விளையாடக் கூப்பிட்ட ராதா ஸ்றீராம், பிரபா, மலைநாடருக்கு நன்றி.. விசர்க்குணங்கள் இருக்குது என்டு தெரிஞ்சுதான் கூப்பிட்டிருக்கிறீங்க போல!! :O))
முதல்ல விளையாட்டுக்கு ஆள் சேர்த்திட்டு வாறன்..
யோகன் (பாரிஸ்)
சினேகிதி
மதி
கலை
அஞ்சலி
தங்களது சித்திர விசித்திர குணாம்சங்களைச் சொல்லுமாறு மேற்கூறியவர்களை இத்தால் அழைக்கிறேன்.
எனக்கு இருக்கிற சில விசித்திர குணம் (என்டு எனக்குப் படுபவை)
5. எதாவதொன்றில் ஆர்வம் வந்தால் அதுவே கதி. எப்படியும் 5- 6 வாரமெடுக்கும் அந்த அலை ஓய! பிறகு இன்னொருமுறை அதிலே ஆர்வம் வரும் வரை திரும்பிப் பார்ப்பதேயில்லை. மாறாத ஆர்வம் சிலவற்றில் இருக்கிறது. உதாரணத்துக்கு:
* ஆவணப்படங்கள் கண்டால் பார்க்கவே வேண்டும். வேற ஒன்றும் அந்த நேரத்தில் ஓடாது. பார்க்க முடியாவிட்டால் பதிவு செய்து பிறகு பார்ப்பேன். தொ.காவில சில நிகழ்ச்சிகளை அவற்றின் தலைப்பு/முடிவு இசைக்காகவே பார்க்க ஆரம்பித்ததும் உண்டு. (Sitting Ducks சலனக் கேலிச்சித்திரம், House தொடர்.. இன்னும் சில நிகழ்ச்சிகள்). தொ.கா. நிகழ்ச்சிகள் சிலவற்றுக்கு அடிமையாகவே கிடப்பதும் ஒரேயடியாய் அவற்றைப் பார்ப்பதை நிறுத்துவதும் உண்டு.
* அனுப்பும் வாழ்த்து மடல் அனேகமாக நானே செய்ததாய் இருக்கும். இதற்காகவே, காண்கிற பூக்கள், வித்தியாசமான அமைப்புடைய இலைகள் சேகரிப்பேன். பேரங்காடிக்குப் போய் என்னைத் தவற விட்டால் வந்த வழியில் எங்காவது புத்தக/கைவினைப் பொருள் கடை இருக்கிறதா என்று பார்த்து அதற்குள் நுழைந்தால் என்னைக் கண்டு பிடிக்கலாம். அந்தளவு புத்தக/கைவினை வெறி.
4. கோவம் வரும். ஏன் எதுக்கெண்டெல்லாம் இல்லை. சுள்ளென்று எரிந்து விழுவேன். ஆனால் மற்ற நேரங்களில், அமைதியின் உருவமாய் இருப்பவர்களுக்கே கோவம் வரும் சந்தர்ப்பத்தில், எனக்கே ஆச்சரியம் வரும் வகையில் அமைதியாய் பொறுமையாய் பொறுமையின் சிகரம் ஒரு எருமையாய் இருப்பேன். ஆக, கோவம் வரும். ஆனா எப்ப என்டு தெரியாது.
குறிப்பாக எரிச்சல் வருவது மேற்கத்தேய 'பெண்' வரையறையை தங்களுக்குக் கற்பித்துக் கொண்ட பல்கலைக் கழகம்/வேலை செல்லும் இங்கிருக்கும் பெண்களிடம்(அறிவு சார்பாய் இல்லாமல் தோற்றத்தில் அதிக ஈடுபாடு கொள்வது அதைக் கொண்டே மற்றவர்கள் மதிப்பிடுவது என்பதைச் சொல்கிறேன்.). உடைகளுக்கான கடைகளை விட புத்தகக் கடை பிடிக்கும் என்றும் பேருந்தில் நான் சுவர்ப்பூச்சு கொள்கலன்கள், உலக்கை மற்றும் தகரம் கொண்டு போனதையும் சொல்லி (முழுக்க முழுக்க "நான் எனது தேவைக்காக செய்திருக்கிறேன் பார், ஒரு வெட்கமும் இல்லை" என்று காட்ட என்று சொல்லிக் கொண்டாலும், அப்படிப்பட்ட தேவைகள் இங்கு 99% பேருக்கு வராது என்பதும் நினைவுக்கு வரும்) அவர்கள் முகம் ஆச்சரியத்தில் விரிவதைப் பார்க்க & அவர்களுடன் தர்க்கித்து கற்பிதங்களை உடைக்கப் பிடிக்கும்.
3. சில இடங்களுக்கு முதல் முறையாகப் போனாலும் அவ்விடத்திற்கு முதலும் வந்திருந்த மாதிரித் தோன்றும். நண்பர்களிடம் சொன்னால் போன பிறப்பில் வந்திருப்பாய் என்று கேலி பண்ணுவார்கள். ஏனோ தெரியவில்லை பழைய காலத்து வீடுகள் கட்டிடங்கள் என்பவற்றிற்குப் போனால் அதிகமாகத் தோன்றும். வந்த மாதிரி இருக்கிறது தானே என்று அவ்விடத்தின் உள்ளமைப்புப் பற்றிக் கேட்டால் அம்போ! ஆக வெளியில மட்டும் பார்த்துப் போயிருக்கிறன் போல போன பிறப்பில!!! :O\
2. முந்தினதின் நீட்சியாக யாரைப் பார்த்தாலும் முதல்லே எங்கேயோ கண்ட மாதிரி இருக்கே என்று யோசிப்பது. எப்படியும் இதுவரை வாழ்நாளில் சந்தித்த/பார்த்திருந்த ஒருவருடன் புது முகத்தை ஒப்பிட்டுக் கொள்வது. அப்படி யாரையும் ஒத்திராத முகமா? கண்ணையோ மூக்கையோ காதையோ நெற்றியையோ ஒப்பிடத் தொடங்குவேன்!! புத்தம் புதிதாயே முகம் இருந்தால் மனதில் தேக்கிக் கொள்வேன்.. இன்னொரு ஆளைச் சந்தித்தால்/பார்த்தால் ஒப்பிடுவதற்கு!! :O))
இந்த வியாதி வர வர முற்றுகிறது என்று நினைக்கிறேன்.. வார இறுதியில் சந்தித்த ஒரு வயதுக் குட்டிப் பெண்ணைப் பார்த்து இவளை மாதிரியே யாரைத் தெரியும் என்று யோசித்து, கடைசியில் கண்டு பிடித்தேன்!!!
1. யாரோட கதைச்சாலும் அவங்கட வட்டார வழக்கில/ வேற்று நாடாயிருந்தா அந்த அக்சன்ற்றுடைய ஆங்கிலம் கதைப்பது. மாற்ற வேண்டும் என்டு முயற்சித்திருக்கிறேன். ஆனாலும் கவனிக்காம விட்ட பொழுதொன்றில மூளையும் குரல்வளையும் சதி பண்ணி விடும். சீனாக்காரனிட்டக் கதைச்சா அவன் சொல்லுற மாதிரியே "த்ரீ"க்குப் பதிலா "ட்ரீ/ட்லீ"யும், "ப்ரைட் ரைசு"க்குப் பதிலா "ப்லை லை" யும் தான் என்ட வாயில இருந்து வரும். இதே இத்தாலியனோட என்டா "இட்" "இத்" ஆகிறதும் நடக்கும். வேலையிடத்திலே பல நாடுகளைச் சேர்ந்த ஆட்கள் இருப்பதால் எனக்கும் வசதியாய் அமைந்து விடுகிறது!!(என்ன இதுவரை இந்த ஐரிஷ்/ஸ்கொட்டிஷ்/வெல்ஷ் அக்க்சன்ற்றுகள்தான் வராதாம்.) புதுசு புதுசாய் அக்சன்ற் கற்றுக்கொண்டு வீட்டே போய்/குட்டித்தோழர்களிடம் பேசிக்காட்டுவது பொழுது போக்கு. என் வீட்டு இல்லத்தரசன் யாரோடு பேசினாலும் தனது அக்சன்ற் / 95% இலங்கைத் தமிழிலேயே கதைப்பார். நான் அப்படியில்லைத்தானே.. ஒரு நாள் தமிழக நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அங்கிருந்த ஒரு (தமிழக)முதியவவுடன் பேசினேன். "உன்னோட வீட்டுக்காரர் பேசறது புரியலே, ஆனா நீ சரியா பேசறே" என்றாரே!!
இப்போதைக்கு இவ்வளவுதான் ஞாபகம் வந்தது. இந்த விசர் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? :O))
விசரியென்கிற நான்...
தலைப்பில்லாத கதை
ஒரு உண்மைச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு (கதையெழுதும் முயற்சியில்) ஆங்கிலத்தில் எழுதியது. அதிலிருந்து தமிழ்ப்படுத்தியிருக்கிறேன். கதைக்குத் தலைப்பு(இதுவரை) இல்லை.
போரில் சம்பூர் அரச படையால் கைப்பற்றப்பட்டதும் கடைக்குப் போன சீலனும் மகள் கவிதாவும் திரும்பி வரும் வரை காத்திருந்து கையில் கிடைத்ததை வாரியெடுத்துக் கொண்டு ஊரோடு சேர்ந்து ஓடின இரண்டாம் நாளே காட்டுக்குள்ளாலே நடந்த மக்களுக்குள் ஆளுக்கொரு பிள்ளையுடன் தொலைந்து போனார்கள் சீலனும் ஆனந்தியும். வீட்டிலிருந்த விதத்துக்கும் காட்டு வாழ்க்கைக்கும் எவ்வளவோ வித்தியாசம். வில்வனுக்கு இவையொன்றும் புரியவில்லை. ஒரு நாள் இரவில் சீலன் திறக்க மாட்டாமல் கண்களை மூடின சில நிமிடங்களில் பக்கத்தில் எங்கேயோ நகர்ந்து நகர்ந்து போய் காஞ்சோன்றிச் செடி பட்டு அரிப்புத் தாங்காமல் அவன் அழுது காட்டையே கலங்கடித்தான். அழுகையை நிற்பாட்ட வாயில் துணியடைய வேண்டி வந்தது.
தூரத்தே கேட்ட வெடிச்சத்தம் ஆனந்தியை எழுப்பிற்று. இன்னும் விடியவில்லை. விடிவதற்கு இன்னும் நேரமிருந்தது. சுற்றியிருந்த மரங்களின் வடிவம் கறுப்பாய்த் தெரிந்தது. சில்வண்டுகளும் விட்டு விட்டுக் கச்சேரியைத் தொடர்ந்து கொண்டிருந்தன. எப்போது தூங்கிப் போனோம் என்று நினைத்தவளாய் பக்கத்தில் படுத்திருந்த கவிதாவையும் தங்களைப் போலவே மரங்களுக்குக் கீழே படுத்திருக்கும் மற்றவர்களைப் பார்த்தாள். நாலைந்து நாட்களாக காட்டுக்குள்ளால் நகர்கிற கூட்டம். விடிகாலையில்தான் கொஞ்சமேனும் உறங்கும். நித்திரை எவ்வளவு அதிசயமான ஒன்றாக இருக்கிறது. நேற்றைக்கு பாம்புக் கடியில் தன் மகனைத் தொலைத்த தாய் கூட இப்போதைக்கு மகன் இல்லை என்கிற நினைப்பிலிருந்து எவ்வளவு தூரமாய் உறங்குகிறாள். விடியல் சூரியனையும் அவளிடமிருந்து புது அழுகையையும் கொண்டு வரும். நித்திரைதான் திறமான வலிநிவாரணி - அது உடல்சார்ந்ததோ அல்லது மனம் சார்ந்ததோ. பகலில் அத்தனை வேலை வைக்கும் வில்வன் கூட இரவில் அமைதியாக உறங்குவானே என்று தன் மகனைப் பற்றி நினைத்ததும் ஆனந்திக்கு நித்திரை வரவில்லை. சீலன் தன்னைப்போல் பொறுமையாகப் பார்க்க மாட்டானே என்ற எண்ணம் எழுந்து அலைக்கழித்தது.
சீலனுக்கு ஆனந்தியில்லாமல் வில்வனைச் சமாளிப்பது முடியவில்லை. நடந்து களைத்தால் நின்று ஓய்வெடுக்கிற சூழ்நிலையில்லை. வில்வன் திமிறி அழ அழ மற்றவர்களுடன் ஈடு கொடுத்து வில்வனைச் சமாளித்தபடியே வலுக்கட்டாயமாக நடந்தான். இரவுகளில் கொஞ்சம் பரவாயில்லை. நடந்த களையில் படுத்துவிடுவான். ஆனாலும் இடையிடையே எழுந்து பார்த்துக் கொள்ள வேண்டும். சிலவேளைகளில் ஆத்திரமாய் வரும். வடிகாலுக்கு எங்கே போக? ஆனந்தி இதுவரை எப்படிச் சமாளித்தாள் என்று அதிசயமாக இருந்தது.
விடிந்து பார்த்தால் வில்வனைக் காணவில்லை. வந்தவழியே சுற்றுமுற்றும் ஒருநாள் முழுவதும் தேடினதுதான் மிச்சம். ஆனால் பிரிந்த குடும்பம் 'சீலன், உன்ட மனிசி இந்தா எங்களோடதான் இருக்கு" என்று அவர்கள் ஊர்க் கிழவி ஒருவர் சீலனை அடையாளங் கண்டு கொண்ட தயவால் சேர்ந்தது. மகனைத் தொலைத்த குற்றத்துடன் ஆனந்தியிடம் போய் நின்றான். அவன் விவரஞ் சொன்ன போது வந்த பதற்றமும் அவர்களிருவருமாய் இன்னொரு பகல் முழுதும் தேடி சூடுபட்ட வில்வனின் உடலைக் கண்டெடுத்த நேரம் ஏற்பட்ட வேதனையும் மனவுளைச்சலை அதிகரித்தன. தான் மகனை வெறுத்து "அவன் இல்லாமல் போனால்.." என்று நினைக்கவில்லையே.. அன்றைக்கு ஏதோ அலுப்பில் எண்ணியது உண்மையாகி விட்டதே என்று நினைத்து நினைத்து மறுகினாள் அந்தத் தாய். தான் நிலைகுலைந்தால் ஆனந்திக்கு ஆறுதல் சொல்வது யார் என்று சீலனும், வில்வனில்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க விரும்பாத ஆனந்தியும் அழுகையை மறுதலித்து நின்றனர்.
ஆனாலும் தாய்க்கும் தந்தைக்கும் மகனைக் கவனிக்கிற பளு இல்லாமல் போனது கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தபோதிலும் பிள்ளை இறந்ததில் இப்படியெல்லாம் நிம்மதிப்படுகிறோமே என்று குற்றவுணர்வும் அதன் கூடவே வந்தது. ஆனந்திக்கு இருந்ததைப்போலவே சீலனுக்கும் அதே குற்றவுணர்வைத் தந்து திருப்திப்பட்ட அந்த நிம்மதி அவர்கள் அதை வன்மையாக எதிர்த்தொதுக்கியபோதும் மனதில் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டது. இரவு வந்து, கவிதா 'இனி தம்பி இல்ல என்னம்மா' என்று அவனுக்காகவே தூக்கிக் கொண்டு வந்த கணிதப் புத்தகத்தைத் தடவியபடி சொன்ன மட்டில் வில்வனுக்காகவா அல்லது தங்களுக்காகவா என்று தெரியாமல் அவர்கள் அழ ஆரம்பித்தார்கள்.
வகை: கதை
இரண்டாம் தரிப்பு II
ரெய்ன்(f)பால் நீர்வீழ்ச்சிக்குக் காலையில் போகவென்றிருந்த பயணம் பிற்பகல் இரண்டு/மூன்று மணி போலத்தான் சாத்தியமாயிற்று. ஷாவ்ஹௌசன் (சாருஹாசன் அல்ல) கன்ரோனில் ஜெர்மன் - சுவிஸ் எல்லைக்கருகில் இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சிதான் ஐரோப்பாவிலேயே பெரிதென்றார்கள். இரண்டு மூன்று வழிகளில் இவ்விடத்தை அடையலாம். இங்கே பாருங்கள்.
