ஏ ஆராரோ...நீ யாரோ!

வாங்க வாங்க என்று அழைப்பிதழ் அனுப்பிக் கூப்பிட்டேன்..வந்திருக்கிறீங்க. நன்றி. ஏற்கெனவே கதிரையிலே இருப்பீங்க என்பதால உங்களை இருங்கோ என்று சொல்லப் போறதில்லை. சரி பதிவுக்கு வருவோம்..அதான் வந்திட்டோமே என்றெல்லாம் சொல்லாம..நான் சொல்றதைக் கேளுங்க.

இந்தப்பதிவு ஒரு சின்ன விளையாட்டா இருக்கப் போகுது. நீங்களெல்லாரும் கெட்டிக்காரர்தானே..இது ஒரு சுலபமான விளையாட்டு. இந்த விளையாட்டை "தொகுக்க" உதவிய ப்ரவீணாக்கும் (சு)நாமிக்கும் ;o) எனது நன்றிகள்.

சரி அடிப்படை இதுதான்: கட்டங்களுக்குள்ளே தரப்பட்டிருக்கும் தடயங்களை உபயோகித்து விடைகளைக் கண்டு பிடிக்கணும். பிறகு கட்டங்களுக்குக் கீழே நீங்க கண்டுபிடிச்சதை வச்சு என்ன செய்ய வேணும் என்று சொல்லியிருக்கிறேன். உதாரணம் தந்தா விளையாட்டின் சுவாரசியம் கெட்டுவிடும்(அதுக்காக குளிர்சாதனத்தில எல்லாம் சுவாரசியத்தைத் தூக்கி வைக்க முடியாது)(அடேயப்பா எவ்வளவு பெரிய பகிடி விட்டிருக்கிறன், ஏன் ஒருத்தரும் சிரிக்க மாட்டனென்டுறீங்க!)





அ) நபிகள் நாயகம் சொன்ன ஒரு பிரபல பொன்மொழி? சீனா சென்றாயினும் சீர்கல்வி தேடுக
ஆ) எதற்கும் அடித்தளம்/ஆதாரம் என்றதொன்று இருக்க வேண்டும் எனச் சொல்லும் பழமொழி? சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்


அ)விற்கும் ஆ)விற்கும் விடையைக் கண்டு பிடியுங்கள். இரண்டு விடைகளையும் ஒன்றாக வைத்துப் பார்த்தால் என்ன கிடைக்கிறது?சீனா+சுவர் = சீனப்பெருஞ்சுவர்
ஷ்ரேயாவுக்கு உதை என்பது சரியான பதில் அல்ல! :o)

ஒரு பிரபல பயணி இருந்தார். அவர் தன்னுடைய பயணங்களைப் பற்றி விரிவான குறிப்புகள் எழுதியிருந்தாலும், (அ + ஆ)வின் விடை பற்றி அக்குறிப்புகளில் மூச்சுக் கூட விடவில்லை. இந்தப்பயணி யார் எனக் கண்டு பிடிக்க வேண்டும். மார்க்கோ போலோ


இ) அந்தப் பயணியின் நாடு எது? இத்தாலி

ஈ)அரசன்/பசு + (அரசியர் உறைவிடம் - அந்தப்) = ??? கோ + (அந்தப்புரம் - புரம்)= கோபுரம்

இ) & ஈ) யின் விடைகளையும் (முன்னரைப் போலவே) சேர்த்துப் பார்த்தால், கிடைக்கும் விடை என்ன? இத்தாலி+கோபுரம் >> பீசா கோபுரம்
இப்ப நாங்க இன்னொரு இடத்திற்குப் போக வேண்டும். அதற்கு கண்டு பிடிக்க வேண்டியது:


உ) பாலைவன/வறள் பிரதேசங்களும் அவற்றின் பெருகும் தன்மைக்குமான சர்வதேச ஆண்டு (உதவி:- இதைப் பிரகடனப் படுத்திய குழுவில் ஒருவர் 'குளம்பி' தமையன்) 2006

ஊ) "ச" வருடங்களுக்கு ஒருமுறை வரும் கோலாகலம் ச=4, ஒலிம்பிக் போட்டி


உ)வும் ஊ)வும் கொள்ளையடித்தால் 'எங்கே'யென்று அர்த்தம்?? 2006 ஒலிம்பிக் -> டூரின்
கிரேக்கத்துக்கு வெளியே அதிக கிரேக்கர்களைக் கொண்டது அவுஸ்திரேலியாவிலுள்ள மெல்பேர்ண் நகரம். அதே போல நாம் அடுத்ததாகப் போக வேண்டிய தேசத்திலுள்ளதற்கு அடுத்தபடியாக அதன் முக்கிய அருங்கலைப் பொருட்கள் கொண்ட பிரபல அருங்காட்சியகம் (உ+ஊ)வின் விடையில் இருக்கிறது. அந்த நாடு எது?எகிப்து


எ)இந்த நாட்டின் பெயரைச் சொன்னதும் எல்லாருக்கும் நினைவு வருவதும் ஒன்றாகத்தான் இருக்கும். நினைவு வருவதில் "ஐந்து, முக்கால் உடன் தகரத்தில் மெய்யும் உகரமும் அத்துடனே வசந்தன் சின்ன வயதில் குடித்த பானமும் சேர்த்தால் வரும்" சொல் சிலவும் இருக்கின்றன. அதற்கு ஆங்கிலப் பெயர் என்ன? 5-எ, 3/4 = ழு, த், து, கள் >> ஹைரோக்ளிஃப்

ஏ)அவை சொல்வதைப் புரிந்து கொள்ள உதவிய முக்கிய பொருள் என்ன?(உதவி:இப்போது அது லண்டன் அருங்காட்சியகத்தில் இருக்கிறது) ரொசெட்டா கல்

ஐ)தான் இறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன், 1822 இல் (ஏ)யின் விடையாக வரும் பொருளில் இருந்ததை ஆராய்ந்து "பொழிப்புரை/விளக்கம்" வெளியிட்டவரின் பெயரென்ன? Jean Francois Champollion


அவருடைய நாட்டுக்குத் தான் போக வேண்டும்.


ஒ) ட்ரோய் போருக்கு காரணம் என்ன? பரிஸ், ஹெலனைக் கவர்ந்து சென்றமை

ஓ)அமெரிக்காவிலுள்ள சுதந்திரதேவி சிலையின் சட்ட வடிவமைப்பைச் செய்தவர்களுள் ஒருவர் கஸ்டாவ் ஈஃபிள்


ஒ)வும் ஓ)வும் போட்டா என்ன வருது?பரிஸ் நகரத்தில் ஈபிள் கோபுரம்

அதுக்கு முன்னாலே நின்று நடனமாடி காதல் பாட்டுப் பாடினவங்க இங்கேயும் போனாங்க...எங்கே??அதை நீங்கதான் கண்டுபிடிக்கணும்!


ஒள)காடு, மலை, நதிகள் எல்லாம் காதலின் சின்னமாம், அதனால குறிப்பா "இதை" தேவை இல்லை என்று அசித்து (அதான் "தல") பாடியிருக்கிறார். எதை தேவையில்லை என்று சொல்கிறார்? தாஜ்மகால்

ஃ)கேள்வி (ஒள)க்கு விடையாகக் கண்டுபிடிச்சதுக்குக் கிட்ட சலசலக்கும் ஆற்றைப் பற்றி ஒரு பாடல்,மிகப்பிரபலமான நடிகர் நடித்த,மணிரத்னத்தின் ஆஸ்தான (மாதவனுக்கு முதல்) நடிகரின் அறிமுகப்படத்தில் இடம்பெற்றது. ஆஸ்தான நடிகரின் பெயர்? பாடல்: யமுனையாற்றிலே... படம்: தளபதி நடிகர்:அரவிந்த்சுவாமி

(குறிப்பா ஏன் இவர் என்று விளங்கியிருக்கோணுமே ...ஹி..ஹி) ;o)

க்)அவரை கதாநாயகனாக பதவி உயர்த்திய திரைப்படம் எதுங்கோ? ரோஜா

ச்)அதே படத்திலேயே தமிழ்த் திரையுலகுக்கு முக்கியமான 2 பேர் அறிமுகமானாங்க. அவங்க யார் யார்? ஏ ஆர் ரஹ்மான், ஹரிஹரன்


கண்டுபிடிச்சிட்டீங்களா...அவங்கதான்..அவங்களேதான்..இவங்களுக்காக, இவங்க கூப்பிட்டு இங்கே வாறாங்களே!!..! (பார்க்கிறதுக்கு நானும் போறேனே!)

இதைச் சொல்லத்தான் உங்கள் எல்லாருக்கும் அழைப்பிதழ் வச்சு விளையாடக் கூப்பிட்டனான்!! :o). வர்ட்டா!

அழைப்பிதழ்

திருமண அழைப்பிதழ் இல்லை. (அது அனுப்பிய போது, வலைப்பதிவென்றாலே என்னென்றே தெரியவே தெரியாது!)இது வேற!

அன்புடையீர்,

நடக்கும் ஆங்கில 2005ம் ஆண்டு, தமிழுக்கு ஆனி மாதம், ஆங்கில 23ம் திகதி இணையத் தொடர்பு, விசைப்பலகையில் சுரதாவின் செயலி கொண்டு தட்டச்சும் கைகள் ஆகிய லக்கினங்கள் கூடும் சுபநேர சுப வேளையில் பதிவொன்றை வலையேற்ற ஷ்ரேயாவினாலும், அவருக்கு உதவும் ப்ளொகரினாலும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இத்தருணம் தாங்களையும் தங்கள் கண்கள் மற்றும் இணையத்தொடர்பு சமேதராக இவ்வலைப்பதிவுக்கு வருகை தந்து, பதிவினைப் பார்வையிடவும், பின்னர் நடக்கவிருக்கும் பின்னூட்ட உப(தை)சாரத்திலும் பங்குபற்றிச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இங்ஙனம்,

ஷ்ரேயா & Blogger

(இருவீட்டார் அழைப்பு)


சத்தியமா இது வரைக்கும் எழுதிய பதிவெல்லாத்தையும் குடந்தைச் சோதிடரிடம் போகாமல் நானாகவே எக்ஸெல் ஓலையில் சோழிகளைக் குலுக்கிப் போட்டு ஆராய்ந்ததில் தெரிய வந்ததாவது...

இதுவரை(79 பதிவுகளில்) பதிவுகள் அதிகமாக எழுதப்பட்டுள்ள

    திகதி: 4, 6, 10, 15, 16, 23

    நாள்: வியாழன் & வெள்ளி

    மாதம்: ஆனி


ஆனி மாதத்திற்குரிய 4, 6, 10, 15, 16ம் திகதிகள் ஏற்கெனவே கடந்து விட்டதால், அடுத்து இவை பொருந்தும் எனக் கணிக்கப்பட்ட நாளே அடுத்த பதிவிற்காகச் சிறப்பாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே..அழைப்பிதழை கொஞ்சம் வாசிச்சிட்டு..அடுத்த பதிவுக்கு ஒரு ஐடியாவையும் தந்திட்டு இப்ப போய்ட்டு, மறக்காம திரும்பி வாங்க!:o)

மி.மு.பி.கு: திகதிகள் ஆங்கிலத்தில் இருப்பதற்காகவோ அல்லது அழைப்பு விடுக்கும் ஒரு பகுதியினரின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதற்காகவோ என்னை யா..ஆ..ஆ..ரும் கண்டிக்கவோ, இப் பதிவைப் புறக்கணிக்கவோ முடியாது என தடைச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது!! அன்றைக்கு ஹர்த்தால்/பந்த் எனக் கூறி வலைப்பதிவை இழுத்து மூடுபவர்கள் மேல் இப்போதே கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

?????

பள்ளிக்கூடத்தில் ஆட்டோகிராஃப் பரிமாறிக் கொள்வது வழக்கம். அதிலே சிலவேளைகளில் இப்படி எழுதி வைப்போம்:

"நீ மட்டுந்தான் ????? என்று நினைக்காதே. நானும் ?????தான். நீ தனித்துப் போய் விடக்கூடாதே என்று!"

அதுதான் ஞாபகம் வந்தது - பின்னூட்டமிட்டுப் பார்த்தால், "சொன்னவர் ?????" என்று வந்திருக்கிறதைப் பார்க்க. நான் பெயர் மாத்தவில்லையே என்று வேறு கொஞ்ச நேரம் யோசித்தும் வைத்தேன். பொதுவான பிரச்சனையாக் கிடக்கு. Bloggerக்கு எழுதிப் போடுறதுதான் வழி போல!

இன்னொரு பிரச்சனை..இது எனக்கு மட்டுந்தான். (எனக்கு மட்டுமான பிரச்சனைகள் நிறைய இருக்கு!அதெல்லாம் சொல்லி உங்களை எதுக்கு பயப்பிடுத்துவான் :o)

இந்தச் சுட்டிக்கு போகேலாமக் கிடக்கு: http://www.balaji_ammu.blogspot.com. கனக்க கொம்பினேசனில எல்லாம் சுட்டிய மாத்திப் பாத்திட்டன்...வலையுலாவிக்குப் பிடிக்கேல்ல. எப்பிடி மாத்தி எழுதினாலும் உன்னை இந்த முகவரிக்குக் கூட்டிக் கொண்டு போகேலாது என்று முடிவாய்ச் சொல்லிவிட்டுது! தமிழ்மணத்தில முறையிட்டன்...பதில் சொன்ன 'செல்வா'க்கும் இந்தப் பிரச்சனை இருந்ததாம், ஆனால் சரியாகிட்டுதாம். பிரச்சனை ஏனென்று யாருக்காவது தெரியுமா? எப்பிடி நான் பாலாஜிட வலைப்பதிவை வாசிக்கிறது? வழி சொல்லுங்கோ!

மோப்ப சக்தி

மிருகங்களுக்கு ஆபத்தை அறியும் சக்தி உண்டென்பது தெரிந்த விசயம். ஆனாலும் இங்கிலாந்தில் நடந்த ஒரு சம்பவம், ஆராய்ச்சியாளர்களின் தலையைப் பிய்த்துக் கொள்ள வைக்கும் ஒரு பிரச்சனையை வேறு கோணத்திலிருந்து அணுக வைத்துள்ளது.

ஒரு பெண்மணிக்கு காலில் ஒரு மச்சம்(mole) புதிதாக தோன்றியிருக்கிறது. அவவோ அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவவின் செல்ல நாய்க்கு அதைக்கண்டு இருப்புக் கொள்ளவில்லை. கொஞ்சம் விட்டால் அவவின் செல்ல நாய் அந்த mole ஐ விறாண்டி பிய்த்துப் பிடுங்கி விடும் நிலைக்கு வந்துவிட்டதில் பெரிய தொல்லையாகி விட்டது அவவுக்கு. வைத்தியரிடம் போயிருக்கிறா. காலில் இருக்கிறதைக் கண்டால் அந்த நாய் படும் பாட்டைச் சொல்லியிருக்கிறார். வைத்தியர் அவவைப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அப்பெண்ணுக்கு ஆரம்பநிலை தோற்புற்றுநோய் இருந்தமை தெரியவந்தது. (நீங்கள் பையில் வைத்திருக்கும் உணவுப்பண்டத்துக்காக ஏதாவது நாய் உங்களைத் தொடர்ந்து முகர்ந்தபடியே வந்தால் நான் பொறுப்பில்லை! :o) )

இது தெரிந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சந்தேகம் முளைத்தது. ஒருவேளை புற்றுநோய்க் கலங்கள் ஒரு வித மணத்தை வெளியிடப் போய் அதைக் கொண்டு தான் அவவின் நாய்க்கு நிலைகொள்ளவில்லையோ என்று. விடுவார்களா...தொடங்கினார்கள் பரிசோதனையை. புற்றுநோய் உடைய ஒருவரிடமிருந்தும் நோயற்ற கொஞ்சப் பேரிடமிருந்தும் பெறப்பட்ட சிறுநீர் samplesஐ மோப்பம் பிடிக்க விட்டார்கள். நாய் 41% சரியாக புற்று நோயுடையவரின் சிறுநீர் sampleஐ முகர்ந்து பிடித்ததாம். இப்படி, நோயாளிகளின் சிறுநீரைக் கொண்டு புற்று நோய் இருக்கா இல்லையா என்று கண்டுபிடிக்க நாய்களை பயிற்றுவிக்கிறார்கள் இப்போது.

அவர்கள் வியந்த இன்னொரு விடயம்: பரிசோதனையின் போது குறித்த ஒரு (நோயற்ற ஒருவரது) sampleஐ நாய் முகர்ந்து காட்டி, அவர்கள் கவனத்தை ஈர்த்ததாம். ஒரு சந்தேகத்தில் அச்சிறுநீர் sample கொடுத்தவரைப் பரிசோதித்ததில் அவருக்குப் புற்றுநோய் இருந்தது அறியப்பட்டுள்ளது.

non-invasive புற்றுநோய் பரிசோதனை என்கிறார்கள்.

இது வரையில் நாய்கள் செல்ல/காவல் பிராணிகளாகவோ அல்லது மோப்பம் பிடிக்க காவல்/எல்லைப்பாதுகாப்பு/சுங்கப்பிரிவினராலோதான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இனிமேல் வைத்தியர்களாலும்!

என் புத்தக வாசம்!

புத்தகம் என்று எனக்கு 'முதல்' ஞாபகமிருப்பது ஒரு பெரிய எழுத்தில இருந்த நீதிக்கதைப்புத்தகம் தான். அதில் படங்களும் இருந்தது. இன்னுமொரு புத்தகம் - கதையோ பெயரோ ஞாபகமில்லாதது - ஒரு சேவலும் அதைப்பிடிக்கிறதுக்கு முயற்சிக்கிற நரியும் பற்றினது. குறிப்பாக ஒரு புத்தகத்தை ஞாபகப் படுத்த் முயற்சிக்கிறேன். ஆனால் அப்படிப்பட்ட முயற்சிகளுக்கே உரித்தான நக்கலுடன் பலனில்லாமல் ஞாபகப்படுத்தல் தொடர்கிறது. புத்தகத்திட பெயர் ஞாபகம் வராததுக்கு கதை மறந்து போனது முக்கிய காரணியாக இருக்கலாம். ஒரு மலையின் மேடான உச்சியில் ஒரு சிவப்புப் பழம் இருந்ததும் ஒரு மாடு சம்பந்தப்பட்டிருந்ததும் படத்தில் பர்த்த ஞாபகம். :o) (யாருக்காவது ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே??)

வாசிப்புப் பழக்கம் இத்தனையாம் வயதில்தான் தொடங்கியது என்றெல்லாம் குறிப்பாய்ச் சொல்லத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்து நான் வாசிக்காமல் இருந்ததில்லை. அம்மாவும் பெரியண்ணாவும் சாப்பிடும் போது இடக்கையால் புத்தகம் புரட்டுவார்கள். புத்தகம் இல்லாட்டி இருவருக்குமே சாப்பாடு இறங்காது. எனக்கும் முதலில் அப்படி ஒரு வியாதி இருந்தது. பிறகு கொஞ்ச நாள் விடுதியில் தங்கிப்படித்ததால் அப்பழக்கம் விட்டுப்போயிற்று. கையிலே புத்தகம் இருந்தால் வாய்க்குள்ளே என்ன போகுதென்றே தெரியாது. மற்ற வேளைகளிலும் புத்தகம் வாசிக்க உட்கார்ந்தால் வெளிச்சத்தம் ஒன்றும் கேட்காது(அம்மா கூப்பிடுவது உட்பட!பிறகு தடாரென்று ஒரு 'தட்டு' விழத்தான் அம்மா கூப்பிட்டிருக்கிறா என்று 'உறைக்கும்') :oD

விடுமுறைக்கு யாழ்ப்பாணம் போகும் போது நிறைய புத்தகம் வாங்கக்கிடைக்கும். பேருந்துத் தரிப்பிடத்தில் இறங்கி ஒரு நிமிட நடை தூரத்தில் பூபாலசிங்கம் புத்தகக்கடையில் கோகுலம், ரத்னபாலா, பாலமித்ரா, அம்புலிமாமா, நீதிக்கதைகள் கொஞ்சம், ஈசாப் கதைகள், முல்லா/பீர்பால்/தெனாலிராமன் கதைகள் என்றெல்லாம் நான் பொறுக்கிக் கொண்டிருக்க அம்மா பக்கத்திலுள்ள பழக்கடையில் வீட்டாருக்குத் திராட்சைப்பழம் வாங்குவா. கிட்டத்தட்ட 10 - 15 புத்தகம் தேறும். பொறுமை இருந்தால் விடுமுறை முழுக்க வாசிக்கலாம். என்னைப் போல 'கடுகதி' தரைவழிகளுக்கெல்லாம் இது யானை வாய்க்குச் சோளப்பொரி போல! எவ்வளவுதான் இழுத்து, மெதுவாக வாசித்தாலும் 2 நாளைக்குத் தான் அவ்வளவு புத்தகமும் வரும். இதெல்லாம் முடிய பாட்டி வீட்டில போய் நோண்டிறது. அங்கே நல்ல நல்ல புத்தகங்கள் இருந்தன. ஆனால் அப்ப சின்னனில் வாசித்தால் விளங்காது. பின்பு வளர்ந்த பிறகு போகிற போது புத்தக வேட்டைக்கு அவ்வளவாக நேரம் ஒதுக்க முடியவில்லை.

