள்ள துறையில படிச்சுத் தேருறதையோ அல்லது தொழில் செய்து முன்னேறுறதையோ குறையாச் சொல்லவில்லை. அதற்குத் தேவைப்படுற கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் I appreciate it)
பொருளைக் கொண்டு மனுசரை அளவிடுற இந்த உலகத்தில, நேர்மை, தீங்கு செய்யாமை போல நல்ல குணங்கள் இருக்கிறதோ, அதுகளை நெறியாக் கொண்டு வாழ்றதோ ஏன் மேற்சொன்னதுகள் போல ஒரு achievement ஆக கருதப்படுறல்ல? பார்க்கப் போனா உங்களாலயும் என்னாலயும் ஆன சமூகம் இப்படிப் பட்ட குணங்களோட வாழுற ஆட்களை மதிக்கிறல்ல. முகத்துக்கு முன்னால சிரிச்சிட்டு பின்னால் போய் பிழைக்கத் தெரியாத ஆள் என்டு ஏன் சொல்லுது?
என்ன திடீரெண்டு இப்பிடி சொல்லுறனென்டு பார்க்கிறீங்களா..
இருபதுகளின் நடுப்பாகத்தை எட்டிப்பார்க்கப் போகிற வயதில் ஒரு சக மனுஷி. அலைவரிசைகளும் இயல்புகளும் ஒத்துப்போறதாலேயோ என்னவோ இந்தப் பெண்ணோட பல விதயமும் பேச முடியுது. அது பிடிச்சுமிருக்கு.
இன்றைக்கு வழமையான நல விசாரிப்புகளுக்குப் பிறகு "it doesn't feel like I've achieved anything in life" என்றா. முதலாம் பந்தில சொன்னமாதிரியான அளவீடாக் கொள்ளப்படுற சாதிப்புகளை தான் இன்னும் செய்யல்ல என்டுறதுதான் - அதுகளை நினைச்சு ஒரு தாழ்வு மனப்பான்மையோட யோசிக்கத் தேவையில்ல என்டு தெரிஞ்ச - இவவுக்கு வந்த யோசனை. இவவோட நடக்கிற உரையாடல்கள் அனேகமாகக் கதைச்சு முடிஞ்ச பிறகும் சிந்திக்க வைக்கும். வழமையாகக் கதைக்கிற ஒரு தலைப்பாக வாழ்க்கை/வாழ்தல் இருந்தாலும் தன்ட வயசு ஆட்கள விடவும் மனமுதிர்ச்சி கொண்ட, தான் தேர்ந்த களத்தில் masters(முதுகலை?) படிக்கிற அவட கூற்று கொஞ்சம் யோசிக்க வைச்சது.
தேர்ந்தெடுத்த துறையில தன்னை இன்னும் மேம்படுத்திக் கொள்ளப் படிக்கிறா. முடிஞ்சளவு உதவிகள் செய்கிறா, ஒழுங்கான வழியில வாழுறா.. ஆனாலும், இப்படி யோசிக்கத் தேவையில்லை என்று தெரிந்து கொண்டும், இப்படி தான் ஒன்றும் சாதிக்கவில்லையே என்று ஒரு கொஞ்ச நேரத்துக்குத்தான் என்றாலும் நினைக்கிற மனநிலை எதனால வருது? கொஞ்ச நேரம் கதைச்சவுடன எழும்பின கேள்விதான், நல்ல முறையில் வாழ்க்கையைக் கொண்டு செலுத்திறது ஏன் சாதனையா கருதப் படுறல்ல என்டுறது.
இப்பிடியே அவவோட கதைச்சது வழமையா நடக்கிறது போல வளர்ந்து வளர்ந்து எங்கெயெங்கையோ போயிற்று. இப்படிப்பட்ட உரையாடல்களில எப்பவும் எனக்குச் சந்தோசம். தயக்கமில்லாம தங்கட மனசை வெளிப்படுத்தி, தங்களையும் உலகத்தையும் அவங்களுக்கே உரித்தான முறையில அலசி ஆராய்றதும் எடுக்கிற சரியான முடிவுகளும் நம்பிக்கை தருது.
கேள்விகள் கொண்ட, அதை அடக்கிவிடாமல் கேட்கிற இந்தத் தங்கைகள் அழகானவர்களாயிருக்கிறார்கள்.