விரைவிலேயே பனிமூட்டம் சூழ்ந்துவிட்டதால் நிறைய நேரம் நிற்கவில்லை. நீர்வீழ்ச்சி ஆரம்பிக்குமிடத்திற்கும் ஏறவில்லை. கோடை காலத்திற்தான் செல்லலாம். மேலே ஒரு கோட்டையும் இருக்கிறதாம். படகுச் சவாரி போகலாம், அல்லது நடந்து மலையேறலாம். மலை ஏறுவதற்குமே வெவ்வேறு வழிகளுண்டாம். நாங்கள் அடிவாரத்திற்குப் போனோம். குட்டியொரு பாலமிருக்கிறது. கீழே பார்த்தால் தரை தெரியக்கூடியளவு தெளிந்த நீர். தரைதான் தெரியவில்லை... அவ்வளவிற்கு மீன்கள். சாப்பாட்டுப் புத்தி போகுமா.. எப்பிடிப் பிடிக்கலாம் என்றெல்லாம் ஆராயப்பட்டதுடன் பொரிச்சா சுவையாயிருக்குமென்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்பட்டது. கதையோடவே முடிஞ்சு போச்சு.. செயலிலே இறங்கவில்லை. அத்துடன் தப்பின மீன்கள். :O)
கடந்து அந்தப்பக்கம் கோட்டைக்குப் போனால் ஒரு ஞாபகச் சின்னக் கடையும் (பூட்டியிருந்தது) படகுத் துறையும், ஒரு உணவகமும் இருந்தன. தண்ணீரோ சில்ல்ல்!!. வீரம் காட்டவென்று தண்ணிருக்குள்ளிருந்து வெளியே தலை நீட்டிக் கொண்டிருந்த ஒரு பெரிய கல் மேலே நின்று படமெடுத்தோம். குளிர்காலத்தில் போவதில் சனமில்லாமல் ஆறுதலாய் இடம் பார்க்கக் கிடைத்தாலும், கோடைகாலத்திலே செய்யக்கூடியதாயிருக்கிற படகுச் சவாரியோ, மலையேறலோ இல்லாமல் போனது வருத்தமே.
இதுவரை இப்படி அழகான இடத்தைப் பனிமூட்டத்திற்கூடாகப் பார்க்கும் சந்தர்ப்பம் படங்களிலும் (கதாநாயகி அறிமுகம்/பாடல்)(இதற்கு நக்கலாக 'அழகிய தீயே'ல் கடைசியில் ஒரு காட்சி வைக்கப்பட்டதல்லவா. இன்னும் சிரித்துக் கொள்வேன் அதை நினைத்து) விளம்பரப் பிரசுரங்களிலும் மட்டுமே கிடைத்தது. படத்தைப் பார்த்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
ஷாவ்ஹௌசனில் படங்கள் வரையப்பட்ட பழங்காலத்து வீடுகளும் இருக்கின்றனவென்று அறியக்கிடைத்தது. செல்லவில்லை. விவரங்கள் கீழேயுள்ள சுட்டிகளிற் கிடைக்கும்.
1. http://www.about.ch/cantons
2. http://www.virtualtourist.com
வின்ரத்தூரிலிருந்து சுவிஸ்ரயிலெடுத்து இரண்டு மணி நேரத்தில் தூன் நகரை வந்தடைந்தோம். போன இடங்களிலெல்லாம் எங்களைச் சாப்பிட வைத்தே அழகு பார்த்தார்கள். தூனில்தான் கொஞ்சமாவது அதிலிருந்து விடுதலை; அடுத்தநாள் நாட்டுக்கோழி இறைச்சியென்று - அதற்குள்ளிருந்த முட்டைகளோட சேர்த்து - பரிமாறும் வரை :O(. சுட்ட மீனும் சலட்டும் சாப்பிட்டுவிட்டு பத்து நிமிட நடையிலுள்ள நகர் மையத்தைப் பார்க்கப்போனோம். நத்தார்ச் சோடனைகள் ஆரம்பித்திருந்தன. அடுத்தநாள் சந்தையாம். கடைகளின் எலும்புக்கூடுகளாய் சில stalls முளைத்திருந்தன. 12ம் நூற்றாண்டிலிருந்தே இருக்கிற கோட்டை கண்ணில் பட்டது. அடுத்தநாள் அதைப் பார்க்கப் போகிறதாய் முடிவு. கண்ணிற் பட்ட ஒரு மணிக்கூட்டுக் கடைக்குள் நுழைந்தோம். ஒரு அடி உயரமிருக்கும் ஒரு கடிகாரத்தைக் காட்டி விலை கேட்டோம்.. 20,000 சுவிஸ் பிராங்குகளாம்!!!! அடேயப்பா! கையாலேயே செய்யப்படுவதால் அவ்வளவு விலை.
அடுத்தநாள் மப்பும் மந்தாரமுமாய் விடிந்தது. சுவிஸில் கடைசி நாளென்பதால் மனம் சோர்ந்தும், கோட்டை & இன்னொரு நாடு (அடுத்தநாளாயினும்) பார்க்கப் போகிற உற்சாகமும் கலந்து மனம் ஒரு நிலையில்லாமல் இருந்தது. சந்தை & கோட்டையைப் பார்க்கப் போனோம்.
வகை வகையாய் சீஸ். தோற் பொருட்கள், ஆடைகள், நத்தார் அலங்காரங்கள், பூக்கள், காதணி/மாலைகள்/மோதிரங்கள், பிரம்புப் பொருட்கள் என்று பலதும் விற்கும் கடைகள். பிரம்புக் கூடையொன்றை ஒரு சிறு இயந்திரத்தினுதவியுடன் சில நிமிஷங்களிலேயே பின்னுகிறார் கடைக்காரக் கிழவர். அவருக்கு எதிர்த்தாற்போல் ஒரு சிறுகடை. பொன்னிறமாய் சிற்றுருவங்கள். கண் பார்த்ததும் கால் இழுத்துச் சென்றது. தேன் மெழுகாலான மெழுகுதிரிகள். சந்தையிலே கொஞ்சம் சீஸ் வாங்கிச் சாப்பிட்டு கோட்டை நோக்கி நடந்தோம்.
கோட்டையில் கீழ்த்தளத்தில் ஒரு 'சத்திரம்'. கோட்டையின் கீழ்த்தளப்பகுதியில் கொஞ்சத்தை இப்போது கடைகளாக்கி விட்டார்கள். குதிரைகள் ஏறுவதற்கென்று வைத்தவை போலிருந்த படிகளில் ஏறி நடுத்தளம் அடைய ஒரு பீரங்கி வரவேற்றது. அதிலேயே ராசா ராணியாய் முகம் வைத்துப் படமெடுக்க ஒரு ஓவியம். ராசா ராணி (வீரன், காதலி?)யின் முகங்களைத் திறந்து அந்த ஓட்டையிலே எங்கள் திருமுகங்களை வைத்துப் படமெடுக்கலாம். ஒரு சின்ன அருங்காட்சியகமும் இருக்கிறது. நாங்கள் போன அன்றைக்குப் பூட்டு. இன்னும் கொஞ்சம் படியேறிப் போக ராசாவின் சாப்பாட்டறை. இப்பவெல்லாம் விழாக்கள்/விருந்துகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. அன்றைக்கும் கதிரை-மேசைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள். வேலை செய்பவர்களை ஒரு knight மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார். 
மேலிருந்து படங்கள் எடுத்துக் கொண்ட பிறகு கீழிறங்கினோம். பழைய பாலத்தைப் பார்க்கப் போகிற வழியில் மதிலேறிச்(புத்தி போகாதே!!) சில படங்கள் எடுத்துக் கொண்டேன்.
பாலத்தடிக்கு நடந்தோம். தூனுக்கூடாக ஓடும் ஆறு வசந்த காலத்தில் பெருக்கெடுக்குமாம். குளிர்காலத்தில் கொட்டியுள்ள பனியெல்லாம் உருகியோட, ஆறு சந்தை வரை வரும். அதற்கேற்றபடி நீரோட்டத்தைக் கட்டுப்படுத்த மதகுகளை(சரியான பிரயோகம்தானா? அல்லது மடை என்று சொல்ல வேண்டுமா?) பொறி கொண்டு இயக்குகிறார்கள். அப்பொறிகள் கொண்டதொரு சிறிய மரப்பாலம் தான் பழைய பாலம்.
மேற்கூரையில் பாசி படர்ந்து போயிருந்தது. நீர் துள்ளிக் குதித்து ஓடி வருகிறது. ஒரேயொரு மடைக்கதவைத் திறந்து வைத்திருந்தார்கள் அன்று. ஆற்றில் பாண்/உரொட்டித் துண்டுகளை வீசினால் அன்னங்கள்/நீர்ப்பறவைகள் விரைந்து வருகின்றன. பின்புலமாய்க் கோட்டையும் வேறு கட்டிடங்களும். நடை பயில நல்லதொரு இடம்.
தூனில் பார்க்க இன்னுமொன்றிருக்கிறது. வொக்கர் பனோராமா (Wocher Panorama) எனப்படுகிற சுற்றிவர வரைந்த ஒரு ஓவியம். பத்தொன்பதாம் நூற்றாண்டு வாழ்க்கை பற்றியது. இது குறித்த மேலதிகத் தகவலுக்கு: http://www.thunersee.ch/en
இப்படியெல்லாம் சுற்றிவிட்டு வீட்டே வந்து அடுத்த நாள் பயணத்திற்கு ஆயத்தமானோம்.
ஜேர்மனி. கத்திகளுக்குப் பேர்போன சொலிங்கனில் கால் பதித்தோம். எனக்கே மழை அலுக்குமென்று நான் எதிர்பர்க்கவில்லை. ஜெர்மன் வாசிகளுக்கு hats off. காற்றும் மழையும் ஊசியாக் குத்தின குளிரும்.. அப்பப்பா!!! கொட்டின மழையில் இடம் பார்க்க எங்கே போவது? கடைசியில் ஷ்வேப பான்(schwebe bahn) தான் பராக்குக் காட்டிற்று. வழமையாக் கீழே இருக்கிற தண்டவாளம் இதற்கு மேலே. தொங்கிக் கொண்டு ஓடுகிறது இந்த ரயில். கொஞ்சத் தூரத்துக்கு மேலே ரயிலோட கீழே ஆறோடுகிறது.
(இரவிலெடுத்த படம் தெளிவில்லை என்பதால் விக்கியில் பாருங்கள்.
ஜேர்மனியில் நின்ற இரண்டு நாட்களும் கட்டாய் ஓய்வு போலத்தான். வெளியில் இறங்க முடியவில்லை. குளிர். இங்கிருந்து நோர்வே போகிற திட்டம். சிட்னியிலிருந்து விலை பார்த்த போது 30 யூரோ இருந்த விமானப் பயணச்சீட்டு 100 யூரோக்கும் மேலாலே எகிறியிருந்தது. ஒரு மாதம் முதல் பதிவு செய்வதற்குத்தானாம் அந்தக் குறைந்த விலை. அவசரப் பயணகாரருக்கு தண்டம்தான். சில நாட்கள் முன்னே பின்னே போகக்கூடும் என்று பதிவு செய்யாமல் விட்டதன் விளைவு ஆளுக்கு 100 யூரோக்கும் மேலாகக் கொடுத்து விமானச் சீட்டைப் பெற்றுக்கொண்டதுதான். விமானச் சீட்டு எடுப்பதானால் 3 - 4 வாரத்திற்கு முன்னரே வாங்குவது உத்தமம்.
இலையுதிர்/வசந்த காலம், பின்னிரவு/அதிகாலைப் பயணம், செவ்வாய்-வியாழக் கிழமைப் பயணம் என்பனவற்றைத் தேர்ந்தெடுத்தால் மலிவு விலை விமானச்சேவைகளின் பயணச்சீட்டுகளை இன்னும் மலிவாய்ப் பெறலாம். எல்லாவற்றையும் விட முக்கியமானது முன்பதிவு செய்தல். குறைந்தது 3 வாரங்களுக்கு முன்பாகவே.
நிறைய நாடுகள் போகிறீர்கள். ஒரே பயணச்சீட்டிலேயே எல்லாத் தரிப்பும் போட்டெடுத்தீர்களேயானால் இலகுவாக இருக்கலாம்; ஆனால் கட்டாயம் விலையாக இருக்கும். நடுக் கட்டங்களை தனிப்பயணங்களாய்க் கருதிப் பயணச் சீட்டு எடுப்பது பணப்பைக்குச் சேதம் விளைவிக்காது. உதாரணமாய் நான் சிட்னி-பரிஸ்-ஸூரிக்-உவுப்பர்ட்டால்-ஒஸ்லோ-பரிஸ்-சிட்னி பயணிக்கிறேனென வைத்துக் கொள்வோம். சிட்னி-பரிஸ் & பரிஸ்-சிட்னி மட்டுமே பிரதான சீட்டில் எடுத்துக் கொண்டு, பரிஸ்-ஸூரிக்-உவுப்பர்ட்டால்-ஒஸ்லோ-பரிஸ் பயணங்களை விமானம்/பேருந்து/ரயில் என்று விருப்பமான comboவில் போட்டெடுத்துக் கொண்டால் விலை குறைவாக இருக்கும்.
மலிவுவிலை விமானச் சேவை
"இரை" மீட்டல் 3
சாப்பாட்டைப் பத்திக் கதைச்சித்திருந்தனான், நடுவுல உட்டுத்துப் பொயித்தன். குறை நினையாதங்க மனே.
கடற்கரைக்குப் போனாக் கட்டாயம் இரிக்குமெண்டு சொன்ன சாமான் கொத்துரொட்டி. சில ஆக்கள் வீச்சு ரொட்டியெண்டுஞ் சொல்லுறவங்க. என்ன சாமான் என்டு விளக்கத் தேவல்லத்தானே... உருட்டி வைச்சிரிக்கிற மாவை நாலு சுழட்டுச் சுழட்டி விசுக்கினா விரிஞ்சி வாறத்த 'டங்கர டங்கர'யெண்டு போட்டிருக்கிற பாட்டுக்கு ஏத்த ஒரு தாளத்துக்குக் கோவா, முட்டை, இறைச்சி, வெங்காயம், பச்சக்கொச்சிக்கா எல்லாம் போட்டு கொத்தின ரொட்டி. என்னதான் களையெண்டாலும் அந்தப்பாட்டுக்கும் கொத்துரொட்டித் தாளத்துக்கும் கால் சும்மா தானா ஒரு ஆட்டம் போடப்பாக்கும். கவனமா இரிக்கோணும். சாப்பாட்டுப் பேப்பரில சுத்தி பிறகு பேப்பரில சுத்தித் தருவாங்க. சாப்பாட்டைக் கட்டுறதே தனிக்கலை. எவ்வளவுதான் முயற்சிச்சாலும் கடசில சொருகிறத்துக்கு எனக்கெண்டா பொக்கற் மாரி இரிக்கிறதேல்ல.
சாப்பாடுப் பார்சலப் பத்திக் கதைக்கக்குள்ளதான் ட்ரெயினில போகக்குள்ள கொண்டு போற சாப்பாட்டு ஞாவகம் வருது. அநேகமா இடியப்பப் பிரட்டலாத்தான் இரிக்கிற. பயணத்தண்டைக்கு விடிய ஒழும்பி இடியப்பம் புழிஞ்சி பிச்சி பிரட்டுவாங்க. ஆனா முட்டையோட நின்டிரும். இறைச்சி/மீனெல்லாம் பாவிக்கிறல்ல. அதைச் சிந்தாமக் கொள்ளாம மடில வச்சிச் சாப்பிடோணும். இல்லாட்டி பாண்/பணிஸ். முதலை பணிஸ்தான் பிள்ளையள் விரும்பித் தின்னிற. இல்லாட்டி கிறீம் பணிஸ். இப்ப இருக்கிற சீனி consciousness அப்ப எங்க கிடந்த!! [பாண்/பணிசுகள் சாப்பிடக்குள்ள வடிவா ஒரு பரிசோதனையும் செய்யலாம். தொடர்ந்து ஒரு ரெண்டு மூண்டு கிழமைக்கு சாப்பிட்டா வயிறு ஊதும். சாப்பிடல்லண்டா வயிறு குறைஞ்சிரும்.]