வீட்டிலே பஞ்ச தந்திரக் கதைகளுடன், மகாபாரதமும் இராமாயணமும் இருந்தன. நல்ல தடிப்பமான புத்தகங்கள். நிறையக் கிளைக்கதைகளோடு.பஞ்சதந்திரக்கதைகளில் "inherited" கதைகள் வாசித்துக் கொண்டு போகும் போது மூலக்கதை சிலவேளைக்களில் மறந்து விடும்..திரும்ப ஆரம்பிப்பதுமுண்டு! இராமாயணம் வாசித்து முடித்ததும் லவகுசரைப்பற்றி ஆர்வம் வந்து அம்மாவை நச்சரித்தேன். நிறைய நாள் லவகுசர் பற்றி புத்தகம் தேடி அலைந்தது ஞாபகமிருக்கிறது. கிடைக்கவில்லை. பிறகு பதினொரு வயதில் குடும்ப ஒன்றுகூடலுக்கு இந்தியா போன போதுதான் கிடைத்தனர் லவகுசர். பெரியண்ணாக்கு என்னை நன்றாகத் தெரியும் - புத்தகத்துக்கு என்னவும் செய்வேன் என்று. இந்தியாவில் தான் நிறையப் புத்தகங்கள் கிடைக்குமே..ஆ.வி/குமுதம், கோகுலம்(தமிழ்+ஆங்கிலம்), ரத்னபாலா, இன்னபிற சிறுவர் இதழ்கள்/புத்தகங்கள், மு.வரதராசனார் சரிதை, சிவகாமி சபதம் பொன்னியின் செல்வன், சாண்டில்யன் கதைகள் என்று நிறைய (லஞ்சமாக) வாங்கித் தந்து பல வேலைகள் (தேத்தண்ணி போட்டுக் கொடுப்பது, அவருடை உடுப்பு மடிப்பது etc..) செய்வித்துக் கொண்டார். :o) முன்வீட்டுப்பிள்ளைகளுடன் விளையாடவும் போகாமல் 2 நாட்கள் தொடர்ந்து சிவகாமி சபதத்தை வாசித்து முடித்தேன். (மற்ற எல்லாப் பெரிய புத்தகமும் கிட்டத்தட்ட அதே வேகத்தில் வாசித்தேன்...அவற்றை அண்ணா தன்னோடு கொண்டு போய் விடுவாரே!!).

திருக்குறள், நளதமயந்தி, சிலப்பதிகாரம், சீராளன் கதை, சீவகசிந்தாமணி, வரலாற்றுப் புத்தகங்கள், மட்டக்களப்புப் பேய்க்கதைகள் எல்லாம் 12 வயதிற்குள்ளாக வாசித்தேன். பதின்ம வயதும் வந்தது. கொழும்பு வாழ்க்கையும் வந்தது. விடுதியிலும் தங்கிப்படித்தேன். பள்ளிக்கூடத்தில் ஆங்கிலப்புத்தகங்கள் தாராளமாகக் கிடைக்கும். அப்படிக் கிடைத்தவற்றில் Nancy Drew, Hardy Boys அத்தனையும் வாசித்தேன். அதுவே பெரும்பான்மை வாசிப்பானதில் ஒரு கட்டத்தில் சலித்தும் போனது. ஆங்கில இலக்கியப் பாடத்துக்குக்கு பண்பியல் புத்தகங்கள்தான் முக்கியமாக இருந்தது. ஆங்கில ஆசிரியையிடம் கேட்டு எங்கள் வயதிற்குரிய பதிப்புக்களை பெற்று வாசித்தேன்..Mill on the Floss, Pride and Prejudice, Macbeth, இன்னும் பல. பள்ளிக்கூட மாணவர் விடுதியில் நூலகம் ஆரம்பித்தோம். அதில் Anne of Green Gables தொடரை வாசித்தேன். இப்படி இருக்கையில் ஒருநாள் ஒரு அரைவாசி கிழிந்த புத்தகம் அகப்பட்டது. தொடக்கமுமில்லை..முடிவுமில்லை. நடுவில் காடையர்/குண்டர்களின் அராஜகங்கள் விபரிக்கப்பட்டிருந்தன. என்ன முயன்றும் புத்தகப் பெயரை அறிய முடியவில்லை. புத்தகத்தையும் என்னால் மறக்க முடியவில்லை. (1997/1998 இல் 'பெண்களுக்கான ஆராய்ச்சி மைய'த்தில் (CENWOR)வேலை செய்கையில் தான் முழுப்புத்தகமும் வாசிக்கக் கிடைத்தது - "முறிந்த பனை").

அருந்ததி ராயின் "God of Small things" தொடக்கத்தில் கொஞ்சம் இழுபட்டாலும், நன்றாக இருந்தது.பிறகு ரமணி சந்திரனின் கதைகள் வாசித்தேன். ஆங்கில காதல் கதைப் புத்தகமான Mills & Boon இன் தமிழாக்கமாக இருந்ததாலும், பெரிதாக அதிலிருந்து 'பெற' ஒன்றுமிருக்காததாலும் அவற்றை வாசிப்பதை நிறுத்தி, லஷ்மிக்குத் தாவினேன். அவவின் கதைகளின் முடிவுகள் ஊகிக்கக் கூடியதாக இருந்தமை பிடிக்கவில்லை. அவவையும் விட்டு, சிவசங்கரி, அனுராதா ரமணன் வாசித்தேன். என்னென்ன வாசித்தேன்..பிடித்ததா என்று ஒன்றும் ஞாபகமில்லை. வந்தா இந்துமதி. அதுவரை வாசித்தவற்றிலிருந்து அவவின் படைப்புகள் வித்தியாசப்பட்டிருந்தமை கவர்ந்தது. ஒன்றிரண்டு தவிர, கிடைத்தவை அனைத்தையும் முழுவீச்சில் வாசித்து முடித்தேன். இவற்றுடன் கைக்குக் கிடைக்கும் எல்லாச் சஞ்சிகைகளும் என் வாசிப்புக்கு இரையாகும். கொஞ்சம் வித்தியாசமான வாசிப்பைத் தந்தது என் மச்சான் வீட்டிலிருந்த புத்தகங்கள்தான். பெண்ணியம், நவீனத்துவம் என்று பல புதுச் சொற்களும் அவை சார்ந்த படைப்புகளும் அறியப்பெற்றேன். மல்லிகை இதழும் அங்கே தான் அறிமுகமானது. வாசிக்க கஷ்டமாக இருக்கிறதென நானாகவே தீர்மானித்து வாசிக்காமல் விட்டு "அட! விட்டுட்டமே" என இப்ப வருந்தும் படைப்பு "தாய்". தினமுரசு வாரப்பத்திரிகையில் மொழிபெயர்ப்பாக வெளிவந்தது. மொழிபெயர்ப்புகள் எளிமையான நடையில் இருப்பதில்லை என்பது எனது கருத்து. இங்கே இப்போது "விலங்குப்பண்ணை" ஒரு இலவச தமிழ்ப்பத்திரிகையில் வெளிவருகிறது. எத்தனை பேர் வாசிக்கிறார்களோ தெரியவில்லை!

இங்கேயுள்ள வாசிகசாலையில் நிறைய ஆங்கிலப்புத்தகங்கள் (7 daughters of Eve, The Alchemist, The Last Ride,The Dead Sea Scrolls, Mistress of Spices, தொல்பொருளியல் சம்பந்தமான புத்தகங்கள், Dean Koontz & Stephen King படைப்புகள்) எடுத்து வாசிப்பதுண்டு. அவுஸ்திரேலியாவுக்கு வந்த புதிதில் ஒருவரைச் சந்திக்கக் கிடைத்தது. 2004ல் இணையத்தில் வாசிக்கும் வரை அவரைப்பற்றியோ அல்லது அவர் படைப்புகளைப் பற்றியோ தெரியாது. "வாசிக்கிற பழக்கம் இருக்கோ" என அவர் கேட்டதற்கு ஆமென்றேன். "நல்லது. அப்பத்தான் பலதையும் அறியலாம்" என்றார். தொடர்ந்த 2/3 சந்திப்புக்களிலும் அவருடன் கதைத்திருக்கிறேன். அவர் எஸ்.பொ. நல்ல படைப்புகள் தாங்கி 'கலப்பை' என்றொரு காலாண்டு சஞ்சிகை வெளிவருகிறது. இலங்கையில் போன்று தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பதில்லை இங்கே. யார் வீட்டிலாவது போய் "தமிழ்ப்புத்தகம் என்ன இருக்கு?" என்றால் ஆ.வி/குமுதத்தைத் தான் நீட்டுகிறார்கள். " இவையல்ல..புத்தகம்?" என்று அழுத்திக் கேட்டால் வினோதமான பிராணியைப்போல பார்க்கிறார்கள்! :o(

இப்போது வாசித்துக்கொண்டிருப்பவை:
- பெரிய புராணம் ஒரு ஆய்வு
- Memoirs of a Geisha.

என் அடுத்த வாசிப்புகள்:
- கோயில் நூலகத்திலிருந்து எடுத்து வர இருக்கும் ஈழத்துப்பூராடனாரின் 'தமிழழகி'

- Da Vinci Code (இன்னும் வாசிக்கவில்லையா என்று புருவம் உயர்த்துபவர்களுக்கு: நான் நூலகத்தில் இதற்கு முன்பதிவு செய்து 7 மாதமாகிறது!!)

பெருமூச்சு!

வெந்த புண்ணில் வேலைப் பாச்சுற மாதிரி துளசி ஒரு வேலை செய்து போட்டா! ஹ்ம்ம்..!! அவ சொல்லுறதை சொல்லிட்டுப் போய்ட்டா...என்ட மனம் படுற பாடு எனக்குத் தானே தெரியும்.


அப்பிடி என்னதான் செய்தா/சொன்னா என்று சுட்டில போய் பாத்துட்டு வந்திருப்பீங்க. பாக்காதவர்களுக்கு: வலைப்பதிவர்கள் இப்ப விளையாடிக் கொண்டிருக்கிற விளையாட்டாம் (நான் இதை தட்டச்சி முடிக்க முதல் அவங்க விளையாடியே முடிஞ்சு போம்!) என்று என்னையும் இழுத்து விட்டா இந்த துளசி(க்கா/ம்மா). அவங்கவங்கட புத்தக அலுமாரில என்னென்ன இருக்கு, இப்ப என்ன வாசிச்சுக் கொண்டிருக்கிறாங்க என்று எழுத வேணுமாம். எல்லாருக்கும் புத்தக அலுமாரி என்டா எனக்கு அது புத்தக 'அழு'மாரி! வேறென்ன பின்ன..இருக்கிற ரெண்டிலயும் நிறைஞ்சு வழியிறது கணவரது முகாமத்துவம், கணக்கியல் மற்றது என்னுடைய கணினி சம்பந்தப்பட்ட புத்தகங்கள் தான். இதெல்லாத்தையும் விட்டிட்டுப் பாத்தா கொஞ்ச கணினி, பொருளாதார, ஆ.வி/குமுதம் , ரீடர்ஸ் டைஜஸ்ட், 3 குறுக்குத் தையல் டிசைன் இதழ்களும் இரண்டு பேருடைய பாடக்குறிப்புகளும் ஆங்கில அகராதியும் என்சைக்ளோபீடியாவும் மிச்ச இடத்தில் முக்கால்வாசியை ஆக்கிரமிச்சுக் கொண்டிருக்கும்.

அதெல்லா.. ஆ..ஆ..த்துக்கும் பிறகு ஒரு 3 - 7% வீதம் மிச்சம். இதுக்குள்ளதான் 'புத்தகங்கள்'.
கவனமா நோண்டிப்பாத்ததில:

சிவகாமி இன்னும் அவட சபதத்தோட மாமல்லரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறா.(இவவோட சேர்த்து புத்தகக்டையில இருந்தது காணும் என்டு கூட்டிகொண்டு வந்த வந்தியத்தேவன், குந்தவை, வானதி, அருண்மொழி எல்லாரும் இலங்கையிலே நிண்டிட்டாங்கள்.)

பாரதியாரும் கவிதை பாடிக்கொண்டிருக்கிறார்.

சத்தியமா இந்த பாரதியார் கவிதையும் சிவகாமி சபதமும் ஆ.வி/குமுதமும்தவிர வேற ஒரு தமிழ்ப்புத்தகமும் வீட்டில இல்லை! (அண்ணியிட மாமாட நினைவுப் புத்தகம் தான் 4வது) வந்து..இந்த எண்கணிதச் சாத்திரப் புத்தகத்தையும் இதுக்குள்ளே சேர்க்கலாமோ?

ஒரு இந்து சமயப் புத்தகம் "Dance of Siva"
மாண்டூக்கிய உபநிஷதம்
மைக்கல் ஜக்சன்ட Moon Walking
ஸ்டீபன் கிங்கின் IT
In the footsteps of Eve
2 - 3 ISKON புத்தகங்கள்.
The Twentieth Train to Auchswitz


இவ்வளவுந்தான் என்ட 'அழு'மாரியில.

எல்லாரும் எல்லாரையும் கூப்பிட்டிட்டாங்க. நான் என்ட பங்குக்கு இந்த விளையாட்டில பங்கு கொள்ள இன்னும் அழைபடாதவர்களையும் வசந்தனையும் க்ருபாவையும்(இவங்களை யாரும் எனக்கு முன்னமே கூப்பிட்டிருந்தா நான் பொறுப்பில்ல.) கூப்பிடுறன்.

சரி அழைப்பிதழ் அனுப்பியாச்சு!

அங்க இலங்கையில வீட்டில இருந்த புத்தகங்கள்...ஹ்ம்ம்...பெருமூச்சுத்தான் விடேலும். அடுத்த முறை போககிடைச்சா எல்லாப்புத்தகங்களையும் சுருட்டிக் கொண்டு வாற திட்டத்தில இருக்கிறன். அம்மாட்ட சொல்லிடாதீங்க...உஷ்ஷ்!! அடுத்த பதிவில எப்பிடி வாசிப்புப் பழக்கம் தொடங்கினது..வளந்தது என்டு இந்தப் பதிவுக்கு ஒரு prequelம் இப்ப என்ன வாசிச்சுக் கொண்டிருக்கிறன் என்று ஒரு sequel உம் 2 in 1ஆகத் தாறன்.

நாயே..!

எனக்கு நண்பன் ஒருவன் இருக்கிறான். இருவருக்கிடையிலும் வாயில் நாய் மாடு பண்டி குரங்கு என்று சகல மிருகங்களும் தாராளமாக வந்து போகும்.

ஒரு நாள் அவன் சொன்ன/செய்த எதற்கோ பதிலாக நான் கொஞ்சம் இரைந்து கதைத்து விட்டேன். அவன் என்னை கேட்டான் "ஏன் இப்பிடி நாய் மாதிரிக் குலைக்கிறாய்?"

அவன் அப்படி கேட்டதற்கு நான் சொன்னேன்: நீ என்னை நாய் என்று திட்டுவதால் தான் நான் குலைக்கிறேன்"

அதற்கு அவன்: "உன்னை எப்பவாவது அப்பிடி ஏசியிருக்கிறனா நாயே!"


அதைக் கேட்டதும் எனக்குச் சிரிப்பு வந்தது. நான் சிரிக்கத் தொடங்கியதும் கோபம் வந்து விட்டது அவனுக்கு. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு தான் அவனுக்கே தான் சொன்னது உறைத்தது. பிறகென்ன..ஒரே சிரிப்புத்தான்!

உன்னை 1 கேட்பேன்..

இதெல்லாம் தேசத்துக்கு மிகவும் முக்கியமான கேள்விகளா என்றெல்லாம் ஆராயாமல்..பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

1. முகில்களின் நிறை அளக்கப்படுவதுண்டா? எப்படி அளக்கிறார்கள்?

2. கவலையாக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.நண்பர் வந்து தேற்றுகிறார்.."இதுக்கெல்லாம் போய் கவலைப்படாதே...எத்தனை பேர் உன்னை விட கஷ்டமான நிலமையில் இருக்கிறாங்க என்று யோசி". பேச்சுக்கு உங்களை விட கஷ்டத்தில் "க" என்பவர் இருப்பதாக வைத்துக் கொண்டால், அவருக்கும் ஒரு நண்பர் வந்து (உங்களூக்கு உங்கள் நண்பர் சொன்னது போலவே) தேறுதல் சொல்லலாம் தானே...அப்போ உங்களுக்கு "க" போல "க" வுக்கு "ப" என்று ஒரு ஆள் வரக்கூடும். "ப" வுக்கு ஒரு "ச" இருப்பார்.(என்னை "நீ போய் 'சா' " என்று சொல்லக்கூடாது ஆமா!!)இப்படியே போனா யார்தான் அந்த மகா..ஆ..ஆ துர்பாக்கியசாலி?தேற்றுவதற்கு நண்பர் இல்லாதவரா?

3. "அ" ஒரு விதவை. "அ" வை திரு."எ" திருமணம் செய்தால், "எ" விதவைக்கு வாழ்வளித்தவர் எனப்படுவார். ஆனால் அதே "எ" ஒரு தபுதாரனாயிருந்து "அ" அவரைத் திருமணம் செய்து கொண்டால் "அ" 2ம்(2/3/4 எது வேணா போட்டுக்கொள்ளலாம்) தாரம். அது எப்படி? ஏன் "அ" "எ"க்கு வாழ்வளித்தவராகக் கூறப்படுவதில்லை?

இனிமேலும் கேட்கப்படும்...(ஏன் ஓடுறீங்க??) ;o)

ஆசை ஆசை இப்பொழுது!

முதலில், என்னைப் போலவே ஆசைகளையுடைய கறுப்பிக்கு அவ எழுதின "கனவு" பதிவுக்காக பெரீய்ய்ய்யதொரு நன்றி. இந்த மாதிரி ஆசைகள் எனக்கு மட்டும் தான் இருக்கும் என இவ்வளவு நாளும் naive ஆக நினைத்துக் கொண்டிருந்த என்னை 'அப்படியல்ல' என்று உணர வைத்ததற்கு!

கறுப்பியைப்போலே எனக்கும் ஆசை..இலங்கையையும் இந்தியாவையும் அலுக்கும் வரை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று. இதைப்போலவே இன்னும் ஆசைகள் இருக்கு. நனவாக்குவது எந்தளவுக்குச் சாத்தியப்படும் என்றுதான் தெரியவில்லை. அம்மா ஆட்டுக்குட்டி என்று பிள்ளைகள் வாலைப்பிடிக்க முன்னம் இவற்றைச் செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் அவர்கள் வளர்ந்த பிறகுதான்!(பிள்ளைகள் கட்டாயம் பிறக்கும்..வாலைப்பிடிக்கும் என்று நினைப்பது நான் வளர்ந்த பின்னணியின் default எண்ணங்களில் ஒன்றா??)

தொல்பொருள் ஆராய்ச்சியிலும், பழங்கால அரண்மனை/கோயில்/குகை/சிற்பம்/கல்வெட்டு இதெல்லாம் பார்ப்பதிலும் ஈடுபாடு அதிகம். சரித்திரக் கதைகள் வாசித்தது இந்த ஆசைகளை அதிகரித்து விட்டது. பார்க்க வேண்டும் என்று நினைக்கும் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தொ.கா.பெட்டியில் இது சம்பந்தமாய் டொக்யுமென்ட்ரி போட்டார்களோ..அந்தப் பொழுதில் அதைப் பார்ப்பதைத் தவிர வேற வேலை ஒன்றும் நடவாது. நிறைவேற்றக் கடினம் அல்லது இன்னும் கொஞ்சம் காலம் தேவை என நான் கருதும் என் ஆசைகளை (இப்போதைய நிலவரப்படி) பட்டியலிட்டால்:

1. நாடுகள் சுற்றிப்பார்க்க வேண்டும்
2. இலங்கையில் சைக்கிளில் திரிய வேண்டும் + இடங்கள் பார்க்க வேண்டும்
3. இந்தியாவில் காலவரையறையன்றி சுற்றிப்பார்க்க வேண்டும்
4. தொல்பொருளாராய்ச்சி நடக்கும் இடத்தில் தங்கி, ஆராய்ச்சிக்குழுவில் இடம் பெற வேண்டும் (புதிதாய் எதாவது கண்டுபிடித்தல் மிகவும் விரும்பப்படும் :o)

மிக மிக முக்கியமாக: இவையெல்லாவற்றுக்கும் போதுமானளவு $$ வேண்டும்!! ;o)

எனக்குள் ஒரு கேள்வி. அதைக்கேட்க முன்:
எனக்கு - ஒரு வீட்டிலோ, யுனிற்/அப்பார்ட்மென்டிலோ - தனியே /என் நண்பிகளுடன் தங்கி வாழ வேண்டும் என்று ஒரு ஆசை இருந்தது(இப்பவும் சில வேளை தலை தூக்கும்!). ஆனால் அதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. திருமணம் முடித்து வெளிநாடு வந்துமாயிற்று. ஆசை எட்டிப்பார்க்கும். என் ஆசையை வாழும் , இங்கைத்தேய நண்ப நண்பிகளை பொறாமையுடன் பார்க்க வைக்கும். எனக்கும் அப்பிடி அவர்களைப்போல இருக்க ஒரு சந்தர்ப்பம் வந்தது. கணவர் கனடா போக வேண்டிய தேவை ஏற்பட்டது. 20 நாட்கள். ஆசை நிறைவேறிற்று. எப்படியெல்லாம் இருக்கும் என்று கற்பனை செய்தேனோ அப்படியே இருந்தது. சந்தோசமாக உணர்ந்தேன். அதற்காக திருமணவாழ்க்கை பிடிக்கவில்லை என்பது அர்த்தமல்ல. குடும்பத்தினரோடு கழிக்கும் நேரம்/ வாழ்க்கை தந்ததை விட நான் தனியே இருந்து சுதந்திரமாகச் செயற்பட்டது எனக்கு வித்தியாசமானதொரு அனுபவத்தைத் தந்தது. முக்கியமாக, நான் குறிப்பிட்ட எதையும் செய்யும் போது இன்னொருவரைக் கருத்தில் கொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை. அவருக்கு வசதிப்படுமா..விருப்பமான activity ஆக இருக்குமா என்றெல்லாம் யோசிக்காமல், carefree யாக இருக்க, எனக்கு விருப்பமானதெல்லாம், விரும்பியபோதெல்லாம் செய்யவும் முடிந்தது.( அடிப்படையில் சொல்லப்போனால் பொறுப்புகளற்றிருப்பது!)