கணிதம்
கணிதத்தின் மேல் எப்பவும் ஒரு விருப்பம் இருந்ததுண்டு. இன்னும் இருக்கிறது. சதுரக் கோடு போட்ட கொப்பிகளும், பாடமாக்கியே தீர வேண்டியிருந்த வாய்ப்பாடுகளும், மடக்கைப் புத்தகமும், இன்னும் வேணும் என்று கணக்குகள் கேட்க வைத்த திருமதி ஜோணும் என்று கணிதம் பற்றிப் பல ஞாபகங்கள்.
அநேகமானோருக்கு இனி இல்லை என்டளவு வறண்டதாய் அலுப்படிக்கக் கூடியதென்று தோன்றும் புத்தகங்கள் அதிசயமாய் எனக்குப் பிடித்து போகின்றன. அப்படி வாசித்தவைகளில் இரண்டு The Seven Daughters of Eve மற்றும் In The Footsteps of Eve. இன்னொன்று ஆப்பிரிக்காவிலும் ஈராக்-ஈரானை அண்டிய பகுதிகளிலும் மேற்கொண்ட தொல்பொருளாய்வு பற்றியது. அதன் பெயர் எப்பவாவது ஒருநாள் திரும்பக்கூடும். :O) அப்படியான ஒரு வரிசையில் கண்ணில் பட்டு நான் வாசிக்க ஆரம்பித்திருக்கிற "The crest of the peacock: Non-European roots of mathematics " எனும் புத்தகம் ஐரோப்பா தவிர்ந்த ஏனைய இடங்களில் கணிதம் பற்றிப் பேசுகிறது. இதனை வாசிக்கும் வரையில் எப்படி உலக நாகரிகங்களில் கணிதம் இருந்திருக்கக்கூடும் என்ற எண்ணம் எனக்கு எழுந்தது மிகமிகக் குறைவு. வந்திருந்தாலும், அது எகிப்தை மையமாக வைத்தே இருந்து, பார்க்கிற எகிப்து பற்றிய ஆவணப்படங்களினூடாக விடையளிக்கப்பட்டிருக்கிறது.
புத்தக ஆசிரியர் பரவலாகக் காணப்படுகிற "கிரேக்கக் கல்வி --(இருண்ட காலம்)--> கிரேக்க அறிவு பற்றிய கண்டுபிடிப்பு --(ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலம்)--> ஐரோப்பிய/அதன் குடியேற்ற நாடுகளின் அறிவு/வளர்ச்சி" என்கிற ஒருதலைப்பட்சமான கற்பித்தலைப் பற்றிப் பேசுகிறார்.
கிரேக்க வழி வந்து மேம்படுத்தப்பட்ட கணித அறிவு தவிர, ஏலவே இருந்திருக்கிற நாகரிகங்களில் கணிதம் பற்றி உலகம் பேசுவதில்லையென்றும் அவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதென்றும் இப்புத்தகத்தில் சொல்லப்படுகிறது.
இதுவரை வாசித்ததிலிருந்து இரு பந்திகள்:
1. The neglect of the Arab contribution to the development of European intellectual life in general and mathematics in particular is another serious drawback of the 'classical' view. the course of European cultural history and the history of European thought are inseparably tied up with the activities of Arab scholars during the Middle Ages and their seminal contribution to mathematics, the natural sciences, medicine and philosophy. In particular, we owe to the Arabs in the field of mathematics the bringing together of the technique of measurement, evolved from its Egyptian roots to its final form in the hands of Alexandrians, and the remarkable instrument of computation (our number system) which originated in India; and the supplementing of these strands with a systematic and consistent language of calculation which came to be known by its Arabic name, algebra. An acknowledgement of this debt in more recent books contrasts sharply with a failure to recognize other Arab contributions to science.*
*[They include:
(a) An early description of pulmonary circulation of the blood, by Ibn al-Nafis, usually attributed to Harvey, though there are records of an earlier explanation in China;
(b)The first known statement about the refraction of light, by Ibn al-Hayatham, usually attributed to Newton;
(c)The first known scientific discussion of gravity, by al-Khazin, again attributed to Newton;
(d)The first clear statement of the idea of evolution, by Ibn Miskawayh, usually attributed to Darwin;
(e)The first exposition of the rationale underlying the 'scientific method', found in the works of Ibn Sina, Ibn al-hayatham and al-Biruni, but usually credited to Francis Bacon.
A general discussion of the western debt to the Middle East is given by Savory(1976), while detailed references to the specif contributions of Arab science are given by Gillespie(1969-) ]
2. AL-Kwarizmi wrote a [second] book, of which only a Latin translation is extant: Algorithmi de nomero indorum, which explained the Indian number system. While al-Khwarizmi was at pains to point out the Indian origin of this number system, subsequent translations of the book attributed not only the book but the numerals to the author. Hence, in Europe any scheme using these numerals came to be known as an 'algorism' or later, 'algorithm' (a corruption of the name al-Khwarizmi) and the numerals themselves as Arabic numerals.