இந்தக் கொத்துரொட்டிய சும்மா வழிக்கடையில வாங்கிச் சாப்பிடல்லாம்.. அந்த மாரி இரிக்கும். [ருசியே செய்யிறவன்ட வேர்வை கலக்கிறதிலதான் வருது என்டு அண்ணா சொன்னாச் சரி, நமக்கு வாய்க்கால சாப்பாடு இறங்கா. "புள்ளைய ஏன் அரியண்டப் படுத்தா" என்டு வாங்கிக் கட்டுவாரு. என்டத்தையும் பங்கு போட்டுத் தின்றதான்.] கொழும்பில நல்லம் என்டா அது சரியற்காரன்ட(Chariot) கொத்துரொட்டிதான். நல்லாச் செய்திரிப்பான். விலையும் பரவால்ல. எங்கயோ கொட்டாஞ்சேனை/மருதானை/கோட்டைப் பக்கம் போனாலும் அண்ணாப்பிள்ளையர் வாங்கித்து வருவேர். அதுவும் நல்லா இரிக்கிற. என்ன கடையெண்டு எனக்குத் தெரியா.
என்னதான் கொத்துரொட்டியத் திண்டாலும், பசியெண்டா முதல்ல என்ன ஞாவகம் வரும்? சோறும் கறியும் தானே? [நமக்கென்ன பஸ்ற்றாவும் நூடுல்சுப்பும் அப்பெங்க தெரிஞ்ச?அதென்னண்டு தெரியா இனி இல்லண்ட பசி வந்தா நாம ஏன் சாப்பிட லேசான, உடன வயித்த நிறப்பிற சாப்பாட்டத் தேடுற?] மத்தியானச் சாப்பாட்டுக்கு ரெண்டிடம். ஒன்டு மஜஸ்ற்றிக் சிற்றிக்குள்ள. மற்றது கொள்ளுப்பிட்டில க்றீன் கபின்/பகோடா(Pagoda. பக்கோடா இல்ல). ஒரு சிங்கள ஊரில போய் மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டா எப்பிடியான கறி இரிக்குமோ அப்பிடியான சாப்பாடு மஜஸ்ற்றிக் சிற்றிக்குள்ள இருக்கிற கடையில. கடையிர பேர்தான் மறந்துத்தன். விலாசா கிச்சனோ என்னயோ. எனக்கு ஞாவகமா போஞ்சி, வாழப்பூ, கறணக் கிழங்கு(சமைச்சொழியும் மட்டும் வெட்டினாளுக்கு கை கடிக்கும்), மரவள்ளிக்கிழங்கு, பிலாக்கா, பிஞ்சுப் பிலாக்கா (பொலொஸ்),கோழிறச்சி, மீன்/கணவா/றால் குழம்பு/ பொரியல்,கத்தரிக்கா, வெண்டிக்கா, கரவில(பீர்க்கங்கா என்டு நினைக்கன்) சீனிசம்பல், தேங்காப்பூ சம்பல், சட்னி,லீக்ஸ், கீரை ஏதாவது என்டு நிறையக் கறி இரிக்கும். விருப்பமான சோறு - சிவப்பு, வெள்ளை - கேட்டெடுக்கல்லாம். கறியளக் காட்டக் காட்ட போட்டுத்தருவாங்க. இலையிலதான் சாப்பாடு போடுவாங்க. இலைய வட்டில்ல வச்சித் தருவாங்க. அத நாம பிறகு கரண்டி/முள்ளுக்கரண்டியால சாப்பிடுற. :O)
அங்க அப்பிடியெண்டா கிறீன் கபினில நீங்க போய் நிண்டு எடுத்து வரோணும். என்ன கறி மாறினாலும் இவனிட்ட கட்டாயம் நெத்தலிக் கருவாட்டுப் பொரியலும் பப்படமும் தேங்காப்பூச் சம்பலும் சட்னியும் பருப்பும் கீரையும் இருக்கும். இருந்து சாப்பிடுறதுக்கு நல்ல தோதான இடம். வெள்ளை உடுப்புப் போட்ட waiter/server. அரைவட்டமா இருக்கை (சுவரோட கட்டிச் சீமெந்து போட்டது) போட்ட வட்ட மேசை நாலைஞ்சு. (மற்றக் கதிர மேசையளும் இரிந்ததான்..) பின்னுக்கு சுவரில பழங்காலத்திய முறையில கீறின/அச்செடுத்த ஓவியம். நல்ல நிழலா இருக்கும். பக்கத்தால காலிவீதி கிடக்கெண்டு மறந்தே பொய்த்திரும். பிறகு சாப்பிட ஐஸ்கிறீம், வட்டிலப்பம், பழக் கலவை இல்லாட்டி தயிரும் கித்துள் பாணியும்.
கித்துள் பாணியப்பற்றிச் சொல்லோணும். நல்ல இனிப்பான பாணி. நான் முதல் இதத் தென்ன மரத்திலருந்துதான் எடுக்கிறண்டு நினைச்சித்திருந்த. அப்பிடியில்ல. கித்துள் (Caryota Urens) என்டே ஒரு மரங் கிடக்கு.
Kingdom Plantae - Plants
Subkingdom Tracheobionta - Vascular plants
Superdivision Spermatophyta - Seed plants
Division Magnoliophyta - Flowering plants
Class Liliopsida - Monocotyledons
Subclass - Arecidae
Order - Arecales
Family - Arecaceae (Palm family)
Genus - Caryota L. (fishtail palm)
Species - Caryota urens L. (jaggery palm)
தென்னையிட விட்டத்தில மூண்டில ஒரு பங்குக்குத்தான் வரும். 15 - 20m உய..ரமா வளரும். கொண்ட பனை(கொண்டைப் பனை?), கூன்டல்பனை(கூடல் பனையெண்டு கேள்விப்பட்டிருக்கிறன்.. அதா இதெண்டு தெரியல்ல), திப்பிலி என்டு தமிழில சொல்லுறதாமெண்டு இந்தப்பக்கம் சொல்லுது.
"This and other large Caryota species are sources of sago, fibre and toddy (fermented sap). The genus is the only one within the palm family with bi-pinnate (doubly divided) leaves. Caryotas are monocarpic, that is, when the flowering stem has finished fruiting it dies. The fruit is filled with crystals that cause severe irritation and should not be handled" - என்டுது இந்த ஊர் Royal Botanic Gardens தளம். கிட்டத்தான் கிடக்கு.. போய்ப் படம் எடுத்து வந்து இணைக்கிறன்.
கித்துள் பாணி, கித்துள் மரத்திட பூவை (பாளை?) வெட்டி எடுக்கிற. பாளையிட அடில வெட்டி மூலிகைக் கலவை கொஞ்சம் பூசிற. இப்பிடிப் பூசிறது பாளை முதிராமத் தடுக்கும். ரெண்டு நாளைக்குப் பிறகு பாளையச் சேத்துக் கட்டி நுனிகள வெட்டிருவாங்க. கீழ ஒரு பானைய/முட்டிய வைச்சா பிறகென்ன, பாணி அறுவடைதான். நேரடியா மரத்திலருந்து வாறதால அப்பிடியே சத்தும் இரிக்கும். இப்ப என்னண்டா நிறைய விக்கோணும் என்டதால சீனியக் கலந்தும் விக்கிறாங்க. வாங்கக்குள்ள பாத்து வாங்கோணும். (வாயில வைக்க மட்டும் எப்பிடி வித்தியாசம் கண்டு பிடிக்கிறண்டு எனக்குத் தெரியா). கித்துள் பாணியைக் காய்ச்சினா சக்கரை. பாணில மாதிரியே இதிலயும் சீனி கலக்கிறாங்களாம் இப்ப. சக்கரை வாங்கக்குள்ள கடும் நிறமாயும் மென்மையாவும் இருக்கிறதுதான் நல்ல சக்கரை. சீனி போட்ட சக்கரை நிறங் குறைஞ்சி கடிக்க/உடைக்க ஒண்ணாம கடினமா இரிக்கும். அத வாங்கப்படா!
தென்னையிலிருந்து கள்ளு எடுக்கிற மாதிரியே கித்துள் மரத்திலருந்து கள்ளும், தென்னந் தும்பிலருந்து கயிறு செய்யிறது மாதிரி கயிறும் செய்வாங்களாம். கயிறு மட்டுமில்ல, கூடைகள், தூரிகை செய்யக்கூடப் பாவிக்கிற. மரமும் நல்ல உறுதியா இருக்கிறவடிவா வீட்டுச் சாமான்/உத்திரம் செய்றவங்க.
எனக்குத் தெரிஞ்ச கித்துள் பாணிக் கதை இவளவுந்தான். ஆருக்கும் மேலதிக விவரம்/நான் சொன்னதில திருந்தங்கள் தெரிஞ்சாச் சொல்லுங்க.
அ.சொ.பொ.வி:
-----------------------
பச்சக் கொச்சிக்கா - பச்சை மிளகாய்
கடிக்க/உடைக்க ஒண்ணாம - கடிக்க/உடைக்க முடியாமல்
பாண் - bread
பணிஸ் - bun
வாயில வைக்க மட்டும் - வாயில் வைக்கும் வரை
வகை: இயற்கை , கும்பகர்ணனுக்குத் தங்கச்சி
இரண்டாம் தரிப்பு
-:சற்றே நீண்ட இடுகை, பஞ்சி பாராமல் எழுதச் சொல்லி பிரபா சொன்னதால் :O) :-
பரீ(நன்றி சிறி அண்ணா)யிலிருந்து அடுத்த நாடு நோக்கின பயணம். இந்தப்பயணம் ரயிலில். [ஐரோப்பாவில் ரயில், பேருந்து மூலம் பயணம் செய்வது பிரசித்தம். ஒவ்வொரு பிரதான நகரத்திலிருந்தும் இன்னொரு நகரத்திற்கு ரயிலோ பேருந்தோ செல்கிறது. பயன்படக்கூடிய சுட்டிகள் கீழே.]
ரயிலைப் பற்றி் - மிகவும் வசதியான இருக்கைகள். துப்பரவான கழிவறைகள்.பயணப்பொதிகளை வைப்பதற்கென்றே ஒவ்வொரு பெட்டியின் முன் பின் பகுதிகளில் தனியிடம். இரண்டு எதிரெதிர் இருக்கைகளுக்கு நடுவே ஒரு மேசை.(மடிக்கக்கூடியதாக இருக்கும்). முன்பதிவு செய்து வைத்திருந்தது TGVயில். இது ஒரு கடுகதி ரயில். பயணம் ஆரம்பித்துக் கொஞ்ச நேரத்தில்/குறிப்பிட்ட பகுதிகளில் பயணிகளை உட்கார்ந்திருக்கச் சொல்லி அறிவுறுத்தப்படுமாம். வண்டி மிக வேகமாகப் போவதால் சமநிலை தவறக்கூடும் என்பதாலேயே இப்படிச் சொல்லப்படுகிறது என்று எனக்குச் சொல்லப்பட்டது. நின்று பார்க்கத்தான் வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
கார் டு நோட் (Gare du Nord)இற்கு நாங்கள் போக்குவரத்து நெரிசலுக்கூடாக நீந்திப் போய்ச் சேர்ந்த போது நேரம் காலை 7.42. ரயிலோ 7.45இற்கு. சின்னையா சொல்லச் சொல்ல காலை ஆறரை வரை முதல்நாள் கடையில் எங்களுக்குத் தேவையானதைக் கேட்கத் தெரியாமல், எங்கள் நிறத்தில் தெரிந்த ஒருவரைப் பிடித்ததில் அவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்து தமிழும் தெரிந்தவராகி இருந்து விட்ட பாவத்தில், அவருதவியால் வாங்கிக் கொண்டு வந்த சிம் மை செல்பேசியில் போட்டு நோண்டிக்கொண்டிருந்துவிட்டுக் குளிக்கப்போன கண்ணன் வாங்கின திட்டை நான் திரும்ப வாங்கவேண்டும் என்பதால் அவரை மட்டும் காருக்குள் விட்டுவிட்டு அடுத்தாய் வண்டி எத்தனைக்கு என்று பார்க்க கண்ணன், தம்பியுடன் சேர்ந்து நானும் ஓடினேன்.
பயணச் சீட்டு விற்பனைப் பகுதிக்குப் போனால், அங்கிருந்த பெண் சொன்னதின் படி அடுத்த TGV அன்று மாலைதான். வேறென்ன வண்டியுள்ளது என்று விசாரித்தால், SNCF இருக்கிறது. ஆனால் பயண நேரம் அதிகம் என்றார். சரியென்று அதற்குரிய சீட்டை வாங்கினால், அது TGVயினதை விட 40யூரோ குறைய என்று சொல்லி அந்தக் காசை மீளத் தந்தார். ஆனால் 9.40க்கு ரயில் புறப்படுவதோ கார் லெ எஸ்ற்றிலிருந்து(Gare l'est). அங்கே போய் ரயிலேறினோம். இரண்டு மணித்தியாலங்களின் பின் கண்விழித்தேன். பிரான்சின் நகர்ப்புறம் மறைந்து புல்வெளிகள் நிறைந்த நாட்டுப்புறம் கண்ணில் பட்டது.
சில மணித்தியாலங்கள் போனதும் ரயில் சுவிஸிற்குள் நுழைந்தது. எனக்கு எந்தப் பக்கம் படமெடுப்பதென்றே தெரியவில்லை..அவ்வளவு அழகு. இந்தப்பக்கம் பார்த்தால் பச்ச்ச்சைப் புல்வெளிகள், அந்தப்பக்கம் மலைகள். இரண்டு பக்கங்களிலும் பச்சை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, கருஞ்சிவப்பு என்று இலையுதிர்காலம் நிறந்தீட்டின இலைகளுடன் மரங்கள். கோடையிலும் பார்க்க இலையுதிர் காலத்திற்றான் இந்நாடு அழகாயிருக்கும் என்று தோன்றுகிறது. சிறு நீர்நிலைகளும் அவற்றில் மீன்பிடிப்பவர்களும் அவர்கள் வசித்திருக்ககூடிய பண்ணை வீடுகளும் எங்களைக் கடந்து போன காட்சிகளுள் அடங்கும்.
பாசல் நகரை அடைந்து அடுத்த ரயிலேறி - சுங்க அதிகாரிகள்/காவலர் எங்கிருந்து வருகிறோம், எங்கு நிற்போம், எவ்வளவு நாட்களுக்கு என்று கேட்டுவிட்டு உள்ளே சுவிசுக்குள்ளே விடுகிறார்கள் - வின்ரத்தூர் நகரை அடைந்தோம். தங்கியிருந்த வீட்டில் சுவிஸிலேயே பிறந்து வளர்ந்த இரு சிறு பெண்கள். நல்ல்ல்லாவே தமிழ் கதைக்கிறார்கள்/எழுதுகிறார்கள்
ஒரு பாலர் பாடசாலைக்கு அடுத்த நாள் போனோம். வகுப்பில் எத்தனை பிள்ளைகளோ அத்தனை பேரின் தாய்மொழியிலும் 'வணக்கம்' என்று சொல்லி ஒரு வரவேற்புப் பாடல் ஒவ்வொருநாட் காலையிலும் படிக்கப்படுமாம். நல்லம் என்ன? பாலர் பாடசாலைகளில் கரல்ஸ் பாடிப் போகிற வழக்கம் இருக்கிறது. Turnip கிழங்கினை சிறு மூடியுள்ள ஒரு சட்டி போல வெட்டிக் கொண்ட பின் - கிண்டியெடுத்த கிழங்கின் உள்ளீடு அவித்து ஒரு சூப் மாதிரிச் செய்யப்பட்டு ஊர்வலம் போவதற்கு முதல் நாள் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் - அதற்குள் மெழுகுதிரி வைத்து ஊர்வலம் போவார்கள்.. வீடு வீடாய் கரல் பாடிக் கொண்டு. அநேகமானோர் இனிப்புகள் பரிசளிப்பார்களாம். நாங்கள் போன அன்று இருவரும் ஊர்வலம் போய் வந்திருந்தார்கள்.