சரி கேள்விக்கு வருகிறேன்: எந்த இடமாகவோ பயணமாகவோ இருந்தாலும், தனித்து அதைப் பார்க்க/பயணிப்பதற்கும் கூடவே இன்னும் ஆட்களுடன் பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கும். அனுபவம் கட்டாயம் வேறுபடும். நினைத்த மாத்திரத்தில் பயணம் கிளம்புவது சாத்தியமாவதில்லை. திருமணமானோர் பாடு கேட்கவே வேண்டாம்..பயணி தன்னை மட்டுமல்லாது குடும்பத்தவரையும் கருத்தில் எடுக்க வேண்டிய தேவை (மிகச் சிலரைத்தவிர) இருக்கிறது. தனி அனுபவம் பெற விரும்பும் ஒருவருக்கு (கறுப்பி / என்னைப் போல!) தனித்திருப்பதுதான் இதற்கு தீர்வாக முடியுமா? அல்லது ஆசைகளின் நிறைவை, கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி அதன் மூலம் பெறலாமா?

உயிர் காத்தல்

இந்தப்புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பது பற்றி கடந்த ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். வாசித்து முடித்துவிட்டேன். என்ன புத்தகம் என்று கேட்கிறீர்களா? முதலில் புத்தகத்தைப் பற்றிச் சொல்லிவிட்டு பிறகு பெயரைச் சொல்கிறேன். கொஞ்ஞ்ஞ்சம் பொறுத்தருள்க :o)

ஹொலொகாஸ்ட் பற்றி கட்டாயம் அறிந்திருப்பீர்கள். எத்தனை லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். எல்லாம் ஹிட்லருக்கு அவ்வினத்தின் மேல் இருந்த வெறுப்புத் தான் காரணம். சிறுவர், முதியோர் என்றெல்லாம் பாகுபாடு இல்லாமல் கொன்று குவிக்கப்பட்டார்கள். ஜேர்மனி, ஆக்கிரமித்த நாடுகளிலெல்லாம் யூத வெறுப்பு பிரச்சாரம் நடத்தியது. ஆனாலும் பெல்ஜியத்தில் மிக மிக மிகக் குறைந்த அளவிலேயே ஜேர்மனியின் யூத எதிர்ப்பிற்கு ஆதரவு கிடைத்தது. ஆனாலும் இது ஜேர்மனிக்குப் பிரச்சனையாக இருக்கவில்லை. பெல்ஜியத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான யூதர்கள் சித்திரவதை முகாம்களிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். மீண்டு வந்தவர் எண்ணிக்கை மிகக்குறைவே. கைது செய்யப்படும் அல்லது தாமாகவே (உண்மை சொன்னால் விட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையில்) நாம் யூதர் என்று ஒத்துக் கொண்டவர்களும் முதலில் 'மெக்கலன்' என்கிற இடத்திலிருந்த ஒரு முகாமுக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். ஒரு ரயில் பயணத்திற்குரியளவு ஆட்கள் சேர்ந்ததும் ரயில்களில், கால்நடைகளை அடைத்துச் செல்வது போல் மனிதர்களையும் அடைத்தே அவர்களின் மரணத்தை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டர்கள். இந்த ரயில் பயணங்களில் ஒன்று நடுவழியில் வழிமறிக்கப்பட்டதிலும், ஓடும் ரயிலில் இருந்து குதித்தவர்களூமாக அந்த இரயிலில் பயணித்த யூதர்களில் கிட்டத்தட்ட எட்டில் ஒரு பங்கு பேர் தப்பினர்.

ஆயுதக்குழுவினரால் 'அபாயகரமானது' என நினைக்கப்பட்ட செயலைச் செய்தோர் மூன்றே மூன்று பேர். அவர்களிடமிருந்த ஆயுதங்கள்: ஒரே ஒரு கைத்துப்பாக்கியும், சில pliersம் தான். கூடவே, இரயிலை நிற்பாட்ட உதவியாக சிவப்புக்கடதாசியால் சுற்றப்பட்டு நிறுத்தச் சைகை விளக்குப் போல உருமாற்றப்பட்ட ஒரு அரிக்கன் விளக்கு. விளக்கின் உதவியுடன் ரயிலை நிறுத்தி, ஆட்களை தப்பிச்செல்லுமாறு சொன்னார்கள்.அத்துடன் தப்பிச்சென்றவர்களுக்கு, கைச்செலவுக்கென 50 பிராங் பணத்தையும் கையளித்தார்கள். இதில் ஈடுபாட்ட மூவர்: யூரா லிவ்ஷிட்ஸ், ஜீன் ஃப்ராங்கள்மொன், ரொபேர்ட் மைஸ்ற்ரியௌ ஆகியோர்.

புத்தகத்தின் பெயர்: The Silent Rebels (ISBN: 1903809894) அல்லது The 20th Train to Auschwitz (ISBN: 1843540444)

இந்தப்புத்தகத்தை வாசிக்கும் வரையில் நான் இந்நிகழ்வைப் பற்றிக் கேள்விப்படவேயில்லை. கொடூரச் சாவிலிருந்து ஷிண்ட்லரைப் போலவே மக்களை மீட்ட இவர்கள் பரவலாக அறியப்படாதிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியதாக இருக்கிறது.

ஒரு கடிதம்!

17 மே 2010



அன்புள்ள ஷ்ரேயா

எப்படி சுகம்,இன்றைக்கு இதை எழுதும் போது நான் நலமாக இருக்கிறேன். நீர் இதை வாசிக்கும் போதும் & எப்போதும் எல்லாரும் நலமாக இருக்க கடவுளை வேண்டுகிறேன். எல்லாக் கடிதங்களிலும் நலம் பற்றிக் கேட்கிறோமே..கேட்கப்படுகின்ற நலம் வெறும் உடல் நல விசாரிப்பாக மட்டுமே இருக்கிறது. யாருக்குக் கடிதம் எழுதப்படுகிறதோ அவரது மனமும் நலம் விசாரிக்கப்படவேண்டும் என்றே நினைக்கிறேன். ஆனால் அதை எப்படிக் கேட்பது? "மனத்தளவில் நலமாக இருக்கிறீர்களா?" என்றா? "எனக்கு மனநலக் குறைவா" என்று கேட்டு அடிக்க வந்து விட மாட்டார்களா? :o)

நீர் 2005 இல் சொல்வது போல் நான் இப்போது சொல்கிறேன்: "இங்கே வரமுதல் என் வாழ்வில் நான் கற்றவை/உணர்ந்தவை மிகக் குறைவு. அதைப்பற்றிய மனவருத்தங்கள் நிறைய உண்டு எனக்கு. இங்கே வந்ததிலிருந்து நான் நிறையக் கற்று/உணர்ந்து கொண்டுள்ளேன். என்னை வளர்த்துக் கொண்டுள்ளேன். இன்னும் முன்னேற எவ்வளவோ உண்டு". மிகவும் உண்மையான வார்த்தைகள். அதைப் போலத் தான் நான் இப்போது உணர்கிறேன். நீர் என்னதான் சொல்லும்... இந்தச் சோம்பேறித்தனம் தான் என்னை விட்டால் தான் ஏதிலியாகிவிடுமாம் என்று கூடவே ஒட்டிக் கொண்டு திரிகிறது. என்னைச் சூழ்ந்திருக்கும் அருமையான குடும்பத்தையும், நண்பர்களையும் குறித்து நான் சந்தோசப்படுகிறேன். மிகவும் கொடுத்துவைத்தவள் நான். கடைசியாய் நான் உமக்குக் கடிதம் எழுதிய காலத்தில் இருந்தது போன்று வெடுக்கென நினைத்ததைச் சொல்லிவிடுவதில்லை இப்போது. ஓரளவுக்கு யோசித்துக் கதைக்கிறேன்.

இப்பவும் வெளிநாட்டிலா இருக்கிறீர்? உலகம் சுற்றிப் பார்க்க விருப்பமாயிருந்தீரே..அந்தக் கனவு நிறைவேறியதா? எந்தெந்த நாடுகளுக்குப் போனீர்? எத்தனையாம் ஆண்டு? தற்போது எங்கே, என்ன வேலை செய்கிறீர்? உம்முடைய பட்டப்படிப்பு என்னவாயிற்று? ராம் அண்ணாவின் நெறியாள்கையில் நடந்த நாடகத்துக்குப் பிறகு வேறேதாவது நாடகத்தில் நடித்தீரா?தன்னையறிதல்" கலந்துரையாடல்கள் எப்படிப் போகின்றன? கடைசியாக நான் போன வகுப்பில் நிலையானவை, நிலையல்லாதவை பற்றியும் , நிலையானவை போலத் தோன்றும் நிலையல்லாதவை பற்றியும் கதைத்தோம். உணர்ச்சிகள், ஒருவரின் தனித்தன்மை (individuality), நமது மனதிலுள்ள எண்ணங்கள்/ஆசைகள்/பயங்கள்/கனவுகள் - இவற்றின் தோற்றம்..இந்த தலைப்பிலே அமைந்த உரையாடல்கள்தான் எங்கட எல்லா உரையாடல்களுக்குள்ளும் நிறையக் கற்றுத் தந்தவையும், எனக்கு மிகவும் பிடித்தவையும். அடிக்கடி இந்தச் சந்திப்புகளுக்கு இப்போ போகாததையிட்டு கொஞ்சம் மனவருத்தம்.

வலைப்பதிவர்களில் யாரையாவது சந்தித்திருக்கிறீரா? யார் இந்த வார நட்சத்திரம்? இந்தக்கடிதம் பற்றி வலைப்பதிவில் எழுதுவீரா? இந்தக்கடிதம் உமக்குக் கிடைத்தவுடன் "கடிதம் கிடைத்தது" என மறக்காமல் ஒரு வரியாவது எழுதவும்.குடும்பத்தில் அனைவரையும் அன்புடன் கேட்டதாகச் சொல்லவும். குறிப்பாக அம்மாவை. உமது மற்றைய நண்பிகள் என்ன செய்கிறார்கள்?அவர்களும் தத்தம் குடும்பம், வேலைகள் என்று பிஸியா?அவர்களையும் நலம் விசாரித்ததாகச் சொல்லவும்.

கடிதம் நீண்டு விட்டது. இதை ஒருங்குறியில் எழுதியிருக்கிறேன். தற்போது இணையத்தில் அதுதான் பாவிக்கிறார்கள். ஒருவேளை உமது கணினியில் வாசிக்க முடியாமல் போகலாம். அதனால் கீழே இதனை ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறேன். எங்கே போய் தமிழுக்கு மாற்றி வாசிக்க வேண்டுமென உமக்குத் தெரியுந்தானே!

என்றும் அன்புடனும், அமைதியுடனும், மனநிறைவு+திடத்துடனும், தேகசுகத்துடனும் வாழ்க்கையை வாழ்க!

இப்படிக்கு,
அன்புடன்,
ஷ்ரேயா

கடிதத்தில் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் திகதியன்று எனக்கு (இன்ஷா அல்லாஹ்!) வரும்..எனக்கு நானே எழுதிக்கொண்ட கடிதம். ஏன் என்று கேட்கிறீர்களா? சுத்தமா தெரியாது ;o)

உங்களுக்கும் எதிர்காலத்தில் உங்களிடமிருந்து ஒரு கடிதம் வர ஆசையா? இவர்கள்தான் அஞ்சல்காரர்கள் : www.futureme.org

வந்தேறுகுடிகளா?

இலங்கையில் நாகர்களும் இயக்கர்களும்(இவர்களது வழித்தோன்றல்கள்தான் வேடர்களா?) இருந்தார்கள். பிறகு நாடு கடத்தப்பட்ட விஜயன் வந்திறங்கியதிலிருந்து புதிதாக ஒரு இனத்தவர். புதியவர்களே சிங்களவர்கள். இப்படித்தான் எங்கள் வரலாற்றுப் பாடத்தில் படித்திருக்கிறோம். ஏற்கெனவே தீவின் வடபாலிருந்த நாகர்களைத் தமிழரென சிங்கள வரலாற்றறிஞர்கள் பலர் ஏற்றுக் கொள்வதில்லை.

இப்போதும் பல சிங்களவரைக் கேட்டால் தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றுதான் சொல்வார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை - வரலாற்றுப் புத்தகத்தில் இருப்பதுதானே அவர்களுக்குத் தெரியும். அப்போ வடக்கில் இருந்த நாகர்கள் யார் எனக் கேட்டால் முழிப்பார்கள். வரலாற்றுப் புத்தகங்களில், (எந்த நூற்றாண்டுகளென மறந்து விட்டேன்) இன்னின்ன நூற்றாண்டுகளில் ஏற்பட்ட தென்னிந்தியப் படையெடுப்பின் போது (உதாரணம் ராஜ ராஜ சோழன்) வந்த படைகளில் இருந்தவர்களிற் பலர் - இலங்கையரை மணம் செய்து - இலங்கையிலேயே குடியேறியமை என்று குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் தான் முதலில் இலங்கைக்குத் தமிழர் வந்தனராம். அதற்குப் பிறகு பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் தேயிலை / கோப்பித் தோட்டங்களில் வேலைக்காக அமர்த்தப்பட்டு, இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் தமிழர்கள் வந்தமை.

இவ்விரண்டு காரணிகளாலுமே இலங்கையில் தமிழ்க்குடியேற்றம் உண்டாயிற்று என்பதே வரலாற்றுப் பாடங்களினது அசைக்க முடியாத கூற்று. இந்த எண்ணம்/நிலைப்பாடு அரசியல்வாதிகளினால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களில் மட்டுமல்லாது, ஆவணங்கள், இணையத்திலும் இலங்கை வரலாறு எனத் தேடினால் மேற்கூறிய விதத்திலேயே இலங்கை (தமிழரது) வரலாறு விபரிக்கப்படும். இதனை படித்தவர்களும் நம்புவதுதான் வேடிக்கை. இலங்கையிலே விஜயனின் வரவுக்கு முன்னமிருந்தே வாழ்ந்து வந்த நாகர்களின் வழி வந்தவரே தமிழர் என்பது எனது நம்பிக்கை. இது சரியா பிழையா?

இங்கே எனது அலுவலகத்தில் இரண்டு தென்னிந்தியர் உளர். அதில் ஒருவர் கொஞ்ச நாளைக்கு முதல் "தென்னிந்தியாவில் உங்களது மூதாதையரின் இடம் என்ன?" என்று கேட்டார். எனக்கு முதலில் விளங்கவில்லை. தெரியாது என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். (இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து கடலால் இலங்கை பிரிக்கப்பட்டு எத்த்த்தனை ஆயிரம் ஆண்டுகள். இதிலே அம்மம்மாட அம்மம்மாட (x 250)......அம்மம்மாட ஊர் எதுவென்று கேட்டால் எனக்கு எப்படித் தெரியும்!!) பிறகு தான் விளங்கிற்று, அவர் பிரிட்டிஷாரால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட தென்னிந்தியர்களின் வழித்தோன்றல்களில் ஒருவராக என்னை நினைத்திருக்கிறார். போய்ச் சொன்னேன், "அப்படியல்ல. நான் இலங்கைத் தமிழ்". அவருக்கோ குழப்பம்.."பிரிட்டிஷாரால் கொண்டு போகப்பட்டவர்கள் தானே இலங்கையில் தமிழர் " என்று கேட்டார். இலங்கை வரலாறு சொல்ல வேண்டியதாயிற்று (என் version :o) ). ஆனாலும் அவர் முழுக்க convince ஆகின மாதிரித் தெரியவில்லை.

மற்றத் தென்னிந்தியருடன் கதைக்கும் போது, அதிலும் இலங்கை வரலாறு மூக்கை நுழைத்தது. தமிழர் குடியேற்றம் தென்னிந்தியப் படையெடுப்பின் (மீண்டும், ராஜ ராஜ சோழன்) போது, தமிழ்ப்போர்வீரர்கள் இலங்கையில் குடியேறின போது தான் ஆரம்பித்தது என்றே இவர் சொல்கிறார். (இவர்தான் இராணுவத்தில் இருந்தவர்..அதனால் இப்படி யோசித்திருக்கக் கூடும்)

எது சரி? நான் நினைப்பதுவா? முதலில் குறிப்பிட்ட இந்திய நண்பரது எண்ணமா? இரண்டாவது இந்திய (இராணுவ) நண்பரின் கூற்றா? அல்லது இவர்கள் இருவரும் சொல்வதைச் சேர்த்துச் சொல்லும் இலங்கை வரலாற்றுப் புத்தகமா?

காலைப்பொழுது

அவர்களை நான் கண்டது ட்ரெயினைப் பிடிக்க அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் போது தான். அன்றைக்கு எழும்புவதற்குக் கொஞ்சம் பிந்தி விட்டது. தொடராக அப்படியே எல்லாச் செயல்களும் பிந்தி விட்டன. தொடர்வண்டியையாவது பிந்திப்போகாமல் பிடித்து விட வேண்டும் என்று ஓட்டமும் நடையுமாகச் சென்று கொண்டிருந்தேன்.

அப்பா முன்னுக்கு நடக்க, அக்காவும் தங்கையும் தம் பைகளை முதுகில் கொழுவிக் கொண்டு நடந்து வந்தார்கள். அப்பாவிடம் என்னவோ கேட்டா அக்கா. அப்பாவும் ஆமென்று சொன்னாரென நினைக்கிறேன். விரையும் என்னைப்பார்த்து புன்னகைத்தார். எங்களுடைய ஊரில் இந்தியத் துணைக்கண்டத்தவர் அதிகம். எங்கள் நிறத்தில் யாரைக் கண்டாலும் ஒரு புன்னகை. சிலர் பதிலுக்குச் சிரிக்காமலும் போவதுண்டு. இவர்களும் துணைக்கண்டத்தவர்தான். அவர் பார்த்துச் சிரித்ததற்கு பதிலாக ஒரு அவசரப் புன்னகையை நானும் உதிர்த்து விட்டு அவ்ர்களைக் கடக்கையில் காதில் "good morning" ஒருமித்த குரலில் கேட்டது.

அவர்கள் சொல்வார்கள் என்று எதிபார்க்கவில்லை. good morning இனித்தது. அவசரமாகத் திரும்பி அவர்களுக்கும் பதிலுக்கும் சொன்னேன். என் வியப்பு அப்பட்டமாக குரலில் தெரிந்தது. அதே வாரம் திரும்பவும் சில முறை கண்டேன். அப்பவும் ஒரு வெட்கம் கலந்த புன்சிரிப்புடன் காலை வணக்கம் சொன்னார்கள். பதிலுக்குச் சொல்லிப் போனேன்.

இன்றைக்குக் காலையில் அப்பா, அக்கா கேட்ட எதற்கோ கடுமையாகப் பதில் சொல்லிக் கொண்டு வந்தார். என்ன சொன்னாரெனத் தெரியவில்லை. அவவுக்கு முகமெல்லாம் கறுத்து அழுகை வரும்போல இருந்தது. இந்த நிலையில் காலை வணக்கம் சொன்னால் திரும்பிச் சொல்வார்களோ என்று எனக்குத் தயக்கம். ஒன்றுமே பேசாமல் தொங்கிய தலையோடு போகும் அந்த வாடிய பிஞ்சு முகத்தைப் பார்த்தபடி - கடுஞ்சொல் சொன்ன அப்பாவைத் மனதினுள் திட்டிக் கொண்டு - நான் மௌனமாக அவர்களைக் கடக்க..

"ஹலோ"...

மாயாவும் மணற்புயலும்

இங்கே SBS என்று ஒரு தொ.கா.நிலையமொன்றுண்டு. அதிலே பல உலகத் திரைப்படங்கள் ஒளிபரப்படுவது வழக்கம். இந்தியப் படங்களாக நான் அதில் பார்த்தவை: டெரரிஸ்ட், தில்வாலே துல்கானியா லே ஜாயேங்கே<--இதை the braveheart takes away the girl என்பது போல மொழி பெயர்த்திருந்தார்கள்.), Sandstorm, மற்றது மாயா. சாண்ட்ஸ்டோர்மும் மாயாவும் எனக்குள்
ஏற்படுத்திய உணர்வுகளை மற்ற இரண்டும் ஏற்படுத்தவில்லை. டெரரிஸ்ட் படம், சில விடயங்களைக் காட்டிய விதம்(portray பண்ணிய விதம்) ஒரு விளங்கிக் கொள்ளாத / புரிந்து கொள்ளாத தன்மையைக் காட்டியது என்றே நான் நினைத்தேன்.