வாசிக்க வாசிக்க, எப்படி நாம் பைதகரசையும், ஆர்க்கிமிடிசையும் தவிர வேறிடங்களில் கணிதம்/அறிவியல் போன்றவற்றினைப் பற்றிச் சிந்திக்காமல் போனோம் -கேள்விகள் இல்லாதிருந்தோமென்று ஆச்சரியமாயிருக்கிறது. படிப்பு என்பது புத்தகத்திலிருப்பதைச் சப்பியோ கரைத்துக் குடித்தோ பரீட்சையில் சத்தியெடுப்பது என்றளவில் இருக்கிறவரைக்கும் கேள்விகள் மாணவர்களால் எழுப்பப்படாது போல..
(தொடர்ந்தும் இப்புத்தகம் பற்றிப் பதியப்படக்கூடும்.)
வகை: படிச்சுக் கிழிச்சது
இன்றைய கிறுக்கல் குறிப்புகள்.
இனிமைகள் காற்றுடன் கதை பேசும் இலைகளைப் போல தொடர்ந்து இசைத்துக் கொண்டுதானிருக்கின்றன.. நாம்தான் தொடர்ந்து செவி மடுத்துக் கொண்டேயிருப்பதில்லை. இயற்கையும் இசையும் கூட அப்படித்தான் - கவனித்தால் தன் பாட்டுக்கு மனம் இலேசாகி விடுகிறது.
இரண்டாம் குறிப்பு: இன்றைக்குக் கண்ட பிள்ளையார் எறும்புகள். சின்னக் கறுத்த எறும்புகள். இவற்றை ஏன் பிள்ளையார் எறும்புகள் என்று சொல்கிறோம்? (அல்லது வழக்கம் போல நான் தானா!). வீடு வரும்போது கட்டிட வாசலில் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டு ஒரு இறந்து போன பூச்சியின் உடலைத் தூக்கிக் கொண்டு நின்றன. படியேறி வீட்டில் பை வைத்து நூலகத்துப் புத்தகங்களை எடுத்து மீண்டும் இறங்கி வர எடுத்த இரண்டு நிமிட நேரத்தில் மொத்தமாய்க் காணாமற் போயிருந்தன. பூச்சிக்கு அரச மரியாதையுடன் கூடிய தகனமா நல்லடக்கமா அல்லது வேறெதுவுமா?
சின்ன வயதில் எறும்பு கொன்று அதனால் சிவன் நெற்றிக் கண்ணால் எரித்து விடுவாரோ என்று பயந்திருந்த சில நாட்களின் ஞாபகம் திரும்பவும் மேலெழுகிறது.
முதல் குறிப்பு இரண்டாம் பகுதி: அலுவலகத்து 'Secret Santa' தந்த 'Air (French Band)' இனது 'மூன் சபாரி' கேட்கக் கேட்க கண்ணுக்குள் விரியும் ஒரு வேப்ப அல்லது மா மரத்தின் கீழ் போடப்பட்ட ஒரு கயிற்றுக் கட்டில்/ஹமொக், கொஞ்சம் காற்று, கொஞ்சம் பழரசம் (இவையுடன் அந்த இசையும்) சேர்ந்தால் சொர்க்கம் போலத் தோன்றுகிறது. பார்க்கலாம்.. நத்தார் விடுமுறைக்கு வேப்ப/மா மரங்கள் இல்லாவிட்டாலும் ஏதாவதொரு நிழலின் கீழ் இந்தச் சொர்க்கம் கிடைக்கிறதாவென்று. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது பகல் கனவு.
முதல் குறிப்பு முதலாம் பகுதி: நாதமாய் செவியை நிறைக்கிறது. பயிற்சி இல்லாமல் துருப்பிடித்துப் போன சிலவற்றை இரண்டு தரம் திருப்பித் திருப்பி வாசிக்க வாசிக்க நீண்ட நாளைக்குப் பின் சந்திக்கும் நண்பர்களின் அளவலாவல் போல் வீணைத்தந்திகளில் விரல்களின் கோலங்கள். சிலவேளைகளில் கையைக் கூர்ந்து பார்த்தால் எப்படிப் போய் வருகிறது - அடுத்தது இந்த சுரம்தான் என்றெண்ணாமலே - என்பது ஆச்சரியமாயிருக்கிறது. சூழலை மறக்கடிக்கச் செய்யவென்றே இசை வழிகிறது. நனைந்து கொண்டேயிருக்கிறேன்..