போய் நின்ற நாள் முதல் அங்கத்தேய வெண்ணெய்க்கட்டிகளையும் சொக்கிளேற்றையும் ஒரு கை பார்த்தோம். :O) பிரபல காப்புறுதி நிறுவனமான வின்ரத்தூர் க்ரூப் இந்நகரத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டது. வின்ரத்தூரின் பிரபல தேவாலயத்தைப் பார்க்கக் கிடைக்கவில்லை. ஆனால் புனித தந்தையர் பேதுரு+பவுலின் ஆலயத்தைப் போய்ப் பார்த்தேன். நடந்து போகக்கூடிய தூரத்தில் இருந்ததும் தனி ஆராய்ச்சிக்குக் காரணம். ஆனால் கமரா பிழையான தெரிவில் விடப்பட்டிருந்ததால் அநேகமான படங்கள் தெளிவாக வரவில்லை. :O

அமைதியான ஆலயத்தைச் சுத்தஞ் செய்தபடி ஒருவர். சுவர் முழுதும் விவிலியத்துக் கதைகள் சொல்லும் ஓவியங்கள். அத்துடன் வேலைப்பாடுடைய உட்கூரை. சிறு உருவங்கள் (புனிதர்களாயிருக்கலாம்) அமைந்த stained glass windows. விட்டு வரவே மனமில்லை. நீர்வீழ்ச்சி பார்க்கப் போவதென்றிருந்தபடியால் மனமில்லாமல் திரும்பினேன்.
சுட்டிகள்:
www.eurorailways.com
www.raileurope.com
www.eurostar.com
www.busabout.com
www.eurolines.com
www.europeforvisitors.com
முதல் தரிப்பு -II

அடுத்ததாய்ப் பார்க்கப்போன இடம் - வர்சாய் அரண்மனை. சொல்லத்தெரியாமல் வர்சாய்ல்ஸ் என்று வாசித்துக் கொண்டு திரிந்தேன். வரைந்து நிறந் தீட்டின மாதிரிப் புற்தரை.
இதைப் பராமரிக்க எவ்வளவு மினக்கட வேணும்! மூன்று பக்கங்களிலும் அரண்மனைத் தோட்டங்கள்.
பரிசிலிருந்து, தனது அரசியல் குழப்பங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டிருக்கவென்று வந்து தங்கியிருந்தானாம் 14ம் லூயி மன்னன். அப்படியே படிப்படியாகக் கட்டிக் கட்டி 2600+ அறைகளும் பென்னாம் பெரிய தோட்டங்களுமுள்ளதாக இந்த அரண்மனை உருவெடுத்திருக்கிறது.
நாங்கள் போன நாளன்று அரசியரின் அறைகளிலொரு பகுதி திறந்திருந்தது. அதன் முகப்பில் தங்க முலாம் பூசிய கடிகாரம்.
விட்டால் எல்லவற்றுக்குமே தங்க முலாம் பூசியிருப்பார்கள் போல! காட்சிக்கு விக்ரொறீ, அடிலேய்ட் என்ற இருவர் பாவித்த பொருட்கள் சில இருந்தன. அவர்களின் பாவனையிலிருந்த பெரிய ஓவியங்கள், கட்டில், பியானோ, புத்தக அலுமாரி, கண்ணாடி என்று பலவித பொருட்கள் காட்சிக்கு வைத்திருந்திருந்தார்கள்.


குளிர் காலமென்றாலும் கூட்டம். கோடைக்கு நினைத்தும் பார்க்கேலாது என்று எண்ணுகிறேன்.
தோட்டங்களில் வேலை நடந்து கொண்டிருந்தது. சிலைகளை மூடியிருந்தார்கள். பூச்சாடிகள் இரண்டு ஆளுயரமாய் . அவற்றையும் மூடியிருந்தார்கள். குளிர்காலத்தில் பனி படிந்து/தங்கி விடக்கூடும் என்பதால். 
பெரிய பெரிய நிலைகளும் அவற்றைச் சுற்றிச் சிலைகளும் என்று பார்க்கப் பார்க்க ஆசையாக இருந்தது.
குட்டிக் குளங்களுக்கு நடுவே சிலைகள். கால் நோகும் வரை தோட்டத்தில் உலாவினதில், மரத்தாசை பிடித்த எனக்கு நிறையப் படங்கள் எடுக்கவும் வாய்ப்புக் கிடைத்தது.

இலையுதிர் காலம்/குளிர்காலம் என்றதால் சில மரங்கள் மொட்டையாயும், சில நிறம் நிறமாய் இலைகள் கொண்டும்.. படமெடுத்துத் தீரவில்லை!
போன இரண்டாம் நாடு பற்றி அடுத்த பதிவாய்ப் போடுகிறேன்.
முதல் தரிப்பு
முதலாவதாய்ப் போன நாடு பிரான்ஸ். போதவே போதாத ஆறே நாட்கள். படிகளும் croissantsம் நிறைந்த பரிஸ். அவசரத்துக்குப் போவதானால் கூட 30சதம் கொடுத்தாக வேண்டும் பொதுவிடங்களில். இப்படியே உழைத்து பெரும்பணக்காரராய்விடலாம் போல! பரிசில் கண்ட இன்னுமொன்று எல்லா வீட்டுக்கும் ஒரு குட்ட்ட்டி பலகணி இருப்பதுதான். ஆட்கள் நிற்கமுடியாது.. ஆனால் பூந்தொட்டிகள் உட்காரலாம்.

வழமையாக எல்லாரும் பார்கிற ஐபல் கோபுரம் பார்க்கப் போனோம். எனக்குத் தேவையாயிருந்த மாதிரி - நான் கோபுரத்தின் உச்சியைத் தொடுவது போல - படமெடுக்க என்னோடு சேர்ந்து வந்த இரண்டு படக்காரர்களாலேயும் முடியவில்லை. தடை செய்யப்பட்டிருந்தாலும், வளையத்தில் கோர்க்கப்பட்டிருக்கும் உலோகத்தாலான கோபுரச் சிற்றுருவங்களை 'சல் சல்'லென்றுபடி ஆட்டியபடி வழி மறிக்கும் சிறு வியாபாரிகள் நிறைந்திருந்தார்கள். பழங்காலத்தைய சிற்பங்கள்/சிலைகள்.
சுழித்துக் கொண்டோடும் 'சுகந்தமான' செய்ன் நதியைக் கடந்து போய் தொடர்ந்து வளைக்கும் 'ஸ' போல நெளிந்த வரிசையில் நுழைவுச் சீட்டு வாங்க சேர்ந்து கொண்டோம். நகர்ந்து போன வரிசையில் திடீரென ஆங்கிலம் கேட்டது - அதுவும் ஒஸி வழக்கில். எனக்கா இனியில்லையென்ற மகிழ்ச்சி. போன இரண்டு நாட்களுக்குள் பொறுக்கின 'bon jour', 'au revoir' 'merci', 'madamme', 'monsieur' என்பவற்றை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாத ஆளுக்கு தெரிஞ்ச இங்கிலிபீசைக் கேட்டால் சொல்லவும் வேணுமா!! ஹொக்கிப் போட்டியொன்றுக்காக வந்திருந்த 4 பெண்கள். நல்லா அளவளாவி, போட்டிக்கு ஊக்கப்படுத்தி விடைபெற்றோம். 
கோபுரத்திலே மேலே ஏறினால் படமெடுக்க பொக்கற்றிலிருந்து கையை எடுக்க முடியவில்லை. குளிரோ குளிர். ஆனால் என்ன காட்சி.. நெப்போலியன் கோட்டை/அணையாவிளக்கு,
வெள்ளைத் தேவாலயம், லூயி மன்னனின் கோட்டை எல்லாம் தெரிந்தன. 

[பரிசில் நடந்து கொண்டே இருக்கலாம் போல. cobble stone பாதைகளில் பழங்காலத்தைய வாழ்க்கை முறைகளைப் பற்றிப் பேசியபடி, அகலமான பாதைகளைச் செப்பனிட்டவர்களைப்பற்றிச் சிந்தித்தபடி நடந்தோம். வழமையாய்ப் பார்க்கும் நிறங்களிலான வானம்தான்.. பார்க்க ஆசையாய் இருந்தது. வீசும் காற்றிலே கிளையிலிருந்து தரைக்கு இடம் மாறும் இலைகள்; தரையிலேயே இடம் மாறித்திரியும் சருகுகள்(ஆனால் நாளைக்காலையில் தெருவில் அவை இரா). தொடர்ந்து நடக்கச் சொன்ன இருபுறமும் மரம் வளர்த்த தெருக்கள். நடப்பதற்காகவே இன்னொருமுறை போக வேண்டும்.முதல் முதலாய்ப் போகும் ஆர்வத்துடன்.]
அன்றைகே வெள்ளைத் தேவாலயமும் போகக் கிடைத்தது. நகரின் உயரமான இடத்தில் அமைந்திருக்கிறது. அதன் பெயர்:La Basilique du Sacré Coeur.
வெள்ளைக் கட்டிடடமென்பதால் 'வெள்ளைத் தேவாலய'மாக்கி விட்டார்கள். வழமையாய் என்னை நிற்கச் செய்யும் stained glass windows. என்னதொரு கூரை.. 25 - 30 ஆள் உயரமிருக்கும். உள்ளுக்குள்ளே சலன/ஒளிப்படமெடுக்க அனுமதியில்லை. நிறைய ஓவியங்கள். கூரையில் பென்னாம்பெரியதொரு ஓவியம். பிறரால் உருக வைகப்படவென்றே மெழுகுதிரிகள்.
ஆலயத்தின் மாதிரி உருவைச் செய்து வைத்து "உங்கள் ஆலயத்தின் தண்ணீருக்கும் மின்சாரத்துக்கும் உதவுங்கள்" என்று தமிழ் உட்பட 15 - 20 மொழிகளில் எழுதி வைத்திருந்தார்கள். எல்லாம் தாண்டி வந்ததும் ஒரு ஒரு வேண்டுதல்/பிரார்த்தனைப் புத்தகம். தமிழில் கூட இருந்தது - கிடைத்திருக்கிற ஆசீர்வாதங்களுக்கு நன்றி சொல்லி, பிள்ளைக்கு நடக்கவிருக்கிற திருமணத்திற்கு ஆசி வேண்டி என்று பலதரப்பட்ட வேண்டல்கள், இறைஞ்சல்கள். மனதில் சொல்லக்கூடியதை 'வணக்கம் கடவுளே' என்று நானும் தாளையும் மையையும் வீணாக்கி வெளியேறிய பிறகுதான் ஞாபகம் வந்தது ஏனையோர் போட்டதுபோல முகவரி போடாமல் வந்தது. அடடா..யார் வணக்கம் சொன்னதென்று யேசு யோசித்திருப்பாரோ?
பயணியின் குறிப்புக்கள்
காணவில்லையென்று தேடின கனபேரின்.. சரி சரி.. மூன்று பேரின் அன்புக்கு நன்றி.
இங்கே கோடை ஆரம்பிக்க உலகத்தின் வடபாதியில் குளிர்காலம் ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட ஒரு கார்த்திகை மாதத்தில் அமைந்தது என் வாழ்வின் முதலாவது பெரிய (பள்ளிக்காலம் தவிர்த்த) விடுமுறை & பயணம். பயணிப்பது ஒரு கலை. முதன்மையான அடிப்படைப் பாடங்கள் சில இப்பத்தான் கற்றிருக்கிறேன். இலக்கின்றிப் போக வேண்டும் என்கிற ஆசையிருந்தாலும், இந்த முறை இலக்கு வைத்துத் தான் புறப்பட்டோம். எனக்கும் ஒரு ஞாபகமாய் இருக்கட்டுமென்று நினைத்துக் குறிப்பேடொன்றைக் கொண்டலைந்தேன். ஆனாலும், எப்பொழுதும் நடப்பது போல அரைகுறை வேலைதான். கடைசி 11 - 12 நாட்கள் பதியப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னாலெல்லாம் போன இடம் வந்த இடமென்றும் அந்த நாட்களில் என்ன நினைத்துக் கொண்டேன், எதைப் பற்றி சிந்தித்தேனென்றும் எழுதியிருக்கிறேன். ஒவ்வொருதாளாய் படமெடுத்து வலையேற்றலாமோவென்று யோசித்து, வேண்டாமென்று, நான் மிகவும் ரசித்த இடங்கள் பற்றிய என் குறிப்புகளை மட்டும் படங்களுடன் வலையேற்றுகிறேன்.
இடம் பார்த்ததை விட ஆட்கள் பார்த்ததுதான் அதிகம் என்றாலும் ஐந்து வாரங்களில் மொத்தம் 6 நாடுகளில் திரியக் கிடைத்தது. அதிலே எப்படியும் 7 நாட்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் பயணிப்பதிலேயே கழிந்து விட்டன. ஆக நான்கு வாரங்களில் ஆறு நாடுகள். நினைத்த வலைப்பதிவர் சந்திப்புகளில் ஒன்றைத்தான் நிறைவேற்ற முடிந்தது. ஆனால், அந்தக் கதைக்கு அவரது நாட்டுக்கு வரும் வரை பொறுக்க வேண்டும். :O)
வழமையாக உல்லாசப்பயணிகளின் காலடி பட்டுத் தேய்ந்து போன தெருக்களினதும், சில முக்கிய இடங்களினதும் விருந்தினர் வரிசையிலே நாங்களும் இணைந்து கொண்டோம். உல்லாசப் பயணித் தடம் நிரம்பாத இடங்களையும் பார்த்தோம். இயற்கையை ரசித்தபடியும், வியந்தபடியும் கழிந்த பயணங்கள். பாரிஸில் நின்ற போது சின்னையாவிடமிருந்து (மூதூர்த் தோட்டத்தில் வேட்டையாடப் போவாராம்.. அந்தக்காலத்தில்) உக்கிளான் என்கிற சிறு மான் வகை பற்றி அறிந்து கொண்டேன். நண்டு பிடிக்கப் போகிற கதை சொன்ன போதும் ஒரு புதுச் சொல் அறிந்து கொண்டேன்.. ஆனால் பிறகு மறந்து விட்டது. அவரிடம் கேட்டால் என்ன சொன்னாரென்று அவருக்கும் ஞாபகமில்லை.
மனித இயல்புகள் & வாழ்வைப் பற்றியும் காலவோட்டம் பற்றியும் கூட நிறையக் கற்றுக் கொண்டதொரு பயணமாக இருந்தது. பயணிக்கும் போது மனதைத் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். உள்ளே நுழைந்து இனிதாய் நிறைக்கும் அனுபவங்கள் எதிர்பாராதனவாய் இருக்கும். அட! என்று வியந்து நின்று நிதானமாய் அனுபவிக்கிற நாட்கள் நீண்டு கொள்ளும்.
எப்போதுமே ஏதோ ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்று கொண்டுதானே இருக்கிறோம்? வாழ்வதே பயணிப்பதற்குத்தானோ என்றும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன். :O)
"இரை" மீட்டல் 2
I scream, you scream , we all scream for ice cream!!
எப்ப கார்ணிவெல் ஐஸ்க்றீம் அறிமுகமானண்டு தெரியல்ல. ஒருவேளை பள்ளிக்கூட விடுதியில தங்கியிருக்கேக்குள்ளயாயிருக்கலாம்.
விடுதிச் சாப்பாடு.. காலையில பாண் இரிக்கும் இல்லாட்டி புதன் கிழமையில கிரிபத். (கிரிபத் இரிக்கே, திண்டுத்துப் போனா சரியா ரெண்டாம் பீரியட்டுக்கு நித்திரை தான் வரும்) வேற என்னென்ன இரிந்தண்டு ஞாவகமில்ல. எட்டுமணிக்குப் பள்ளி துடங்கிற. ஏழு மணிக்கு மணியடிச்சோண்ணே வந்து வரிசையா நிக்கோணும். பிறகு சாப்பாட்டறைக்குள்ள போய் மேசையடியில நிண்டு ஒருக்கா சாப்பாட்டுக்கு நன்றி/செபஞ் சொல்லோணும். சொல்ல விருப்பமில்லண்டா பேசாம நிக்கல்லாம் இல்லாட்டி ஆரையோடையும் தனகுவேலை. முதல் நாள் பின்னேரம் புறக்கின காக்கா இறக ஆராவது புள்ளையிர தலைமயிரில செருகல்லாம்.. பிரார்த்தனை சொல்ற மேட்ரனுக்கு ரொக்கற் உடல்லாம்.. ரெண்டு நிமிசத்துக்குள்ள என்ன கூத்தெல்லாம் காட்டேலுமோ அதெல்லாம் காட்டி எப்பிடியாவது ஆரயாவது சிரிக்க வைச்சிர்ற. சின்னாக்கள்தானே.. 1 - 4ம் வகுப்புப் புள்ளையள் தான் பக்கெண்டு சிரிக்குங்கள். மத்தியானச் சாப்பாடு சொல்றதுக்குப் பெரிசா ஒண்டுமில்ல. இரவுச் சாப்பாட்டுக்கு மீன்/முட்டை/மாட்டிறைச்சி இரிக்கும். புள்ளையள் பாவமெண்டுத்து கிழமையில ஒரு நாளோ ரெண்டு கிழமைக்கொரு தரமோ கோழிறச்சி. வியாழக்கிழமையில.