மணற்புயல் - வெள்ளி இரவு 12 - 1 மணியளவில் திரையிட்டார்கள் (அந்த நேரம் எதுக்கு முழிச்சிருந்து தொ.கா பார்த்தேன் என்றெல்லாம் கேட்கக் கூடாது) நடித்தவர்களில் நந்திதா தாஸை மட்டுமே அடையாளம் கண்டு கொண்டேன். படத்தில் அவவினது கதாபாத்திரத்துக்குப் பெயர் சன்வரி தேவி. கதையின் பின்புலம் ராஜஸ்தான். மட்பாண்டங்கள் செய்து விற்று பிழைப்பை நடத்தும் கீழ்ச் சாதிப் பெண்ணாக நந்திதா தாஸ். பிழை செய்தால் தட்டிக் கேட்கும் பெண். இவளைப் பற்றிக் கேள்விப்பட்டு, அரசாங்கத்தால் நடத்தப்படும் " ஸதின்" அமைப்பில் சேர அழைக்கிறார் ஒரு பெண்மணி. முதலில் இல்லையென்றாலும் பிறகு (ஷ்ரேயா நித்திரை கொண்டுவிட்டபடியால் ஏன் என்று தெரியவில்லை) போய் அதில் சேருகிறாள். இவ்வமைப்பு பெண்களுக்கானது. சிறு வயதுத் திருமணங்களை எதிர்ப்பது. ஊரில் ஒரு "உயர்"சாதியினரது சின்ன மகளுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. வைபவத்தின் போது போலீசார் வந்து அத்திருமணத்தை நிறுத்தி விடுகின்றனர். ஆனாலும் கையூட்டு வாங்கிக் கொண்டு திருமணம் நடத்தும் பெரியவர்களைக் கைது செய்யாமல் விடும் போலிஸ் அதிகாரி, தனக்குத் தகவல் வந்தது ஊருக்குள்ளிருந்து தான் என்று கிடைத்த கையூட்டுக்கு நன்றிக்கடன் செலுத்துகிறார். ஆரம்பிக்கிறது கஷ்டகாலம் சன்வரி தேவிக்கு. தொல்லை மேல் தொல்லை கொடுத்தும் அசையாமல் நிற்கும் அவளைப் பார்த்து ஊர்ப்பெரியவர்களுக்கு ஆத்திரம். சரியான பாடம் புகட்ட வேண்டும், அப்பத்தான் இவளது கொட்டம் அடங்கும் என்று சொல்லி, ஊர்த்தலைவர் உட்பட 5 பேர் சேர்ந்து அவளது கணவனுக்கு முன்னாலேயே அவளுடன் வன்புணர்கிறார்கள். இவர்கள் மீது வழக்குத் தொடர்கிறாள் ச.தேவி. அவளைக் காக்க இயலாமற் போனதை எண்ணிக் குமுறும் கணவனது நடிப்பு தத்ரூபம். படம் பார்க்கையில் ஆத்திரமும், கையாலகாத்தனமும் நம்மையும் தாக்குகின்றன. முறைப்பாடு செய்யக் காவல் நிலையத்திற்குச் செல்லும் சன்வரி தேவி தம்பதியை , கையூட்டுப் பெற்ற அதே அதிகாரி, மருத்துவச் சான்றிதழ் பெற்று வரும்படி சொல்லி திருப்பி அனுப்பி விடுகின்றான்.ஸதின் அமைப்பில் சேர்ந்ததாலேயே சன்வரி தேவிக்கு இத்தனை பிரச்சனைகளும் என்று உணர்ந்த அவ்வமைப்பின் அதிகாரி (ச.தேவியை சேர அழைத்த அதே பெண்) எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவுகிறா. இவர்களது வழக்கு, தத்தம் அரசியல் ஆதாயத்துக்காகப் பலரால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது & வழக்கு எவ்வாறு சாட்சியங்களும், அதிகாரிகளும் விலைக்கு வாங்கப்படுவதால் அலைக்கழிக்கப்படுகிறது என்பதே மீதிக் கதை.

சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளைப் பார்க்கப் பார்க்க இரத்தம் கொதிக்கிறது. ஆனாலும் என்ன நடந்தாலும் அயராது போராடும் சன்வரி தேவியும் உறுதுணையாக நிற்கும் கணவனும் மனதில் நிற்கிறார்கள்.


(இயக்குநனர் திக்விஜய் சிங்கின் முதல் படம்) மாயாவின் கதைக்களமோ வேறு. ஒரு சின்னப்பெண். தாய் தந்தையரை விட்டு, உறவினர் வீட்டில் வளர்கிறாள். அவ்வுறவினரின் மகனும் இவளும் நல்ல நண்பர்கள். அந்த உறவினரது வீடு முழுக்க பல்லிகள். பல்லியை இந்தப்படத்தில் ஏதோ ஒரு குறியீடாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். என் மரமண்டைக்கு எது என்னவென்று எட்டவில்லை :o(

ஒரு நாள் இவள் பெரிய பெண்' ஆகி விடுகிறாள். மாயாவை அவளது ஊருக்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செகிறார்கள். இவ்வளவு நாளும் சுதந்திரமாக விட்டவர்கள் கொஞ்சம் கட்டுப்பாடுகள் போடுகிறார்கள் என்று மாயாவுக்கும் உறவினச் சிறுவன் சஞ்சய்க்கும் பிடிக்கவில்லை. முன்பு மாதிரி விளையாடப் போக முடியாதே!! தாய் தந்தையரிடம் அழைத்துச் செல்லப்படும் மாயாவுக்கு அவளது உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விளக்குவார் யாருமில்லை. மாறாக அவள் தன் வயதுக்குரிய விடயங்களில் ஈடுபடும்போது, இடைநிறுத்தப்பட்டு 'நீ இப்போது ஒரு பெரிய/வளர்ந்த பெண்' என மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்படுகிறாள். ஊரிலுள்ளவர்களுக்குச் சொல்லி ஒரு பெரிய விருந்தும் விழாவும் என வீட்டவர் அவளைத் தயார்ப்படுத்துகின்றனர். என்ன விருந்து என்ன விழாவென்று எம்மையும் எதிர்பார்க்க வைக்கிறது. விருந்து நாளும் வருகிறது. அழகாக அலங்கரித்த மாயாவை கோயிலுக்கு அழைதுச் செல்கிறார்கள். பூசையோ, ஏதோ நடைபெற்ற பின் அவளை கதவுகள் கொண்டதொரு மண்டபத்துக்குள் வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கிறார்கள். என்ன நடக்கப் போகிறதென்று அறியாது விட்டாலும், தான் போகவில்லையென மறுக்கும் மாயா வலுக்கட்டாயமாக அவ்வறைக்குள் அனுப்பப்படுகிறாள். சஞ்சய் அது பிடிக்காமல் அவளை மீட்கும் நோக்கில் கதவை நோக்கி ஓடுகையில், அவனது பெற்றோரால் இழுத்து நிற்பாட்டப்படுகிறான். அங்கே அந்தப் பூட்டிய மண்டபத்துள் அழும் மாயாவும், அவளைக் காக்க இயலாமல் நாமும். அறை/மண்டபத்தின் நடுவே ஒரு மேடை. பலிபீடம் என்பது பொருத்தமாயிருக்கும். அப்பீடத்தின் விளிம்பிலிருந்து 10 வயத்துக்குரிய முழங்கால் கீழே தொங்க, மாயா அணிந்திருந்த சேலையைக் காணோம். அந்தக் கால்களுக்கு நடுவே தலைமைப் பூசாரி. அவளது கால் துடிப்பதுவும், பூசாரியின் புணர்வுச் செயற்பாட்டின் காலசைவும் காட்டப்படுகிறது. மாயாவின் அலறலில் திடுக்கிடும் சஞ்சய். ஏதோ கெட்டது தான் நடக்கிறது என அவன் உணர்கிறான். வரிசையாய் எல்லாப் பூசாரிகளும் மாயாவை 'ஆசீர்வதித்த' பின்பு, துவண்டுபோய் நடக்கமுடியாம்ல் வெளியே வரும் மாயா. இந்த விருந்தும் பூசையும் இதற்குத்தானாம். சஞ்சய்யின் சினேகிதன், அவனது சகோதரிக்கும் பூசாரி கெடுதல் செய்து விட்டதால் அவர் மேல் கோபமுடையவனாக இருக்கிறான். அவனும் சஞ்சயும் சேர்ந்து பூசாரி வீட்டிற்குள் இறைச்சியை எறிகிறார்கள்.அவர்களுடன் கூடவே எனக்கும் ஒரு அற்ப சந்தோசம்.

பருவமெய்தும் பெண்களை பூசாரிகள் புணர்வதால் அப்பெண்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என நம்பும் ஒரு சமுதாயம். இத்தனைக்கும் படத்திலே மாயாவின் பெற்றோர் படிப்பறிவற்றவர்கள் அல்லர். இதுவும் சன்வரிதேவியினதைப் போன்றே ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவியது. இந்த வழக்கம் இந்திய அரசினால் தடை செய்யப்பட்டாலும், இன்னும், வருடத்திற்கு கிட்டத்தட்ட 5000 சிறுமிகள் இக்கொடுமைக்கு (அவர்களது பெற்றோராலேயே) உட்படுத்தப்படுகிறார்கள் என்று ஒரு அதிர்ச்சியான புள்ளிவிவரத்தையும் இயக்குனர் தருகிறார். எனக்கு விளங்கவில்லை, ஒரு தாயானவள் தான் இப்படியான ஒரு கொடுமைக்குட்படுத்தப்பட்டதை, தனக்கு எவ்வளவு கஷ்டமாயிருந்ததென்பதை மற்ந்து விடுவாளா? மகளுக்கு அந்தக்கஷ்டம் வேண்டாமே என்று நினைக்க மாட்டாளா? அறிவில்லையா இவர்களுக்கு? இவ்வழக்கம் இன்னும் தொடர்கின்றமைக்கு யார் காரணம்?

படம் பார்க்கும் போது எவ்வளவு ஆத்திரமாகவிருந்ததோ, அதை விட இன்னும் பல மடங்கு எழுதுகையில்.

போகுமிடம் ஒளி வீச...

கொஞ்ச நாளா தொ(ல்)லைக் காட்சியில் ஒரு விளம்பரம் போடுறாங்க. ஒராள் இரவில கட்டிலால எழும்பி, பிய்ச்சுப் போட்ட கடதாசி துண்டுகளை சாளரத்துக்குள்ளால வெளியில எறியிறார். அதை எறிஞ்ச சாளரம் வழியாவே தானும் குதிச்சு (எலும்புகள் ஒன்றுமே உடையாம!!) ஓடுகிறார். காட்டுக்குள்ளாலயெல்லாம் ஓடுறார்..கரடியொண்டு துரத்துது, அவர்ட கால் படுற இடமெல்லாம் வெளிச்சம் வருது. (நல்ல காலம்..ஊரில இந்தாள் இல்ல..இல்லாட்டி, சாமீ! என்டு பகல்ல சனமும் ..களவெடுக்க வசதியா இருக்கும் என்று இரவில கூட்டிப் போக கள்ளனும் க்யூவில நிப்பாங்க!!) சரி..இப்பிடியே விளம்பரம் தொடர்ந்து போகுது.

இவ்வளவு நாளும் சப்பாத்து உற்பத்தியாளர்கள், "எங்க சப்பாத்தில சொகுசு அதிகம்", "காற்றோட்டம் உள்ளது" என்று தானே யோசிச்சு உருவாக்கிட்டு விளம்பரப்படுத்தியிருக்கிறாங்க. ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசில மனிசனைக் கடிச்ச கதை மாதிரி தான் இப்ப ஆகிப் போச்சு(அது என்ன கதை??யாராவது சொல்லுங்க!) ஏன் அப்பிடிச் சொல்றேன் என்றால், இப்பவெல்லாம் கடிகாரத்தில இருந்து ஏவுகணை வரைக்கும் எல்லாத்திலயும் micro processors இருக்குது தானே.( புதுசா ஏதாவது சொல்லு என்கிறீர்களா..சொல்றன், சொல்றன்)

அதே micro processorsல ஒன்றைத் தூக்கி சப்பாத்துக்குள்ள வைச்சிருக்கிறாங்க, அடிடாஸ். அந்த processor, நீங்க கால் பதிக்கிற விதம், பாதத்தில் எந்த இடத்தில் கூடுதலாக cushioning வேணும் & இன்னும் கொஞ்சம் வேற விஷயங்களையும் எல்லாம் கணக்குப் போட்டு நீங்க நிலத்தில கால் வைக்கும் விதத்துக்கு ஏத்த மாதிரி வளைஞ்சு குடுக்குதாம். விலைதான் மயக்கம் போட்டு விழ வைக்கிற அளவில இருக்கும் என்று நினைக்கிறன்..ஒரு வேளை பர்ஸின் கனமறிந்து அதுக்கும் வளைஞ்சு குடுக்குமோ??. :o)

சிட்னிக்கு இப்பத்தான் வருகுது இந்தச் சப்பாத்து..ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடாவில முதலே வந்திருக்குமென்டு நினைக்கிறன்.

இந்தப்பதிவை தட்டச்ச ஒரு ஞாபகம் வருது.. எனக்கு அப்ப ஒரு 10- 12 வயசிருக்கும்.அப்ப புதுசா ஒரு சப்பாத்து வந்தது. நடக்கும் போது சப்பாத்தின் அடியில் உள்ள லைட் எரியும். அதை வாங்கித் தரச் சொல்லி அம்மாக்கு ஒரே நச்சரிப்பு. எவ்வளவு அரியண்டப் படுத்தியும் அது கிடைக்கல்ல!! (ஹ்ம்ம் <-- ஏக்கப் பெருமூச்சு!..வேற ஒன்றுமில்ல!!) :o(

போர்களும் போர்வீரர்களும்

துளசியின் ANZAC நாள் பற்றிய பதிவை வாசித்த பின் உடனே எழுத வேணுமென நினைத்திருந்தேன்..இப்பத்தான் எழுதுகிறேன்.

சமூகக் கல்வி, இலங்கையில் படித்தவர்களுக்கு அறுவையான பாடம். இத்துடன் பல பேரால் தரித்திரம் என ஏசப்படும் சரித்திரமும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கும். ஏசி ஏசித்தான் அதை படிப்பதே!

நான் இப்போ சொல்ல வருவது நான் எப்படியெல்லாம் ஏசினேன் என்பதை அல்ல. சமூகல்வியிலா அல்லது வரலாற்றிலா என்று ஞாபகமில்லை..உலக வரலாறு பற்றிய ஒரு பகுதி இருந்தது. அதில், நடந்த உலகப் போர்களைப் பற்றியும் ஐ.நா சபை எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதைப் பற்றியும் இருக்கும். என் ஞாபகத்திற்கு எட்டியவரை (எட்டாட்டி கொக்குத்தடிதான்! :o) ) அதிலே போர்களேற்பட என்ன காரணி தூண்டுதலாக இருந்தது என்றும் என்னென்ன நாடுகள் எந்தப் பக்கம்(போரில்!!) கட்சி சேர்ந்தன என்பதைப் பற்றியும் தான் இருக்கும். ஜப்பானுக்குக் குண்டு போட்டதும் படித்தோம். ஆனால் இவை அனைத்துமே மேலோட்டமாக ஏதோ ஒரு சம்பந்தமில்லாத ஒன்றைச் சொல்வது போலவே கையாளப்பட்டிருந்தன. எனக்குத் தெரிந்து, ஹிட்லர் ஒரு சர்வாதிகாரி என்பதைத் தவிர, அவன் அரங்கேற்றிய இனப்படுகொலை பாடத்திட்டத்தில் இருக்கவில்லை (அல்லது, படித்து, நான் தான் மறந்து போய் விட்டேனோ தெரியாது! தெரிந்தவர்கள் சொல்லுங்கள்).

{ஆஷ்விட்ஸிற்கு இரயில் மூலம் அனுப்பபட்ட கணக்கற்ற யூதர்களைப் பற்றியும் அவர்களின் கொடுமையான இறுதிநாட்களைப் பற்றியும் அறிந்திருப்பீர்கள். இந்த ரயில் பயணங்களில் ஒன்றிலிருந்து பலர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். அதைப் பற்றிச் சொல்லும் The Twentieth Train" (எழுதியவர்: Marion Schreiber, இது Silent Rebels:The true story of the raid on the twentieth train to Auschwitz என்ற பெயரில் முன்னர் வெளியிடப்பட்டது) புத்தகத்தைத் தான் இப்போது நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசித்து முடிந்தவுடன் அதைப்பற்றிய ஒரு தனிப்பதிவை இடுகிறேன்.}

இலங்கையில் இருந்தவரை உலகப்போர்களைப் பற்றிய எனது அறிவு மிக மிக மிகக்குறைவு. இங்கே சிட்னிக்கு வந்த பின்னரே நான் பல டொக்யுமென்ட்ரிகளைப் பார்த்தும், புத்தகங்கள் & அச்சிதழ்களை வாசித்தும் இப்போர்களைப் பற்றி அறிந்து கொண்டேன். அவுஸ்திரேலியாவிலிருந்து எண்ணிலடங்காதோர் போருக்குச் சென்றமையால் இந்நாடு போர்களின் ஞாபகார்த்தத்திற்கு பெரும் மதிப்பளிக்கிறது.

என் சந்தேகம் இது தான்...உலகப்போர்கள் இரண்டும் நடைபெற்ற காலப்பகுதியில் இலங்கையும் (அவுஸ்திரேலியா போன்றே) பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டிருந்தது. இலங்கையிலிருந்து இப்போர்களுக்குச் சென்ற (போயிருக்கிறார்களெனக் கேள்விப்பட்டிருக்கிறேன்) வீரர்கள் நினைவு கூரப்படுவதுண்டா?இல்லையெனின் ஏன்? இந்தியாவில் எப்படி?

தொடர்வண்டி அனுபவங்கள்

வேலைக்கு நான் தொடர்வண்டியில் (புகை இல்லாத புகையிரதம்) தன் செல்வது. பயணம் 75 % சுவாரசியமானதாகவே அமையும்( சக பயணிகள் பலரைப் போலவே மற்ற 25% நேரமும் ஷ்ரேயா நித்திரை கொள்வா / புத்தகத்தில் தொலைந்து போவா!). சந்திக்கும் மனிதர்களும் நமது உலகம் எவ்வளவு பன்முகமுடையது என்பதை உணர்த்திச் செல்வர். காலை வணக்கம் அல்லது சும்மா ஒரு "ஹாய்" புன்சிரிப்போடே சொல்பவர்களூம், நாம் முந்திக் கொண்டோமென்றால் கடமைக்குச் சொல்பவர்களுமாகப் பயணம் தொடங்கும். அனேகமாக எல்லாரும் புத்தகம் வாசிப்பார்கள். கொஞ்ச நாளைக்கு முன்பு பார்த்திருந்தீர்களானால் கிட்டத் தட்ட 60 - 65 % பயணிகள் டான் ப்ரௌனின் டா வின்சி கோட் வாசித்துக் கொண்டிருந்திருப்பார்கள்.

எனக்கு நண்பர்கள் சிலர் தொடர்வண்டி நிலையத்திலே அறிமுகமானவர்கள். கணவனை இழந்து, மகளுடன் இங்கே குடியேறி சகோதரியுடன் வதியும் ஒரு அன்ரி, என் வயதொத்த இரு பெண்கள், இவர்கள் எல்லாரிலும் பார்க்க, சுவாரசியமாகக் கதை சொல்லும் ஒரு இந்தியப் பெண். இது வரை எத்தனையோ நாட்கள் அவவுடன் பயணித்திருக்கிறேன். அவளது மகனதும் கணவனதும் பெயர் தெரிந்தாலும்,இற்றை வரை அவவின் பெயர் தெரியாது! அடுத்த முறை கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டாலும், கதை ருசியில் மறந்து விடுவேன். :o) தனக்கு கல்யாணம் நடந்த கதை சொன்னாள். எங்கள் பயண நேரம் 40 நிமிடம்..அவ்வளவு நேரமெடுத்து, புதுப்பெண் போல வெட்கி, முகம் சிவந்து, எப்படி கல்யாணப்பேச்சு வந்தது என்பதில் ஆரம்பித்து கல்யாணம் நடந்தது வரை...அப்படிக் கதை சொல்லக் கூடிய ஒருவரை நான் அதுவரையில் சந்தித்திருக்கவில்லை. அவ சொன்ன விதம்,முடிவு தெரிந்திருந்தாலும், அடுத்து என்ன நடந்ததோ என்று நினைக்க வைத்தது! கன நாட்களாகக் காணவில்லை.அடுத்த வண்டியைப் பிடிக்கிறாவோ என்னவோ!