வகை: கிறுக்கினது
வெயில்
வெயில் பற்றின முதல் நினைவு எதுவாக இருக்கும்? கூரைக்குள்ளால் ஒளிந்து வந்து தரையில் வட்டம் போடுவதும் இலைகளுக்கூடாய் வந்து விழுந்து தன் 8 நிமிஷப் பயணக் களைப்புப் போக தரையில் கிடப்பதுமே என் ஞாபகமாய் மேலெழும்புகிறது. குளிர்காலத்தில் ஹைட் பார்க்கில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு குளிருக்கு இதமான மெல்லிய சூட்டை அனுபவித்தால் தெரியும்.. வெயிலின் அருமை. அயனவலயப் பிறவி என்ற பெயர் சரியாய்த்தான் இருக்கிறது. வெயில் இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை.. வெயில் தாகம் எடுத்து அலைகிறேனோ என்றதொரு சந்தேகம் முளைத்திருக்கிறது. எப்போதும் சூரிய ஒளி் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கவும் சாயுங் காலத்தில் சூரியன் சாயாமலிருக்கவும் கூடுமானால் என்று கனவு காணத் தோன்றுகிறது. எல்லாம் குளிர் செய்யும் வேலை.. கோடை வந்த பிறகு என்னிடம் கேட்டுப் பாருங்கள்.. மழைதான் வேண்டுமென்று 'முழக்கி'ச் சொல்லுவேனாயிருக்கலாம். :O)
சுட்டெரித்த (போதும் அதைக் கண்டு கொள்ளாமலிருந்த) ஊர் வெயிலுக்கும், முகத்திலறைகிற அனல் காற்றுடன் நடமிடுகிற இங்கத்தேய வெயிலுக்கும் எவ்வளவு வித்தியாசம். அவ்வளவு ஏன் 2-3 மணிக்கெல்லாம் தலை கொதிக்க கவசம் ஏதுமின்றி நடந்து சென்ற கொழும்பு வெயிலும், செழித்த மரங்களுக்கிடையே ஒளித்துப் பிடித்து விளையாடும் கம்பகா வெயிலும், தெருவுக்குப் போட்டிருக்கும் தாரினை உருக்கி உரு மாற்றும் மட்டக்களப்பு வெயிலும், திருக்கோணமலை, யாழ்ப்பாணம், பொலநறுவை, நீர்கொழும்பு, காலி, கதிர்காமம், பிபிலை என்று நான் போயிருக்கிற அத்தனை இடங்களிலும் நான் கண்ட வெயில்களும் வித்தியாசமானவைதாம். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு குணம் அதற்கு. காளிக்குக் கோபம் வருமாம். அவவுக்குக் கோபம் வருகிறதோ இல்லையோ, தன் கோபத்தையெல்லாம் காளி கோயில் மணலில் வெயில் இறைத்து வைத்திருக்கும். தடை போட்டு மரங்களும் கூரைகளும் குடை பிடித்தாலும் எப்படியோ உள்நுழைந்து தரையில் பொட்டு வைத்து / கோலம் போட்டு அழகுபார்க்கும். தாவரங்கள் வாழ உயிர் கொடுக்கும். சில இடங்களில் வெயிலுக்கு ஒரு குளிர்ச்சி கூட வந்துவிடும். மனிதர்களைப் போல வெயிலுக்கும் கோபம், அமைதி, அழகு, கருணை என்று எத்தனையோ முகங்கள், குணங்கள்.
(முதற் தடவை நோர்வே போயிருந்த மூன்று மாதங்கள் அங்கு இலையுதிர் மற்றும் பனிக்காலம். அந்த ஆண்டு பனிக்காலம் பிந்தினதாம்..ஆனாலும் வெயில் இல்லாமல் போகாமலில்லை. என் உற்சாக மட்டமும் அந்நேரத்து வெயிலைப் போலவே குறைந்து போனது. இங்கு வந்த பிறகுதான் வின்டர் ப்ளூஸ் என்பது பற்றிக் கேள்விப்பட்டேன். குளிர்காலமென்றாலும் நல்ல சூரிய வெளிச்சமுள்ள இடத்துக்கு வந்து சேர்ந்தது நல்ல காலம் .)