சனி-ஞாயிறுக்கு வீட்டுக்குப் போற பிள்ளையள் கொண்டாற, இல்லாட்டி பாக்க வாற அம்மாப்பா கொண்டாற தின்பண்டமெல்லாம் வைக்க இடமிரிந்த. பின்னேரம் படிச்சி முடிஞ்சோணே இதுகளக் கொண்டுபோய்த் தின்ற. விதம் விதமான பலகாரம், முட்டைமா(இது என்ட பங்குக்கு) பிஸ்கற் என்டு நிறய.
இவ்வளவுமெல்லாம் திண்டும் , பிறகு சில நாள் நடு இரவில நள்ளிரவு விருந்தெண்டு சொல்லி நடத்திற. மேட்ரன் ஒருநாள் சத்தம் போட்டாவு. அடுத்த தரம் என்ன செய்தமெண்டா ஒராள் போய் அவட அறைக்கதவில் பூட்டைப் போட்டுத்து வந்துத்து. அவ பாவம், "கதவத் திறங்கடி" என்டு ஒரே ஏச்சு. எங்களுக்கென்ன கழண்டா கிடக்கு அவட கதவைத் திறக்க. பேசாம உட்டுத்தம். அவையும் படுத்துத்தாவு.. நாம நல்லாக் கிடந்து சிரிச்சி கூத்தடிச்சி திண்டிட்டுப் படுத்த. அடுத்தநாள் காலம்பிற நைசாப் போய் பூட்டைக் கழட்டித்தம். அவ காலையிலயும் கிடந்து தட்டுறாவு. ஒன்டுந் தெரியாத மாரிப் போய் "ஏன் மிஸ்? கதவு திறந்துதானே கிடந்த" என்டு சொல்லித்து அவ பதில் சொல்ல முதல் ஒரே ஓட்டம்!! :O)
ஒரு தவணைக்கு ஒருக்கா மாதிரி வெளில கூட்டித்துப் போவாங்க விடுதிப் பிள்ளையள. அதுக்கெண்டே சனி-ஞாயிறில வீட்டுக்கும் போகாமச் சில கிளையள் நிக்கிற. தெறிப்பு வேல பாக்கத்தான். ஒருக்கா இப்பிடித்தான் படம் பாக்கக் கூட்டிப் போனவங்க முன்னுக்கு லிபேர்ட்டித் தியேட்டருக்கெண்டு நினைக்கன். இன்டியானா ஜோன்ஸ் யேசு கடைசியாப் பானமருந்தின புனிதக் கோப்பையைத் தேடிப் போற கதை.[வேதக்காரப் பள்ளிக்கூடமெண்டவடியா வேற கதைகள் கூட்டிப் போமாட்டாங்க] அண்டைக்கு நாங்க காட்டின கூத்தில அதுக்குப் பிறகு படத்துக்கே கூட்டிப் போறல்ல. :O) அப்பிடி வெளில போனநேரம்தான் முதல்தரம் கார்ணிவெலுக்குப் போயிரிப்பன் போல. ஏனெண்டு தெரியா அதப்பத்தி ஞாவகமில்ல.
ஒரு நாள் என்ட ஒரு நண்பி அக்காச்சிக்குப் பிறந்த நாள். முதலே அம்மாட்டக் கேட்டு வைச்சித்து, பிறகு எப்பிடியோ wardenட்டயும் அனுமதி வாங்கித்தாவு. செரியான கெட்டிக்காரி. அவட நண்பிகள் நாலு பேரும் இவையும் நானும். கார்ணிவெலப் பத்தி என்ட முதல் ஞாவகம் அதுதான். அங்க போனா, என்னத்தை ஓடர் பண்ணிற எண்டு தெரியா. சரியெண்டு ஒரு சொக்ளற் சன்டே குடிச்சன். சா! என்ன திறமான ஐஸ்க்றீம். மட்டக்களப்பில இருக்கக்குள்ள பல்லுப் புடுங்கினதுக்குக் கிடைச்ச "பௌசியா"க்கடை ஐஸ்க்றீமை விடயே பரவால்லண்டா பாத்துக் கொள்ளுங்க.
விடுதியால வெளிக்கிட்ட பிறகும் ஆருக்கும் ட்றீட் குடுக்கிறண்டா இந்தக் கடைதான்.கொஞ்சம் பழைய வீட்டிலானே கடை நடந்த, திருத்த வேலை செய்யிறண்டு பிறகு கொஞ்ச நாள் பூட்டியிருந்த. Banana boat என்டும் ஒரு ஐஸ்கிறீம். வாழைப்பழத்த நெடுக்காப் பிளந்து இன்னுமென்னென்னையோ போட்டுத் தருவாங்க. [இப்ப சிட்னில இப்பிடி ஒரு ஐஸ்கிறீம நினைச்சும் பாக்கேலா! கிலோ தொண்ணுத்தொம்பது சதத்துக்கு வித்த வாழைப்பழம் இப்ப கிலோ 11 டொலருக்குக் குறைவா இல்ல. இந்த சீத்துவத்துல பனானா போட்தான்!!] பிறகு walls (streets) ஐஸ்க்றீம் கடை எல்ல இடத்திலயும் வந்தோணே வாற வழில வாங்கி வழி வழியாக் குடிச்சி வாற. அம்மாக்கு அந்தப் பழக்கத்தை கண்ணில காட்டேலா. ஆக்கள் ஒரு சாங்கமாப் பாப்பாங்களாமெண்டு சொல்லுவாவு. அவ ஏசிறன்டுத்து, விறு விறெண்டு ஐஸ்க்றீமைத் திண்டொழிச்ச பிறகுதான் வீட்டுக்கே போற. :O))
இந்த வனிலா ஐஸ்க்றீம் இரிக்கெலுவா..அதோட உறைப்புச் சுண்டல் சாப்பிட்டிருக்கெயளா? [க்றீம் கிறக்கரோட சேத்து சீசும் சீனிசம்பல்/கட்ட சம்பலும் சாப்பிடுற. இப்பிடி கொஞ்சம் 'வித்தியாசமான' கொம்பினேசன் முயற்சியும் இடைக்கிட செய்யிறதான் :O) ] [க்றீம் கிறக்கரெண்டத்தான் இன்னொண்டு ஞாவகம் வருது. லெமன் பவ் என்டொரு பிஸ்கற் வாறதானே. அதில பிஸ்கற் ரெண்டுக்கும் நடுவில லெமன் க்றீம் இரிக்கும். சின்னனில பிஸ்கற்றப் பிரிச்சி கிறீம மட்டும் ராவித் திண்டுத்து வெறும் பிஸ்கற்ற அம்மாட்டத் திருப்பிக் குடுக்கிற. போன கிழமை ஒரு சின்னாள் அதேவேலை செய்யிறதக் கண்டன். ;O) ]
உறைப்புச் சுண்டல் ஐஸ்கிறீமோட சாப்பிட்டதா என்டு கேட்டனாந்தானே..அந்தச் சுண்டலுக்கு காலிமுகத்(Galle face) திடலுக்குப் போகோணும். ஒரு காலத்தில வீட்டில எல்லாரும் சேர்ந்து போகக் கூடியதா இருந்த. தண்ணில் கால் நனைக்க உட மாட்டாங்க .. ஆனா அந்தக் காத்து.. அப்பிடியொரு சுகம். கடற்கரைக்குப் போனாக் கிடைக்கிற இன்னொண்டு அவிச்சுப் பொரிச்ச மரவள்ளிக் கிழங்கு. கொச்சிக்காத்தூளும் உப்பும் தூவி வச்சிரிப்பான். அந்த மாதிரி இரிக்கும். அந்தத் தள்ளு வண்டில் அங்கெங்கயோ வரக்குள்ளயே கண்டுபிடிச்சிருவம். இப்ப யோசிக்கிறன், தின்னுறத்துக்குத்தான் பீச்சுக்குப் போனனாமளா என்டு.
அண்ணாவங்க நிண்டா, கடற்கரைக்குப் போனா அன்டைக்கு முக்கியமான ஒரு சாப்பாட்டுச் சாமான் கட்டாயம் இரிக்கும். அத என்னண்டு அடுத்த பதிவில. சரியா மனே..
சொல் விளக்கம்:
கிரிபத்(சிங்களச் சொல்) - பொங்கல்
தெறித்தல் - குழப்படி/அட்டகாசம் பண்ணல்.
வேதக்கார - கிறிஸ்துவக்கார
அதுக்காவண்டி - அதற்காகவேண்டி
கொச்சிக்காய் - மிளகாய்
போனனாமளா - போனோமா
திறமான - உயர்ந்த/சிறந்த
ஏசிறன்டுத்து - ஏசுவது(திட்டுவது) என்பதால்
இரிக்கெலுவா - இருக்கிறது அல்லவா
ஒரு சாங்கமா - ஒரு மாதிரியாக
திண்டொழிச்ச - தின்று (உண்டு) முடித்த
கூண்டுக்கிளியும் சுதந்திரக்காற்றும் - ஒரு பின்னூட்டம்
"சக்தி"யில் பத்மாவின் "கூண்டுக்கிளியும் சுதந்திரக்காற்றும்" பதிவுக்கான என் பின்னூட்டம் சற்றே பெரிதாகிப் போனதால் தனிப் பதிவாக இடுகிறேன்.
சுதந்திரம் "கொடுக்கப்படும்" ஒன்றல்ல என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை. பெண்களில் பலர் உட்பட. இதில் இன்னமும் வேதனையான ஒன்று என்னவென்றால் படித்த பெண்களும் அடங்கி நடத்தல்தான் அழகு/சரி என்கிற ரீதியில் நினைப்பதும் வாழ்வதும். பரஸ்பரம் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு உறவில் அடங்கி நடத்தல்/கட்டுப்பாடுகள் என்பன இருப்பதில்லை.
பெண்ணை, சார்ந்திருப்பதனூடாகப் பெருமைப்பட்டுக் கொள்ளச் சொல்கிறது எங்கள் சமூகம். ஒரு பெண்ணின் இருப்பு ஆணைச் சார்ந்ததாக ஆக்கப்படுவது ஏன்? உதாரணமாக எடுத்துக் கொண்டால், பெண் தனித்து வாழ்வதை சமூகம் எளிதில் அங்கீகரிப்பதில்லை. அதெப்படி தனியாக வாழக்கூடும்? ஏன்.. தன்னைத் தானே கவனித்துக் கொள்வதற்கும் பிடித்தமான வகையில் தன்னை முன்னேற்றிக் கொள்வதற்கும் ஒரு பெண்ணால் இயலுமாயிருந்தால், ஒரு பந்தத்தில் இணைந்திருக்கப் பிடிக்காமலிருந்தால் அந்தப் பெண் திருமணஞ் செய்ய வேண்டியதின் அவசியம் அடிபட்டுப் போய்விடுகிறது. (திருமணம் வேண்டியதா/ வேண்டாததா என்ற விவாதத்துக்குள் நான் போகவில்லை) ஆனால் இதை ஒரு சராசரி ஆளுக்குச் சொல்லிப் பாருங்கள்.. அதெப்படி பெண் தனியாக வாழ்வது என்ற பதில் தான் வரும். ஏன்? பெண்கள் அப்படிச் சொல்வது அவர்களுக்குச் சார்ந்தே இருந்து பழகிப் போனதால். ஆண்கள் சொல்வது ஏனென்று என்னால் ஊகிக்கக் கூடியது ஈகோ. "நான் இருக்கிறேன்தானே பார்த்துக்கொள்ள.. தேவைகளைக் நிறைவேற்ற. பெண் என்பவள் என் தேவையைக் கவனித்துக் கொண்டால் போதும்" என்கிற எண்ணம்.
சரி, அவ்வளவு தூரம் போக வேண்டாம்.. நம் பெண்களில் எத்தனை பேரை விரும்பிய இடத்துக்குத் தனியே (எவ்வளவு தூரமானாலும்) குடும்பத்தினர் போக விடுவார்கள்? "ஐயோ பெண்ணை அவ்வளவு தூரம் தனியே அனுப்புவதா"/"அவளுக்குப் போய்ப் பழக்கமில்லை"/"அவளால் முடியாது" என்ற ரீதியில் பதில் வரும். அவளால் முடியுமா முடியாதா என்பதை அவளே தீர்மானிக்க விடுங்களேன். நன்கு படித்து வேலையிலிருக்கும் ஒரு பெண் (புத்தகங்களையே ஆணுக்குரியவை பெண்ணுக்குரியவை என்று வகைப்படுத்திய அறிவாளி) நேற்றுப் பயணம் போதல் பற்றிப் பேசுகையில் சொல்கிறா "நான் தனியாய்ப் போகமாட்டேன். அதெப்பிடிப் போவது. கலியாணங் கட்டின பிறகு தனியே பயணம் செய்வது அழகில்லையல்லவா. அப்படி நான் விரும்பி அதைச் சொன்னாலும், கணவர் 'ஏன் அப்படித் தனியே போக யோசிக்கிறீர்கள்? என்ன பிரச்சனை' எனக் கேட்கக் கூடும்".
[அவவிற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் திருமணம் செய்திருந்தால் எல்லாவற்றையும் சேர்ந்தே செய்ய வேண்டும், இல்லாவிட்டால் பிழையாக நினைப்பார்கள்/ (கணவன்) பெயர் கெட்டுவிடும் என்று இன்னும் நினைப்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடிவதில்லை. திருமணம் செய்து கொண்டால் நீங்கள் தனித்தன்மையற்றவர் ஆகி விடுகிறீர்களா? இல்லையே!. ஒருவருக்குப் பிடித்தது மற்றவருக்கும் கட்டாயம் பிடித்திருக்க வேண்டுமென்பதில்லை தனியே உங்களுக்குரிய வெளியில்(personal space) இயங்க முற்படுவது பிரச்சனைக்குரிய ஒன்றெனக் கருத வேண்டிய காரணம் இல்லை. ஒன்றாகச் சேர்ந்து செய்வதையும் செய்யுங்கள். தனிப்படவும் இயங்குங்கள். அது ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும் இன்னும் நேசிக்கவும் இடந் தரும்]
இப்படி, தங்களை உண்மையாகவே வெளிப்படுத்துவதற்கும் விருப்பப்படி செயலாற்றுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டவர்களுக்கு கட்டுப்பாடுகளே வாழ்க்கையாகிப் போகின்றன. தளைகளை உடைத்துக் கொண்டு வெளியில் வர முயற்சிக்கையிலேயே அப்பெண்ணிற்கிருக்கக்கூடிய தன்னம்பிக்கையின்மை, பொருளாதார முட்டுக்கட்டைகள் என்பவை அவளுக்கெதிராக ஆயுதமாக்கப்பட்டு அம்முயற்சிகள் தோற்பிக்கப்படுகின்றன. அப்படியும் விடாது முயன்று சுதந்திரமாய் வாழும் சகோதரிகள் எம் சமூகத்தினரிடமிருந்து எதிர்கொள்பவை நாம் அறியாதவையல்ல. [அவற்றைப் பற்றி இப்போதைக்கு இங்கு வேண்டாம்.]
நினைத்தநேரம் நினைத்தபடி சென்றுவரக்கூடிய சூழல் தருகிற சுதந்திரத்தை/புத்துணர்ச்சியை, தளைகளை வென்று செயலாற்றுவது தரும் தன்னம்பிக்கையை, சமூகத்தில் தன் பங்களிப்பை, விரும்பியது கற்றுத் தேறித் தன்னை முன்னேற்றிக் கொள்வதில் கிடைக்கிற திருப்தியை சரிவரப் புரிந்து கொள்ளாமல் இன்னுமின்னும் பொத்திப் பொத்தி "பாதுகாப்பு, பண்பாடு" என்று அடைத்து வைக்கப்படுவதையுணராத பெண்களும் தங்கக்கூண்டென்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டு காலம் தள்ளுவார்கள். கண் திறப்பதேயில்லை பலருக்கு!