காலை வண்டியில் ஏறும் போது இன்னொரு பெண்ணும் கூடவே ஏறுவா. அவவின் தோழியைக் கண்டாவோ...என் கோழித் தூக்கம் போச்சு! கதையை விட, சிரிப்பே அதிகம். ஒரு நாள் அப்படி என்னதான் கதைக்கிறார்கள் என்று கவனித்தேன். ஒரு பையனை விரும்புகிறா என்று விளங்கிற்று. அது ஒரு வியாழனோ..வெள்ளிக்கிழமை. வந்தது திங்கள்..அவவும் வந்தா. தோழியக் கண்டது தான் தாமதம்...ஓடிப் போய் அருகில் உட்கார்ந்து வார இறுதியில் அவனைக் கண்ட, கதைத்த கதை சொன்னாள். அவன் தனது தொ.பே.இலக்கத்தை எடுத்ததாக சொன்னா. இப்படியே அவவின் கதைகள் ஒரு நாடகம் போல நீண்டு செல்லும். வழமையாய் அந்தப் பெட்டியிலேயே ஏறும் சில பேருக்கு முழுக்கதையும் தெரியும். அந்தக் கிழமைஇறுதியும் முடிந்து அடுத்த திங்கள், தோழியிடம் (+ அந்த ரயில் பெட்டியில் இருந்த அனைவரின் காதிலும்!!).."We went out..YAY!" எல்லார் முகத்திலும் அடக்க மாட்டாத ஒரு புன்சிரிப்பு. (நாங்கள் கை தட்டியிருந்திருக்க வேண்டும் என இப்ப நினைக்கிறேன்)

இப்படிச் சந்தோசமனவைகளுடன் நடக்கிற பயணங்களில் சில மனவருத்தங்களும் ஏற்படுவதுண்டு. வேலை முடிந்து திரும்புகின்ற ஒரு களைத்த பொழுதில், இருக்க இடம் கிடைக்கவில்லை. நான் மூவர் இருக்கக் கூடிய இருக்கைக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன். அதிலே சாளர ஓரமாக ஒரு வெள்ளையினப் பெண்மணி, நடுவில் ஒரு சீனரோ ஜப்பானியரோ கொரியரோ (இப்போதைக்குச் சீனர் என்று வைத்துக் கொள்வோம்) அவருக்குப் பக்கத்தில் இக்கரையில் ஒரு மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த பெண்..அவவோ நல்ல நித்திரை. வெள்ளைப் பெண் புத்தகம் வாசித்துக் கொண்டு, ஒரு can "Jim Beam" beer குடித்துக் கொண்டிருந்தா. சீனர் அசைந்ததில் அவரது கால் அவவின் காலில் பட்டு விட்டது. "மன்னியுங்கள்' என்று அவர் சொன்னாலும் அவவோ "என்னைத் தொடாதீர்கள்/என்னில் பட வேண்டாம்." என்று கடுமையாகச் சொன்னதுமல்லாமல் தூசைச் தட்டுவது போல அவரது கால் பட்ட இடமும் தட்டி, ஏதோ அருவருப்பான ஒன்றை மிதித்து விட்டது போல முகஞ்சுளித்து, அருவருத்தா. சீனர் முகங் கறுத்து என்னைத் திரும்பிப் பார்த்தார். இப்படி நடப்பதுதான் என்று நான் கேள்விப்பட்டிருந்தாலும், கண்முன்னே நடந்ததில் நான் திகைத்துப் போயிருந்தது அப்பட்டமாக என் முகத்தில் தெரிந்திருக்க வேண்டும். என்னைப் பார்த்து புன்னகைத்தார். அது பதிலடி கொடுக்க முடியாத இயலாமையின் வெளிப்பாடு என்பது இருவருக்கும் தெளிவாகவே தெரிந்தது.

பயணங்கள் தொடர்கின்றன..கூடவே அனுபவங்களும்.

என் அம்மாவைத் தெரியாது!

முந்தநாளுக்கு முதல்நாள்(நாலாம் நாள்) எங்கள் வீட்டு பதிலிறுக்கும் கருவியில் "அம்மா மட்டக்களப்பால் வந்து விட்டா. உங்களுடன் கதைக்க வேணுமாம்.அவவுக்கு எடுங்கோ" என்று அண்ணா சொல்லியிருந்தார், அம்மா தனது பிரம்மகுமாரிகள் ராஜயோகத்தினரில் மருத்துவத்துறையில் உள்ளோருடன் கிழக்கிற்குப் போவது இந்த வருடத்திற்கு இது நாலோ ஐந்தாவது முறை. கடற்கோளால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மருத்துவ முகாம்களிற்கு மருந்து விநியோகிப்பதும் மருத்துவம் பார்ப்பதும் இவர்களது பணி.

போன கிழமையும் இப்படித்தான் புறப்பட்டுப் போக முன் கதைத்தேன். வந்து விட்டா தானே, புதினங்கள் சொல்லப் போகிறாவென்று எடுத்தால், "நான் சுகமா இருக்கிறன், பயப்பிட ஒண்டுமில்லை" என்று தொடங்கினா. என்னவென்று கேட்டால், திரும்பி வரும்போது பெய்த மழையால் ஈரமாகியிருந்த பாதையில் சாரதி தன் கை(கால்?) வரிசையைக் காட்ட வாகனம் பாதையிலிருந்து விலகி புரண்டு விட்டதாம். நெஞ்சுக்கூட்டு எலும்புகளில் இரண்டின் முறிவும் கழுத்தெலும்பில் ஒரு வெடிப்பும் பக்கத்திலிருந்த இருவர் இவவுக்கு மேலே விழுந்ததில் பரிசாகக் கிடைத்துள்ளது. ஒருமாதம் ஓய்வாகப் படுக்கையில் இருக்கச் சொல்லி சொல்லியிருக்கிறார்கள். நிலமையின் பாரதூரம் விளங்கிய படியால், ஓமென்றிருக்கிறா. நான் பிறந்ததற்கு இருந்தபின், இது தானாம் இரண்டாம் தரமாக அவ ஒரு மாதம் தொடர்ச்சியாக வீட்டிலிருக்கப்போவது!!!!

சரி வீட்டிலேயே இருந்தால் அலுப்படிக்குமே..பாவமே என்று அம்மாவுக்குப் புத்தகங்கள் வாங்கி அனுப்பத் தீர்மானித்தேன். புத்தகக் கடைக்குள் நுழையும் வரை ஒன்றும் மனதில் தோன்றவில்லை. என்ன வாங்கலாம் என்று கண்ணை அலைய விட்ட போதுதான் உறைத்தது..எனக்கு அம்மாவைத் தெரியாது. அவக்கு என்ன மாதிரியான புத்தகங்கள் பிடிக்கும்? வரலாறு பிடிக்குமோ?காதல்?பயணங்கள் சம்பந்தமாய் ஏதாவது?ஆங்கில இலக்கியம்?மர்மக் கதைகள்?த்ரில்லர்? ஆஆ!!!!(கற்பனை செய்க: ஷ்ரேயா தலைமயிரைப் பிய்த்துக் கொள்வது!!)

சித்திக்கு அவவின் பிள்ளைகளிடமிருந்து கிடைத்த புத்தகமாம் என்று Chicken soup for the mother's soul பற்றிச் சொன்னா.தானும் மிகவும் விரும்பி வாசிக்கிறா என்று போன முறை கதைத்த போது சொன்னதில் அந்த தொடரிலேயே வேற என்ன கிடைக்கும் என்று பார்த்தேன். Chicken soup for the mother's soul 2 கிடைத்தது. அதுவும், Chicken soup for the working woman உம் வாங்கினேன். பிறகு அப்படியே பண்பியல்(classics) புத்தகங்களைப் பார்த்த போது Moby Dick கண்ணில் படவே அதையும் எடுத்துக் கொண்டு, மனிதனின் வரலாறு பற்றி ஆராயும் The footsteps of Eveம் இவற்றுடன் சேர்த்து அம்மாவுக்குப் பிடிக்க வேண்டுமே என்று வாங்கியுள்ளேன். இன்று பின்னேரம் அல்லது நாளை மீண்டும் ஒருமுறை புத்தகக்கடைக்கு விசிட்டடிக்கணும். ஏதாவது நல்ல புத்தகங்களின் தலைப்புகள் சொல்றீங்களா?

அம்மாவைப் பற்றி, ஒரு தனி மனுசியாக, 'அம்மா' என்கிற பாத்திரத்திலிருந்து விலக்கிப் பார்த்தால் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. எல்லாருக்கும் இப்படியா? புத்தகக்கடைக்குள் இது என் (மர)மண்டைக்குள் உறைத்தபோது உண்மையாகவே அதிர்ந்தேன்.(அந்த 9.0 ரிக்டர் அதிர்ச்சி, பிறகு சாப்பிட்ட டொம் யம்முடன் சேர்ந்து மூக்காலும் வியர்வைச் சுரப்பிகளாலும் சுனாமி வடிவெடுத்தது வேறே விஷயம்!). விரைவில் அவவிடம் போய் புதிதாய்ச் சந்தித்து, அவவை அறிந்து கொள்ள வேண்டும் போல இருக்கிறது. நினைத்துப் பார்க்கிறேன்...இப்படிப் பார்த்தால், என் வாழ்வில் 80 - 85% பேரை நான் புதிதாய் சந்திக்க வேண்டும்! அம்மாதானே..அண்ணாதானே என்கிற பிம்பத்திற்கூடாகப் பார்ப்பதால் தான் இப்படிப் பலரையும் "தவற" விடுகிறோமோ?

மகிழும் வாழ்க்கை

ஒருவர் சிலாகித்துச் சொன்னதன் பெயரில் ஒரு புத்தகம் (மின் வடிவத்தில்) வாசித்தேன். மர்மக் கதையோ, விஞ்ஞானப் புனைகதையோ அல்ல. பொலிஅனா என்னும் ஒரு சிறு பெண் எப்படி தன் வாழ்வில் உள்ள & ஏற்படும் எல்லாவற்றிலும் மகிழ்ச்சியைக் காண்கிறாள் என்பதே கரு. அதை ஒரு விளையாட்டாகவே அவள் பார்க்கிறாள். அவளது அந்த "மகிழ்ச்சி காணும்" விளையாட்டு எப்படி அவளைச் சுற்றியிருக்கிறவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை. கதை மாந்தரில் அவள் ஏற்படுத்தும் மாற்றங்கள் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டது / கதையில் சொல்லப்படுவது போன்று திடீரென்று ஏற்பட முடியாதவை போல எனக்குத் தோன்றினாலும், அம்மாற்றங்கள், ஒருவர் சில விஷயங்களை உணர்ந்ததும் அவரில் ஏற்படக்கூடியவையே.

பொலிஅனாவைப் போலவே சின்ன விடயங்களிலே நானும் சந்தோசப்பட்டுக்கொள்கிறேன் என்பது மகிச்சியாக இருக்கிறது. ஆனாலும், "மகிழ்ச்சி காணும்" விளையாட்டை நான் என் வாழ்வின் எல்லாத் தளங்களிற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதை இப்புத்தகத்தை வாசித்த பின் உணரத் தலைப்பட்டுள்ளேன். பொலிஅனாவின் கதையை இங்கே வாசிக்கலாம். வாசிப்பை ஒரு நாளில் முடித்து விட்டாலும், வாசித்ததை, வாசிப்பு நமக்கு உணர்த்துவதை, மறக்க முடியாதென்றே தோன்றுகிறது. இன்னும் பிறக்காத என் பிள்ளை(களு)க்கு ஒரு வாசிப்பு அனுபவமாக இதை நான் கொடுப்பேன். :o)

என்மொழி இன்மொழி

வேலைத் தலத்தில் என்னையும் சேர்த்து 3 இலங்கையர். அனேகமாக ஒன்றாகத்தான் மதிய உணவை உண்போம். மற்ற இருவரும் சிங்களவர் என்றாலும் எனக்காக முதலில் ஆங்கிலத்தில் தான் கதைத்தார்கள். என் சிங்கள(பேச்சுப் பழக்க)த்தை மறக்காதிருக்க வேண்டும் என்பதால் அவர்களுடன் சிங்களத்தில் கதைக்கத் தொடங்கினேன். இப்போது சாப்பாட்டு அறைக்குள் மற்றவர்கள் வந்தாலும் நாங்கள் மூவரும் சிங்களத்திலேயே தொடர்ந்தும் உரையாடுவோம். எங்கள் பட்டப்பெயர் : Sri Lankan Mafia!

இந்த மாஃபியாவிலே "ரங்கிக", நடந்த சம்பவங்களை சுவைபடச் சொல்லுவதில் விண்ணன்.ஒரு முறை இலங்கையில் தங்களது CIMA வகுப்பில் நடந்தததாம் என்று இதைச் சொன்னார்:

ஒரு மாணவன், இங்கிலாந்திலிருந்து திரும்பியவன். பிரிடிட்டிஷ் accent உடன் ஆங்கிலத்தில் கதைப்பதும், ஆசிரியரிடம் கேள்விகள் கேட்பதும் என்று பெரும் அலட்டல் பேர்வழியாம். மற்றவர்களெல்லாரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து இயலாக் கட்டத்தில் ஒரு நாள் அவனிடம் எப்போது இங்கிலாந்திற்குப் போனாய், எங்கே படித்தாய் என்று பூர்வீக விசாரணை நடத்தியிருக்கிறார்கள். தான் சாதாரண தரப் பரீட்சைக்கு (16 வயது) இலங்கையில் தோற்றிய பின்பு இங்கிலாந்து சென்றதாயும், இப்போ 7 - 8 வருடங்கள் இங்கிலாந்திலேயே இருந்து படித்து விட்டதால் சிங்களம் சுத்தமாக மறந்து விட்டதென்றும் சொல்லியிருக்கிறான். இவர்களும் ஒன்றும் பேசாமல் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து விட்டு "அப்படியா" என்று எல்லாத்தையும் கேட்டுக் கொண்டார்களாம்.

வகுப்பு நடப்பது கடற்கரைக்கு அண்மையில். மதிய உணவு இடைவேளையில் கடற்கரைக்குச் சென்று அலையில் விளையாடுவது வழக்கமாம். ஒருநாள் அலட்டல் மாணவனையும் அழைக்க, அவனும் கடற்கரைக்கு சென்றிருக்கிறான். மாணவர்களில் ஒருவன் அல.மாணவனின் காலணிகளை கழற்றியிருந்த இடத்திலிருந்து எடுத்து வந்து கடலுக்குள் எறிந்து விட்டானாம். அல. மா.வும் காலணிகளி மீட்க காற்சட்டை நனைந்து விடாமல் தூக்கிய படியே மெது மெதுவாக நீருக்குள் செல்லும் போது, காலணிகளை எறிந்த மாணவன் பின்னாலிருந்து இவனை பலமாக நீருக்குள் தள்ளி விட்டானாம்.

"புது அம்மோ" ( ஐயோ அம்மா) என்று சொல்லிக்கொண்டே அல.மா. நீருக்குள் விழுந்தானாம்.

அந்தச் சம்பவத்திற்குப் பின் வகுப்பில் யார் என்ன கேட்டாலும் முழுக்க முழுக்க சிங்களத்திலேயே பதில் சொல்வானாம்.

சொந்த மொழியை, பேசுவதில் இவ்வளவு வெட்கமும் தயக்கமும் எதற்கு? இங்கே அவுஸ்திரேலியாவில் பார்க்கிறேன், தமிழைப் பேசத் தெரியாது, அப்படியே தெரிந்தாலும் கதைப்பதற்கு வெட்கம் அல்லது ஆங்கிலத்தைக் கதைப்பது போல ஒரு accent உடன் பேசுகிறார்கள். பெற்றோரே "என்ட பிள்ளைக்கு தமிழ் தெரியாது " என்று பெருமையடிக்கும் போது முகத்திலே 2 விட வேண்டும் போல இருக்கும். இரண்டு மொழிகள் தெரிந்திருப்பதில் நன்மையே தவிர தீதில்லை. தமிழ்ப் பிள்ளைக்குத் தமிழ் வராது/தெரியாது, ஆனால் பள்ளியில் 2ம் பாடமாக பிரெஞ்சோ, சீனமோ படிக்கும், அதைப் பெருமையாகவும் கதைக்கும். இதை ஊக்குவிக்க இங்கே நிறையவே பெற்றோருமுண்டு.எங்கே போய் சொல்வது!

அறிவித்தல்

தமிழ் கற்பிக்க ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்கலாம் என்று சொன்னேன் தானே..அதற்கு டோண்டு ராகவன் தன்னாலியன்ற உதவி செய்வதாக கூறியுள்ளார். சந்திரவதனாவும் உதவுவதாக சொன்னா. இருவருக்கும் நன்றி. ஒருத்தரும் தமிழ் வாத்தியாரக முன்மொழியப்படவில்லை. எனவே நானே உருவாக்கப்போகிறேன். (தலையில் அடித்துக் கொள்ளும் சத்தம் நிறையவே கேட்கிறது! :0)). எனக்கு பள்ளிக்கூடத்தில் திட்டித் திட்டிப் படித்த இலக்கணம் கொஞ்சம் தான் ஞாபகத்திலிருக்கிறது. என்ன ஒழுங்கில் ஆரம்பிக்கலாம் என்பது பற்றி ஒரு மூளைப்புயல் நடத்திக் கொண்டிருக்கிறேன் ..எனக்குள்ளே. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன். இந்த வலைப்பதிவை (அடிப்படை தோற்றத்துடன்) உருவாக்கியிருப்பினும் இன்னும் பதிவுகள் எதுவும் இல்லை. அதிகாரபூர்வமாக தொடங்க சில நாட்கள்/ வாரங்கள் ஆகலாம். என்ன பெயர் வைக்கலாம் தலைப்பாக?யார் பதிவதாக போடலாம்?

என் கிறுக்கல் பலகையில் கேட்டிருப்பதை மீண்டும் இங்கே கேட்கிறேன். இலங்கையில் பள்ளிக்கூடத்தில் பாட நூல்கள் இலவசம். எனக்கு அப்புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள வசதியுண்டு. இந்தியாவில் பாடப்புத்தகங்கள் என்ன முறையில் விநியோகிக்கப்பட்டன?இலவசமாகவா அல்லது வாங்க வேண்டியிருந்ததா? குறிப்பாக ஏதாவது புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்டதா? இவற்றை எங்கே பெறலாம்? வலைப்பதிவரில் யாராவது தமிழை கல்லூரியில் பட்டப்படிப்பிற்காக அல்லது வேலை நிமித்தமாக படித்தவர்கள் இருக்கிறார்களா?

நிறையக் கேள்விகள் கேட்கிறேன்..உங்கள் கருத்துக்களை அறியத்தரவும்.


அறிவித்தல் 2: சிட்னி முருகன் கோயிலின் மஹோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகிறது. பூங்காவனம் சி.மு.இளைஞர் வட்டத்தினரால் வருடா வருடம் பொறுப்பேற்கப்பட்டு விமரிசையாக நடத்தப் பெறும் நிகழ்வு.. அதற்கு ஆயத்தம் செய்யுமுகமாக வரும் சனிக்கிழமை(19-மார்ச்) பலகாரம் தயாரிக்கப்பட இருக்கிறது. மத்தியானம் 1 மணி போல ஆரம்பிக்க யோசித்திருக்கிறோம். சிட்னி வாழ் இளைஞர்கள்/சிட்னி விருந்தாளிகள் விருப்பமிருந்தால் வந்து உதவலாம். மேலும் தகவல்களை இங்கே பெற்றுக் கொள்ளலாம். பாமினி எழுத்துரு தேவைப்படும்:

கற்போம் கற்பிப்போம்

சந்திரவதனாவின் பதிவில் இதை வாசித்ததும் ஒரு வாரமாக என் மனதில் நாளொரு மேனியும்(இது எப்படி சாத்தியம்..கூடு விட்டு கூடு பாய்கிறதா?) பொழுதொரு வண்ணமுமாக ( டியுலக்ஸ் பூச்சு உபயத்தில்) வளர்ந்து வந்த ஒரு எண்ணம் வலுப்பெற்றுள்ளது. சிறுவயதிலிருந்தே தமிழை படித்திருப்பதால் எங்களுக்கு இங்கே எண்ணங்களை எழுத்தில் பரிமாறிக் கொள்வது இலகுவாக இருக்கிறது. புலத்தில் வளரும் எங்கள் அடுத்த தலைமுறையினரின் தமிழறிவு எந்தளவில் இருக்கிறது? வகுப்புக்குப் போய் இருந்து 1 - 2 மணித்தியாலம் செலவழித்து, தான் உபயோகிக்காத மொழியைப் படிப்பதால் என்ன பயன் என்று தான் பல சிறார்கள் நினைக்கிறார்கள். இணைய மேய்தல் ஒரு பொழுது போக்காக இருக்கின்ற இவர்களுக்கும், தமிழ் படிக்க விரும்பும், தமிழில் கருத்துப் பரிமாற்றம் செய்ய விரும்பும் எவருக்கும் உதவியாக, கற்றலின் ஆரம்பமாக ஒரு தமிழ் கற்பிக்கும் பதிவினை உருவாக்குவோமா?

பாலர் பாடசாலைகளில், முதலாம் வகுப்புகளில் போன்று “ஆனா”, “ஆவன்னா” சொல்லி ஏடு தொடக்கி, கொஞ்சங் கொஞ்சமாய் சொற்களை அறிமுகப்படுத்தி, இலக்கணத்தையும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் முறையில் எழுத்தறிவிக்கலாம்.(இப்பிடியாவது, நேர் நேர், நேர் நிரை எல்லாம் எனக்கும் தெரியவரட்டுமே!!). இந்தப்பதிவில் சின்ன வகுப்புகளில் மாதிரி இடையிடையே சிறுவர் பாட்டுக்களையும் ( உ+ம் க.தோ. வெருளி, ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி..) சேர்த்துக் கொள்ளலாம்.

விளக்கங்களை ஆங்கிலத்தில் இடலாம். பிறகு தேவையேற்படின் பிரெஞ்சு, ஜேர்மன், மற்றும் வேறு மொழிகளிலும் விளக்கங்களைத் தரலாம். வலைவசம் (“கைவசம்” இப்படி உருமாறிவிட்டது!) மொழிபெயர்ப்பாளர் டோண்டு ராகவன் இருக்கிறார், அவரிடம் கேட்கலாம். (உங்களிடம் அனுமதி கேட்காமலே, உங்களிடம் உதவி கேட்கலாம் என்று எழுதி விட்டேன் டோண்டு ராகவன், மன்னிக்க வேண்டும்.) (நீங்க இனிமேல் தப்ப முடியாது :o) )

என்ன சொல்றீங்க? யாரைத் தமிழ் வாத்தியாராகப் போடலாம்?