குளிர்நாடுகளிலே பிறந்தவர்கள் பலர் பாவம்; வெயிலைத் தாங்கார்களாம். ஆனால் எனக்கோ இன்னுமின்னும் வேண்டும் போல இருக்கிறது. வசந்த காலத்து இலைகளையும் பூக்களையும் (விட்டுப் போக மனமில்லாமல் தொங்கும் குளிரையும்) தடவி் காற்றை நிறைக்கும் அந்த மஞ்சள் வெயிலுக்காகவும், அந்த அழகிய மஞ்சள் வெளிறி நிறமற்றுப் போய் ஈரமில்லாமல் சண்டித்தனம் காட்டுகிற காற்றோடு சேர்ந்து எறிக்கிற கோடை வெயிலுக்காகவும் நான் காத்திருக்கிறேன். என்னதான் மழையினை நேசித்தாலும் எப்போ வருமென்று பார்த்திருந்தாலும் முத்துக்களும் வெள்ளிச் சரங்களும் காட்டும் நாட்டியத்துக்காய்க் காத்திருந்தாலும், வெயிலைக் காணாத மாத்திரத்தில் என் மனமும் அலைய ஆரம்பித்து விடுகிறது - வீடு திரும்பப் பிந்துபவரைப் பற்றி எண்ணுகிற ஈழத்துக் குடும்பத்தினதைப் போல .
வகை: இயற்கை , கிறுக்கினது , குழையல் சோறு
நம்பகமான நிறுவனங்கள்
நியுயோர்க்கிலுள்ள ரெபுட்டேஷன் இன்ஸ்ட்டிடியூட் உலகின் நம்பகமான நிறுவனங்கள் பற்றி 29 நாடுகளில் 60,000 பேரிடம் இவ்வாண்டின் தொடக்கத்தில் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகளை போர்ப்ஸ்.கொம் தளத்தில் காணக் கிடைத்தது. அதில் நாடு வாரியாக உயர் 200, உயர் 100, உயர் 50 மற்றும் உயர் 10 இல் காணப்படும் நிறுவனங்களின் நாடுகளைப் பட்டியலிட்டால்..
- உயர் இருநூறில் முதல் ஐந்து இடங்களை (மொத்தமாக 104 நிறுவனங்கள்)அமெரிக்கா, டென்மார்க், ஜப்பான், ரஷ்யா, பிரேசில், சீனா என்பனவும்
குறிப்பிடப்பட்ட 200 நிறுவனங்களில் இந்தியாவில் அமைந்திருப்பவை 7. (சுவிற்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து ஆகியவற்றிற்கும் 7 நிறுவனங்கள்): விப்ரோ, இன்போசிஸ், டாடா, மாருதி உத்யோக், எல்.ஐ.சி, இந்துஸ்தான் லீவர் மற்றும் மகிந்திரா & மகிந்திரா.
தத்தமது நாட்டிலேயே இந்நிறுவனங்கள் மதிப்பிடப்படுகின்றன. மக்கள் தம்நாட்டு நிறுவனங்களில் நம்பகமானவற்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவைத் தவிர ஏனைய நாடுகளில் கருத்துக்கணிப்பு இணையத்தினூடாகவே நடத்தப்பட்டிருக்கிறது. வயது, பால், கல்வித்தகைமை வேறுபாடின்றி பலதரப்பட்ட (இணையத் தொடர்பாடல் வசதி உள்ளோரிடம்) கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. கருத்துக்கணிப்பு மற்றும் தரப்பட்டியல் எவ்வாறு கையாளப்பட்டு முடிவு எட்டப்படுகிறது என அறிய இங்கே பாருங்கள் .
பாட்டொன்று கேட்டேன்..
பிரபாவிடம் அல்ல.(கேட்க வேண்டிய ஒரு பாடல் இருக்கிறதுதான்..) :O)
நான் சொல்ல வந்தது யூரோவிஷன் பாட்டுப்போட்டி. மே 12ம் திகதி போட்டியில் சேர்பியா வென்றுமாயிற்று. எங்களூரில் நேற்றைக்கும் இன்றைக்குமாகத்தான் SBS ஒளிபரப்புகிறது. எனக்குப் பிடித்திருந்த பாடல் 6ம் இடம் கிடைத்த பல்கேரியாவினுடையது. டம் டம்மென்று நல்ல அடி.. நீங்களும் பாருங்களேன்:
(மு.பி.கு: பயணக்கதையை அடுத்த பாகத்தோடு முடிக்கிற எண்ணம், சினேகிதி வேறே ஏன் இன்னும் விசரியாவே இருக்கிறீங்க என்றும் கேட்டுவிட்டா.. கெதியில பதிவுகளோட வாறேன். )
வகை: குழையல் சோறு , திரை