"இரை" மீட்டல் 1
கொழும்பில் எனது சாப்பாட்டு நினைவுகள்/அனுபவங்களைப் பதிய நினைத்திருக்கிறேன். பள்ளிக்காலத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்:
காது என்டொராள் இருந்த. பள்ளிக்கூடத்தில பொது உதவிக்கெண்டு வேலைக்கு அமர்த்தப்பட்டவர். வகுப்புகள் இடம் மாறினா கரும்பலகை தூக்கிறண்டா, ப்ரொஜெக்டர் போடுறண்டா, ஒடிட்டோரியத்தில திரை வேலை செய்யல்லண்டா அவரத்தான் கூப்பிடுற. ரசாயன வகுப்புக்கு குடுவைகள் கழுவுறது, lab சுத்தமாக்குறது என்டும் பலதரப்பட்ட வேலைகள். அவற்ற பேர் காது என்டு சொன்னான் தானே.. முழுப்பேர் சல்காது. எப்ப பள்ளிக்கூடத்தில வேலைக்குச் சேர்ந்தவர் என்டு ஒருதருக்கும் தெரியா. படிச்சு முடிச்சு பள்ளிக்கூடத்திலயே வேலைக்குச் சேர்ந்த அக்காமாரைக் கேட்டாலும் அவங்களுக்கும் தெரியா. அவரோட கதைக்க முயற்சித்ததாயும் ஞாபகமில்ல. ஆனா என்னண்டா ஆள் சரியான அமசடக்கி. கொஞ்ச நாள் தொடர்ந்து மிடில் ஸ்கூல் (6 - 8ம் வகுப்பு)பிள்ளையள்ர சாப்பாடு கொஞ்சம் சாப்பிட்ட மாதிரியோ.. முழுக்கவோ சாப்பிடுப்பட்டோ இருக்கத் தொடங்கித்து. பிள்ளையள் ஒரே முறப்பாடு. மினக்கெட்டு வீட்டில சொல்லி நேற்று நண்பி கொணந்த மாதிரி நூடுல்சோ இல்லாட்டி நண்பி கேட்டெண்டு சொல்லி தோசையோ[சிங்களப்பிள்ளையளுக்கு தோசையெண்டாக் காணும். எங்களுக்கு அதுகள்ர பிஞ்சுப் பிலாக்காக் கறியில (பொலொஸ்)(இதுக்கு அர்ப்பணிக்கிறத்துக்கெண்டே தனிப் பதிவு போடலாம்!!) கண்] கொணந்து அது சாப்பிடாமலே காணாமப் போறண்டா!!
இடைவேளை பற்றிச் சொல்லக் கிடக்கு. எல்லாப்பள்ளிக்கூடத்திலயும் இது நடக்குமெண்டு நினைக்கன். இடைவேளை மணியடிச்சாக் காணும். 11.10 - 11.40 என்டு நினைக்கிறன். (மாட்டுக்கிளையள் ஏறி மிரிக்கிறமாரி இடிச்சுத் தள்ளி ஓடுங்கள். படியால போகயும் ஏலா.. வரயும் ஏலா). அரைமணித்தியாலத்துக்குள்ளதான் சாப்பாடும் விளையாட்டும். கிடுகிடெண்டு கொணந்ததைப் பிரிக்கிற. Tuck Shop போற கதை தனிக்கதை. அத இப்பத்தைக்கு விடுவம். கொணந்ததைப் பிரிச்சா, உங்களுக்கெண்டு ஒரு குழு இருக்குமெல்லா.. அதுக்குள்ள என்டதிலருந்து ஒரு துண்டு ஒராளுக்கும் இன்னொராளிடதிலருந்து ஒரு கரண்டி மற்றாளுக்கும் போகும். கடசியாப் பாத்தா வீட்டருந்து கொணந்தது உங்களுக்கு வாய்க்குள்ளயே போயிருக்காது. மற்றாக்கள்ர சாப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமா வயித்த நிரப்பிரும். எல்லாருக்கும் இதான் கதை. ஆருக்கும் பிறந்தாநாளெண்டாக் காணும். கேக் என்டதையே சீவியத்தில முதல் முதல் கண்டமாதிரி (பிறந்தாள்க்காரப் பிள்ளை தோழியெண்டா) எனக்கு ரெண்டு துண்டெண்டு முதல்லயே சொல்லி வைச்சிர்ர. பிள்ளையும் அதுக்கேத்தமாதிரி ரெண்டு துண்டுக்காராக்களையெல்லாம் எண்ணி கேக்கை வெட்டிக் கொண்டரும். அதையும் உள்ளுக்கு அனுப்பிற. பிறகு விளையாடப் போற. சில பிள்ளையள் விளையாடித்து வந்துதான் சாப்பிடுங்கள். வகுப்பு நடக்கும் .. தண்ணி குடிக்கிற சாக்கில நைசா ஒரு துண்டுப் பாணை விழுங்கிற. ரீச்சரும் ஒண்டும் சொல்லுறல்ல..அநேகமா. சிரிச்சித்து விட்டிருவாவு.
இப்பிடிச் செய்யிற பிள்ளையளுக்கு இன்டவெலுக்க சாப்பாட்டுப் பெட்டியத் திறந்தா சாப்பாட்டக் காணல்லண்டா எப்பிடி இரிக்கும்! ஒரேயடியா முறைப்பாடு வரத் தொடங்கித்து. சரியெண்டு ஒருநாள் மூணு prefect அக்காமார் ஒவ்வொரு வகுப்பிலயும் ஒளிஞ்சித்து இருந்தவங்களாம். பிள்ளையளெல்லாம் அசெம்பிளிக்கோ காலமைப் பிரார்த்தனைக்கோ பொய்த்துகள். சுத்தமுத்த பாத்துத்து ஒராள் வகுப்புக்குள்ள வருதாம். ஒரு பையத் திறந்து சாப்பாட்ட எடுத்து விறுவிறெண்டு சாப்பிடுப்படுதாம். பிறகு இன்னொரு பை. ஆராள்.. சல்காதுதான்! prefect அக்காச்சிக்கு இப்ப என்ன செய்யிறண்டு தெரியல்ல. சத்தம் போடயும் ஏலா. பேசாம இருந்துபோட்டு, பிறகு ரீச்சரிட்டப் போய் சொன்னதாம். பிறகு பிறின்சிப்பல் கூப்பிட்டுக் கதைச்சண்டும் அதுக்குப் பிறகு களவு போறல்லெண்டும் சொல்லிக் கிடந்த. அப்பல்லாம் அந்தாளக்கண்டா கிளுகிளெண்டு சிரிக்கிறதான் தொழில். இப்ப நினைக்கத்தான் பாவமா வருது. உண்மையாவே களவுதானா இல்லாட்டிப் பசீல எடுத்துச் சாப்பிட்டதா என்டு இத்த வரைக்கும் தெரியா. :O
இந்தப் பள்ளிக்கூடத்திலதான் எனக்கு போண்டா என்ட சாமான் அறிமுகமான. மணியடிக்க, வெளிவேலைக்குப் போய் வர ஒராள் இருந்த. என்ன பேரெண்டு மறந்துத்தன். காசு குடுத்தா வாங்கித் தருவேர். A/L நேரந்தான் இந்த வேலை செய்த. தவா சேர் தூங்கித்தூங்கிப் பாடமெடுப்பார், நாம இஞ்சால சத்தம் போடாம வெட்டுறதான். சிலவேள டபிள் ட்ரிப்பிள் பீரியடும் பாடம் நடக்கும் ஒரே ஆளோட.
தவா சேர் இரிக்காரே அவர் ஒரு முசிப்பாத்தியான ஆள். ஒருநாள் எங்கயோ அவர்ர ஸ்கூட்டர்ல போகக்குள்ள விபத்தாகித்து. ஆரோ வந்து இடிச்சித்தான். அடுத்தநாள் வந்து தான் எப்பிடிப்போன அவன் எதால வந்து இடிபட்ட என்டெல்லாம் விளக்கம் சொல்லத் தேவல்லயா! எங்களுக்கும் உசார் பிடிச்சிரும் ஏனெண்டா இந்தாள் கதைக்கத் தொடங்கினா எப்பிடியும் ஒரு முக்கா மணித்தியாலத்துக்கு பாடமில்லண்டு தெரியும். இந்த மாதிரி வாய்ப்பெல்லாம் நழுவ விட்டிருவமா!! இன்னும் ஞாபகமிருக்கு, விபத்து நடந்து ரெண்டு மூண்டு மாசத்துக்குப் பிறகும் அவரிட்ட கதை கிளறுற. ஸ்கூட்டர் திருத்திட்டீங்களா சேர்? என்டு! அவரும் நாங்க கேக்கிறதப் பத்தி விளப்பமில்லாம கதை சொல்லுவார்! படிப்பிக்கத் துடங்கின காலத்துக் கதையும் வரும். இவரிட்டத்தான் ரியூசனுக்குப் போன. மூண்டுமணிக்கு வகுப்பு. ஒருநாள் சேர் வெண்பலகையில வெப்பக் கணக்கு ஏதோ எழுதிறார். எப்பிடித் தீர்க்கிற என்டும் எழுதியெழுதி வந்தவர், திடீரென்டு எழுதாம நிண்டுத்தார். எங்களுக்கு முதல் விளங்கல்ல. பிறகு சிரிப்பெண்டா!! பள்ளியால வந்து நல்லாச் சாப்பிட்டுத்து வகுப்புக்கு வந்ததில சேர் வெண்பலகையில சாஞ்சு நித்திர!! :O))
பள்ளில இருக்கக்குள்ளதான் பெரேரா & சன்ஸ் இல(பள்ளிக்கு நேர முன்னாலயே கடை வச்சிரிந்தாப் பின்ன!!) இக்ளெயாஸ் (Éclairs) என்ட ஒண்டையும் தின்னப் பழகின. இஞ்ச வந்து பாத்தா வெறுங் கிறீம உள்ளுக்கு அடைஞ்சு அதுக்கு மேல சொக்கிலட்ட ஊத்திரிக்கான். அங்கெண்டா மெதுமெதெண்டு ம்ம்ம்... மெதுமெதெண்டத்தான் இன்னொரு சாமான் ஞாபகம் வருது. Carnival கடை ஐஸ்கிறீம். அது அடுத்த பதிவில. :O)
(இந்தத் தமிழ் விளங்கல்லண்டாச் சொல்லுங்க, வழமையா எழுதிற மாதிரி அடுத்ததை எழுதிறன். இப்ப பொய்த்து வாறன் மக்காள்.)
நா. ப. கா 2
பிரேமலதாவுக்குச் சொன்னாலுஞ் சொன்னன்.. இப்பத்தான் படம் போட நேரம் வந்திருக்கு! எல்லாமே செல்.பேசில எடுத்த படங்கள்.
நிறைய நாளாகுது பணியாரஞ் செய்து சாப்பிட்டு. பணியார உதவி: கஸ்தூரிப்பெண். (பக்கத்தில இருக்கிறது கரட் அல்வா, சப்பாத்தி):

வடிவாயிருக்கும் என்டு தோணினா போக வரேக்க செல்.பேசில சுடுறதுதான். அப்பிடிச் சுட்ட பூக்கள்:

சீசனில முதன் முதலா எங்களுக்கு இரையாகப் போகுதெண்டு தெரியாமலே (ஒருதருஞ் சொல்லிராதீங்க!!)ஒருக்காத் தொட்ட கையில வாசம் மிச்சம் வைச்சிட்டுப் போற மாம்பழம். ம்ம்... புட்டவிக்கிறதா இல்லாட்டி சாப்பிட்ட பிறகு சாப்பிடுறதா?
வகை: படம் பார்
வாசித்தது
தன் உடல்மீதான மருத்துவ உரிமைக்காக வழக்குப் போடும் 13 வயதுப் பெண் அனா. அனா, தாய் சேரா, தகப்பன் பிரையன், தமையன் ஜெஸி, வழக்குரைஞர் கம்பெல், வழக்கில் அனாவின் பாதுகாவலர் யூலியா என்போர் பேசுவதினூடாகக் கதை நகர்த்திச் செல்லப்படுகிறது.
அனாவின் தமக்கை கேற்றிற்கு ஒருவித இரத்தப்புற்று. அவளுக்கு அந்நோயுள்ளது என்று அறியப்பட்ட போது சிகிச்சைக்கு இரத்தம் கொடுப்பதற்கான பொருத்தமான வழங்கிகளாக அவள் குடும்பத்தினர் இருக்கவில்லை. சிறுதொகைக் கருக்களிலிருந்து கேற்றிற்குப் பொருந்தும் மரபணு வடிவமைப்புள்ள ஒரு கருவைத் தேர்ந்து செயற்கை முறையில் அனாவை சேரா பெற்றெடுக்கிறார். பிறந்த போது தொப்புட் கொடியிலிருந்தும், பிற்பாடு ஒவ்வொரு கட்டத்திலும் தன் உடலிலிருந்து என்புமச்சை, குருதி முதலியனவும் கொடுக்கும் ஒரு வங்கியாக அனா வாழ்கிறாள். தேவையானதை அனாவின் உடலிலிருந்து பெறுவதற்கான வழிமுறைகள் படிப்படியாக உடலுக்கு அதிகம் தாக்கம் கொடுப்பவையாகின்றன. அடுத்ததாய் ஒரு சிறுநீரகம் வழங்கப்பட வேண்டி வருகிறது. கேற்றை உயிரைப் போன்று நேசிக்கிறாள் அனா. ஆனாலும் இதுவரை போலன்றி 13 வயதில் இனிமேலும் தன் உடல் பற்றிய மருத்துவ முடிவுகளைத் தானே எடுக்கவேண்டும் என்ற முடிவில் தன் பெற்றோரின் அதிகாரத்தின் கீழ் அவ்வுரிமை இனிமேலும் வராதிருக்கும் வண்ணம் வழக்குத் தொடர்கிறாள். கேற்றுடைய சிகிச்சைக்காகவே பிறந்த அனாவின் இம்முடிவு குறிப்பாக தாய் சேராவுக்கு விசனத்தைத் தருகிறது. அனாவின் மனதை மாற்ற முயற்சிக்கிறார்.
வழக்குரைஞராய் இருந்து, பிள்ளைகளைக் கவனிப்பதற்காய் வீட்டிலே இருந்துகொண்ட தாய் சேராவின் பாத்திரம், நோயுற்றிருக்கும் கேற்றைப் பற்றிய சிந்தனை மட்டுமேயுடையவராய்ச் சித்தரிக்கப்படுகிறது. போதியளவு அழுத்தம் கொடுக்கப்பட்டில்லை. அனா மீதோ ஜெஸி மீதோ சேரா கொண்டுள்ள கரிசனை மிகவும் மேற்போக்கானதாயிருக்கிறது. அப்படி வளர்த்த பாத்திரம் திடீரென அனாவின் நிலையை உணர்ந்து கொள்ளக்கூடியதாய் இருக்கிறதெனச் சொல்வது கொஞ்சம் நெருடுகிறது. தகப்பன் பிரையன், எந்நேரமும் நடக்கக்கூடும் என்றிருக்கும் கேற்றின் மரணத்துக்குத் தன்னை தயார்ப்படுக்கொண்டுள்ளதாயும் தன் மற்ற இரு பிள்ளைகளுக்கு வேண்டிய போதிய கவனிப்பு இல்லாமலிருப்பதை உணர்ந்தவராயும் காணப்படுகிறார். இவர் ஒரு தீயணைப்பு வீரர். ஜெஸி - முழுக்கவனமும் கேற் மேலேயே இருப்பதாலும், கேற்றுக்கு அவசியம் என்பதால் அனாவுக்கும் அந்தக் கவனமிருப்பதாலும் தனிமையாக உணர்கிறான். வெறுமையாய் விடப்பட்டிருக்கும் கட்டடங்களுக்குத் தீவைக்கிறான்.