ஓ போடுங்க!

சில நாட்கள்/வாரங்கள்/மாதங்கள் மிகவும் விரைவாக ஓடி மறைகின்றதா? இல்லாட்டி நான் அதனுடன் போட்டி போடுற வேகம் குறையவா? (சுசந்திகா / பீ.டி உஷா / மரியன் ஜோன்ஸ் / கதி ஃப்ரீமன் தரவழியா இருக்க வேணுமோ!!)

வீட்டில் இருக்கும் போது இப்படி இருப்பதில்லை (9 மணிக்கு பள்ளியெழுகின்ற வார இறுதிகள் இதற்குள் சேர்த்தியில்லை!!) ஒருவேளை வேலைக்குப் போவதால்தான் காலம் இப்படி (என் மாட்டேற்றுச் சட்டத்தில்..என் சார்பாக..ம்ம்..relativly :o) )கடுகதியில் ஓடி மறையுதா?

ஒரு வேலையை செய்யும் போது, அதாவது செய்யும் ஒரே விடயத்தையே கருத்தொருமித்துச் செய்யும் போது நேரம் போவது தெரிவதில்லை. இதற்கு, புத்தகம் வாசிப்பது(பாடப் புத்தகம் அல்ல), நித்திரை கொள்வது போன்றவை நல்ல உதாரணங்கள். (பி.கு: கலர் தெரப்பியும் இதிலே சேர்த்துக் கொள்ளப்படலாம் ;o) ). எதிர்மறையாக, இதெல்லாம் செய்ய வேண்டுமே என்று 4 - 5 விடயங்களை பட்டியல் போட்டுக் கொண்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்தால் ஒன்றுமே செய்படாது, நேரம் மட்டும் விட்டது தொல்லை என்று காணாமல் போயிருக்கும்.இது என் சார்பான நேரம் கழிதலின் வேகம் மட்டுமே. எனக்கு விரைவாக ஓடி மறைந்த ஒரு நாள் மற்றொருவருக்கு மிக நீண்டதான ஒன்றாக தோன்றலாம்..அது அவர் சார்பான நேரத்தின் வேகம். எல்லாருக்கும் பொதுவாக செலவழிந்து கொண்டிருக்கும் நேரமோ ஒரே வேகத்தில் தான் கழிகிறது.( உ+ம்: எனக்கு வேகமாக கழிந்த ஒரு நாளும் மற்றவரது நீ..ஈ..ண்ட நாளும் அதே 24 மணி நேரத்தைத் தான் கொண்டவை!)

எப்படி இவளிடமிருந்து தப்பியோடலாம்(உங்களைப் போலவே?)என்று சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தை இழுத்துப் பிடித்து, அலுவலகத்தில் பணியும், வீட்டில் "தார்மீகக் கடமைகளும்"(அடக்கி வாசிக்கிறதப் பற்றி ஷ்ரேயா கேள்விப்பட்டதேயில்லை!!) என்று செய்ய வேண்டியிருக்கிறது. ஆக இப்பிடியெல்லாம் நேரத்துடன் மல்லுக்கட்டும் போது, என்னுடைய இந்த வலைப்பதிவில் செலுத்தும் கவனம் மிகக் குறைவே. அதைப்பற்றி மனவருத்தமாக இருக்கிற போதெல்லாம் கை கொடுப்பது என்னுடைய "நாளைக்குச் கட்டாயம் செய்ய வேண்டும் / செய்து விடுவேன்" என்கிற சோம்பேறி மனப்பாங்கு தான்.(யாரது "நன்றே செய்வார்; அதை இன்றே செய்வார்" ங்கறது? ஷ்ஷ்!!).

அலுவலகம் / வீட்டுவேலைகள் /குடும்பம் இதெற்கெல்லாம் மத்தியில் பதிவுகளையும் கவனித்துக் கொள்ளும் எல்லா வலைப்பதிவாளர்களுக்கும் ஒரு பெரீ..ய்ய்..ய "ஓ"!.

பெயர்கள் பலவிதம்

பெயர்..இது இல்லாமல் ஒரு பணியாரப் படிவமும் நிரப்ப இயலாது. அதிலயும் இந்த குடும்பப்பெயர் இருக்கே..அதைப் போல தலையிடி பிடிச்ச விஷயம் வேற இல்ல. வெள்ளைக்காரனுக்கு குடும்பத்துக்கென்றே ஒரு பெயர் இருக்கும். அவனுக்கு என்று ஒரு பெயர் வைத்தாலும் திரு."குடும்பப்பெயர்" என்று கூப்பிட்டால் கட்டாயம் திரும்பிப் பார்ப்பான். ஆனால் எங்கள் நிலமை வேறு, குடும்பத்துக்கென்று (சில விதி விலக்குகள் உண்டு)தனிப் பெயர் இல்லை. அவரவருக்கென்று வைத்த பெயர்தான் அவர் சார்ந்த குடும்பத்துக்கும் பெயராகிறது. வெளிநாட்டில் படிவம் நிரப்புகையில் எப்படிப் போடுகிறீர்கள்? ஆண்களுக்குத் தான் தலை போகும் பிரச்சனையா இது தென்படுகிறது. (உதாரணத்துக்கு அப்பா:சின்னத்தம்பி, மகன்: யோகன் என்று வைத்துக் கொள்வோம்)மகன் தனது குடும்பப்பெயராய் அப்பாவின் பெயரைப் போட்டால் திரு. சின்னத்தம்பி என்று தான் விளிக்கப்படும். யோகனும் அப்பாவைத்தான் கூப்பிடுகிறார்கள் என்று தேமே என்று உட்கார்ந்திருப்பான். மாறிப்போடுவது தான் அவனுக்கு தன்னை விளிக்கிறார்கள் என்பதை உணர்த்தும். இங்கே பலர் அப்படித்தான் அப்பாவின் பெயரை முதல்/வைக்கப்பட்ட பெயராயும் தன் (உண்மையாக) வைக்கப்பட்ட பெயரை குடும்பப்பெயராகவும் இடம் மாற்றிக் கொள்கிறார்கள். அப்படி மாற்றாமல் தன் பெயர் தனக்கும் அப்பா பெயர் குடும்பப்பெயராகவும் வைத்துக் கொண்டிருக்கும் நம்மவரும் உளர்.

இந்த குடும்பப்பெயர் வழக்கம் எங்கிருந்து எதற்காகத் தோன்றியயது? ஒரே இனத்தவர்/ குடும்பத்தினரை இனங்காணவேண்டிய தேவை சண்டை/சொத்து இவற்றைத் தவிர வேறே எதற்கு இருந்தது? அந்தக் காலத்தில் பெண்களுக்கு இது ஒரு முக்கியமான அடையாளமாக இருந்திருக்க வேண்டும் என் நினைக்கிறேன். இப்பெண்கள், இன்னாருடைய மனைவி/மகள் என்று (அப்பெண்களின்) வாழ்வில் காணப்படும் ஆண்களை வைத்தே நோக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு பெண்ணானவள் எடை போடப்படும் போது முதலில் இன்னாருடைய மகள்/மனைவி என்று குடும்ப விவரம் அலசப்பட்ட பின்னரே அவளது accomplishments பார்க்கப்படுகின்றன. பெண்கள் ஒரு ஆணைச் சார்ந்து நின்ற காலத்திற்கு வேண்டுமானால் இது பொருந்தியிருக்கலாம். ஆனால் பெண்கள் சுயமாக நிற்கிற இந்தகாலத்தில் இப்படிப்பட்ட பார்வை பொருத்தமானதாகத் தோன்றவில்லை.

எங்கள் ஊரில் வெள்ளைக்காரன் வரமுதல் பெண்களுக்கு நிர்வாகத் தேவைகள் இருந்ததா என்பது சரியாகத் தெரியவில்லை. அப்படியே இருந்திருந்தாலும் செல்வி.சின்னத்தம்பி, திருமதி.தங்கத்தம்பியுமாக அடையாளங் காணப்பட்டிருக்க மாட்டார்கள் என்று (நான்) நினைக்கிறேன். ஒரு பெண் வெள்ளைக்காரனின் வழக்கப்படி திருமணத்திற்குப் பின் திருமதியாகிறாள்.அதாவது தன் குடும்பப்பெயராக இவ்வளவு நாளும் உபயோகித்த தந்தையின் பெயரை விட்டு, கணவனின் குடும்பப் பெயரைத் தன் குடும்பப் பெயராக ஏற்கிறாள். இதப் பழக்கம் எப்போதிருந்து எங்கள் சமூகத்துக்குள் புகுந்தது?

இங்கே, எனக்கு நடந்த 2 சம்பவங்கள் சொல்கிறேன்:

முதலாவது, திருமணம் முடித்தவுடன் வந்த வம்பு. எனக்கோ அப்பாவின் பெயர் இருந்த இடத்தில் கணவர் பெயரைப் போட விருப்பமில்லை. அம்மா(இத்தனைக்கும் படித்தவர்.வைத்தியர்) சொன்னா அது கட்டாயமாம் என்று. எங்கேயிருந்து அவவுக்கு அந்த எண்ணம் வந்ததோ தெரியவில்லை. தாங்கள் எல்லாம் அந்தக் காலத்திலேயே எப்ப கலியாணம் முடிய கணவரின் பெயரைத் தன் பெயருடன் இணைப்பது என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பர்களாம்.(வேறே நினைவே இருக்கவில்லை போல என்று கிண்டலடித்தேன்!)இது தான் முறை என்றெல்லம் பெரிய்ய்.ய்..ய்ய விரிவுரை. எனக்கோ விருப்பமில்லை. என் மச்சானின் மனைவி பெயர் மாற்றம் செய்து கொள்ளாதவர். அவரிடம் பேசுவது என்று முடிவாயிற்று. அவ இருக்கவில்லை, என் மச்சானுடன் தான் கதைக்க முடிந்தது. அவர் சொன்னார், அப்படி பெயர் மாற்றச் சொல்லும் ஒரு சட்டமும் இல்லை என்று. அவர் என் கணவரிடம் கேட்டார் "ஷ்ரேயா உம்முடைய பெயருக்கு மாறுவது உமக்கு விருப்பமா?" அதற்கு கணவர் சொன்னார்.."மாறிறது விருப்பம். ஆனா அது அவட விருப்பம்" என்று. இதற்குப் பின்னும் அம்மாவின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு "-" போட்டு அப்பாவின் பெயரையும் கணவர் பெயரையும் இணைத்துக் கொள்ளச் சம்மதித்தேன். ஆனால் இங்கே எல்லா உபயோகத்திற்கும் பாவிப்பது அப்பாவின் பெயரை மட்டுமே. அலுவலர்கள் கேட்டால் "உங்கள் படிவங்களில் என் குடும்பப்பெயர் முழுவதும் அடங்காது" என்று சொல்லிவிடுவேன்.அவர்களும் விட்டு விடுவார்கள். கணவர் இதப் பற்றி ஒன்றும் சொல்வதில்லை. உள்ளே அரிக்குமோ என்னவோ! :o)

சம்பவம் 2: இங்கே

ஆக எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள் ஒரு பெண் கல்யாணமானால் பெயரை மாற்ற வேண்டுமென்று.அது அந்தப்பெண்ணின் தெரிவு என்பது புரிவதில்லையா? பலவந்தமாக மாற்றச் செய்வது தனிமனித சுதந்திரத்தில்/உரிமையில் தலையிடுவதாகும் அல்லவா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?திருமணமாகும் போது பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டுமா? நீங்கள் ஆணாக இருக்குமிடத்து உங்கள் மனைவி உங்கள் பெயரை தன் குடும்பப்பெயராக இணைத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பீர்களா? ஏற்கெனவே திருமணமாகி, மனைவி பெயர் மாறியுள்ளவர்களின் கருத்து என்ன?பெயர் மாற்றிய/மாற்றாத/மாற்ற விரும்பாமல் மாற்றிய மனைவியரின் கருத்து என்ன? கொஞ்சம் சொல்லுங்களேன்..

கிறுக்க இடம் இல்லை!!

கிறுக்கல் பலகையின் சேவை இனிமேல் காசு கட்டினாத்தானாம், நீங்க அப்படி ஒரு சந்தா அங்கத்தவரென்றால் உங்களுக்குரிய சேவை தொடர்ந்து தடையின்றி வழங்கப்படும். இலவசமா எழுதித்தள்ளுறவங்க தொகை அதிகமானதால இந்த முடிவை நேற்றிலிருந்து செயல்படுத்திறாங்க.

புதுசா கிறுக்கல் பலகை தேடிறன்..நல்லதொன்று கிடைச்சா சொல்லுங்க!

ஓரினச் சேர்க்கை

இன்றைக்கு 2 பதிவுகள் படித்தேன். தோழியரில் ஒன்று. மற்றது பொடிச்சியினது. உடனடியாக மனம் "ஓரினச் சேர்க்கையாளர்" பற்றிய அறிமுகம் எனக்கு எப்ப ஏற்பட்டது என்பதை யோசித்தது. சரியாக குறிப்பிட முடியவில்லை. இலங்கையில் இருந்த போது எனக்கு இவை பற்றி தெரிந்திருந்திருக்கக் கூடும். ஞாபகமில்லை. ஒரு த.சே.வின் அறிமுகம் ஏற்பட்டது சிட்னியில் கல்லூரியில் தான். ஒரு பெண். அவவின் பாலியல் தெரிவு அவவின் சுதந்திரம் என்பதே என் கருத்தாக இருந்தது/ இருக்கிறது. ஒரு conservertive குடும்பத்திலிருந்து வந்த எனக்கு எப்படி இந்தக் கருத்து முதலிருந்தே மனதில் ஒரு விதமான குழப்பமும் இல்லாமல் தோன்றிற்று / வேரூன்றியது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சந்தோஷமாகவும் இருக்கிறது. இவர்களின் சேர்க்கைத் தெரிவு சரியானதா இல்லையா என்பதைப் பற்றி ஒரு தனிப்பட்ட கருத்து எனக்கு இல்லை. ஒரு விஷயத்தில் தனிப்பட்ட கருத்து இல்லாதிருத்தல் சாத்தியமா என்பது பற்றிப் பிறகு பார்க்கலாம். ஆனாலும் ஒரு சக மாணவியாக அவவின் பேச்சும் நடவடிக்கைகளும்(5 வார்த்தையில் ஒன்று "f***", பெண் தோழியுடனான உறவு பற்றிய விளக்கங்கள்) என்னால் சகிக்கக் கூடியதானவையாக இருந்ததில்லை. அதற்காக எப்பவும் அவவோடு அளவாகவே வைத்துக் கொள்வேன். அவள் தவறாக எடுத்துக் கொள்வதில்லை என்பது பெரிய ஆறுதல். ஆனால் வகுப்பின் வழமையான பகிடி சேட்டைகளில் சேர்ந்து முஸ்பாத்தி பண்ணியிமிருக்கிறேன்.

இரண்டாவது அறிமுகம் ஒரு ஆண்.அதே கல்லூரியில் இரண்டாமாண்டின் போது. ஓரளவுக்கு ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றி, அவர்கள் எதிர் நோக்கும் குழப்பங்கள் பிரச்சனைகள் பற்றி தெளிவு கிடைத்தது இவனது அறிமுகத்தினால் என்று சொல்லலாம். கொஞ்சம் அதிகப்படியான பெண்மையுடன் கூடிய பாவனை. உடல்வாகும் அப்படியே.. வளர்த்துக் கொண்டிருக்கும் தலைமயிர். Robert என்ற பெயருடையவன். நகம் வளர்த்து தெளிந்த நகப்பூச்சும் பூசியிருப்பான். முற்போக்குச் சிந்தனைகளுடையவன் என்று சொல்லலாம். இதே வகுப்பில் இருந்த சிலருக்கு இவன் அவர்களுடைய குழுவில் இடம் பெற்றது பிடிக்காமல் ஆசிரியரிடம் போய் இவனை குழுமாற்றம் செய்த "பெருமை" உண்டு. எங்கள் குழுவில் இவன் மட்டும்தான் ஆண். பெண்ணாக மாறப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டேயிருப்பான். நாங்களும் அவனுடம் இருந்து பெண்ணாக இருப்பதன் நன்மை தீமைகளை அலசி ஆராய்வோம். சிறுவயதிலிருந்தே தான் தனிமையாக உணர்ந்ததாகச் சொல்வான். Princess என்பதே பள்ளியில் அவனது பட்டப்பெயராக இருந்திருக்கிறது.

ஒரு நாள் வந்தான்..வாகன ஒட்டுநர் அனுமதிப்பத்திரத்தைக் காட்டினான். அதில் "Sarah" என்று பெயர் மாற்றப்பட்டிருந்தது. சட்டத்தின் முன் தான் ஒரு பெண் என்பதை நிலைநிறுத்தும் முயற்சியின் பலன் அது என்பதை தெளிவாக விளங்கப்படுத்தினான். கல்லூரிக்கும் தேவையான அத்தாட்சிகளைக் கொண்டுவந்து சேராவாக மாறிவிட்டான். தொடர்ந்த வாரத்தில் இதுவரை ஆண்களின் ஆடையில் வலம் வந்த சேரா முதன் முதலாக ஒரு நீண்ட பாவாடையும் ஒரு வடிவான் மேற்சட்டையும் அணிந்து வந்து, வகுப்பில் சலசலப்பை ஏற்படுத்தினாள். கிசுகிசுப்பான பேச்சுகளும் நமுட்டுச் சிரிப்புகளும் நிறைந்த அந்தக்கணத்து வகுப்பை போன்று நாராசமானதாக வேறொன்றும் அவளுக்கு இருந்திராது என்பது திண்ணம். எங்களுக்கு, அதாவது குழுவிலிருந்த பெண்களுக்கு சேராவை பெண்ணாய் பார்ப்பதில் பிரச்சனை இருக்கவில்லை.

இரண்டு மூன்று மாதங்கள் சென்றிருக்கும், வகுப்பிலே ஆசிரியர் இல்லாத சமயம் பார்த்து தீவிர "ஹோமோஃபோபிக்" ஒருவனுக்கும் இவனுக்கும் தர்க்கமேற்பட்டது.

"நீயெல்லாம் கடவுளுக்கு எதிரானாவன்"
"எதனை ஆதாரமாக வைத்து இப்படிச் சொல்கிறாய்"
"பைபிளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பாவிகள், தண்டிக்கப்படுவார்கள் என்றெல்லாம் சொல்லியிருக்கிறது"
"அதற்கு நான் என்ன செய்யட்டும்..நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்"
"அஹா! உன் செய்கைகளை ஆமோதிக்கும் கடவுளர் யாருமில்லை, அதனால் நீ கடவுள் பக்தியில்லை எனச் சொல்கிறாய்"
"என் காதலன் கத்தோலிக்கன்.அதற்கு என்ன சொல்கிறாய்"
"நரகத்திற்குப் போவான்"....

இப்படியே தொடர்ந்து பல அனாவசிய கோணங்களையும் தொட்ட அந்த விவாதம் கடைசியில் மற்றவன் "உன்னுடன் ஒரு அறையில் இருப்பதே என் மேல் ஏதோ ஊருவது போலுள்ளது" என்று சொல்லி வெளியேறியதில் முடிவுற்றது. அன்றைக்குத்தான் எனக்கு உறைத்தது, இப்படியும் மடத்தனமான ஆட்கள் இருக்கிறார்களே என்று. இவனும் சக மனிதன் தானே. உனக்கும் இவனுக்கும் செல்லப்பிராணியின் தெரிவில் வித்தியாசமிருக்கலாம்..உனக்கு நாயும் அவனுக்கு பூனையும் பிடிக்கலாம், அதற்காக தர்க்கம் செய்து,கீழ்த்தரமாக நடந்து கொள்வாயா?ஒருவனது தனிப்பட்ட விடயமான பாலியல் தெரிவு மட்டும் ஏன் இவ்வளவு விமர்சனத்திற்குள்ளாக வேண்டும்?

தப்பித் தவறி பழைய ஞாபகத்தில் Rob என்று கூப்பிட்டு நாக்கை கடித்து Sarah என்று நான் மாற்றியிருக்கிறேன்.ஒன்றும் பேசாது, அது பரவாயில்லை என்று சொல்லி, வேண்டுமென்று செய்யப்பட்ட தவறல்ல என்பதைப் புரிந்து கொண்டவள்.

ஆனாலும் அவனது "அவள்" மாற்றம், சுற்றியிருந்த எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. எதிர்ப்பாலர்மேல் ஈர்ப்பு இருப்பதையே நியதி என்று கண்டும் கேட்டும் வளர்ந்தோருக்கு இம்மாதிரியான பாலியல் தெரிவுகள் அதிர்ச்சியளிக்கும். ஒரு நாளும் காணாத ஒன்று, வழமைக்கு மாறான ஒன்றாக ஒருவருக்கு தோன்றுவது, இன்னொருவருக்கு மிகச் சாதாரணமான ஒன்றாக இருக்கும். ஆணொருவருக்கு பெண்ணில் ஈர்ப்பு வருகிறது. ஒரு ஆண் தன்னினச் சேர்க்கையாளருக்கு இது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்றாக இருக்கும். அடிப்படை வித்தியாசங்கள் தான் மனிதர்களை ஈர்க்கின்றன, வேறுபடுத்துகின்றன. இயல்பாகவே இருக்கும் வித்தியாசங்கள் போன்று ஒருவர் செய்யும் தெரிவுகளும் அவரை சமூகத்தில் அடையாளம் காட்டும். ஆனால் துரதிஸ்டவசமாக சமூகத்தின் அங்கத்தவர் என்ற முறையில், சக மனிதப்பிறவி என்னும் அடிப்படையில் தன்னினச் சேர்க்கையாளர்கள் பெரும்பாலானோரால் பார்க்கப்படுவதில்லை. அந்நியப்படுத்தப்பட்டு, அருவருக்கப்படும் நிலையே காணப்படுகிறது.

செய்வதற்கு உரிமையில்லாத செயலான பிறரின் அந்தரங்கத்தினுள் மூக்கை நுழைப்பதும், அதன் மீதான விமர்சனமும் தேவையற்றன. தெரிவுகள் தனிப்பட்டவை, அவற்றில் தலையிடுவதோ, விமர்சிப்பதோ நாகரிகமல்ல. அப்படியே விமர்சிக்கத்தான் வேண்டும், அதுதான் வாழ்வினைச் செலுத்துகிறது என்று நினைத்தால் அதை அழுக்கான அந்தரங்கங்களுக்குள் புதைத்துக் கொள்வது புத்தியான செயல்.

தார் இட்ட வீதியிலே கார் ஓட்டும் வேளையிலே...

"ப்ரூம்..ப்ரூம்"
"என்னடா நித்திரையில காரோடுறா"...

இப்படி ஆரம்பிக்கும் விளம்பரத்தை ஐரோப்பிய தமிழ் வானொலி(எதென்று மறந்து போச்சு) நேயர்கள் கட்டாயம் கேட்டிருப்பார்கள். அண்ணாவின் மூத்த மகள் அடிக்கடி சொல்லிச் சிரிப்பாள்.

நான் கேட்பது இதுதான்..யாராவது கணவரிடம் கார் ஓட்ட பழகுறீங்களா? நான் உங்களுடன் ஒத்துணர்கிறேன்(Empathize). ;o)

பயிலுனர் அனுமதி எடுத்து 1 வருஷத்திற்கும் மேலே. இன்னும் பயில்கிறேன். வாகனத்தை கையாளும் பக்குவம் வந்ததும் என்னிடம் பழகலாம் அது வரை பயிற்றுநரிடம் பழகு என்று கணவரும் சொல்ல சரியென்று தலையாட்டினதில் ஆரம்பித்தது. அனுமதி கிடைத்து 3- 4 மாதங்களின் பின் தான் வகுப்புக்கான ஒழுங்கெல்லாம் செய்து..பயிற்றுனரிடம் கிழமைக்கு 2 வகுப்பு படி ஆரம்பித்தேனா..5 மாதமாய் தேடிக் கொண்டிருந்த வேலை கிடைத்தது.

7 வகுப்போடு பயிற்சியும் நின்று போச்சு. வேலைக்குப் போனேன். கிடைக்கிற நேரத்தில் கணவரிடம் பழகலாம் என்றால் 10 வகுப்பு முடித்து விட்டு வந்தால்தான் காரைத் தொடவே விடுவேன் என்று மிரட்டல்! ஹ்ம்..இந்த பிறவியில் நமக்கு லைசென்ஸ் கிடைக்கது போல என்று நொந்து கொள்வேன். 2ஆவதாக இன்னொரு வேலை கிடைத்தது. அதற்குப் போனேன். 1 மணித்தியாலம் பேருந்துப் பயணம். எலும்பெல்லாம் ஏதோ குலுக்கல் போட்டியில் கலந்து கொண்டுள்ளது போலிருக்கும். தொடர்ந்து 6- 7 மணித்தியாலம் call centreல் வேலை. வீட்ட வந்தா விழுந்து படுக்கத்தான் சொல்லும். ஒருகட்டத்தில் காது வலியும் வந்து விடவே அந்த வேலையை விட்டேன்.

2 மாதம் வீட்டிலிருக்க வேண்டி வந்தது. இந்த இடைவெளியில் கார் பழகல் திரும்ப வித்தியாரம்பம். 10 வகுப்புக்கு பிறகு கணவரிடம் பழகலாம் தானே என்று புதிதாக 3 வகுப்பு முடித்தேன். அவரிடம் போனால்..இன்னும் 10 கிளாஸ் போ என்று வாரி விட்டார். நான் விட்டேனா, ஒரு வகுப்புக்கே $30. 3 வகுப்பு முடிய கணவரின் நண்பரிடம் போய், "அண்ணா, சொல்லித்தாங்க" என்று பிடியாய் பிடித்துக் கொண்டேன். அவருடன் 3 - 4 தடவை பயிற்சி. கணவருக்கு ரோசம் வந்து "வண்டியை கையாளத் தெரிகிறது உனக்கு" என்று சொல்லி பழக்க ஆரம்பித்தார். வந்தது வினை!ஓட்ட ஆரம்பித்து முதல் சில நிமிடங்களுக்கு வண்டி அதற்குரிய லேனை விட்டு வெளியே போகும்..உள்ளே வரும்..ஓட்டுனர் கதி அந்தோ!! அதோடு விடுவேனா..எனக்கும் பெரிய மைக்கல் ஷூமாக்கர் என்று நினைப்பு!அக்சிலரேட்டரை அழுத்துவது எனக்கே தெரியாம நடக்கும். வேகம் அதிகம் போனால் போச்சு!(உண்மைதானே!). அடுத்து வரும் ..ஆப்பு வைப்பதெற்கென்றே ஒரு ரௌண்டபவுட்.

"பொறு..பொறு.."
"அந்த வாகனம் தூரத்தில தான் வருது..நான் எடுக்கிறனே"
"நான் சொல்றன்..பொறு".

ஒருமாதிரி எல்லாம் சமாளித்து ஓடினாலும் எங்கேயாவது பிசகி கணவர் வாயிலிருந்து வார்த்தை கடைசியாய் கடுமையாய் வந்ததோ..தொலைந்தேன்! அட..கண்ணாடி இவ்வளவு ஊத்தையா இருக்குதே..கையில் நகம் வளர்ந்து விட்டது..வெட்டணும்..அந்த பூமரம் ஏன் பூக்கவில்லை..இரவு என்ன சாப்பாடு (வேறொன்னுமில்லை..இதெல்லாம் அவர் பக்கத்திலிருந்து திட்டு வரும்பொழுது ஷ்ரேயா மனதில் திரையிடப்படுபவை ..ஹிஹி!! ) அவர் பாட்டுக்கு அ(க)ர்ச்சனை செய்வார், நான் பாட்டுக்கு இதெல்லாம் யோசித்து விட்டு, கடைசியா..நான் செய்தது பிழைதான்/சரியென்றால் நியாயம் சொல்லிவிட்டு மறுபடியும் கியர் மாற்றி, ஓட்டத்தொடங்குவேன். அடுத்த கணை வரும்:

"உனக்கு சுரணையே இல்லையா??"
"கையிருப்பு முடிஞ்சு போச்சு போல..போகும்போது வூலியில் (பல்லங்காடி) 4- 5 கிலோ வாங்கிட்டுப் போவம்"

அங்கே ஒரு சிரிப்பு பூத்து எல்லாம் சுமுகமாகிவிடும்..அடியேன் அடுத்த வெட்டு வெட்டும் வரை அல்லது லேனுக்குளிருந்து வாகனம் கொஞ்சம் வெளியேறப் பார்க்கும் வரை...

மார்கழியிலிருந்து புது வேலைக்குப் போவதாலும், கணவருக்கு கணக்காய்வாளர்கள்(auditors) வந்ததாலும் என் காதும் அவரது இதயமும் இப்போதைக்கு சற்றே ஓய்வெடுக்கின்றன.

பயம்

செய்து கொண்டிருக்கிறதெல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு, அம்மாவின் மடியில் போய் சுருண்டு கொள்ள/சாய்ந்து கொள்ள வேண்டும் போல எப்போதாவது உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? இன்றைக்கு ஒரு குறிப்பிட்ட காரணமுமின்றி அப்படிச் செய்ய வேணும் போல் மனதில் தோன்றிற்று.

அரிதாக எப்போதாவது எனக்கு ஒரு பயமும் வருவதுண்டு. ஒன்றுமே நடந்திராது, காரணமும் இருக்காது..ஆனாலும் ஏன் எதற்கென்று தெரியாமலே பயப்படுவேன். இது குளிர்காலத்தில் எற்படும் (winter blues) பாதிப்பல்ல. பதின் வயது முதலே இருக்கிறது என நினைக்கிறேன்.இந்த மாதிரி பயமாக இருக்கும் போதும் முதலில் சொன்னது போல அம்மாவின் மடியில் சுருண்டு கொள்ள அல்லது மிக நெருங்கியவர்களுடன் இருக்க வேண்டும் போலிருக்கும். சில சமயங்களில் 2- 3 நாட்களுக்கும் தொடரும் இந்தப் பயத்திற்குக் காரணம் யாருக்காவது தெரியுமா?

பவள மல்லிகை

பாட்டி வீடு. பெயரைச் சொல்வதை விட, புளியடியார் என்றால் தான் இன்னும் வடிவா ஊருக்குள்ளே தெரியும். ஒரு சிவப்பு பெரிய 'கேற்'. ஓட்டிக் கொண்டு வரும் (ஒரு அளவான) வேகத்தில சைக்கிள அதில் மோதினா, கொளுக்கியும் போடாமலிருந்தா, தகரத்தில அடி வாங்கின சத்தத்துடன் திறக்கும். படலையிலிருந்து வீட்டுக்கு 25மீ இருக்கும். 2 பக்கத்திலும் பூமரங்கள். நடுவிலே கொஞ்சம் வெண்மலும் செம்மணலும் கலந்த
நிறத்தில் பாதை. என்னென்ன பூமரம் என்றெல்லாம் ஞாபகமில்லை. போய் 8 ஆண்டுகளாகினதினால் என்று சாட்டு சொல்ல மாட்டேன். அங்கே போனபோதெல்லாம் விளையாட்டும், கிடைக்கிற விதம் விதமான சாப்பாடுமே பிரதானமாக மனதில் முன்னிற்கும். மச்சி(மச்சாள் வயதுக்கு நிறையவே மூத்தவ என்பதால் இப்படித்தான் கூப்பிடுவது)சின்னப்பிள்ளைகளுக்கு மேலதிக வகுப்பு எடுப்பா. அப்ப அங்கே நானும் போயிருந்து சம வயதுப் பிள்ளைகளுடன் இருந்து படிப்பேன். எல்லா நாளும் சரியாக தமிழும் எழுதி, கணக்கும் செய்து வந்திருந்தேன்...எப்பயாவது தடுக்குப்படவேணும் என்கிற நியதிப்படி பால் + சோறு = பால்ச்சோறு என்று எழுதி பிழை விட்டது நல்ல ஞாபகம். இதே வகுப்பிலிருந்த பையன் நான் இந்தச் சம்பவம் நடந்து 3- 4 வருடங்களுக்குப் பிறகு (அந்த சில வருட இடைவெளியில் 10- 11 வயதுக்குரிய வளர்ச்சி வர ஆரம்பித்திருந்தது) விடுமுறைக்கு பாட்டி வீட்ட போன போது மச்சாளைக் கேட்டான் "முதல் ஒராள் வருவாவே..அவா இப்ப வாறேல்லையோ" என்று. மச்சாள் சொன்னா "அவதான் இவ" என்று. அந்தப் பையனின் கண் விரிந்தது. சில வினாடிகள் இமைக்காது பார்த்தவன் "வளந்து போனா..அதுதான் அடையாளம் தெரியேல்ல" என்று சொல்லிவிட்டு, தந்த கணக்கை செய்ய தொடங்கி விட்டான். ஏனடா தன்னில் இப்படி வளத்தி இல்லை என்று யோசித்திருப்பானோ என்னவோ!! ;o)

வீட்டுக்குப் போகிற வழியில் பூமரம் நிற்கும்..என்னென்ன என்று தெரியாது என்று சொன்னேன் தானே, ஆனால் நல்ல வடிவானதாக இருக்கும்.கனாஸ் வாழை இருந்ததாக ஞாபகம். மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு நிறத்தில் பூக்களுடையது. அப்படியே நேரே போனால் வாசல்.இடப்பக்கமா முற்றம் தொடரும். முற்றத்திற்கும் வீட்டிலிருந்து இன்னொரு வாசல். ஒரு கூடத்தில் 2ம் சந்தித்து வலப்பக்கமுள்ள கதவுக்குள்ளால் போனால்வீட்டின் ஹோல் வரும். நுழைந்தவுடன் வலப்பக்கம் கேற்றை பார்க்கும் சாளரம். நேர் முன்னல் சாமியறை. அதுக்குப் பக்கத்தில் பாட்டி/மச்சாள்/அத்தையின் அறை. அதைத்தாண்டிப் போனால் மாமி&மாமாவின் ஒரே சாய்மணைக் கதிரை.கதிரைக்கு இடப்பக்கத்தில் ஒரு 3 அடி தள்ளி சாப்பாட்டு மேசை. அதுக்கும் இடப்பக்கமாக ஒரு சின்ன ஓடை.இதன் கதவு முதல் சொன்ன முற்றத்துக்குள் திறக்கும். இது தான் அந்த வீட்டிலேயே பிடித்த இடம்...சைக்கிள் வைக்கும் இடம் & புத்தக அடுக்கு இருந்த இடம்.

சாய்மணைக்கதிரை தாண்டினால் ஒரு சின்ன கூடம்.இதற்கு இடப்பக்கத்தில் சமையலறை.வலப்பக்கத்தில் மாமா/மாமியின் அறை. இதை தாண்டினா கொல்லைப்புறத்துக்கு போகும் வாசல்.தரை ஒரு 5 அடிக்கு 15 அடி சாணியால் மெழுகியிருக்கும்.இதில் இடப்புறம்தான் 2 வாங்கு மேசை போட்டு மச்சாள் வகுப்பு நடத்துவது. வலப்புறம் ஒரு குகை மாதிரி.அதற்குள் இல்லாத சாமானே இருக்காது!!! கிணறு வடமேற்கில் இருக்கும்(ஏன் அள்ளுமிடத்தில் தடுப்புச்சுவர் 99% கிணறுகளுக்கு இல்லை என்பது புரியாத புதிர். பாட்டி கண் தெரியாத காலத்தில் அதற்குள் தடுக்கி விழுந்து, பிறகு கதிரையொன்றைக் கட்டி இறக்கி தூக்கி எடுத்தார்கள்!!). கிணற்றடி வேலியில் கொவ்வைக் கொடி படர்ந்திருக்கும்.

கிணற்றுப்பக்கம் போகாமல் பின்புற வாசலிலிருந்து நேரே பார்த்தால்..ஆகா!!அந்த சின்ன பவள மல்லிகை(யாருக்காவது இதன் தாவரவியற் பெயர் தெரியுமா?) மரம் வெள்ளையா பூவுதிர்த்து பச்சையாய் இன்னும் பல பூக்கள் தலையில் சூடி நிற்கும் அழகு! பின்னேரத்தில் அதன் வாசம்..ம்ம்ம்...நினைத்துப் பார்க்கும் போது அதன் வாசம் இன்னும் என் மூக்கில்.

மாமி/அத்தை இதில் பூவெடுத்து சாமிக்கு வைப்பார்களோ என்னவோ! விடுமுறைக்குப் போகையில் என்னென்ன முஸ்பாத்தி பண்ணலாம் என்பதே யோசனையாக இருக்கும். பெரியம்மா பெரியப்பா பாட்டி, மாமி மாமா அத்தை மச்சாள் இவர்களெல்லாம் விடுமுறையின் அங்கங்கள். அவர்களை அவர்களாகவே, தனி நபர்களாக பார்த்ததேயில்லை. என் மனதில் அவரவருக்கென்று ஒரு பிம்பம். அதற்கூடாகவே பார்த்திருக்கிறேன். இப்போ யோசிக்கும் போது தான் மனதில் உறைக்கிறது. இன்னொருமுறை இன்ஷா அல்லா போகக் கிடைத்தால் மாமி, அத்தை, பெரியம்மா என்று நிறக்கண்ணாடி கொண்டு பார்க்காமல் அவர்களாகவே பார்ப்பேன் என தோன்றுகிறது. இலங்கையிலிருந்து புறப்பட்டதிலிருந்து நிறைய கற்றிருக்கிறேன். பிறரைப் பார்ப்பதிலும் ஒரு கொஞ்சம் தெளிவும், முதிர்ச்சியும் வந்துள்ளது என்றும் நினைக்கிறேன். இப்போது போய் பார்க்க முடிந்தால் ஒவ்வொருவரும் தங்களுக்கேயுரிய வாசம் வீசுகையில் அதை அப்படியே உணரக்கிடைக்கும்.

சமையல்.. சிறு குரைப்பு!

நீண்ட நாளைக்குப் பிறகு ஒரு உறவினரோடு கதைத்தோம்.(தொலைபேசி இணைப்பை மீட்டுக்கொண்டுள்ளோம்!) பேச்சு வாக்கில் நான் மீண்டும் வேலைக்குப் போவது பற்றியும் அதனால் நாளாந்த வாழ்க்கையில் ஏற்படும் மற்றங்கள் பற்றியும் கதைத்துக் கொண்டிருந்த போது என் கணவர் அவவிடம் சொன்னார் :”இவ சும்மாவே சமைக்கப் பஞ்சி, இப்ப வேலைக்கும் போய் வருவதில் சமையல் எல்லாம் அவசரச் சமையலாகவே இருக்குது” என்று. ஒலிபெருக்கியுள்ள தொலை பேசியாதலின் ஒரெ நேரத்தில் கதைக்க முடியும். ஓருவர் பேசி முடித்து நம்மிடம் தரும் வரை காத்திருக்கத் தேவயில்லை. கணவர் சொன்னதற்கு பதிலாக “சும்மாவே சமையல் என்றால் எட்டி நிற்கிற ஆள் நான், மற்றது வேலையால வந்தவுடனே சமைக்கவும் ஏலாதுதானே, களைப்பா இருக்கும். இவரைக் கேட்டா சிலநேரம் செய்து தருவார்” என்று நான் சொன்னேன். அதற்கு அந்த பெரியம்மா என்ன சொன்னா தெரியுமா..”பொம்பிளப் பிள்ளைகள் சமையல் விருப்பமில்லை, ஏலாது என்றெல்லாம் சொல்லப்படாது! ஆம்பிளப்பிள்ளையை, அதுவும் புருசனிட்ட சமைக்கச் சொல்லுறதா..என்ன பழக்கம்! விட்டா வீட்டையும் ஒழுங்குபடுத்தச் சொல்லி கேப்பீர் போல கிடக்கு” What the!!

ஏன் பெண்களுக்கு பிடிக்காததை மறுக்கும் அல்லது செய்யாமல் விடும் உரிமை இல்லையா? ஆண் சமைப்பதில், வீட்டு வேலைகளில் பங்கேற்பதை இன்னும் தரக்குறைவான செயலாகத்தானா கருதுகிறோம்?இந்த பெரியம்மா இப்படிப்பட்ட கருத்தை கொண்டிருக்க என்ன காரணம் இருக்கக் கூடும்? ஒரு வேளை பெரியப்பா, தான் எப்போதாவது சமைக்க வேண்டி வந்து விடும் என்று நினைத்து இப்படி சொல்லிக் கொடுத்தாரா– கல்யாணமான் புதிதில்? :o)

அல்லது சிறு வயதிலிருந்தே பழக்கப்பட்ட, மனதில் ஊறவைக்கப்பட்ட ஒரு விடயமா?இந்த மனநிலை முதன் முதலில் யாரால் புகுத்தப்பட்டிருக்கும் என்று யோசிக்கிறேன். காலக்கிரமத்தில் வாழ்வில் ஒரு அங்கமாக ஆண் வெளி வேலைக்கும் பெண் வீட்டு வேலைகள் & குடும்பதிற்கும் என்று மனதில் ஊறி விட்டது. இந்தக் கட்டை உடைத்து வெளிவர முயற்சிக்கிற வேளையில், அதற்கு தடைக்கல்லாக நாமே இருக்கிறோம். தலைமுறை தலைமுறையாக இருந்து வரும் சில பழக்கங்கள், நடைமுறைகள் மாற்றப்பட வேண்டியவை தான் என உணரப்பட்டாலும் பெரும்பான்மையினர் அம்மாற்றத்தைக் கொண்டுவரும் முயற்சியில் ஈட்டுபாடு காட்டுவதும் இல்லை, காட்டுவோரை முன்னெடுத்துச் செல்ல விடுவதுமில்லை. சமையல், வீட்டுவேலை, குழந்தை வளர்ப்பு என்பவற்றில் குறிப்பிடத்தக்களவு ஆணின் பங்களிப்பு தற்போது காணப்படுகிறது. ஆனாலும் இந்த பகிர்வு மனப்பான்மை புலம் பெயர்ந்தவர்களிடமோ அல்லது நகர் வாழ் இளைஞர்களிடமோ தான் அதிகளவில் காணப்படுகிறது என்றே நினைக்கிறேன். சாதாரண மத்தியதரக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, மணந்துள்ள ஒரு சராசரி ஆணின் குடும்ப வாழ்வில் அவனுடைய பங்களிப்பானது வருமானம் சார்ந்ததாக மதிக்கப்படுகிற சூழ்நிலையில் அவனுக்கு வீட்டு வேலைகள், குழந்தை பராமரிப்பு/ வளர்ப்பு என்பனவற்றை மனைவியுடன் பகிர்ந்து செய்யலாமே என்கிற மனப்பாங்கு வருமா?