அனாவின் வழக்குரைஞர் - கம்பெல். கம்பெல் உதவிக்குப் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு சேவை நாயை வைத்திருக்கிறார். அது பற்றிக் கேட்போருக்கெல்லாம் சம்பந்தமில்லாமல் பதில் சொல்கிறார். கடைசியில் ஏனென்கிற காரணம் தெரியவருகிறது. வாக்கு நடக்கையில் அவருக்கு வலிப்பு வந்துவிடுகிறது. நாய், வலிப்பு வரமுன்னம் கம்பெலின் உடலிலிருந்து வெளிப்படும் மணம், வேறு சில மாற்றங்களைக் கவனித்து அவருக்கு தன்னாலியன்ற முறையில் நடக்கப்போவதைத் தெரியப்படுத்துகிறது, ஆனாலும் அவர் அதை வழக்கின் உச்சகட்டத்தை அண்மிப்பதால் உதாசீனம் செய்கிறார். [இதற்காகவே, முன்னறிவிப்புப் பெறுவதற்காகவே இவருக்கு நாய் வேண்டியதிருக்கிறது]. வழக்கின் போது ஒரே வீட்டில் வாழ்வதால் அழுத்தத்துக்குள்ளாக்கப்படாமல் அனா இருக்கும் பொருட்டு ஒரு பாதுகாவலரை நீதிபதி நியமிக்கிறார். அவர் ஜூலியா. கம்பெலும் ஜூலியாவும் முன்னரே ஒருவரையொருவர் அறிந்திருந்ததாயும் காதலராயிருந்ததாயும் சொல்லப்படுகிறது. இருவருக்குமிடையிலான உறவு அழுத்தமில்லாததாயும், வலிந்து திணிக்கப்பட்டதாயுமுள்ளது.
வழக்கு நடக்கையில் கேற் மிகவும் சுகவீனமுற்று மருத்துவமனையிலுள்ளாள். குறுக்கு விசாரணையின் போது வழக்குத் தொடரச் சொல்லி அனாவைக் கேட்டுக் கொண்டது கேற் எனத் தெரியவருகிறது. வழக்கில் அனாவுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. கம்பெல் அனாவுக்குப் 18 வயதாகும் வரை அவள் நலனை கருத்திற் கொண்டு மருத்துவ முடிவுகளை அனா சார்பில் எடுக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிடுகிறார். சில வேலைகள் செய்ய வேண்டியதிருப்பதால் அனாவும் கம்பெலும் நீதிமன்றில் பின் தங்க, பெற்றோர் மருத்துவமனை செல்கிறார்கள். அங்கே கேற்றுடன் பேசுகிறார்கள். பிரையனுக்கு வேலையிலிருந்து அவசர அழைப்பு வருகிறது. ஒரு வாகனவிபத்து. பயணியை விடுவிக்கும் பொருட்டு சேதமடைந்த வாகனத்துக்குள் நுழையும் பிரையன், பயணிகள் அனாவும் கம்பெலும் எனக் காண்கிறார். அனா உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டும், அவளது மூளை செயலிழக்கிறது. கம்பெல் அனாவின் சிறுநீரகத்தை கேற்றிற்குக் கொடுக்கும்படி சொல்கிறார். அனாவை உயிருடன் வைத்திருக்கும் இயந்திரம் அணைக்கப்படுகிறது.
கடைசி அத்தியாயம் கேற் பேசுவது போல். ஜெஸி பற்றியும், எப்படி அனாவின் இழப்பினூடாக வாழ்ந்தார்கள் என்பது பற்றியும் பேசும் கேற் இதுவரை பெற்ற சிகிச்சைகளின் பலனாய் சுகமுற்றுள்ளாள். ஆனாலும் தன் வேண்டுகோளுக்கிணங்க வழக்குத் தொடுத்தமையால்தான், அன்றைக்கு நீதிமன்றம் சென்றமையால்தான் அனா இறக்க நேரிட்டது என்கிற குற்றவுணர்ச்சி அவளுக்கிருக்கிறது.
இதுதான் My Sister's Keeperன் கதை.
ஒரு தேவைக்காக வடிவமைக்கப்படும் குழந்தைகள், அப்படிப்பட்ட ஒரு தெரிவை (சில பல காரணங்களுக்காக) செயற்படுத்தும் பெற்றோர் என்பன பற்றித் தொட்டுச் செல்கிறது இப்புத்தகம். கதாபாத்திரங்களை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகப் படைத்திருக்கலாம் போலத் தோன்றுகிறது. கதைக் கரு சற்றே வித்தியாசமாய், சிந்தனையைத் தூண்டுவதாய் இருக்கிறது. ஆனாலும் ஆசிரியர் எங்கும் தன் முடிவுகளை (இறுதிப் பகுதி தவிர்த்து) வாசகர் மேல் சுமத்தவில்லை. மாறாக வாசகரை சிந்திக்க வைக்கிறார். இதனை வாசிக்கையிலேயே கேள்விகள் எழுகின்றன. ஒரு குழந்தைக்கு உடல்நலமில்லையென அவளுக்கு உதவவென்று மட்டுமே பெற்றெடுக்கப்படும் மற்றக் குழந்தை. மூத்த பிள்ளையின் நலன் சாராமல் இந்தப்பிள்ளையின் இருப்பு? மூத்தவள் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனால் குடும்பத்தில் இவளது இடம் என்ன? கதையிலேயே இவற்றுக்கான விடைகளை ஓரளவில் காணலாம்.
தேவைக்காக உருவாக்கப்படும் திசுக்கள்/கருக்கள்/குழந்தைகள் என்பதும் ஒரு நோயாளிக்கு எந்தக் கட்டம் வரை & at what/whose expense சிகிச்சை வழங்குவது, அதை யார் தீர்மானிப்பது என்பதும் முடிவற்ற விவாதமாயே நீள்கின்ற விதயங்கள். வார்ப்புரு போல இந்த சூழ்நிலையில் இன்ன மாதிரியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனச் சொல்ல முடியாது ஏனெனில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எடுக்கப்படுகின்ற முடிவுகளும் அவை எடுக்கப்படுவதன் பின்னணியும் வேறுவேறாகத்தான் இருக்கும்.
கதைக்கு முடிவென்று ஒன்று இருக்க வேண்டுமென்பதற்காக அமைத்தது போன்று, மரணத்தைத் தொடும் நோயாளிக்கான சிகிச்சை என்கிற விதயத்தில் ஆசிரியரின் கருத்தோ என்ற ஐயத்தை எழுப்புகிறது போல அமைக்கப்பட்ட முடிவு - கேற் சுகமடைவதும் அனா இறப்பதும் - செயற்கையாகத் தோன்றுகிறது.
மிகச் சிறந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும், வாசிப்பிற்குகந்ததாய் - சிந்தனையைத் தூண்டுவதாய் எனக்கு இந்தப் புத்தகம் தோன்றியது.
வகை: படிச்சுக் கிழிச்சது
சுடுகிற கேள்விகளும் உண்மைகளும்
- முன்னுக்குப் போகிறவன் ஈரமாயிருந்த படிகளில் சறுக்குகிறான். அப்பாடா நான் சறுக்கவில்லை. நிம்மதி.
- என்னது! ராஜ் வீட்டில் களவு போனதாமா? நல்ல காலம், எங்களுக்கு ஒன்றும் அப்படி நடக்கவில்லை. நிம்மதி.
- சித்தியும் பிள்ளைகளும் பாதுகாப்பான பகுதிக்கு வந்து விட்டார்கள். இனிமேல் பயமில்லை. நிம்மதி.
இப்படி எத்தனை உதாரணங்கள்? எங்களுக்கோ, உடனடி வட்டத்துக்கோ நடக்காத வரையில் அப்பாடா! என்று நிம்மதிப் பெருமூச்சு எத்தனை தரம் விட்டிருப்போம். இப்படி நினைப்பது சரியானதுதானா? எங்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் ஏதேனும் ஒன்றென்றால் பதறிப்போகிற அளவுக்கோ அல்லது அதில் ஒரு அரைவாசியளவு கூடவோ வேறு எவருக்கும் வருத்தப்படுவதில்லையே.. ஏன்? ஏன் அப்படி நினைக்கிறோம்? அப்படி எங்களை நினைக்கத் தூண்டுவது என்ன?
சக மனிதரையும் தன்னைப் போலவே உணர வேண்டுமல்லவா? எது சரி எது சரியல்ல என்பது தனிப்பட்ட வரைவுகளுக்கு உட்பட்டது என்றாலும், பொதுவில் வைக்கக் கூடிய பல இயல்புகள் உண்டுதானே? அவற்றில் "சரியற்ற" ஒன்றாய் ஏன் 'சக மனிதரின் (எவராயினும்) துன்பத்தை அவ்விதமே பார்க்காமல், எங்களுக்கு இன்னும் ஏற்படாத ஒன்றாய்ப் பார்த்து நிம்மதி கொள்வது' இருப்பதில்லை? இதுதான் சுயநலம் எனப்படுவதா? சுயநலமென்றால், அது உயிர் என்றதொன்று உருவாகினதோடவே தோன்றியிருக்க வேண்டும். இனத்தின் விருத்திக்கும், தொடர்தலுக்கும் சுயநலம் அவசியமே. ஆனால் இனத்தின் தொடர்ச்சிக்கு/விருத்திக்குச் சவாலான/ஆபத்தை விளைவிக்கும் ஒரு சூழ்நிலை இல்லாதவிடத்தில் சுயநலத்துக்கு ஏன் இடம்? "நல்லகாலம்-எங்களுக்கு-நடக்கவில்லை" என்பது, ஒரு அடிப்படையான, தன்னிச்சையான உணர்வா?
சக மனிதன் வழுக்கி விழுந்து நோவதும், களவு போனால் எப்படியிருக்கும் என்பதும், சித்தி அனுபவித்ததைப் போன்றே இன்னும் மற்றவர்கள் அல்லற்படுவார்கள் என்பதும் என்னிடமிருந்து மிகக்குறைந்த பட்சம் ஒரு ஒத்துணர்வையோ அல்லது சித்திக்கு இருந்தது போன்று மற்றவர்களின் பாதுகாப்புக்காக (ஒன்றையும் அது சாதிக்காதெனினும்) கவலையையோ, அதற்கு ஆவன செய்வதோ பற்றிய சிந்தனையாகவோ இல்லாமல், எனக்கும் எனது நெருங்கின வட்டம் சார்ந்தவர்களுக்கும் பிரச்சனையில்லை என்றதுடன் நிம்மதியாக உணரத் தலைப்படுவது எனக்குக் குற்றவுணர்ச்சியையே தருகிறது. நான் என்ன செய்யட்டும் அதைப் போக்கிக் கொள்வதற்கு? ஏனையவர்களையும் என்னைப் போலவே ஏன் பார்ப்பதில்லை? அவர்களுக்கு என்ன நடந்தால் எனக்கென்ன என்று சில வேளைகளில் நினைக்கத் தோன்றுகிறது. கொடூரமான சிந்தனைகள் மனதை ஆக்கிரமிக்கின்றன. (உணர்வுகள் மரத்துப் போக ஆரம்பிப்பது இப்படித்தானா?)
(ஒவ்வொருமுறையும் இறப்புகள் குறித்தும் காயங்கள் தாக்கங்கள் குறித்தும் பேசப்படுகிற பொழுதில் உணராத வலிகள் ஏன் சிற்சில ஒற்றைக்கணங்களில் தம் கோரம் காட்டிப் போகவேண்டும்? டிசேயின் பதிவொன்றில் சில மரணங்கள் மட்டுமே உலுக்குவதைப் பற்றியும், (பெயரிலியினது என்று நினைக்கிறேன்) எங்கேயாவது செய்தியில் குண்டுவெடிப்பில் பத்துப் பேர் இறந்தார்களென்று சொன்னால் அவ்வளவுதானா, ----ம் ஆண்டு ----இல் நடந்த குண்டு வெடிப்பில் இத்தனைபேர் கொல்லப்பட்டார்களென்று கணக்குச் சொல்வதுமாய் இருக்கிற எங்களைப்பற்றியும் வாசித்தது, சொல்லத் தெரியாத ஒரு வேதனையான உணர்வுடன் நான் மட்டுமே இப்படி உணர்வதில்லை என்கிற சங்கடமான நிம்மதியையும் அங்கீகரிப்பையும் தந்தது.)
இப்படியெல்லாம் உணர்வது எனக்கே என்னை ஒரு கொடூரச்சியாய்க் காட்டுகிறது. என்னைக் குறித்து எனக்கே பயமெழுகிற வேளைகளிலும் "நல்லகாலம்-நாங்கள்-தப்பிவிட்டோம்"என்கிற அற்ப நிம்மதி (தொலைந்து போகாமல்) தலையெடுக்கிற நாளிலும் எவ்வளவு தூரம் நான் ஒரு மனிதப்பிறவியாக இருக்கிறேன் என்பது விளங்கித் தொலைக்கிறது. விளக்கம் அழகானதாக இல்லை என்பதைத் தவிர சொல்லிக் கொள்வதற்கு வேறில்லை.
இருப்பதும் இல்லாமலிருப்பதும்
அது, இருப்பது, இருக்கிறது;
அது, இல்லாமலிருப்பது, இல்லாமலிருக்கிறது;
ஆனால், அது, இல்லாமலிருப்பது, இருக்கிறது என்பதல்ல;
அதைப்போலவே, அது, இருப்பது, இல்லாமலிருக்கிறதுமல்ல.
அம்மா வைத்திருந்த verse புத்தகம் போலே நானும் பள்ளிக்கூடக் காலங்களில் வைத்திருந்தேன். பகிடியான (autographல் எழுதக்கூடிய மாதிரி) சின்னச் சின்ன ஆங்கிலக் குறும்பாக்களையும் பிடித்த கவிதைகளும் தன்னில் கொண்டது. வாசித்தது பிடித்தால், உடனே அந்தக் கொப்பியில் எழுதிவிடுவேன். ஆனால் என்னுடையதிற்போல, உள்ள கஞ்சல் குப்பைகள் அவவின் புத்தகத்தில் காணக் கிடையாது. கிறிஸ்தவப்பள்ளிக்கூடத்தில் படித்ததன் பாதிப்புகள் ஆங்காங்கே தெரியும். பூக்களைப்பற்றியும், வாழ்க்கையைப்பற்றியும், அவ வாசித்துப் பிடித்த கவிதைகளென்று அந்தக்காலத்து தடிப்பமான அட்டை கொண்ட கொப்பி.
நண்பர்கள்/வேண்டியவர்களின் பிறந்த நாட்கள் கடைசித் தாளில் சீராக எழுதப்பட்டிருக்கும். என் கொப்பிகளின் கடைசித் தாட்கள் போல் முகம் தெரியாத கிறுக்கல்கள் அம்மாவின் கொப்பியினை ஆக்கிரமித்தில்லை. அசிங்கமாக்கவில்லை. கிட்டத்தட்ட எட்டாம் வகுப்பு வரை மூலைகள் மடியாமல் பள்ளிப்புத்தகங்களோ குறிப்பேடுகளோ இருந்ததில்லை. ஒவ்வொரு ஆண்டும் சபதமெடுத்துக் கொள்வேன்.. மூலை மடியாமல் பாவிப்பது என்று. ஒரு மாதம் போதும் எனக்கு, தோல்வியைக் காட்ட. மடிந்த மூலைகளை நிமிர்த்தும் போது என்னவோ செய்யும். புத்தகம் அழுகிறாற் போல ஒரு பிரமை. அதற்காகவே என்ன செய்தேன், ஒவ்வொரு புத்தகத்தின் முன்னட்டையிலும் "மூலை மடியாமல் கவனமாகத் திருப்பவும்" என்கிற பொருள் வர எழுதி ஒட்டினேன். பழக்கம் குறைந்து இல்லாமலே போனது. அம்மாவின் கொப்பியைப் பற்றி ஆரம்பித்து சுயபுராணம் பாடுறேன்.. :O)
எத்தனையாம் வகுப்பிலிருந்து வைத்திருந்தாவோ தெரியாது, ஆனால் சிறு வயதிலேயே ஆரம்பித்திருக்க வேண்டும். சிறு வயதிலிருந்து படிப்படியாக அவவுடன் கூடவே அவவின் எழுத்தும் வளர்ந்து மாறி வருவதை அழகாக அவதானிக்கலாம். வளர்ந்த பின்னால் எங்களுக்குக் காணக் கிடைக்கும் தோற்றத்தை/வாழ்வை விடவும் முந்தியதொன்று அவர்களுக்கு இருந்திருக்கிறது என்பது தெளிவாயத் தெரிந்த ஒன்றானாலும் அதை நேரே பார்த்து உணருமாற் போல இருக்கும், பக்கங்களைப் புரட்டப் புரட்ட. கடைசிக் கவிதைகள் எழுதப்பட்டிருக்கும் எழுத்தும் அவவின் இப்போதைய எழுத்தும், ஒரு பருவத்தில் சேர்ந்திருந்து சில காலப்பிரிவின் பின் கண்டாலும் அடையாளம் காணக்கூடியதாயிருக்கிற தோழியின் முகச்சாயல் போல நிறையவே ஒத்திருக்கிறது. மாறாத எழுத்துக்களால் பக்கங்களை நிரப்பும் எவரைக் காண்பினும் எனக்கு அதிசயமே. ஒரு வரி எழுதும் போது இருக்கும் எழுத்து அடுத்த வரி எழுதும் போது மாறிவிடும். 10 வரியில் குறைந்தது ஏழு விதமான எழுத்துக்கள் இடம்பிடிக்கும். இந்தப்பழக்கம் காரணமாயோ என்னவோ , ஒருவருடன் பேசும் போது அவரைப்போன்றே பேச முற்படும் தன்மை போல, ஒருவரது எழுத்தையும் எழுதிப் பார்த்து ஓரளவுக்கு செய்யக்கூடியதாயும் இருந்தது.(கையொப்பங்களைப் "பிரதி" செய்து பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டதுதான்..நம்புங்கள்!!)