இப்படி ஆண், பெண் இருவரும் பால் சார்ந்த தங்கள் கடமைகளுக்கு அப்பால், ஒரு குடும்பமாக ஒன்றிணைத்து பார்க்கப்படுவது எப்போது? அவர்களது பால் சார்ந்த கடமைகளை அவர்கள் நிறைவேற்றும் அல்லது நிறைவேற்றாத முறைகளாலன்றி, அவர்களை அவர்களாகவே - சக மனிதர்களாக – பார்ப்பது எப்போ?

என்னதான் சொன்னாலும் “எப்பிடி செய்யிறதென்று மறந்து போச்சு” என்று சொல்லிக் கொண்டே கணவர்கள் தயாரிக்கும் உணவின் சுவையே தனி என்பது பாவம்! பெரியம்மா அறியாத ஒன்றாகவே இருக்கப் போகிறது!! ;o)

பிறந்த நாட்கள்


சந்திர வதனாவின் அதிசயம் பார்த்ததும் இது ஞாபகத்திற்கு வந்தது.

என்னுடன் படித்த தோழியின் பிறந்த நாளும் என் அப்பாவின் பிறந்த நாளும் ஒரே நாள்.
என்னுடைய பிறந்த நாளும் அவளது தந்தையின் பிறந்த நாளும் ஒரே நாள்.

இருக்கிறதே 365 (366) நாள்தான்..இதில்தானே எல்லாருடைய பிறந்த நாட்களும் வரவேண்டும், ஆனாலும் ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே ஏற்படுகின்ற சில எழுமாறான இப்படிப்பட்ட ஒற்றுமைகள் வியக்க வைக்கின்றன.

ஒன்றும் பலதும்

ஒருசொல் பல பொருள் தெரியும்…(உதாரணமாக 'அணை' = தடுப்பு(அணைக்கட்டு), அணைத்தல் (மேல்kind இதை செய்ய முடியாம தான் புலம்புறாங்க ;o) ) , நூர்த்தல்(விளக்கை அணைத்தல்) இப்படி..

ஒரு வசனத்திற்கு 3 பொருள் கண்டு பிடித்தார் எங்கள் கணித ஆசிரியர். (சொல்லாததுக்கே அர்த்தம் கண்டுபிடிக்கிற இந்த நாளில் இதெல்லாம் பெரிய விஷயமா என்று கேட்கிறீர்களா..அதுவும் சரிதான். சரி சரி கதைக்குப் போவம் வாங்க). வீட்டுப்பாடம் செய்து வரச் சொல்லியிருந்தார். அன்றைக்கு வகுப்பில் மாணவர் வரவும் சற்று குறைந்திருந்தது. ஓரு மாணவனை எழுப்பி “வீட்டுப்பாடம் செய்தாயா?” என்று கேட்க அவனும் அரிச்சந்திர மூர்த்தியாகி “நான் வீட்டுப்பாடம் செய்து கொண்டு வரயில்ல சேர்” என்று சொன்னான். அதற்கு ஆசிரியர் “எனக்கு விளங்கவில்லை ..நீ சொன்ன வசனத்துக்கு 2 பொருள் வருது.. நீ எதை சொல்லுகிறாய் என நான் எப்படி தெரிந்து கொள்வது?” என்று சொல்லி, அந்த 2 விளக்கங்களையும் சொன்னார்

1. வீட்டுப்பாடம் செய்து கொண்டு வரவில்லை (அதாவது..செய்யவேயில்லை)
2. வீட்டுப்பாடம் செய்து கொண்டு வரவில்லை (செய்த பாடத்தை கொண்டு வர மறந்தாச்சு)

வகுப்பு சிரிக்க ஆரம்பிக்க, ஆசிரியர் தொடர்ந்து..”நீ வகுப்புக்கு வந்திருக்கிறாய் அதனால இந்த கடைசி விளக்கம் உனக்குப் பொருந்தாது! என்று சொல்லி இதையும் சொன்னார்
வீட்டுப்பாடம் செய்து கொண்டு வரவில்லை!!

கணக்கு ஆசிரியர் எத்தனை கொம்பினேஷன் ஏலும் என்று பார்த்திருக்கிறார் போல!


பி.கு: அவர் 4 பொருள் சொன்ன மாதிரி ஒரு ஞாபகம்….ஆனாலும் 3 தான் இப்ப நினைவிற்கு வந்தது. 4 வதை கண்டுபிடிச்சா சொல்லுங்க..திருத்தி விடுகிறேன்.

மனவருத்தம்

சென்ற கார்த்திகை மாதத்தில் ஒரு நாள் வீட்டுக் கணினியில் வலை மேய ஆயத்தமாகும் போது ( நான் இன்னும் dial-upதான்) திடேரென்று பார்த்தால் ஒரு பிக்கினி அணிந்த பெண்ணின் படம் கணினித் திரையின் வலது மூலையில் வந்திருந்தது. என்னடா இது இவ்வளவு பாதுகாப்பு போட்டிருந்தும் எரிதமாக குறிப்பிட்ட தளத்திற்கான சுழற்றி(dialer) தரவிறக்கியிருக்கிறதே என நொந்து கொண்டே அதை கணினியிலிருந்து நீக்கியிருந்தேன். அப்போது ஒன்றும் பிரச்சனையாக மனதில் தோன்றவில்லை. பிறகு 2- 3 நாடகளில் கணவர் வந்து தான் கணினியில் ஏதொ வேலை செய்து கொண்டிருக்கும் போது நான் மேலே குறிய படியே சுழற்றி தெரிந்ததாயும் தான் அதை நீக்கியதாயும் குறிப்பிட்டார். இப்படியான பாலியல் தளங்களுக்குச் செல்லும் பழக்கமோ தேவையோ எங்களிருவருக்கும் இல்லை.அப்பத்தான் கணவர் சொன்னார் எங்கள் வீட்டிற்கு வந்து தங்கியுள்ள உறவினரின் விளையாட்டாக இருக்குமென்று. நான் நம்பவில்லை..எரிதம் பற்றி,வலையுலாவி அபகரிக்கப்படுவது பற்றி அறிந்திருப்பதால் அப்படியான ஒரு நிகழ்வாக இருக்கலாம் என கணவரிடம் கூறியிருந்தேன்.

தனக்கும் அவை பற்றித் தெரியுமெனவும், தான் உறவினருக்குக்கென்று கொடுத்திருந்த பயனர் பெயருக்குரிய குக்கீஸ் ஐ பார்த்ததாகவும் சொன்னார். அதில் முழுக்கவும் பாலியல் தளங்களே இருந்ததாம். இந்த அண்ணாவின்(இந்த வார்த்தைக்கு தகுதியானவரே இல்லை அவர்!) அறையில் தான் கணினி இருந்தது..ஆகவே நல்ல வசதியாக போய் விட்டது அவருக்கு. எங்கள் சீப்பு,பவுடர்,கிறீம் எல்லாமும் அதே அறைக்குள். ஆகவே இரவில் படுக்க முன்பு கிறீம் போட எடுக்கச் செல்லும் பாசாங்கில் அவரது அறைக் கதவை தட்டி உள் நுழைந்தால் கணினித் திரையில் கடைசிச் சாளரம் குறுகிச் செல்வது தெரியும். நான் அறையிலிருந்து வெளியேறும் வரை வேறு ஒன்றுமே வலை மேய்வதில்லை அவர்.ஏன் வலை தொடர்பை ஏற்படுத்தி வோல்பேப்பரையே பார்க்கிறார் என நானும் கேட்டதில்லை!!

இதற்குப் பிறகு கணவர் அவரிடம் பேசி சில நாட்கள் இல்லாமலிருந்தது. பிறகு இப்போ மீண்டும் தொடங்கியுள்ளது.உறவினரது சொந்த அண்ணனே "இவன் பொறுப்பில்லாதவன்..சரியான சோகுசுப் பேர்வழி" என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். சரியான படிப்புமில்லை.7ம் வகுப்புடன் நிறுத்தியவர். நியூசிலாந்தில் கடந்த 5- 6 ஆண்டுகளாக இருந்தவர். 36 வயதாகிறது. எல்லாருக்கும் திருமணம் செய்து வைத்தீர்கள் ..எனக்கும் செய்து வையுங்கள் என தொல்லை கொடுக்க, அதை தாங்க மாட்டாமல் பெற்றோரும் இந்தியாவில் BCom பட்டதாரியான, 12 வயது குறைந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவ்வளவிலும் நல்ல விஷயம் சீதனம் வாங்காதது. இப்போ இங்கே வந்துள்ளார்.. மனைவி இன்னும் இந்தியாவில்.

சரியான படிப்பில்லாததால் வேலை கிடைக்கவில்லை. ஏதாவது தொழில்சார் கல்வி கற்றுக்கொள் என்ற கணவருக்கு தொண்டை காய்ந்தது தான் மிச்சம். இப்போ இன்னொரு உறவினது கடையில் சில நாட்களும் ஹொட்டேல் ஒன்றில் மிச்ச நாட்களுமாய் வேலை செய்கிறார். மனைவி வந்தால் தேவைப்படும் என சேமிப்பு பழக்கமெல்லாம் கிடையாது. உடற்பயிற்சிக்கு ஜிம்மிற்கு செல்வதும், கடனட்டையில் ப்ரான்ட் பொருட்கள் வாங்குவதுமே பொழுது போக்கு. தொலை பேசி அட்டை இருக்கையில் அதிலும் கதைத்து..இன்னும்.. நேரடி தொடர்பிலும் கதைத்து, வந்த பில் கட்டப்படவில்லை. அப்படி ஒரு தொகையை தொலைபேசிக்கு யாரும் ஒரே மாதத்தில் கட்டி நான் கேள்விப்பட்டதில்லை. கட்டணம கட்டாததால் எங்கள் வீட்டில் தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார்கள். அன்றைக்கு ஒரு நாள் காலை 10 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு வீடு வந்தால் எங்கோ தண்ணிர் சத்தம்..குளியலறையில் கேட்பாரற்று சுடுநீர் ஓடுகிறது..பிற்பாடு விசாரித்ததில் அவர் 1 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டதாய் சொன்னார். ஏன் டென்சன் ஆகுறீங்க?என்று கேட்கிறார்.தொலைபேசிக்கட்டணத்தை எப்படி பெறுவது என்று தெரியவில்லை!!! ஒவ்வொரு நாளும் இரவில் நான் சுத்தம் செய்யும் சமையலறை எப்படி வேலை முடிந்து வீட்டிற்குப் போனால் குப்பையாகிறது என்பது, தெரிந்த ஆனாலும் புரியாத, மாயம்.

அந்தப்பெண் வருவதற்குரிய குடிவரவு வேலைகளை போன மாதம் தான் செய்தார். இவர் வந்ததோ ஒக்டோபரில்.கல்யாணம் எவ்வளவு பொறுப்பான விஷயம் என்பது இவருக்கு விளங்கவில்லை. உடல் தேவைக்காகத் தான் அவசரப்பட்டாரோ என நினைக்கத் தோன்றுகிறது. சேமிப்பொ, முறையான நடத்தையோ, பழக்கவழக்கங்களோ இல்லாத பொறுப்பில்லா மகனென அறிந்தும் திருமணம் செய்து கொடுத்த பெற்றோரை..அறிந்தே ஒரு பெண் வாழ்வில் கை வைத்துள்ள இவர்களை என்ன செய்வது?சரியாக விசாரித்தறியாமல் சீதனம் இல்லாததற்காய் தலையை நீட்டிய அப்பெண்ணின் குடும்பத்தை என்ன சொல்வது??

எழுதி விளையாடு பாப்பா 2



நடுக்கட்டத்தில் உள்ள எழுத்து கண்டுபிடிக்கப்படும் அனைத்து சொற்களிலும் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதை நேற்று சொல்ல மறந்து விட்டேன்...மன்னிக்கவும்..

நேற்றைய புதிருக்கு விடை: உளி,இளை,இடை,ஆளி,ஆடி,ஆவி,இடு,இவை, ஆட்டி,விளை,விடு,இட்டு,விட்டு,விடை,இயை,விளையாடு,வாடி, வாளி,வாட்டி,விடாய்,விளையாட்டு

இன்றைய புதிர்

ல்ற்
ம்
ய்ச்


எழுதி விளையாடு பாப்பா

இங்கே ஆங்கில நாளிதழொன்றில் வரும் இந்தப்புதிர் விளையாட்டு தமிழில் எந்தளவிற்குச் சாத்தியமென்று தெரியவில்லை. அவர்களுக்கோ 26 எழுத்துக்களுடன் சுலபமாக முடிந்து விடும், தமிழிலோ 247 அழகிய எழுத்துக்கள். அது மட்டுமன்றி உயிர், மெய், உயிர்மெய் என மூன்று வகை எழுத்துக்கள்.இங்கே அவ்வாறு மூன்றாகப் பிரிக்காமல் உயிர், மெய் என இரண்டாக மட்டுமே தந்திருக்கிறேன்.9 கட்டங்களிலுமுள்ள எழுத்துக்கள் அனைத்தையும் ஒருமுறை மட்டுமே பாவித்து 9 எழுத்துக்களாலான சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும். கண்டுபிடிக்கும் ஏனைய சொற்கள் 3 அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும். தந்த சுட்டியில் போய்ப் பார்த்தால் விளையாட்டினை சுலபமாக விளங்கிக் கொள்ளலாம்.

நான் கண்டு பிடித்துள்ள சொற்கள்: மழை, அது, அதை, அமைதி,அமை,அமைத்து,அழை,அழி, அமிழ்,அளி,அழுத்தி,அமிழ்த்து,அளித்து,தளி,அழைத்தும்,அளை,மழைத்துளி(ம்+அ+ழ்+ஐ+த்+த்+உ+ள்+இ= 9 எழுத்துக்கள்)

ம்ள்த்
த்ழ்


உதாரண்ம் விளங்கியிருக்குமென நினைக்கிறேன். விளையாட்டிற்குப் போவமா?கீழுள்ளதில் சொற்களைக் கண்டுபிடியுங்கள்.
ட்
ள்
ய் ட்வ்


உங்களுக்கும் ஏதாவது 9 எழுத்துள்ள சொல் இப்புதிரில் இடம்பெற விரும்பினால் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

விக்கிரமாதித்தன்

முதலில் விக்கிரமாதித்தன் கதைகள் அறிமுகமானது அம்புலி மாமாவின் மூலம்.(2ம் தரம் அறிமுகமாகாது...ஏற்கெனவே தெரியும் என்பதால்..ஹி..ஹி)அப்போதெல்லாம் "அடே எவ்வளவு வீரன், புத்திசாலியாக இந்த வேதாளத்திற்கு பதில் சொல்கிறானே" என்ற வியப்பும் அதோடு கூடவே "இந்த வேதாளம் எப்போதடா இவன் கையிலிருந்து பறக்காதுவிடும்"என்ற நினைப்பும் கதை வாசிக்கும் போது கூடவே வரும். சமீபத்தில் விக்கிரமாதித்தன் கதை என்கிற முழுக்கதைத் தொகுப்பு ஒன்று கிடைத்தது. இதை வாசித்த பிறகு மேல்வீட்டிலிருந்தவன்(!) தெருவுக்கு வந்து விட்டான்.

வேறென்ன பின்னே!!...எங்கே போனாலும் அவனுக்கு கிடைக்கும் வெற்றியில் மகிழ்ந்து குறிப்பிட்ட கதையில் வரும் மாந்தர் தத்தம் மக(ள்க)ளையோ சகோதரி(களை)யோ இவனுக்கு கொடுப்பார்களாம்..இவனும் அவர்களுடன் "உல்லாசமாக" காலம் கழிப்பானாம்(சரியான "அலைச்சல்" ஆளாக இருந்திருப்பான் போலிருக்கிறது!!). இவனது முந்தைய மனைவிகளும் இவன் கூட்டிக் கொண்டு வருகிறவர்களை (அதாவது புதுமனைவிகளை)அன்புடன் வரவேற்பார்களாம். எந்தப் பெண்ணுக்கு இதற்கு மனம் வரும்?இந்த அழகில், பெண்ணுக்கு வகுத்திருக்கும் நியதி என்று வேறு 1008 வெறுப்பேற்றும் விஷயங்கள்!! (இவதான் இதுகளைப் பற்றி வடிவா நறுக்கென்று எழுத சரியான ஆள்!!)

காளி பக்தனாம்..இப்படிப் பட்டவனுக்கு நினைத்த மாத்திரத்திலேயே அவவும் காட்சி கொடுப்பாவாம்!!அட அட அட!!! இன்னும் எழுதலாம் புத்தகத்திலிருந்த மேதா விலாசங்களை..சும்மா ஏன் நற நறத்து இரத்த அழுத்தத்தை கூட்டிக்கொள்ள?

வாழ்வியல் அல்லது உங்கள் நடத்தை!

நீங்கள் செய்யும் செயல்களை எடுத்துக் கொள்ளுங்கள்...ஏதாவது ஒன்று..ம்ம்?

இப்போது உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்...நான் செய்ய போகும் / செய்து கொண்டிருக்கும்/செய்து விட்ட இந்தச் செயலை ஒரு ஒளிவு மறைவுமின்றி என் பெற்றோரிடம் என்னால் சொல்ல முடியுமா?இதையே "ஒரு சிறு மாற்றமும் இன்றி பின்பற்று" என என் பிள்ளைகளிடம் சொல்ல முடியுமா என்னால்??

இரண்டு கேள்விக்குமே உங்கள் பதில் ஆம் என்றால் உங்கள் நடத்தையில் பிரச்சனை இல்லை. இதுதான் நீங்கள் கடைப்பிடிக்கவேண்டிய Code of conduct. ஒரு நாளும் பிழை செய்ய மாட்டீர்கள்.

இதுதான் இந்துமதம் சொல்லும்..தர்மா!

இன்று TRAC இல் uncleஜெகா சொன்னது!

சிறுவர்களும் சிறுவர் பாடல்களும்


தோழி வீட்டில் இந்த வார இறுதியில் நடக்கவிருக்கும் TRAC இற்கு கோலம் செய்து கொண்டிருந்தோம். அப்போது அவர்களது வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்களில் ஒரு 3 வயதுப் பிள்ளையும் இருந்தா. ஒரு பாட்டுப் பாடிக் காட்டுங்கோ என்று தோழியின் தந்தை கேட்க ஆங்கில சிறுவர் பாடலான Twinkle Twinkle Little Star என்பதை பாடிக் காட்டியது பிள்ளை. அதற்கு அவர் "அப்பிடி இல்லை..இப்பிடி பாட வேணும்" என சொல்லி கர்நாடக இசை பாணியில் ஆலாபனையெல்லாம் செய்து பாடிக் காட்டினார். குழந்தை சிரிக்க ஆரம்பித்தது. "கிளுகிளு" என்று என்ன ஆனந்தமான சிரிப்பு! என்னதான் இருந்தாலும் சின்னப் பிள்ளைகளின் சிரிப்பின் வசீகரமே தனி!!

இதற்குப் பின் பேச்சு இலங்கையில் கற்றுத் தரப்படும் ஆங்கில சிறுவர் பாட்டுகளைப் பற்றித் திரும்பியது. தனது ஆசிரிய நண்பர் சொன்னதாக தோழியின் தந்தை சொன்னார்..மேற் சொன்ன அதே Twinkle Twinkle Little Star பாட்டை கற்பித்துவிட்டு அதன் அர்த்தமும் சொல்லிக் கொடுத்திருக்கிறார் முதல் நாள். அடுத்த நாள் வகுப்பில் பாடிய போது ஒரு பிள்ளை பாடிற்றாம் " Twinkle Twinkle Little Star.....like a diamond in the 'கை' " என்று. இன்னும் சிரிப்பு என்னவென்றால் அது நகைக்கடை உரிமையாளரின் பிள்ளையாம்! சொன்னது சரிதானே!!

தோழியின் தந்தையே தொடர்ந்தார்..ஒருநாள் வேலை நிமித்தம் வெளியிற் சென்ற போது ஒரு சிறுவன் பாலர் பாடசாலை முடிந்து வீட்டிற்குச் செல்கையில் படித்த பாட்டை பாடிக் கொண்டு போயிருக்கிறான். என்ன பாடுகிறான் என்று அறியும் ஆவலில் அவனுக்கு சற்று நெருக்கமாக பின்னாலேயே நடந்து சென்றாராம். அவன் பாடுகிறான் "கூப்பிட்ட பின் little toffee தின்..." இவருக்கோ பாட்டின் ராகம் ஞாபகம் வந்தாலும் இவன் என்ன பாடுகிறான் எனப் புரியவில்லை. பிறகு தான் விளங்கியதாம் "Ding dong bell..pussy's in the well, who put her in, little Tommy thin..." என்று.

பிறமொழி சொற்களை தெளிவாகவும் அர்த்தத்துடனும் கற்பிக்காவிட்டால் இப்படித்தான் போலிருக்கிறது!

அலையே..நீ அலையாதிருக்கக் கடவது!


ஏற்கனவே அலை பாய்ந்த நிலையில் இருக்கின்ற எம்மேல் ஏன் இந்த அலை பாய்ந்தது?

இயலுமான உதவியை இங்கிருந்தே செய்து விட்டு, அது போய் சேரவும், இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்கும், ஏனையோருக்கு இழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்திக்குமாக என்று வேண்டுதல்கள் நிறைந்த கனத்த மனதுடன் வலம் வருகிறோம்.

இலங்கை-இந்தியாவுக்குச் சென்று மீட்பு / நிவாரண பணிகளில் ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? மருத்துவச் சேவை போன்று அத்தியாவசிய துறைகளில் பயிற்சியுள்ளவர்கள் மட்டுமா இங்கிருந்து செல்லலாம்? தயவு செய்து அறியத் தரவும்.

பெட்டகம்