ஏனோ காலையில், அம்மாவின் புத்தகத்தில் வாசித்தது ஞாபகம் வந்தது. வாசித்த முதற் சில தடவைகள் விளங்காமல் குழம்பினதும், மண்டையில் ஏறினதும் ஏற்பட்ட சந்தோசமும் ஞாபமிருக்கின்றன. கொஞ்ச நாள் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருந்தேன். அதைத்தான் என்னாலான மொழி பெயர்ப்பில், மேலே.
ஆங்கில மூலம்:
That, that is not, is not;
But that, that is not, is not that that is;
Nor is that, that is, that that is not.
வகை: கிறுக்கினது , குழையல் சோறு
பெண்பால் என்ன??
காரிலே ஏறி, வானொலிக் குமிழைத் திருகினால், எங்கேயோ எப்பவோ கேட்ட ஒரு ஹிந்திப் பாடல் ஒலித்தது .. மே ஷாயர் தோ நஹி.(நான் கவிஞன்/புலவன் இல்லை) மகர் ஏசி ஹசி....என்று ஆரம்பித்து ஷாயரீ ஆகயீ (கவிஞை/கவிதாயினி வந்துவிட்டார்) என்று முடியும். ஒரு தடவை டிவிடியில் பார்த்தபோது அர்த்தம் போட்டதில் தெரிந்து கொண்டேன்.
நேற்று முழுக்க யோசித்தும் பிடிபடவில்லை. நீங்களாவது சொல்லுங்க.. ஆசிரியன், ஆசிரியை, ஆசிரியர் / தோழன், தோழி, தோழர் ..இப்படி, கவிஞனுக்கும் பெண்பால் & பொதுப்பால் தெரியும். ஆனால் புலவனுக்கு??
புலவர் என்பது பொதுப்பால். பெண்பால் என்ன?
வகை: குழையல் சோறு
என்னத்தைச் சொல்ல!

நான் சொல்லவில்லை.. பத்திரிக்கையொன்றில் வந்திருந்ததாய் நண்பரொருவர் அனுப்பியிருந்தார். குஞ்சு, குட்டி பற்றிக் கூடவா படத்துக்கு "விளக்கம்" எழுதியவருக்குத் தெரியாமல் போய்விட்டது? :O(
வகை: இப்பிடியும் நடந்துது
01 - வரம்
முக்கியமான ஒராள் சொன்னதின் படி கீழுள்ள disclaimer போட்டு ஆரம்பிக்கிறேன்.
Disclaimer:- பின்வருவது, கதை
------------------------------------------------------------------------------------------------------------------------
காலம்: ஏதோ ஒர் காலம்..
இடம்: கிளிமஞ்சாரோ மலை உச்சி.
எல்லாக் கடவுளரின் வீடும் அங்கேதான். இதுவரைக்கும் மக்காவும், ஜெருசலேமும் கைலாயமும்தான் புத்தகயாவும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். ஒரே களேபரமாயிருக்கிறது. சிவனையும் விஷ்ணுவையும் காணோம். எங்கேயென்று தெரியாமல் பத்தினிப் பெண்களின் இலக்கணப்படி பிலாக்கணம் பாடி மூக்கைச் சிந்துகிறார்கள் பார்வதியும் இலக்குமியும். அவர்களுக்கு மரியாளும் சரஸ்வதியும் ஆறுதல் சொல்ல, அல்லாவும் தாடியைத் தடவினபடி யேசுவும் மற்றையவர்களோடு ஆலோசிக்கிறார்கள். சித்தார்த்தன் முருகனிடம் மயில் மணிக்கு என்ன வேகத்தில் போகும் என்று சன்னக்குரலில் விசாரிக்கிறான்.
அதே சமயத்தில், இன்னுமோரிடத்தில்...
சிவன் இப்போ கைதி. ஒருத்தர் பிடித்துக் கொண்டு போய்ப் பொதுச் சிறையில் அடைத்துவிட்டார். தொடர்ந்த காவல். ஒன்றையும் இந்த மனிதர்களுக்கு முன்னால் நின்று நினைத்துக் கொள்ள முடியவில்லை. எதிரிலிருப்பவன் மனதில் என்ன ஓடுகிறது என்று தெரிந்து கொண்டு விடுகிறார்கள். அதைச் செய்யலாமென்று கண்டுபிடிக்குமளவு திறனுடையவர்களாக மனிதர்களைப் படைத்ததை எண்ணி பிரம்மனின் மேல் அடக்கமுடியாத கோபம் வந்தது சிவனுக்கு. அவருக்கான காவலாளி அதை அறிந்து சிரித்துக் கொண்டான். சிவன், ஆசுவாசப் படுத்திக் கொள்ள வற்றிக் கொண்டு போகிற தண்ணீர் கொஞ்சம் தலையிலிருந்து குடித்துக் கொண்டார்.
தண்ணீர் குடிக்கையில்தான் அவருக்குக் கூடவே கைதான விஷ்ணுவின் ஞாபகம் வந்தது. "என்ன செய்கிறானோ" என்று நினைத்துக் கொண்டதுக்கு, காவலாளி, "விஷ்ணுவா, அவன் செத்துப் போய்விட்டான்! காலையில் விசாரணைக்குக் கூட்டிக் கொண்டு போக ஆள் வந்து பார்க்கையில்தான் நாங்களே தெரிந்து கொண்டோம்" என்றான். "அடப்பாவமே..இந்த மனிதர்கள் பிடித்த நாளிலிருந்து தண்ணீரோ உணவோ தரவில்லையே.. கைவரிசை காட்டிச் சாப்பாடு வரவழைத்தாலும் அதையும் பிடுங்கி விடுகிறார்கள். நானாவது தலையிலிருந்து வருவதைக் குடித்துக் கொண்டிருக்கிறேன்.. அவனென்ன செய்வான் பாவம்!" என்று பரிதாபப்பட்டுக்கொண்டார். என்னதான் இருந்தாலும் மச்சான். அதுக்கும் மேலாக கடவுள் வியாபாரத்தில் ஒரு முக்கிய பங்காளி. அப்படிப்பட்ட விஷ்ணு செத்துப் போனானே என்று சிவனுக்குக் கண்ணீர் வந்தது.
ஏன் இதை நடக்க அனுமதித்தாய், ஏன் அதைப் படைத்தாய் என்று சரமாரியாகக் குறுக்கு விசாரணை. இருக்கிற சடைமுடியெல்லாம் பிய்த்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. ஒன்றுமே பேசவில்லை. ஒன்றுமே நினைத்துக் கொள்ளாமலிருக்கவும் பெரும் பிரயத்தனப்பட வேண்டி இருந்தது. இரவாகிற்று. மனிதர்கள் அடித்த அடிகளில் சிலது பட்டு பாம்புகளெல்லாம் உஸ்புஸ்சென்று சீற ஆரம்பித்திருந்தன. காவலாளி உறங்கி விட்டான் என்று உறுதி செய்துகொண்டு தப்பிக்கும் வழி பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தார் சிவன். எதுவும் சரி வராது என்று தெரிந்தது. நினைத்துக் கொண்டதைச் செயற்படுத்த முடியாது. மனதிலிருப்பதெல்லாம் தெரிந்து விடுகிறது.
மனதிலே திடீரென ஒரு எண்ணம். இத்தனை நாட்களிலும் இல்லாமற் போன வரங்களால் படாரெனச் சரிந்திருக்கக் கூடிய கடவுள் நிறுவனப் பங்கின் விலை நிலவரம் வயிற்றில் புளியைக் கரைத்தது. அல்லா யேசு பிரம்மன் மூவரும் நிலையை எப்படிக் கையாளுவார்களோ என்று கவலை வந்து உட்கார்ந்து கொண்டது. சித்தார்த்தன் சிறுபிள்ளை, கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கிறது. வாகனம் கூட இல்லை அவனுக்கு. கடவுள் நிறுவனம் வர்த்தகக் காப்புக்காய் எடுத்த முடிவு இப்படியொரு இக்கட்டில் உதவக்கூடுமென்று அவர் யோசித்திருக்கவில்லை. தனக்கு முன்னாலிருந்த அல்லாவிடமிருந்து தான் பொறுப்பேற்றுக் கொண்டது போல அடுத்ததாய் இயேசு பதவிக்கு வருவார் என்பதும் இவ்வளவுநாள் கட்டிக்காத்த நிறுவனம் அழியாதென்பதும் கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. "பிரம்மன் குட்டையை குழப்பினால்?" என்கிற சந்தேகம் எட்டிப்பார்த்து புளிக்கரைசலாய் வயிற்றை மொத்தமாய் நிரப்பிற்று. அதைப் போக்க, எப்படிக் கைதானோம் என்று நினைத்துப் பார்த்தார் சிவன். எல்லாம் இந்த தவமிருப்பதைக் கண்டதும் வரும் புல்லரிப்புத்தான் காரணம். பூரித்துப் போய் வரம் கொடுப்பதை இனி நிறுத்தவேண்டும். விளம்பரம் போனாலும் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டார். உடனேயே சிரிப்பும் வந்தது. இந்தச் சிறைக்குள்ளிருந்து எப்படி வெளியில் போவது, எப்படி வரம் கொடுப்பது!! பிடித்துக் கொண்டு வந்தவனுக்கு என்ன வரம் கொடுத்தோம்..யோசிக்கலானார். ஆ! ஞாபகம் வந்து விட்டது.. சும்மா வரமா கேட்டான்.. "எப்போது நான் அழைத்தாலும், நான் திருப்பி அனுப்பும் வரை என்கூடவே வரவேண்டும். அப்படி நீர் என்னுடன் இருக்கும் போது, நாம் எங்கிருக்கிறோம் என்பது வேறு யாருக்குமே தெரியக் கூடாது" என்றெல்லவா வரம் வாங்கினான். அவன் கெட்டித்தனத்தை மெச்சிக் கொண்டார் சிவன்.
வரம் கொடுத்து மாட்டுப்படுவது இருவருக்குமே வழமைதானென்றாலும், அவருக்குப் புரியவில்லை எப்படித் தான் விழுந்த அதே வலையில், அதே நேரத்திலேயே விஷ்ணுவும் மாட்டினானென்று. உரத்து யோசித்தார். சீறியபடியே பாம்பு, "மடச்சிவனே, மனிதன் முன்னமொருமுறை சும்மா பாட நீரும் எங்கோ கற்பனையிலிருந்த படி ஆகட்டும் என்று சொன்னதை மறந்தீரோ" என்றது. சிவனுக்கு அப்பவும் புரியவில்லை. தண்ணீர் வறண்டுபோன தலையைத் தடவிய படியே யோசிக்கிறார். பாம்பே பாடிக்காட்டிற்று: "இரண்டு மனம் வேண்டும்.. இறைவனிடம் கேட்டேன்". அப்படி வரம் கொடுத்ததையும், சிறைப்பிடித்தவனுக்கு கொடுத்த வரத்தில் தான் தப்பிக்க ஓட்டை வைக்காமல் போகவும் வைத்த தன் மறதியை (அல்லது, பெயர்ந்து போன அறளையை) நொந்துகொண்டார். multi tasking & mutliple desktop விளையாட்டைத் தம்மிடமே காட்டிய மனிதனை நினைத்து சிவனுக்கு நெஞ்சை அடைத்தது. ஏற்கெனவே அரக்கர்களுடன் போரிட்டுத் தளர்ந்திருந்த உடல். தண்ணீர் தண்ணீ ரென்று அலறினார். யாருக்கும் கேட்கவில்லை. சிவனும் செத்துப்போனார்.
வகை: கிறுக்கினது
ஏன்?எப்படி?உங்களுக்குமுண்டா?
குறிப்பட்டதொரு பதிவைத் தேடுகையில் இது கண்ணில் பட்டது. சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதம் எழுதி draft ஆகவே இருந்தது. இன்றைக்குப் பதிகிறேன்.
உங்களுக்கும் இப்பிடித் தோன்றியிருக்கக் கூடும்; அநேகமாக எதையாவது பார்த்தால் ஒரு சொற்றொடரோ அல்லது ஒரு சொல்தானும் மனதில் சட்டெனப் படும். புல்லைப்பார்த்தால் "அட! புல்லு" என்பதையோ, கடலைப் பார்த்து எவ்வளவு பெரிதாயிருக்கிறது என்று நினைத்துக்கொள்வதையோ இங்கு சொல்லவில்லை.
போன கிழமை படிக்கட்டில் கால் வைத்த போது ஏனோ "உதறி விரித்தது போல" என்று தோன்றிற்று. எப்பவாவது வாசித்த ஒரு கவிதையிலிருந்தோ கட்டுரை/கதையிலிருந்தோ வந்திருக்க வேண்டும். குட்டையான கட்டிடங்களுக்கு மத்தியில் உயரமானதைக் கண்டால், ஒரு bookmark போல என்று நினைத்துக் கொள்வேன். என் நண்பிக்கு எல்லாக்கட்டிடங்களும் (குறிப்பாக கபில (brown) நிறப் பூச்சுள்ளவை) கேக் துண்டுகள் மாதிரித்தான் தெரிகின்றன. :O) கிளைபரப்பி அடர்ந்து நிற்கும் மரத்தைக் கண்டால் "காற்றுக்கு விசிறி விடுகிறது" என்றும், இலைகள் சலசலக்க கிளைகள் ஆடுகையில் "அலையடிக்கிறது" என்றும் தோன்றும். இப்படி நிறைய.
இதெல்லாம் தன்னிச்சையாகத் வந்து விழுகின்றனவா அல்லது நாங்கள் முதலில் வாசித்த/பார்த்த ஏதாவது மனதில் தங்கி, ஒரு சிறு தூண்டல் கிடைத்ததுமே வெளி வருகிறதா? உதாரணமாக, இலையுடன் கிளை அசைகையில் அலையடிப்பது என்று எனக்குத் தோன்றுவது நேற்று நீருக்கடியிலுள்ள பவழ(ள?)ப்பாறைகள் பற்றிய விவரணப்படத்தில் பார்த்த கடற்தாவரத்தின் இலை அசைவு மனதில் தங்கியதினாலாயிருக்கலாம். காரணமிருந்தேயாக வேண்டிய கட்டாயமில்லை.
இதைப்போலவே மாறாய், ஒரு சொல்லை/ வசனத்தைச் சொன்னதும் சில உருவங்கள்/வடிவங்கள்/பிம்பங்கள் மனதில் தோன்றும். இப்படி, மனம் எதனால் இப்படிச் செயற்பட்டு புரிந்து கொள்ள முடியாத இணைப்புகளை உருவாக்குகிறது? இந்த இணைப்புகளின்/உருவ(க)ப்படுத்தல்களின் பயன் என்ன?